பாஸ்கா காலம் 2ஆம் வாரம்
03.05.2025 - சனிக் கிழமை
ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள் - சீராக்கின் ஞானம் 2:6
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:6-14) வழியும் வாழ்வும் உண்மையுமான இயேசுவை அவருடைய சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவரையே கண்டு கொள்ளாத போது அவருக்குள் இருப்பவரை (தந்தையை) எப்படி அவர்களால் கண்டு கொள்ள முடியும்?
தந்தையை காட்டும்படியாக பிலிப்பு இயேசுவிடம் கேட்கிறார். இயேசுவிடம் இருந்தும் இயேசுவையும் அவருக்குள் இருப்பவரையும் அடையாளம் காண தவறிவிட்டார்கள்.
தந்தை தனக்குள் இருந்து செயலாற்றுவதை இயேசு தெளிவுப்படுத்துகிறார்.
நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
தன் சீடர்களின் நம்பிக்கை குறைவின் உச்சக் கட்டம் தான் இயேசுவை இந்த வார்த்தை பேச வைத்து விட்டது.
நம்பிக்கை இரண்டு வகையில் வெளிப்படுத்தப்படும், 1. சொற்களின் வாயிலாக 2. செயல்களின் வாயிலாக.
இயேசுவின் வார்த்தையையும், செயல்களையும் நம்பாத கூட்டம் தான் இயேசுவோடு இருந்ததா? என்ற கேள்வி எழுகிறது.
நம்பிக்கை ஒன்று இருந்தால் எதிரியுடன் கூட பல மைல் தூரம் நடக்கலாம். நம்பிக்கை எளிதாக வந்து விடுவதில்லை. நம்பிக்கை குறைவு தான் நம்மை நகர விடுவதில்லை.
நட்சத்திரங்களை நாம் பார்க்க முடியவில்லை என்பதற்காக நட்சத்திரம் இல்லை என்று சொல்ல முடியாது. நம்பித்தான் ஆக வேண்டும்.
மனிதர்களில் நயவஞ்சகர்கள், துரோகிகள், கோபக்காரர்கள், ஆணவக்காரர்கள், அன்பானவர்கள், ஆறுதல் தருபவர்கள், வளர்ச்சி பாதைக்கு வழிவகுப்பவர்கள் என பலவகை உண்டு.
அவர்களில் இருப்பதை கண்டுக் கொள்ள முதலில் நாம் அவர்களை நம்ப வேண்டும்.
நம்பிக்கையில்லா ஒவ்வொரு நகர்வும் பெட்ரோல் இல்லாத வண்டிக்கு சமம். எப்போது நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது.
எல்லா மனிதர்களிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. சில வேளைகளில் நாம் கொடுக்கும் நம்பிக்கை/நாம் வைக்கும் நம்பிக்கை குறையை கூட நிறையாய் மாற்றும்.
நம்பிக்கையோடு பயணிப்போம்....
No comments:
Post a Comment