பாஸ்கா காலம் 5ஆம் வாரம்
21.05.2025 - புதன் கிழமை
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும். - லூக்கா நற்செய்தி 8:15
யார் பக்குவப்பட்ட மனிதர்? யார் வாழ்க்கையில் பல அடிகளை பெற்றிருக்கிறாரோ அவரே பக்குவப்பட்டவர். வாழ்க்கை ஒவ்வொரு முறை அடி கொடுக்கும் போது அவர் பலன்தர வாய்ப்புக் கொடுக்கிறது.
எல்லா மனிதர்களும் பக்குவமடைய விரும்பமாட்டார்கள். காற்று வீசுகின்ற பாதையில் பயணிக்க எண்ணுவோர் எதிர்நீச்சல் போட மாட்டார்கள்.
மரங்கள், செடிகள் வாழ்வும் நம் வாழ்வும் ஒன்றே. அவற்றின் வாழ்நாட்கள் தான் குறைவு. ஆனால் இரண்டின் செயல்பாடுகள் ஒன்றே.
மரம் உரத்தை பெற்று உயிர் பெறுகிறது, வளர்கிறது. மனிதன் உணவு உண்டு உயிர் வாழ்கிறான். இரண்டிற்கும் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டு. இரண்டும் மண்ணில் இருந்தே உருவாகிறது, மண்ணுக்கே திரும்புகிறது. பலன் கொடுப்பதும் பக்குவப்படுவதும் தனிப்பட்ட மனிதரின் கையில் இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:1-8) இயேசு திராட்சைக் கொடி உருவகத்தை பயன்படுத்துகிறார். நானே திராட்சைக் கொடி, நீங்கள் அதன் கிளைகள் என்கிறார். திராட்சைக் கொடியோடு கிளைகள் இணைந்திருக்கும் வரை தான் அவற்றிற்கு மதிப்பு. அவை வெட்டப்பட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.
இங்கு இயேசுவோடு இணைந்திருக்கும் வாழ்வு பலன் கொடுக்கும் அல்லது கனி கொடுக்கும் வாழ்வு.
பலன் தராத மரத்தையோ, செடியையோ யாரும் விரும்பமாட்டார். அவற்றை அப்புறப்படுத்தி விடுவார். அது போல நமது வாழ்வு பலன் கொடுக்கவில்லையென்றால் நாமும் அப்புறப்படுத்தப்படுவோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சொல்லாடல் நமக்கு வியப்பளிக்கிறது. கனி தரக் கூடிய கிளைகளை இன்னும் அவர் கழித்துவிடுகிறார், கனித் தராத கிளைகளை அவர் தறித்துவிடுகிறார்.
நாம் அவரால் கழிக்கப்பட்டு, இன்னும் பலன் கொடுக்கும் பக்குவத்தை அடைய வேண்டும்.
நாம் அவருடைய வார்த்தைகளால் தூய்மையாக்கப்பட்டிருந்தால் நாம் மிகுந்த கனி தருவோம். நாம் அவரோடு இணைந்திருந்தால் நாம் மிகுந்த பலன் தருவோம்.
No comments:
Post a Comment