"ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே" - சாலமோனின் ஞானம் 6:3
இன்று தங்களுடைய அதிகாரத்தால் மற்றவர்களை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறவர்கள் அதிகம். எவ்வளவு அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் இருந்தாலும் நாம் உரமாவது மண்ணிற்கு தான். உரமாக போகிற நாம், உணர்வுகளை கொஞ்சம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் தான் பெரியவன்(ள்), நான் தான் சிறந்தவன்(ள்) என்ற மமதை நம்மிடம் இருந்தது என்றால் நாம் பேசுகிற எல்லாமே அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் மட்டுமே இருக்கும்.
அதிகாரமும் ஆணவமும் விண்ணகத்திற்கான வாயில் அல்ல.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 11:27-33) தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் இயேசுவைப் பார்த்து 'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?' என்று அதிகாரத்தோடு கேட்கிறார்கள்.
இந்த அதிகாரப் பேச்சு இயேசுவை ஒருபோதும் வீழ்த்தி விடப் போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியாமல் போனது. சோதிப்பதற்காக கேள்வி கேட்டவர்களை இயேசு மற்றொரு கேள்வி கேட்டு சோதிக்கிறார்.
ஒருவேளை இவர்கள் தெரிந்து கொள்வதற்காக, அன்பொழுக இயேசுவிடம் கேள்வி எழுப்பியிருந்தால் பதில் கிடைத்திருக்கும். இங்கு அதிகாரத் தலைமைத்துவம் தலைதூக்கியதால் அவர்களை இயேசு அடக்கி விடுகிறார்.
அதிகாரம், ஆணவம், செருக்கு, அகங்காரம் ஆகியவை ஒருபோதும் மனித மாண்புக்கு வழி வகுப்பதில்லை, மனித மாண்போடும் வாழ வைப்பதில்லை.
நம் அதிகாரம் இயேசுவைப் போல பணிவிலும் பகிர்விலும் அன்பிலும் வெளிப்படட்டும்.
இயேசுவை போல ஆதிக்க வர்க்கத்தை வேரறுப்போம்.
No comments:
Post a Comment