24_07

தீயோர் நேர்மையாளர் - பிரிவு


பொதுக்காலம் 17ஆம் வாரம்

01.08.2024 - வியாழக் கிழமை 

"தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்; அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்" - திருப்பாடல்கள் 58:10

இவ்வுலகம் எல்லாவற்றையும் இணைத்து வைத்திருக்கும், அவ்வுலகம் நல்லோரையும் தீயோரையும் பிரித்து வைத்திருக்கும். தீமைக்கு அவ்வுலகில் இடமில்லை. 

ஆடுகிறவரைக்கும் ஆடிக்கொள்ளலாம் இங்கு. கண்ணுக்கு தெரியாத அவ்வுலகத்தை பற்றி ஒன்றும் தெரியாத போது, ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? என்று எண்ணுகிறோம். 

கடவுள் இருக்கிறாரா? என்று சிலரும் கடவுள் என்ன செய்திடுவார்? என்று சிலரும் கடைசில உள்ளத கடைசில பார்த்துக்கலாம் என்று சிலரும் தப்புக் கணக்கு போடுகின்றனர்.

உண்டு குடித்து மகிழ் (Eat and Make Merry) என்பது தான் நம் விருதுவாக்காக இருக்கிறது. 

உண்டு மகிழ்வது தவறல்ல... நம்மிடம் உள்ளதைக் கொண்டு நன்மை செய்யாமல் இருப்பது தான் தவறு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு13:47-53) விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைக்கு ஒப்பிடப்படுகிறது. தேவையில்லாத மீன் கெட்டதாக கருதப்பட்டு வெளியே எறியப்படும். 

அதே போல தான் உலக முடிவிலும் நிகழும். நல்லோரும் தீயோரும் பிரிக்கப்படுவர். தீயவர்கள் தீச்சூளையில் தள்ளப்படுவர். 

கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் வாழ்வாக்க வேண்டும். செவிக் கொடுத்தாலும் செயல்படுத்த வேண்டும். 

உரோமையர் 8-35 இவ்வாறு சொல்கிறது, "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?.

நாம் அவரோடு ஒன்றுப்பட்டிருந்தால், எதுவும்  நம்மை அவரிடமிருந்து பிரிக்காது.

நம் உடலிலிருந்து ஆவியும் ஆன்மாவும் பிரியும் முன் தீமைகள் நம்மிலிருந்து தூக்கி எறியப்படட்டும்.

இறைவனின் அதிமிக மகிமைக்காக...


புனித லொயோலா இஞ்ஞாசியார் - நினைவு

31. 07.2024 - புதன் கிழமை 

இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள லொயோலா என்னும் இடத்தில் 1491ஆம் ஆண்டு பிறந்தார். அரச குடும்பத்தைச் சார்ந்தவர். யாதொரு குறைவும் இல்லாமல் எல்லா செல்வமும் பெற்று மகிழ்ந்தவர். இவருக்குள் ஒரு ஆசை வேரூன்றியது, சிறந்த போர் வீரனாக மாற வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

ஆனால் 1521ஆம் ஆண்டில், ஒரு நாள் பிரான்ஸ் நாட்டில் ராணுவம் இவர் இருந்த பம்பிலோனா கோட்டையை சுற்றி வளைத்துக் கொண்டது. நடைபெற்ற போராட்டத்தில் இவருடைய கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டது. 

சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது, இங்கு வாசிப்பதற்கு ஏதேனும் புத்தகம் இருக்கிறதா? என்று கேட்டார். இயேசுவின் வாழ்க்கை வரலாறு புத்தகமும் புனிதர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமும் இவருக்கு கொடுக்கப்பட்டது. அவற்றை வாசிக்க வாசிக்க இவருக்குள் ஒரு புத்துணர்வு ஏற்பட ஆரம்பித்தது. தன்னுடைய வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று சொல்லி, நான் ஏன் புனிதராக மாறக்கூடாது? என்று சிந்திக்க ஆரம்பித்தார்.

அந்த மாற்றம்தான், "எல்லாம் இறைவனின் அதிமுக மகிமைக்காக" என்று இவரை செயல்பட வைத்தது.

மன்ரேசா குகைக்கு சென்று அங்கு 11 மாதங்கள் இறைவேண்டலிலும் நோன்பிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். தன்னோடு 6 இளைஞர்களை சேர்த்துக்கொண்டார். அவர்களைக் கொண்டு "இயேசு சபை" என்னும் புதிய சபையை தோற்றுவித்தார். மறைக்கல்வி போதிப்பது, மறைப் போதகப் பணி செய்வது, ஒப்புரவு அருள் அடையாளங்களை வழங்குவது, நோயாளர்களை, சிறையில் இருப்பவர்களை சந்திப்பது ஆறுதல் கூறுதல் என்று அவர்களின் பணி தொடர்ந்தது. குருத்துவ வாழ்வுக்காக தன்னை முழுவதும் கையளித்து 1538ஆம் ஆண்டு குருவாக மாறினார். 

கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளோடு சேர்த்து திருத்தந்தைக்கு எப்போதும் கீழ்ப்படிதல் என்ற புதிய வார்த்தைப்பாட்டினையும் இந்த சபை ஏற்றுக் கொண்டது.

இறைவனின் அதிமிக மாட்சிக்காக ஓய்வில்லாமல் உழைத்த புனித இஞ்ஞாசியார் 1554ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் இந்த மண்ணுலகில் வாழ்வை துறந்தார்.

தன்னுடைய புகழுக்காகவும் பெருமைக்காகவும் போராடும் இந்த உலகில் இறைவனின் அதிமிக மகிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணம் செய்தவர் புனித லொயோலா இஞ்ஞாசியார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:44-46) விண்ணரசானது புதையலுக்கும் நல் முத்துக்கும் ஒப்பிடப்படுகிறது. 

இருப்பதையும் வைத்துக்கொண்டு இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதுதான் மூளை நமக்குச் சொல்லும் கதை. 

ஆனால் மேலான ஒன்றை பெறுவதற்காக தன்னிடம் இருப்பதை (அகங்காரம், ஆணவம், கர்வம், அதிகாரம், தற்பெருமை...) இழக்க மனம் வருகின்ற போது தான், உயர்ந்தது நம் வாழ்வில் வரும். 

ஒருவர் நிலத்தில் இருந்த புதையலுக்காக தமக்குள் யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார், வணிகர் ஒருவர் நல்முத்துக்களைத் தேடி செல்கிறார், விலை உயர்ந்த ஒரு முத்தை கண்டவுடன் போய் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார் என்று நற்செய்தி பதிவு செய்கிறது.

நம் புனிதர், செல்வங்களைத் துறந்து மேலான புதையலும் முத்துமான இயேசுவை கண்டு கொண்டார். உலகம் இன்பங்கள் இந்த உலகிலே முடிந்து விடும். ஆனால் விண்ணக இன்பம் தான் நீடித்த மகிழ்வு தரும் என்பதில் கவனமாய் இருந்தவர், கிறிஸ்துவுக்காக தன்னிடம் இருப்பதை இழக்க முன் வந்தார். 

தியாகமும் ஒறுத்தலும் இழப்பும்தான் ஒருவரை புனிதராக மாற்றுகிறது.

மனிதரில் நமக்கான வீண் பெருமையை தேடாமல் இறைவனில் நிறைவை பெறுவோம். நம் மகிமையல்ல இறைமகிமை நிலைக்கட்டும்.


நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம்...


பொதுக் காலம் 17ஆம் வாரம்

30.07.2024 - செவ்வாய்க் கிழமை 

"ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்". 2 கொரிந்தியர் 5:10

இந்த உலகில் நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே போராட்டம் நடைபெறுவதில்லை மாறாக, நன்மைக்கும் தீமைக்கும் இடையே தான் போராட்டம் நடைபெறுகிறது. ஏனென்றால் ஒருவருக்குள் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும், தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். 

திருத்தூதர் பவுலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உரோமையர் 7:18,19இல், இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது "ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்". திருத்தூதர் பவுலுக்கு இத்தகைய மனப்போராட்டம் இருந்தது. 

நன்மைக்கு செவிமடுப்பதா? தீமைக்கு செவிமடுப்பதா? என்ற மனக் குழப்பம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய நிலைப்பாடு ஏதாவது ஒன்றாக தான் இருக்க முடியும். தீமைக்கு செவிமடுப்பவர்கள் தீமையின் மறு உருவமாகவே மாறி விடுகிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:36-43) வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை சீடர்களுக்கு விளக்குகிறார் இயேசு. நல்ல விதைகளை விதைப்பவர் - மானிட மகன், வயல் - இவ்வுலகம், நல்ல விதைகள் - கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள், களைகள் - தீயோனைச் சேர்ந்தவர்கள், களைகளை விதைக்கும் பகைவன் - அலகை, அறுவடை - உலகின் முடிவு, அறுவடை செய்வோர் - வான தூதர். இவை தான் உவமைக்கு இயேசு கொடுத்த விளக்கம்.

இந்நிகழ்வை நம்முடைய வாழ்க்கைக்கு பொருத்திப் பார்க்கின்ற போது, வயல் நம்முடைய உள்ளமாக இருக்கிறது. நல்ல விதைகளை விதைப்பவர் இறைவனாக இருக்கிறார், அதே வேளையில் களைகளை விதைப்பவன் அலகையாக இருக்கிறான்.

1 பேதுரு 5:8 சொல்கிறது, அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது". 

அலகையின் அறுவடைக்கு பல நபர்கள் மனமுவந்து தங்களை கையளிக்கிறார்கள். நாமும் அந்த வரிசையில் இருக்கிறோமா அல்லது சிறிது விலகி நின்று நன்மைக்கு செவிமடுக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். 

தீமை செய்பவருக்கு வாழ்நாள் நீட்டி கொடுக்கப்படுகிறது, ஏனென்றால் இவ்வுலகில் தீமையின் வழியாக மகிழ்ச்சி அடைந்தவர்கள், அவ்வுலகில் விண்ணக மகிழ்வை அடைவதில்லை என்பதனால்.

நீண்ட நாள் வாழ்வதை விட நலமுடன் வாழ்வது சிறந்தது. 

நமக்குள் எழும் நன்மை தீமை இவற்றிற்கிடையே உள்ள போராட்டத்தில், நன்மைக்கு செவிமடுத்து நேர்மையாளராய் தந்தையின் ஆட்சியில் ஒளி வீசுவோம். 

உலக முடிவில் தலை நிமிர்ந்து நிற்போம்...

சிறிய துவக்கம் பெரிய மாற்றம்...


பொதுக் காலம் 17ஆம் வாரம்

29.07.2024 - திங்கட் கிழமை

ஒன்றின் துவக்கம் சரியாக இருந்தால் அதன் நிறைவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். துவங்கி வைத்துவிட்டு, வேடிக்கை பார்த்தால் நிறைவை காண முடியாது. ஒன்றை தொடங்குவதற்கு கொடுத்த அதே ஆற்றல், உத்வேகம் அது நிறைவுக்கு கொண்டு வரும் வரை இருக்க வேண்டும். 

விதைக்கப்படும் விதை மண்ணுக்குள் முடங்கியே கிடப்பதில்லை. விதைக்கேற்ற உரம், வெப்பம், நீர், காற்று எல்லாம் சரிவர கிடைக்கின்றபோது அந்த விதை வளர்ச்சி என்னும் நிறைவை நோக்கி பயணிக்கும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:31-35) கடுகு விதையையும் புளிப்பு மாவையும் விண்ணரசுக்கு இயேசு ஒப்பிடுகிறார். சிறிய விதை பெரிய மரமாக உருவெடுக்கிறது. சிறிது புளிப்பு மாவு முழுவதையும் புளிப்பேற செய்கிறது. 

சிறிய வாய்ப்பு தான் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது போல இந்த உவமை கொடுக்கப்பட்டுள்ளது. 

இயேசு ஏன் இதை விண்ணரசுக்கு ஒப்பிடுகிறார்? இயேசு விதைத்த இறையாட்சி இத்தகையது தான். தந்தை கடவுளின் விருப்பத்தை, இறைவார்த்தை வாயிலாகவும் நற்செயல்கள் வாயிலாகவும் எடுத்து சொன்னவர், செய்தவர் இறையாட்சியை (அன்று) இம்மண்ணில் பரப்பினார். அவர் அன்று விதைத்த விதை இன்று உலகம் முழுவதும் கிறித்தவமாக பரவி இருக்கிறது. சிறிய தொடக்கம் தான் ஆனால் அது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் வாழ்வின் தொடக்கம் பெற்றோரிடமிருந்து ஆரம்பித்தது, அது இல்லறம் என்னும் நிலையில் அல்லது துறவறம் என்னும் நிலையில் முடிவு பெறுகிறது. பல்வேறு மாற்றங்களை சந்தித்த நம்முடைய வாழ்க்கை நிறைவில் எத்தகைய மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்பதுதான் சிந்திக்கப்பட வேண்டியது?

தொடங்கியது போலவே நிறைவும் இருந்தது என்று சொன்னால் தொடங்கப்பட்டதனுடைய நோக்கம் அடிபட்டு போகிறது. 

ஒரு மரம் வளராமல் அப்படியே இருந்தது என்றால் அதனால் பயன் என்ன? 

அதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையும் இயேசுவில் வளர்ச்சியை காணவில்லை என்றால் அது முற்றிலும் வீண்.


இன்று புனிதர்களான மார்த்தா, மரியா, லாசர் நினைவு

மார்த்தா - இயேசுவை வரவேற்றவர், பரபரப்போடு பற்பல பணி செய்தவர் (லூக்கா 10:38,40)

நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்கு தெரியும் என்றவர் (யோவான் 11:21,22) - தன் சகோதரரின் இறப்பைக் குறித்து இயேசுவிடம் பேசியவர்

மரியா - ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் (லூக்கா 10:39)

இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசி தமது கூந்தலால் அவரின் காலடிகளை துடைத்தவர் (யோவான் 11:2)

நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்றவர் (யோவான் 11:32)

இலாசர் - இயேசுவின் நண்பர் (யோவான் 11:3)

நன்மை செய்ய/செய்வோருக்கு தடை இல்லை...


பொதுக் காலம் 17ஆம் ஞாயிறு 

28.07.2024 - ஞாயிற்றுக் கிழமை

"நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்" - எசாயா 1:17 

நன்மை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்யக்கூடிய நன்மை அந்த நேரத்தில் நமக்கு கை கொடுக்காவிட்டாலும் எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்து சேரும் என்பது இயற்கையின் நியதி. 

பலனை எதிர்பாராமல் செய்கின்ற அனைத்து உதவிகளும் எதிர்பாராத நேரத்தில் நிச்சயம் வந்து சேரும். இயேசு தன்னுடைய வாழ்வில் தன்னுடைய சீடர்களை அருகில் வைத்துக்கொண்டு பல நன்மைகளை செய்தார். காரணம் அவர்களும் நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காக தான்.

அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டதால் இயேசுவை பலர் தேடி சென்றார்கள். ஆனால் இயேசுவின் உள்ளமோ அன்பினால் பற்றியெரிந்தது. எனவே அவர் நன்மை செய்வதற்கு எதுவும் தடையாய் இல்லை.

திருத்தூதர் பணிகள் 8: 26-40 இல் பிலிப்பு (திருத்தொண்டர் பிலிப்பு) எத்தியோப்பிய நிதியமைச்சர் இருவரிடையே நடைபெறும் உரையாடலை நாம் வாசிக்க முடிகிறது. எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலை படித்துக் கொண்டிருந்தார். பிலிப்பு அவரை நெருங்கி நீர் வாசிப்பதன் பொருள் உமக்கு தெரிகின்றதா என்று கேட்க, யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்து கொள்ள முடியும்? என்று அவர் பதில் சொல்ல, பிலிப்பும் அவருக்கு அந்த மறைநூல் பகுதியை விளக்கி கூறினார் (எசாயா 53:7,8). 

பிலிப்பு, தொடர்ந்து இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அப்போது இறைவார்த்தையால் தூண்டப்பட்ட எத்தியோப்பிய நிதியமைச்சர் தண்ணீர் இருக்கக்கூடிய ஒரு பகுதிக்கு வந்ததும், நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா? என்று கேட்டார். நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடை இல்லை என்று பிலிப்புச் சொல்ல, உடனே அமைச்சர் தேரை நிறுத்த பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். 

பிலிப்பு அவருக்கு திருமுழுக்கு கொடுத்ததாக திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்கிறது. நன்மை செய்ய எதுவும் தடையாக இருப்பதில்லை. 

இயேசுவிடமிருந்து எதைப் பெற்றுக் கொண்டார்களோ அதைத்தான் திருத்தூதர்கள் மற்றவர்களுக்கு கொடுத்தார்கள். திருத்தூதர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதை திருத்தொண்டர்கள் மற்றவர்களுக்கு கொடுத்தார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான்6:1-15)இல் இயேசு அப்பத்தையும் மீன்களையும் பகிர்ந்து கொடுக்கிறார். நடக்க இருக்கிற எல்லாவற்றையும் அறிந்த இயேசு, இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? என்று பிலிப்பிடம் கேட்கிறார். நற்செய்தி பதிவு செய்கிறது, தான் செய்யப் போவதை அறிந்திருந்தும் அவரை சோதிப்பதற்காகவே இக்கேள்வியை இயேசு கேட்டார் என்று. 200 தெனாரித்துக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே? என்று பிலிப்பு மறுமொழி பகர்கிறார். 

(பிலிப்பு என்னும் திருத்தூதரிடம் பணமும் மனமும் குறைவாக இருந்தது, திருத்தூதர் பேதுருவின் சகோதரரான அந்திரேயாவிடம் ஒன்றும் இல்லை. ஆனால், ஒரு சிறுவனிடம் 5 வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருப்பதை அவர் கண்டு கொள்கிறார். இறந்தபோதிலும் இத்தனை பேருக்கு இவை எப்படி போதும்? என்கிறார்). 

இயேசுவின் மனம் நிறைந்திருந்ததால் மக்களை அமரச் செய்யுங்கள். 

நன்மை செய்ய பொருள் இல்லாவிட்டாலும் மனதில் சிறிதளவாது இடமிருக்க வேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு சுட்டிக்காட்டும் முதல் பாடம்.

இருந்த அப்பங்களை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுக்கிறார் இயேசு. எப்பொழுதும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு இருக்க வேண்டும் என்பது இயேசு சுட்டிக் காட்டும் இரண்டாம் பாடம். 

ஒன்றும் வீணாகாதபடி மீதமுள்ள துண்டுகளை சேர்த்து வையுங்கள் என்று தம் சீடர்களிடம் அவர் கூறுகிறார். எதையும் வீணடிக்க கூடாது, சேர்த்து வைக்க வேண்டும் என்பது இயேசுவின் மூன்றாம் பாடம்.

நன்மையின் ஊற்றான இயேசு, நன்மையை தன் திருத்தூதர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டார்.

முதல் வாசகம் - ஆண்டவரின் வார்த்தையை ஏற்று எலிசா, பாகால் சாலிசாவை சார்ந்த ஒரு மனிதரிடம் அவர் கொண்டுவந்த உணவை மக்களுக்கு கொடுக்கச் சொல்கிறார். அந்த மனிதரோ, நூறு பேருக்கு இதை நான் எப்படி பரிமாறு என்று கேட்கிறார். 

உண்டப் பின்னும் மீதி இருக்கும் நீ மக்களுக்கு உண்ணக்கொடு என்று கடவுளின் வார்த்தையை எலிசா சொல்ல, அந்த மனிதரும் செய்கிறார். ஆண்டவரின் வாக்கின்படி உணவு மீதி இருந்ததாக முதல் வாசகம் பதிவு செய்கிறது. 

இரண்டாம் வாசகம் - நாம் பெற்றுக் கொண்டு அழைப்பிற்கு ஏற்ப வாழ திருத்தூதர் பவுல் நம்மை அழைக்கிறார். அன்போடு வாழ, அமைதியோடு வாழ, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டை காத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். 

விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஏற்ப வாழ்வதும் நன்மையான காரியம் தான். கடவுள் கொடுத்த அழைப்பிற்கு ஏற்ப நாம் வாழ்கின்ற போது நம் வாழ்வே நமக்கும் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும். 

நாம் கடவுளிடமிருந்து நன்மையை பெறுவதற்கு எதுவும் தடையாய் இல்லாதது போல், நாமும் பிறருக்கு நன்மை செய்வதற்கு எதுவும் தடையாய் இருக்கக் கூடாது.

வாழ்வால் வார்த்தையால் பிறருக்கு நன்மை செய்வோம்... 

களைகள் நீக்கப்பட வேண்டும்...


பொதுக் காலம் 16ஆம் வாரம்

27.07.2024 - சனிக் கிழமை

தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்" - திருப்பாடல்கள் 37:9

நல்லவரிடமிருந்து நன்மை வெளிப்படும், தீயோரிடமிருந்து தீமை வெளிப்படும். நல்லவர்கள் தீமை செய்வோர் பார்வையில் தீயவர்களாக பார்க்கப்படுகிறார்கள். தீயவர்கள் தீமை செய்வோர் மத்தியில் நல்லவராக பார்க்கப்படுகிறார். 

வாழ்க்கை முரண்பாடுகளை உள்ளடக்கியது. நல்லது செய்வோருக்கும் நல்லது சொல்பவருக்கும் இங்கு வாய்ப்பும் வாழ்நாளும் குறைவு.

பொறாமையினால், நல்லவர்களை தீயவர்களாக மாற்ற எண்ணக்கூடிய நபர்கள்  இவ்வுலகில் இருக்கிறார்கள். நற்பெயரைக் கெடுக்க, நல்வாழ்வை சிதைக்க ஒவ்வொரு நாளும் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 

தீமை என்னும் களைகளும் தீயோர் என்னும் நிலைகளும் இங்கு அகற்றப்பட வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:24-30) வேறொரு விதைப்பவர் உவமையை பற்றி இயேசு பேசுகிறார். நில உரிமையாளர் தனது தோட்டத்தில், நல்ல விதைகளை விதைத்து விட்டு போய்விடுகிறார், பகைவரோ நல்ல விதைகளுக்கு இடையில் களைகளை விதைத்து விட்டு சென்று விடுகிறார். இந்த விதைப்பவர் உவமையை இறையாட்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். 

இவ்வுலகில் நல்ல மனிதர்கள் தீமை செய்வோரின் சூழ்ச்சியினால் நெருக்கப்படுவதை நாம் காண முடிகிறது. கடவுள் உலகை படைத்த போது அனைத்தையும் நல்லது என்று கண்டார். ஆனால் மனிதரின் கீழ்ப்படியாமையால், பொறாமையால், ஆணவத்தால், செருக்கால் மனிதன் நன்மை செய்ய மறந்து போனான். நன்மைக்கு கைம்மாறாக தீமை செய்ய துணிந்து விட்டான். 

நன்மை செய்பவருக்கு, நல்ல பலனை கொடுப்பவருக்கு விண்ணகம் திறந்து இருக்கிறது. 

எனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பது சாத்தான் என்னும் பகைவனின் எண்ணம். இந்த மனநிலை தான் இன்று மனிதர்களை தீயவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

நல்ல விதைகளோடு களைகள் கலக்கப்படுவது போல, நன்மை செய்வோரோடு தீமை செய்வோர் இணைந்து வாழ்கின்றனர். தீமை செய்வோர் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இறுதிவரை, தீமையில் நிலைத்திருக்கிறாரா? அல்லது மனமாறுகிறாரா? என்ற வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.

தீமையிலிருந்து நன்மையின் பக்கம் சாய்பவருக்கு விண்ணக களஞ்சியத்தில் இடம் உண்டு.

தீமையிலேயே நிலைத்திருப்பவர் அணையா நெருப்பால் எரியூட்டப்படுவது உறுதி.

நம்முடைய நிலத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் களைகள் நீக்கப்பட வேண்டும்.

மறையுரைக்குள் மறை உண்மை...


பொதுக்காலம் 16ஆம் வாரம்

26.07.2024 - வெள்ளிக் கிழமை

இயேசுவின் மறையுரைகள், இயேசுவின் உவமைகள் ஒவ்வொன்றிலும் மறையுண்மைகள் பொதிந்திருக்கும். அந்த மறையுண்மைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு வெளிக் கொணர்கிறார். 

விதைப்பவர் உவமையைச் சொல்லி அதற்கான விளக்கத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13: 18-23) இயேசு விவரிக்கிறார். 

இறையாட்சியை குறித்து கவலை கொள்ளாதோர், இறைவார்த்தையை கேட்டு சிறிது மகிழ்ச்சி கொள்பவர்கள் ஆனால் வேரற்றவர்கள், இறைவார்த்தையை கேட்டு பயன் அளிக்காதவர்கள், இறைவார்த்தையை கேட்டு பலன் கொடுப்பவர்கள் என்று நான்கு வகை மனநிலை கொண்ட மக்களை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

விதை என்பது இறைவார்த்தை. இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுவோர் பலன் கொடுப்பர்.

நம் உள்ளங்களில் இறைவார்த்தை விதைக்கப்படுகிறது. ஆனால் அது பலனளிப்பதும் பலனளிக்காமல் போவதும் நம் செயல்களில் இருக்கிறது.

இறைவார்த்தையை உள்ளத்தில் நிறுத்தி சிந்தித்தவர்கள் எல்லாம் அதற்கேற்ற பலன் கொடுத்தார்கள், அதற்கு சிறந்த உதாரணம் அன்னை மரியா. எல்லாவற்றையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவர், இறைவார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவர், இறைவார்த்தையை கேட்டு அதன்படி நடந்து இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர் அன்னை மரியா.

நாம் இறைவார்த்தையின் விளைநிலங்களாக மாறுவது எப்போது? இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டுமல்ல இறைவார்த்தையை உள்ளத்தில் பதித்து அதன்படி நடப்பவர்களாக மாறுவது எப்போது?

நாம் நூறு மடங்காக, 60 மடங்காக, 30 மடங்காக பலன் கொடுக்க வேண்டும். பலன் கொடுக்காதவையெல்லாம் தறித்து விடப்படும், அல்லது நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நல்ல மண் நல்ல விளைச்சலை கொடுக்கும், நல்ல மனம் நற்பலனை கொடுக்கும்.

மண்ணும் விதையும் இணைகின்றபோது ஒரு உயிர் உருவாகிறது. மனமும் இறைவார்த்தையும் இணைகிறபோது நல்வாழ்க்கை பிறப்பெடுக்கிறது.

நம் மனதினுள் இருக்கும் உண்மைகள் வெளிகொணரப்படட்டும்... உண்மைகள் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கட்டும்...

26.07.2024 - வெள்ளிக் கிழமை 

புனித அன்னா, சுவக்கீன் திருவிழா...

- கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்த குடும்பம்

- தங்கள் வருமானத்தில் இருந்து எருசலேம் கோவிலுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து தங்களுக்கும் வைத்துக் கொண்டவர்கள்.

- கடவுளின் அருளை முதுமையில் கண்ட தம்பதி.

- மாசு அணுகா முறையில் இறைவனின் தாயை (மரியாவை) பெற்று எடுத்தவர்கள்.


திருத்தூதர்களில் முதல் மறைசாட்சி யாக்கோபு...

பொதுக்காலம் 16ஆம் வாரம்

25.07.2024 - புதன் கிழமை

நான் குடிக்க போகும் துன்ப கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா என்று இயேசு கேட்டு அந்த கேள்விக்கு "ஆம்" என பதில் சொல்லி கிபி 43 - 44 ஆம் ஆண்டுகளில் அதை நிறைவேற்றிக் காட்டினார் திருத்தூதர் யாக்கோபு. 

கிபி 43 ஆம் ஆண்டு யூதேயாவை ஆண்டு வந்த ஏரோது அக்ரிப்பா உரோமை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த அபியத்தார் என்ற தலைமைக் குரு வழியாக யாக்கோபை கைது செய்யச் சொன்னார். அபியத்தார் என்ற அந்த தலைமை குரு தன்னுடைய பணியாளராகிய ஜோசியா என்பவர் வழியாக யாக்கோபு, கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்தான். 

அவர்கள் யாக்கோபை இழுத்துக் கொண்டு வரும் வழியில் முடக்குவாதமுற்ற ஒருவர் இதைக் கேள்விப்பட்டு "யாக்கோபே என் மீது இரங்கும், என்னுடைய நோயை நலப்படுத்தும்" என்று கத்தினார். 

யாக்கோவும் அவர் மீது இரங்கி, "ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீ நலமாகு" என்று சொன்னார். இதை பார்த்துக் கொண்டிருந்த யாக்கோபின் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துப் போன ஜோசியா, ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெற்றார்.

இதைக் கண்ட தலைமைக்கு ஒரு அபித்தார் ஜோசியாவிடம் நீ கிறிஸ்துவை பின்பற்றுவதை விட்டுவிடவில்லை என்றால் நீயும் இந்த மனிதனோடு கொல்லப்படுவாய் என்றார். இதற்கு ஜோசியா எக்காரணத்தை கொண்டும் கிறிஸ்துவை பின்பற்றுவதை விட்டுவிட மாட்டேன் என்றார். இறுதியில் யாக்கோபோடு ஜோசியாவும் கொல்லப்பட்டார். இவ்வாறு தன்னுடைய இறப்பின் வழியாக யாக்கோபு இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

இயேசுவின் பணி வாழ்வில் இயேசுவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் யாக்கோபு

1. தொழுகை கூட தலைவராகிய யாயிரின் மகளை இயேசு நலப்படுத்திய போது (மாற்கு 5:37-48)

2. இயேசுவின் தோற்ற மாற்றத்தின் போது (மாற்கு 9:28)

3. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்த போது திருத்தூதர் யாக்கோபு இயேசுவோடு இருந்தார்.

எருசலேமை நோக்கிச் செல்லும்போது புறஇனத்தார் அதிகம் வாழ்ந்த சமாரியா வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை போக விடாமல் தடுத்தனர். சினம் கொண்ட யாக்கோபு மற்றும் அவரது சகோதரர் யோவான், இயேசுவிடம், ஆண்டவரே வானத்திலும் தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? என்று கேட்டனர். துணிச்சல் மிக்கவர் யாக்கோபு.

இவர்தான் தன் தாயோடு வந்து இயேசுவின் அரசில் அமர இடம் கேட்டவர். தலைமை பொறுப்பில் ஆசைப்பட்டவர். 

ஆனால் இயேசுவின் இறப்பிற்கு பிறகு, தான் அனுப்பப்பட்ட இடத்திற்கு சென்று அந்த கிறிஸ்துக்காக தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்தவர்.

திருத்தூதர்களில் முதல் மறைசாட்சி புனித யாக்கோபு...

இயேசுவின் உவமையில் நாம் எந்த நிலம்?


பொதுக் காலம் 16ஆம் வாரம் 

24.07.2024 - புதன் கிழமை

"உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது" - திருப்பாடல்கள் 143-6

ஒவ்வொரு உள்ளமும் ஒவ்வொரு நிலத்தை பிரதிபலிக்கிறது. இங்கு பலன் தருகின்ற உள்ளம்/நிலம், பலன் தராத உள்ளம்/நிலம் என்று உள்ளது... எல்லாம் பலன் தருவதற்கென்றே உருவாக்கப்பட்டது.

விதை நிலத்தில் விதைக்கப்படுகிறது என்றால் அது செடியாக, மரமாக வளரும் அல்லது உரமாக மடியும். ஏதாவது ஒரு வகையில் விதை இங்கு பலன் கொடுக்கிறது. அதற்கு நிலம் உதவுகிறது. 

நம் உள்ளங்கள் பண்படுத்தப்படவில்லை என்றால் விதைக்கப்படும் அனைத்தும் வீணாய் போகும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:1-9) இயேசு கடலோரத்தில் அமர்ந்து தன்னைத் தேடி வந்த மக்களுக்கு உவமை வாயிலாக பலவற்றை குறித்து விளக்குகிறார். விதைப்பவர் உவமை அவர்கள் முன் தூவப்படுகிறது. 

விதை ஒன்றுதான் ஆனால் விதைக்கப்படும் இடங்கள் அல்லது தூவப்படும் இடங்கள் நான்கு வகையாக இருக்கிறது. விதையானது பாதையோரம், மண் ஆழமாக இல்லாத பகுதி, முட்செடிகளிடையே, நல்ல நிலம் என்று நான்கு இடங்களில் தூவப்படுகிறது (விழுகிறது). ஒவ்வொரு விதையும் அந்த இடத்திற்கு ஏற்ப பலன் கொடுக்க முயற்சி செய்கிறது. சில விதைகள் எழும்ப இயலாமல், கருகி நெருக்கப்பட்டு வளர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. நல்ல நிலத்தில் விழுந்த விதை மட்டும் பலன் கொடுக்கிறது. 

நம்முடைய உள்ளங்கள் வெளிப்புற காரணங்களினால் சிதைப்பட்டு தகுதியற்ற, கடினமான, இறுக்கமான நிலங்களாக மாறிவிடுகின்றன. 

இறைவார்த்தை உள்ளே சென்றாலும் அவை பலன் தராமல் இருப்பதற்கு வெளிப்புற காரணிகளான சமூகச் சூழ்நிலைகள், குடும்ப பிரச்சினைகள், மனநிறைவற்ற வாழ்க்கை ஆகியவை தான் காரணமாக இருக்கிறது. 

இந்த எதிர்மறை சூழ்நிலைகள் யாரால் உருவாக்கப்பட்டது என்பதற்கான கேள்வி கிடைக்கப்பெற்றால் மனம் தெளிவடையும், உள்ளம் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். களைகள் நிலத்திலிருந்து நீக்கப்படுவது போல உள்ளத்தில் இருந்து கவலைகள் நீக்கப்பட வேண்டும். அதை நீக்குவது யார் (கடவுளா? நாமா? பிறரா? இயற்கையா?) என்பது நமக்குத் தெரிய வேண்டும்.

களைகலற்ற/கவலையற்ற உள்ளம் எல்லோரிடமும் இருப்பதில்லை. களைகளைப் பிடுங்கி எடுத்து, நிலத்தை/உள்ளத்தை பண்படுத்தி விட்டால் எல்லாம் (பிரச்சினை, துன்பம், நெருக்கடி, இடர்...) இலகுவாக மாறும்.

நாம் எவ்வகை நிலமாக இருக்கப் போகிறோம்? நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்சனைகளினால் அல்லது மற்றவர்கள் மீது திணிக்கும் பிரச்சனைகளினால் நம் வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோமா? அல்லது களைகளை நீக்க முன் வருகிறோமா? என்பது நம் சிந்தனையில் இருக்கட்டும். 

நம் சிந்தனை இறைவன் பக்கம் திரும்பினால் தேவையற்ற களைகள் நீங்கி போய்விடும். பலன் கொடுக்கும் நல்ல நிலமாக நம் உள்ளம் மாறும்.

இறைத்திருவுளமும் பிறரன்பும்...


பொதுக் காலம் 16ஆம் வாரம்

23.07.2024 - செவ்வாய்க் கிழமை 

"கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" - 1 யோவான் 4:20

இன்று சகோதர சகோதரிகள் ஒருவர் மற்றவரை அன்பை செய்வதில்லை. ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ள நேரமும் இருப்பதில்லை. புரிதல் இல்லாத இடத்தில் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடத்தான் செய்யும். (உடன்பிறப்புகளே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதபோது மற்றவர்கள் அவர்களை புரிந்து கொள்வது எம்மாத்திரம்).

சில வேளைகளில், புரிதலோடு இருப்பவர்களை குழப்புவதற்கு, கயவர்கள் கூட்டம் திட்டம் தீட்ட தான் செய்யும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 12:46-50) தன்னோடு பேச வந்த தன் தாயையும் சகோதரர்களையும் இயேசு இழிவுப்படுத்துவது போல இருக்கிறதே என்ற கேள்வி எழலாம். (இழிவுப்படுத்தியவர்களையே ஏற்றுக் கொண்டவர் இயேசு, அவர் எப்படி இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர்களை இழிவுபடுத்துவார்???)

மத்தேயு நற்செய்தி 19:19இல் இயேசு இவ்வாறு சொல்கிறார், "தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக”, என்று சொன்னவர் எப்படி தன் தாயையும் சகோதரர்களையும் இழிவுபடுத்தி இருக்கக்கூடும். 

என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?  என்பது தாழ்வுப்படுத்தும் கேள்விகள் அல்ல... மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்றிய தன் தாயையும் தன் சகோதரர்களையும் மிகைப்படுத்தும் சொற்கள் (என் சகோதரர் யார் தெரியுமா? என் தாய் யார் தெரியுமா? என்று சொல்வது போல்). இவர்களே இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர்கள் என்பது இலை மறை காயாய் சொல்லப்பட்டுள்ளது. 

அங்கு தன் தாயையும் தன் சகோதரிகளையும் அவர் முன் உதாரணங்களாக காட்டுகிறார். அன்று இயேசு என் தாய் யார்? என் சகோதரர் யார் என்று கேட்ட கேள்வி நேர்மறை கேள்வி. 

இன்று உடன்பிறப்புகளால் நீ யார்? நீ யார் என்னை பேசுறதுக்கு? என்று கேட்கப்படக்கூடிய கேள்விகள் எதிர்மறை கேள்விகள். இவை உறவை முறித்து விடுகிறது. உறவை முறிப்பது பாவம். ஒருசில வேளைகளில் வார்த்தை பிழைகளால் வாழ்க்கை பிழையாகிறது.

சகோதர அன்பு இல்லாமல், நம்மை பெற்றவர்களை கவனிக்காமல் நாம் இறைத் திருவுளத்தை நிறைவேற்றி விட முடியாது. பிறர் அன்பிலும், பிறர் நலனிலும் இறைத் திருவுளம் வெளிப்படட்டும்.

உடனிருந்த மகதலா மரியா


புனித மகதலா மரியா - விழா

22.07.2024 - திங்கட் கிழமை

மகிழ்ச்சியில் மட்டும் உடனிருப்பது சீடத்துவத்தின் அடையாளம் அல்ல. மரணம் வரைக்கும் உடனிருப்பது தான் உண்மையான சீடத்துவத்தின் அடையாளம். 

இயேசுவால் ஏழு பேய்கள் நீக்கப் பெற்றவர், இயேசுவின் பாதங்களை கழுவிய பாவிப் பெண், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணாக இருக்கலாம் என்று மகதலா மரியா பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறார். 

சமூகம் அவரை பல வகையில் பார்த்தாலும் அவர் இயேசுவோடு இறுதிவரை உடனிருந்த வீர பெண்மணியாக இருக்கிறார். 

பலர் இயேசுவிடமிருந்து நலன்களை, கைம்மாறை பெற்று விட்டு கடந்து சென்றார்கள். ஆனால் மகதலா மரியா மட்டும் இயேசுவின் இறப்பின் உயிர்ப்பின் சாட்சியாக இருக்கிறார். 

புனித மகதலா மரியா, தன்னுடைய கையில் இயேசு உயிர்த்து விட்டார் என்று பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான முட்டை வைத்திருப்பது போன்ற ஓவியங்கள் இருக்கும். அதனுடைய பின்னணி என்ன என்று பார்க்கின்ற போது, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இயேசுவின் தாய் மரியாவும் மகதலா மரியாவும் ஒரு கூடை நிறைய முட்டைகளை எடுத்து, அவற்றை இயேசு அறையப்பட்ட சிலுவையின் அடியில் வைத்தனர். இயேசுவின் உடலில் இருந்து வழிந்த செங்குருதி, கீழே வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் பட்டு அவை செந்நிறமாய் மாறிப் போயின. அவற்றை எடுத்து பார்த்த போது அவை சிவப்பு நிறமாக மாறி, இயேசு உயிர்த்து விட்டார் என்று பொறிக்கப்பட்டிருந்தது (இது மரபுச் செய்தி).

இவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு, இயேசுவின் தாய் மரியாவோடும் நற்செய்தியாளர் யோவானோடும் எபேசு நகருக்கு சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:1,11-18) மற்ற சீடர்கள் பயந்து நடுங்கி இருந்த வேளையில், துணிச்சலோடு கல்லறைக்கு செல்கிறார் மகதலா மரியா. இயேசுவை தோட்டக்காரர் என்று எண்ணி ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் என்று சொல்லும், நான் சென்று அவரை எடுத்துச் செல்வேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். (அவர் அழுதார், அழுது கொண்டே கல்லறைக்கு சென்றார் என்று சொல்லப்பட்டிருக்கிறது அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு).

இயேசு அவரிடம் 'மரியா' என்றதும் மரியா திரும்பி பார்த்து, 'ரபூனி' என்று சொல்லி இயேசுவை பற்றிக் கொள்கிறார்.

அதோடு நின்று விடவில்லை உயிர்த்த ஆண்டவரை கண்டவர் உயிர்ப்பின் சாட்சியாய், சீடரிடம் சென்று 'நான் ஆண்டவரை கண்டேன்' என்று அறிவிக்கிறார்.

இதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு. தன் உள்ளத்தை தொட்டவரை இறுதிவரை பின்பற்றுகிற வாழ்வு உன்னதமான வாழ்வு. 

கடவுள் இருக்கிறார், கடவுள் இன்றும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நம்பினால் நாமும் அவரைப் பற்றிக் கொள்வோம். அவர் தரும் துணிச்சலால் அவரை (நீதியை, உண்மையை, அன்பை...) நம் வாழ்வால் அறிவிப்போம்...

புனித மகதலா மரியா போல துணிவோடு நம்பிக்கையோடு இயேசுவை அறிவிப்போம்...

கடவுளின் பரிவு...


பொதுக் காலம் 16ஆம் ஞாயிறு 

21.07.2024 - ஞாயிற்றுக் கிழமை

"பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்" - ஒசேயா 11:4

பரிவு மிக்கவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். மற்றவர்கள் என் மீது பரிவு காட்ட வேண்டும், என் மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே தவிர, நாம் பரிவுமிக்கவர்களாக மாற எண்ணுவதில்லை.

பரிவு என்பது தூய ஆவியாருடைய கனிகளில் ஒன்று. கலாத்தியர் திருமுகம் 6:2 இவ்வாறு சொல்கிறது, ஒருவர் மற்றவருடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். 

இயேசு காட்டும் பரிவைப் போல நாம் பரிவை காட்ட முடியாது, நன்மை செய்தவர்களுக்கும் அவர் பரிவை காட்டினார், தீமை செய்தவர்களுக்கும் பரிவை காட்டினார், எதுவும் செய்யாதவர்களுக்கும் பரிவு காட்டினார். அதுதான் இயேசுவின் பரிவு.

பரிவு என்பது வேறு, அனுதாபம் என்பது வேறு. ஒருவருக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி, இறங்கி வந்து அவருக்கு சேவை செய்வது பரிவு. இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதோடு நிறுத்தி விட்டால் அதுதான் அனுதாபம். (நல்ல சமாரியன் செய்தது பரிவிரக்கச் செயல்...)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:30-34) இயேசு தன்னுடைய சீடர்கள் மீதும் பரிவு கொள்கிறார். ஆயரில்லா ஆடுகளைப் போல இருந்த மக்கள் மீதும் பரிவு கொள்கிறார்.

திருத்தூதர்களின் இயேசுவிடம் கூடி தாங்கள் செய்ததை, கற்பித்தவையெல்லாம் அவருக்கு தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்ததன் மூலம் அவர்கள் களைப்புற்று இருப்பது இயேசுவுக்கு தெரிய வருகிறது. எனவே அவர்களுக்கு ஓய்வு தேவை. நீங்கள் பாலை நிலத்தில் தனிமையான ஓர் இடத்திற்கு சென்று, சற்று ஓய்வெடுங்கள் என்று அவர் அவர்கள் மீது அக்கறை கொண்டு பரிவு காட்டுகிறார்.

ஆனால் மக்கள் கூட்டம் அவர்களை விட்டபாடில்லை. மக்கள் கூட்டம் பெருந்திரளாய் அவர்களை தேடி வருவதை கண்டு இயேசு அவர்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் மீது பரிவு கொடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 23:1-6) தன் மக்களை சரிவர நடத்தாத மேய்ப்பர்களை இறைவன் கண்டிக்கிறார். துரத்தி அடிக்கப்பட்ட ஆடுகளாய் இருக்கக்கூடிய தன் மக்களை மீண்டும் பாதுகாப்பாக இடத்திற்கு கொண்டு வருவதாக வாக்கு கொடுக்கிறார். மக்கள் மீது பரிவு கொள்கிறார்.

இதோ நாட்கள் வருகின்றன. அப்போது நீதியும் நேர்மையும் நாட்டில் நிலைத்திருக்கும், துரத்தடிக்கப்பட்ட ஆடுகள் ஆட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்படும், அவை பல்கி பெருகும், அவற்றை பேணி காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா, திகிலுறா, காணாமலும் போகா என்று ஆடுகள் மீது பரிவு கொண்டவராக கடவுள் இருக்கிறார். (ஆடுகள் - தவறிப் போன மக்கள்).

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 2:13-18) தொலைவிலிருந்த நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார் திருத்தூதர் பவுல். 

கிறிஸ்து யூத சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதோர் மனித இனமாக படைத்து, அமைதி ஏற்படுத்த இவ்வாறு செய்தார். சிலுவையின் வழியாக தாமே துன்புற்று பகைமையை அழித்தார் என்கிறார். பிளவுபட்டிருந்த இரு இனத்தை ஒன்று சேர்க்க தம்மையே இழந்தார்.

இதன் வழியாக இயேசுவின் பரிவு வெளிப்படுத்தப்படுகிறது. 

இருக்கிற வரை பரிவுள்ளத்தோடு இருந்தால் நாமும் பரிவை பெறுவோம். பரிவில்லா வாழ்க்கை பயணம் பாதியிலேயே முடிந்து விடும்...

இயேசுவைப் போல பரிவு மனப்பான்மையோடு செயல்படுவோம்.

நாம் நன்மை செய்யும் ஊழியர்கள்...


பொதுக்காலம் 15ஆம் வாரம்

20.07.2024 - சனிக் கிழமை

"குற்றம் செய்ததற்காக நீங்கள் அடிக்கப்படும்போது பொறுமையோடு இருப்பதில் என்ன சிறப்பு? மாறாக, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும்" - 1 பேதுரு 2:20

நன்மை செய்வதற்கு எதிர்ப்பு வருவது எதார்த்தம் தான். நன்மை செய்வோரை அழிக்கவும் ஒழிக்கவும் பலர் திட்டம் தீட்டுவார்கள். நான் தான் நன்மை செய்யவில்லை, மற்றவர்களாவது நன்மை செய்யட்டுமே என்று தீமை செய்கிறவர்கள் நன்மை செய்பவர்களை விட்டு வைப்பதில்லை.

இது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம். 

(நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்; நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர் - திருப்பாடல்கள் 38:20)

பிலாத்து இயேசுவைப் பார்த்து உண்மையா! அது என்ன? என்று கேட்டது போல, இன்று பலர், நன்மையா! அது என்ன? என்று கேட்கிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 12:14-21) இயேசுவை ஒழிக்க பரிசேயர் சூழ்ச்சி செய்கிறார்கள். தனக்கு எதிராக மற்றவர்கள் தீங்கு செய்ய என்னும் போதும் கூட இயேசு நன்மையே செய்கிறார். இறைவாக்கினர் எசாயா உரைத்த வாக்குகள் இயேசுவில் நிறைவேறுவதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.

“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.” (எசாயா 42:1-4)

பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்டவை இயேசுவின் நிறைவேறுவதை இங்கு நாம் பார்க்கிறோம். இறை தந்தையின் மகனாக இறைதிருவுளத்தை நிறைவேற்றுபவராக நன்மைகளின் ஊற்றாக இயேசு இருக்கிறார். 

இயேசுவை பின்பற்றும் நாம் இயேசுவின் நன்மை செய்யும் ஊழியர்கள். யாக்கோபு 4:17இவ்வாறு சொல்கிறது, "நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்". 

பாவம் என்பது ஒருபுறம். இயேசுவின் சாயலை பெற்றவர்கள் என்ற நிலையை நாம் இழந்து விடுகிறோம். நன்மையைப் பற்றிக் கொள்ளாமல் தீமைக்கு செவிசாய்க்கின்ற போது நாம் இயேசுவின் எதிர்ப்பாளர்கள். 

ஆடுகிற வரை ஆட்டத்தை ஆடிவிட்டு முடியும் காலத்தில் தவறிவிட்டேன், நன்மை செய்ய மறந்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்பது எந்த வகையில் நியாயம்? 

வாழ்கின்ற வாழ்க்கையை நீதியோடும் நேர்மையோடும் வாழ வேண்டும். நாம் சொல்வது உண்மை இல்லை என்று வெளிப்படையாக தெரிய வருகின்ற போது நம்முடைய குரல் அதிகமாகிறது (கத்துகிறோம், எரிச்சல் அடைகிறோம்). (நீதிக்கு குரல் கொடுக்கின்ற போது சத்தம் வருவது வேறு, நாம் செய்தது தவறு என்று வெளியே தெரிய வருகிறபோது எழுகிற சத்தம் வேறு).

நன்மைக்கும் உண்மைக்கும் இவ்வுலகில் நகை/பகை தான் பரிசு. ஆனால் மறு உலகிலோ கடவுளுக்கு அருகில் அமரும் இருக்கை பரிசு. 

நன்மையை செய்வோம்... உண்மையைச் சொல்வோம்... இயேசுவின் தலைசிறந்த ஊழியர்களாக மாறுவோம்.

சட்டங்களை விட இரக்கமே பெரிது...


பொதுக் காலம் 15ஆம் வாரம்

19.07.2024 - வெள்ளிக் கிழமை

என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார்! அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்" - புலம்பல் 3:31,32

சட்டங்களை தூக்கிப் பிடிப்போர் நல்லவர்களாக எப்போது மாற முடியும்? அந்த சட்டங்களை தானும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற போது தான். 

அன்று மட்டும் அல்ல, இன்றும் சட்டங்கள் எழுதப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சட்டத்தை காக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள், மற்றவர்கள் மீது சட்டங்களை திணிக்கிறார்களே தவிர அவர்கள் சட்டங்களை பின்பற்றுவதில்லை. லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு புறமானது அது மற்றவர்களுக்கு சட்டமாக இருக்கிறது, ஆனால் பொறுப்புகளில் இருப்பவர்களை அது பாதிப்பதில்லை. 

நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், நான் சட்டம் தீட்டுகிறேன், நீ சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். இதுதான் அன்றும் இன்றும் என்றும் தொடர்கின்ற ஒரு தொடர்கதை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு12:1-8) பசியாய் இருந்ததால் ஓய்வு நாளில், சீடர்கள் கதிர் கொய்ததை பரிசேயர்கள் கண்டிக்கிறார்கள். தாவீது இறை இல்லத்திற்குள் சென்று அர்ப்பண அப்பங்களை உண்டது தவறல்லவா? என்று இயேசு பரிசேயேருக்கு சுட்டிக் காட்டுகிறார்.

ஓய்வு நாளில் எந்த செயலையும் செய்யக்கூடாது என்பது உண்மைதான் ஆனால் இங்கு சட்டங்களைவிட மனிதாபிமானம், மனித மாண்பு காக்கப்பட வேண்டும் அல்லவா? 

ஓய்வுநாள் சட்டம் கொண்டு வந்ததனுடைய நோக்கம், அடிமை தொடங்கி அரசன் வரை அன்று வேலை செய்ய கூடாது; அது கடவுளுக்குரிய நாள் என்பதற்காக(அடிமைக்கு விடுப்பு). பின்னாளில் வந்தவர்கள் அந்த ஓய்வு நாள் சட்டங்களையும் தங்களுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டனர்.

ஒருவருடைய பசியை போக்குவதை விட சிறந்த காணிக்கை எதுவும் இருக்க முடியாது. கடவுளுக்கு ஆயிரம் பொன்னும் வெள்ளியும் பணமும் கொடுத்தாலும் மனிதாபிமானத்தோடு நாம் செயல்படவில்லை என்றால் கொடுத்த அனைத்தும் முற்றிலும் வீண். இரக்கமில்லாமல் கடைபிடிக்கப்படும் அனைத்து செயல்களும் தகுதியற்றவையே. 

இயேசு பரிசேயர்களுக்கு கொடுக்கக்கூடிய பதில் 'பலியை அல்ல, இரக்கத்தை விரும்புகிறேன்' என்பதாகும். 

திருப்பாடல்கள் 51:16,17 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை".

சட்டம் என்பது எல்லோருக்கும் சரிசமமாய் இருந்தால் இங்கு பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் இந்த சட்டம் என்பது அதிகாரம் பணம் புகழ் படைத்தவருக்கு ஒரு மாதிரியாகவும் ஏழை ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், தனக்கு பிடித்தவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்கிறது.

பலி செலுத்துவதினாலும் சட்டங்களை தூக்கிப் பிடிப்பதினாலோ நாம் கடவுளை நெருங்கி வர முடியாது. இரக்கச் செயல்கள் புரிவதனால், இரக்கத்தோடு வாழ்வதனால் மட்டுமே நாம் கடவுளை நெருங்கி வர முடியும்.

எல்லோருக்கும் இரக்கம் காட்ட வேண்டும்; ஆனால் ஏமாற்றுகிறவர்கள், பொய்யர்கள், பித்தலாட்டம் செய்பவர்கள் இவர்களிடம் நாம் கவனமாய் இருக்க வேண்டும்.

சட்டங்களைவிட மனிதாபிமானத்தை வலியுறுத்தும் இரக்கமே பெரிது.

எளிதான சுமை...


பொதுக்காலம் 15 ஆம் வாரம் 

18.07.2024 - வியாழக் கிழமை

"உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்" - விடுதலைப் பயணம் 23:5

சுமை எப்படி எளிதாக இருக்க முடியும்? சுமக்கிறவருக்கு தான் தெரியும் சுமையின் பளு. ஒருவர் மீது சுமையை ஏற்றி வைத்துவிட்டு, பக்கத்தில் நடந்து வரும்போது அதன் வலி நமக்கு தெரியாது. சுமையை நாம் ஏற்றுக் கொள்கிற போது தான் கால்கள் தள்ளாட ஆரம்பிக்கும். 

எல்லா மனிதருடைய வாழ்க்கையிலும் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. சுமையில்லா சுதந்திர மனிதன் இவ்வுலகில் இல்லை. மனதில் சுமை, உடலில் சுமை, வாழ்வில் சுமை என்று சுமை நீண்டு கொண்டே செல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:28-30) இயேசுவும் சுமையை பற்றி பேசுகிறார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார் இயேசு. இளைப்பாறுதல் தருவேன் என்றவர், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். 

இந்த நுகம் என்பது அழுத்தத்தையோ பாரத்தையோ அதிகரிப்பது அல்ல, மாறாக இயேசுவின் பாதையை பின்பற்றுவதற்கான ஒரு கருவி. இயேசு நம்மீது வைக்கும் நுகத்தின் வழியாக நாம் அவரில் ஒப்படைக்கப்படுகிறோம், அவர் நம்மை வழி நடத்துகிறார். (அவரிடமிருந்து கற்றுக் கொள்ளும் போது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்). 

தலைவரை பின்பற்றுவது தான் சீடரின் கடமை. தலைவர் எவ்வழியோ அவ்வழியே செல்வதுதான் சீடத்துவத்தின் உயர்ந்த பண்பு. 

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு மேல் அழுத்தும் நுகம் வைக்கப்பட்டிருக்கும். அது மாடுகள் நேர்கோட்டில் பயணிப்பதற்காக, வழிகாட்டியின் வழி நடத்துதலிலே பயணிப்பதற்காக தான். அந்த நுகம் இல்லை என்று சொன்னால் அந்த மாடுகள் அதன் இலக்கை அடைய முடியாது.

நம்முடைய வாழ்க்கையிலும் இறை பாதையில் பயணிக்க நம்மீது நுகம் வைக்கப்படுகிறது. அதை விரும்பி ஏற்றுக் கொள்கிற போது, நாம் நம்முடைய சுமையை எளிதாக்க முடியும்.

திருப்பாடல்கள் 81:6இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன".

கடவுளை நோக்கி நாம் திரும்பும்போது கடவுள் நம்மில் இருக்கும் சுமைகளை இறக்கி வைப்பார். திசை மாறி செல்கின்ற போது மற்றவர்களால் நம்மீது சுமைகள் சுமத்தப்படுகின்றன. வாழ்வில் பளு அதிகமாகிறது.

சுமைகளற்ற வாழ்வை நோக்கிய பயணம் அல்ல நம்முடைய பயணம்; சுமைகளை எளிதாக்கும் பயணம் தான் நம்முடைய பயணம். யாருடைய வாழ்க்கையிலும் சுமை இல்லாமல் இல்லை ஆனால் அந்த சுமைகள் சுகங்களாக மாற வேண்டும். சுமை எளிதாக வேண்டும். 

மற்றொருடைய வாழ்வில் நாம் ஏற்றி வைக்கும் பாரங்கள், சுமைகள் எப்போது குறைக்கப்படும்? 

வார்த்தைகளால், செயல்களால் மற்றவர்களை காயப்படுத்தி வாழ்க்கையின் வேதனைக்கு அழைத்துச் செல்லும் சூழ்நிலை எப்போது மாறும்? 

எதை செய்கிறோமோ அதை நாம் திரும்ப பெற்றுக் கொள்வோம். நல்லது செய்தால் நல்லது விளையும், பிறரின் சுமையை இறக்கி வைத்தால் நம் சுமையும் எளிதாகும்.

அறிந்து புரிந்து செயல்படுத்திட...


பொதுக்காலம் 15ஆம் வாரம் 

17.07.2024 - புதன் கிழமை

"இறைவா! உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!" - திருப்பாடல்கள் 139:17

நம்முடைய பின்னணியில் அறிதலுக்கும் புரிதலுக்கும் இடைவெளி அதிகம். அறிதல் என்பது இவர் யார் என்று தெரிந்து கொள்வது. புரிதல் என்பது ஒருவரோடு வாழுகின்ற சூழலிலும் நிறை குறைகளோடு அவரை ஏற்றுக் கொள்வது, அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்வது. 

ஆனால் இயேசுவின் பார்வையில் அறிதல் என்பது முழுமையான அறிதல். இங்கு அறிதலும் புரிதலும் ஒன்றே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:25-27) தந்தை கடவுளை இயேசு போற்றுகிறார். ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம் என்கிறார் இயேசு. தந்தை மகனை அறிதலும் மகன் தந்தையை அறிதலும் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கிறார்.

எல்லாவற்றையும் அறிந்த கடவுள் எல்லாரும் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். (கடவுளை அறிதல் என்பது அவர் திருவுளத்தை செயல்படுத்துவதே...)

ஆனால் மனிதனின் பலவீனம் கடவுளைத் தவிர எல்லாவற்றையும் தேடுகிறது, தேடிக் கொண்டே இருக்கிறது. நிறைவில்லாத மனித வாழ்க்கை நிலையில்லாத உலகில் பயணிக்கிறது. 

எல்லாவற்றையும் இவ்வுலகில் நாம் விட்டு தான் செல்ல வேண்டும் என்ற எதார்த்தத்தை நாம் அறிந்திருந்தாலும் எல்லாவற்றையும் அடைந்தே தீர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. 

கடவுளுக்குரிய இடத்தில் மனிதர்களையும் பொருட்களையும் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் நாம் செய்யக்கூடிய எதையும் அறியவில்லை பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். திருப்பாடல்கள் 139:3 இவ்வாறு சொல்கிறது, "நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே".

கடவுளின் கண்களில் இருந்து எதுவும் மறைவாய் இல்லை. கடவுள் ஒவ்வொரு நாளும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இறைவார்த்தை வாயிலாக, அருளடையாளங்கள் வாயிலாக, மனிதர்கள் வாயிலாக, இயற்கையின் வாயிலாக என்று இறைவெளிப்பாடு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

ஆனால் இறைவனை தேடும் பணி தான் தொய்வடைந்து கொண்டிருக்கிறது.

மனிதர்களுக்கு இடையே அறிதல், புரிதல் தேவை. ஒருவரை அறிந்திருந்தால் மட்டும் போதாது அவரைப் பற்றிய புரிதலும் தேவை.

ஒருவரை புரிந்து கொள்ளும் பொழுது தான் அவரிடமிருந்து நன்மைகளை பெற முடியும். புரிதல் வரக்கூடிய இடத்தில் ஏற்றுக்கொள்ளுதல் இருக்கும். ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அன்பு இருக்கும். 

தந்தை மகனை, மகன் தந்தையை அறிந்துள்ளது போல நாம் கடவுளை அறிந்து கொள்வோம். அதன் வழியாக அவருடைய திருவுளத்தை நம் வாழ்வில் செயல்படுத்துவோம்.

(நெறிதவறிய) கிறித்தவருக்கு தண்டனை உண்டு...


பொதுக்காலம் 15ஆம் வாரம்

16.07.2024 - செவ்வாய்க்கிழமை

"தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது" - நீதிமொழிகள் 11-21. 

வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அல்லது மனம் மாறுவதற்கான வாய்ப்பு. இது மனிதர்களால் மனிதருக்கு கொடுக்கப்படுகிறது அல்லது கடவுளால் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்று சொல்வார்களே, அதுதான் வாய்ப்பு. வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு ஐயோ! நான் வாய்ப்பை சரிவர பயன்படுத்தவில்லையே, எல்லாம் என்னைவிட்டு கடந்து போய்விட்டது என்று புலம்புவதனால் ஒன்றும் திரும்ப போவதில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:20-24) மனம் மாறாத கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் நகரங்களை இயேசு கண்டிக்கிறார். வல்ல செயல்கள் பல செய்யப்பட்டும் மனம் மாறாத மக்களாய் இருப்போருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. 

கொராசின், பெத்சாய்தா நகர்களுக்கு ஐயோ கேடு! என்றும், கப்பநாகுமே நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய் என்றும் கண்டனக் குரல் எழுப்புகிறார் இயேசு. 

உங்களில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன், சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அந்த மக்கள் மனம் மாறி இருப்பார்கள், அந்த நகர் இன்றுவரை நிலைத்திருந்திருக்கும் என்று சொல்கிறார்.

மனம்மாற வாய்ப்பு கொடுத்தும் அதை பயன்படுத்தாதவருக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகப் பெரியது. அறியாமல் தெரியாமல் செய்யப்படக்கூடிய தவறுக்கு கிடைக்கும் தண்டனை விட முழு மன விருப்பத்தோடு நன்கு அறிந்தே ஒரு தீய செயலை செய்வதனால் தண்டனை பன்மடங்கு பெருகும்.

நம் வாழ்க்கையில் கடவுளால் மனிதரால் கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவன்(ள்) என்ற போர்வையில் கிறிஸ்துவை பின்பற்றாமல் கிறிஸ்துவை சாராத மற்றவற்றை பின்பற்றிய எனக்கு கிடைக்கும் தண்டனை என்ன?

கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ வேண்டும். 

பொல்லாருக்கும் இறப்பு உண்டு, நல்லாருக்கும் இறப்பு உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கேற்ற கைம்மாறு உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

சபை உரையாளர் 12:14 இவ்வாறு சொல்கிறது, "நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்".

கடவுளை முன்னிலைப்படுத்த வேண்டிய இடத்தில் நம்மை முன்னிலைப்படுத்தியிருக்கிறோம்.

பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறோம். 

உண்மைக்காக நீதிக்காக குரல் கொடுக்கும் கிறித்தவர்களை வார்த்தையால் செயலால் கொலை செய்திருக்கிறோம்.

நானே கடவுள்! என்ற மனப்பான்மையில் வாழ்ந்திருக்கிறோம். 

கடவுள் நம்பிக்கையை வியாபாரம் செய்திருக்கிறோம்.

வட்டிக்கு கொடுத்திருக்கிறோம்.

பிறர் உடைமைகளை பறித்திருக்கிறோம்...

நெறிதவறிய கிறித்தவராகிய நமக்கு கிடைக்கும் தண்டனை என்ன?


பிளவும் கைம்மாறும்...


பொதுக்காலம் 15ஆம் வாரம்

15.07.2024 - திங்கட் கிழமை

"நீங்களோ மனத்திடன் கொள்ளுங்கள்; தளர்ந்துபோக வேண்டாம், ஏனெனில், உங்கள் செயல்களுக்கேற்ற கைம்மாறு கிடைக்கும்" - 2 குறிப்பேடு 15:7

பிளவு உண்டாக வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. அதே போல பிளவு வந்தபின் சரிசெய்ய வேண்டும் என்றும் யாரும் விரும்புவதில்லை. 

சரி செய்தாலும், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான் வரும். எனவே, பிரச்சனைகளோடு இருந்து விடுவோம். ஏன் பிளவுகளை சரி செய்ய வேண்டும்? என்ற மனப்பான்மை நம்மில் பலருக்கு உண்டு.

சில வேளைகளில் குடும்பத்தில் பிளவுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. சில பிளவுகள் எதிர்பாராமல் பேசிய ஒரு சில வார்த்தைகளால் உருவாகிறது.

யார் பிளவை உண்டாக்கியவர்? யார் பிரச்சனைக்கு காரணம்? என்பது தெரிந்தபின், அதை அவரும் சரி செய்ய முன் வந்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். 

இங்கு பிரச்சனையே பிளவை ஏற்படுத்தியவர் தொடர் பிளவை உண்டாக்குவது தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு10:34-11:1) இயேசு பிளவை பற்றி பேசுகிறார். (இந்த பிளவு வித்தியாசமானது) தந்தைக்கு எதிராக மகனும் தாய்க்கு எதிராக மகளும் மாமியாருக்கு எதிராக மருமகளும் பிளவுபட்டிருப்பர். நான் அமைதியை ஏற்படுத்த அல்ல, வாளையே கொணர வந்தேன் என்கிறார் இயேசு. மேலும் இறைப் பணியை செய்வோர் அதற்குரிய கைம்மாறு பெறாமல் போகார் என்பதையும் இயேசு அழுத்தமாக பதிவு செய்கிறார்.

இயேசுவை பின்பற்றுவோர் இயேசுவை பின்பற்றாதவருக்கு எதிராகத்தான் இருப்பர். அது குடும்பமாக இருந்தாலும் சரி சமூகமாக இருந்தாலும் சரி பிளவு ஏற்பட தான் செய்யும்.

தன் உறவினரிடம் அதிக அன்பு கொண்டு உள்ளோர், தன் சிலுவையை சுமக்காதோர் இயேசுவின் சீடரென அழைக்கப்பட தகுதியற்றோர். தன் உறவினரிடம் அதிக அன்பு கொண்டுள்ளோர், தன் உறவினருக்காக எதையும் இழக்கத் துணிவார், அது உண்மையானாலும் சரி, நீதியானாலும் சரி.

அப்படி உறவினருக்காக எதையும் செய்பவர் இயேசுவின் சார்பாக இருக்க முடியாது. ஒருவேளை இயேசுவின் சார்பாக இருந்தால் உறவினரின் உறவை இழக்க நேரிடும். இது தான் பிளவு.

இங்கு ஒன்றை இழப்பதன் வழியாக ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான் இயேசுவின் பாடம். 

தீமையை எதிர்ப்பதன் வழியாக நன்மையை பற்றிக்கொள்ள முடியும். தீய உறவுகளை இழப்பதன் வழியாக நல்ல கைம்மாறை நாம் பெற முடியும்.

இயேசுவின் பார்வையில் பிளவு என்பது தீமைக்கும் நன்மைக்கும் இடையே உள்ள பிளவு, இழப்பிற்கும் கைம்மாறுக்கும் இடையேயான பிளவு.

மனிதர்களால் ஏற்படும் பிளவு மன உளைச்சலை கொடு; இயேசுவின் பொருட்டு உண்டாகும் பிளவு கைம்மாறை பெற்று கொடுக்கும்.


பயணமும் பரிந்துரையும்...


பொதுக் காலம் 15ஆம் வாரம்

14.07.2024 - ஞாயிற்றுக் கிழமை

நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்; பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்; ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்! - சாலமோனின் ஞானம் 5:7

பயணம் செய்ய எல்லோரும் விரும்புவோம். ஆனால் பயணத்தில் சில தடங்கல்கள் வந்தால் அல்லது பயணம் செய்ய சில பரிந்துரைகள் வைக்கப்பட்டால் தடைபடும் நம் பயணம்.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை நோக்கிய ஒரு பயணம். தடுமாற்றங்கள் தடைகள் எல்லாவற்றையும் கடந்து உண்மையை நோக்கிய ஒளியை நோக்கிய பயணம். பள்ளம் என்று தெரிந்தும் யாரும் பள்ளத்தில் விழுவதில்லை, ஆனால் இருளென்று தெரிந்து இருளான வாழ்வை, இருளான பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோம். 

தீய வாழ்வால், பாதைகள் தடுமாற கூடாது. பயணங்கள் தடைபட கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்திற்கு சில பரிந்துரைகள் வைக்கப்படுகிறது. உணவு, பை, இடைக் கச்சை, செப்பு காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம், கைத்தடி எடுத்துக் கொள்ளலாம், மிதியடி போட்டுக் கொள்ளலாம் அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும். இதுதான் சீடர்களின் பயணத்திற்கான இயேசுவின் பரிந்துரைகள். 

இந்த பயணத்தில் சீடர்கள் நலம் பெறுவதை காட்டிலும் தேவையில் இருப்போர் பயனடைகின்றார்கள். நோயுற்றோர் நலம் பெறுகிறார்கள், மக்கள் மனமாற்றம் அடைகிறார்கள், பேய்கள் ஓட்டப்படுகின்றன.

பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும். 

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மேலும் சொல்லக்கூடிய அறிவுரை, 'உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'.

இருவர் இருவராக சீடர்களை அனுப்புவதன் நோக்கம் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்ள, சோர்வில் துணை நிற்க, இணைந்து பணியாற்ற.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் பெத்தேலுக்கு பயணம் மேற்கொண்டு கடவுளின் வார்த்தையை அறிவிக்கிறார். அவருடைய பணிக்கு இடையூறாக பெத்தேலின் குருவாகிய அமட்சியா முன்வருகிறார். அதற்கு ஆமோஸ் நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்தி மர தோட்டக்காரன், ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு"   என்று அனுப்பினார் பதில் சொல்கிறார். இறைவாக்கினரின் பயணம் இறைவாக்கை எடுத்துச் சொல்லவற்காக.

இன்றைய இரண்டாம் வாசகமானது, தந்தை கடவுளுக்கும் நமக்குமான நெருக்கத்தை இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்கிறது. விண்ணகத்திலிருந்து மண்ணகம் நோக்கி பயணத்தினால் இந்த நெருக்கம் ஏற்பட்டது. விண்ணகத்தையும் மண்ணகத்தையும் ஒன்று சேர்ப்பதற்கான ஒரு திட்டமே இயேசு கிறிஸ்துவின் மண்ணக பயணம்.

இவ்வுலகில் நம் வாழ்வு நகர்கிறது நாம் பயணிக்கிறோம். இவ்வுலகில் இருந்து அவ்வுலகை அடைவது தான் நம்முடைய இலக்கு. 

அதற்கான இயேசுவின் பரிந்துரை, இறையாட்சியின் விழுமியங்களை உள்வாங்கி அதை செயல்களால் வெளிப்படுத்துவது தான்.

- நன்மை செய்ய கூடுமானால் நன்மை செய்

- ஒடுக்கப்பட்டோருக்கு விரைந்து உதவு

- தாழ்ந்தோரை உயர்த்து

- உண்மை பேசு

- அமைதியை ஏற்படுத்து 

- யாரையும் இகழாதே...


அஞ்சுங்கள்... அஞ்சாதிருங்கள்...


பொதுக் காலம் 14ஆம் வாரம்

13.07.2024 - சனிக் கிழமை 

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமா யிருப்பார்" - நீதிமொழிகள் 14:26

மனிதத்தை அச்சம் மூடிக் கொண்டிருக்கிறது. அச்சமின்றி யாரும் இங்கு வாழ்வதில்லை. பல தருணங்களில் அச்சத்தினாலே வாழ்வு முடிந்திருக்கிறது (உதாரணமாக கொரோனாவை சொல்லலாம்). பயம், நடுக்கம், அச்சம் இவை மனிதனின் உயிரை அணு அணுவாகக் கொல்லும்.

சில பயம் காரணம் ஒன்றுமில்லாமே நம் மனதில் எழுகிறது. அது தேவையற்ற பயம். (அடுத்து என்ன நடக்கும்? நம் வாழ்க்கை எதுவரை இருக்கும்? யார் நமக்காக அழுவார்?).

சில பயம் மற்ற மனிதர்கள் மூலம் உண்டாகிறது (நம்முடைய வாழ்வை அழிக்க மற்றவர் சதித்திட்டம் தீட்டுவது தெரிய வரும்பொழுது, நம் பெயரை கெடுக்கும் பொழுது, நம் வேலையை ஒருவர் பறிக்க எண்ணும்போது...).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு 'அஞ்சுங்கள்' என்றும் சொல்கிறார், 'அஞ்சாதிருங்கள்' என்றும் சொல்கிறார்.

எரியும் நரகத்தில் உங்களை அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள் எனவே அஞ்சாதிருங்கள், 

மனிதருக்கு அஞ்சுவதை விட கடவுள் அச்சத்தோடு வாழ்வது நல்லது. கடவுள் பயம் இருக்கின்ற போது தவறுவதற்கு தயங்குவோம். ஆனால் மனிதர் மீது பயம் இருக்கின்ற போது இடத்திற்கு ஏற்றார் போல் நாம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டே இருப்போம்.

மனிதர்களால் நம்முடைய உடலை அழித்து விட முடியும். ஆனால் நம்முடைய ஆன்மாவை நம்மிடமிருந்து ஒருபோதும் பிரித்து விட முடியாது. மனிதர் மீது கொள்ளும் மதிப்பின் காரணமாக பயம் இருக்க வேண்டுமே தவிர, மனிதர் கொண்டுள்ள அதிகாரத்தின் காரணமாக பயம் எழக் கூடாது.

இவ்வுலகில் மனிதர்கள் கடவுளுக்கு அஞ்சுவதை விட மனிதர்களுக்கு அஞ்சுவது போல தங்களை அதிகம் காட்டிக் கொள்கிறார். எல்லாருடைய சுய ரூபங்களும் தனித்து விடப்படும் போது தான் தெரிய வருகிறது அல்லது தான் எதற்காக காத்திருந்தாரோ அந்த நிலைக்கு வருகின்ற போது தான், ஒருவரின் உண்மை முகம் வெளி வருகிறது.

சீடர் குருவை விட பெரியவர் அல்ல பணியாளரும் தன் தலைவரை விட பெரியவர் அல்ல. நாம் எந்நிலைக்கு வந்தாலும் ஒருபோதும் கடவுளை விட பெரியவர் ஆக முடியாது. ஆனால் அவர் வார்த்தைகளை உள்ளத்தில் இருத்தி தியானிக்கின்ற போது கடவுள் விரும்புவது போல நாம் ஆக முடியும்.

பயனற்ற பயம் தேவையில்லை, அதிகார அச்சம் தேவையில்லை. இறையச்சமும் இறைவனில் பணிவும் நம்முடைய வாழ்க்கையின் இலக்காக இருக்கட்டும்.

இடர்களுக்கிடையில் மனஉறுதி...


பொதுக்காலம் 14ஆம் வாரம்

12.07.2024 - வெள்ளிக் கிழமை 

"மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்" - 2 கொரிந்தியர் 6:4.

மனம் உறுதி இழப்பதே இடர்களினால் தான். ஆனால் அந்த இடர்களுக்கு இடையிலும் மன உறுதியோடு இருக்க இறைவன் அழைப்பு விடுக்கிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 10:16-23) தன்னுடைய சீடர்களை பணி வாழ்வுக்கு அனுப்புவதற்கு முன்பு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார் இயேசு. பிரச்சனைகள் இதுதான் என்று தெரிந்தும் ஒருவர் முன் வருகிறார் என்றால் அவர் தான் உண்மையான சீடராக இருக்க முடியும். 

யூதச் சங்கங்களிடம் உங்களை ஒப்புவிப்பார்கள், தொழுகை கூடங்களில் உங்களை சாட்டையால் அடிப்பார்கள், உங்களை ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்வார்கள் என்று தன்னுடைய சீடர்கள் அனுபவிக்க இருக்கக்கூடிய துன்பங்களை இயேசு முன்னுரைக்கிறார்.

குழி/பள்ளம் என்று தெரிந்தும் யாரும் குழியில் அல்லது பள்ளத்தில் விழுவதில்லை. கிறித்தவ மறையை ஏற்று இருக்கிறோம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்றால் நாமும் துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது நம் முன்னால் வைக்கப்படக்கூடிய முதல் சவால். 

துன்பங்கள் இல்லாமல் கிறித்தவ வாழ்வு இல்லை. வாழ்வு என்பது இன்பமாக வாழ்வதற்கு தான்; அப்படி இன்பமான வாழ்வை கிறிஸ்து/கிறித்தவம் கொடுக்கவில்லை என்று சொன்னால் ஏன் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும்? கிறித்துவ மதத்தில் இருக்க வேண்டும்? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்! 

இங்கு வரக்கூடிய துன்பம் என்பது நீதியோடும் நேர்மையோடும் உண்மையோடும் நடப்பதனால் வரக்கூடிய துன்பத்தை குறிக்கிறது. ஒருவேளை நான் என்னுடைய வாழ்க்கையில் நீதியோடும் உண்மையோடு நடக்கவில்லை என்றால் துன்பம் என்னை நெருங்காது எனக்கான விண்ணக இன்பமும் கிடைக்காது.

கிறித்தவம், விண்ணக வாழ்வை சொல்லிச் சொல்லி மண்ணக வாழ்வின் மகிழ்வை குறைப்பது அல்ல, மாறாக மண்ணக வாழ்விலே விண்ணகத்தை சுவைக்க வேண்டும் என்பது தான் எதார்த்தம்.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வின் முன் சுவை.  

இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்கப்படுவர் என்கிறார் இறைமகன் இயேசு. அந்த இறுதி எதுவரை? என்று நமக்கு தெரியாது. இடர்களைக் கண்டு துணிந்து நின்றால் இடர்களும் இடறி போகும்.

இந்த உலக காரியங்களை பார்க்கின்ற போது இடர்கள் வெளியிலிருந்து வருவதை காட்டிலும், வீட்டின் உள்ளே இருந்து அதிகமாக வருகிறது. பிள்ளைகளுக்கு எதிராகப் பெற்றோரும் சகோதர சகோதரிகளுக்கு எதிராக உடன்பிறப்புகளும் கிளர்ந்து எழுந்து வருகின்றனர். இதை அன்றே இயேசு சுட்டிக்காட்டி விட்டார். 

முன்மதியோடும் கபடு அற்றவர்களாகவும் இருக்க இறைவன் அழைக்கிறார்.

இத்தகைய வாழ்வை வாழ்ந்தவர்கள் தான் திருத்தூதர்கள், புனிதர்கள். 

நாமும் மண்ணக வாழ்வை மன உறுதியோடு வாழ இவர்கள் நமக்கு முன்மாதிரிகள். துன்பங்களை சந்திக்காமல் இடர்களை எதிர்கொள்ளாமல் திருத்தூதர்களும் புனிதர்களும் அந்த நிலையை அடையவில்லை. 

நாமும் நம்பிக்கை நிலைத்திருந்து, உண்மைக்கு செவிமடுத்து மன உறுதியோடு வாழ்வோம்... மண்ணிலே விண்ணகத்தை காண்போம்...

பணியில் பகிரப்படும் அமைதி... பணிவில் பெறப்படும் அமைதி...


பொதுக் காலம் 14 ஆம் வாரம்

11.07.2024 - வியாழக் கிழமை

"எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்” - நீதிமொழிகள்  1:33

நமக்கு தேவையான எல்லாம் நம்மிடம் இருக்கிறது ஒன்றைத் தவிர, அது அமைதி. உழைப்பின் வழியாக எல்லாவற்றையும் சேமித்து விடுகிறோம், சேகரித்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான அமைதியை மட்டும் தொலைத்து விடுகிறோம். 

அமைதி இல்லை என்றால் எதுவும் இல்லை. மனதில் அமைதி இருந்தால் எல்லாம் நம் கையில். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 10:7-15) இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து நலம் குன்றியவர்களை குணமாக்க, இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்ய, தொழுநோயாளரை நலமாக்க, பேய்களை ஓட்ட அனுப்புகிறார். வீட்டுக்குள் செல்லும்பொழுதே வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால் நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும் என்கிறார் இயேசு. 

பணியின் வழியாக அமைதி பகிரப்படுகிறது. அந்த அமைதியை பெறுவதற்கு பணிவு தேவையாக இருக்கிறது. 

நாம் வாழக்கூடிய இந்த உலகில், மற்றவருடைய அமைதியை குலைப்பதற்காக, மற்றொருவருடைய நிம்மதியை சிதைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகிறது. 

நான் நன்றாக இல்லாத போது யாரும் நன்றாக இருந்து விடக்கூடாது என்பது தான் ஒவ்வொருவருடைய எண்ணமாக இருக்கிறது.

ஒரு மனிதனின் அமைதியை குறைப்பது சக மனிதன்தான். ஒருவர் மற்றவரை சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு ஒருவர் மற்றவரின் அமைதியை சிதைப்பது எந்த வகையில் நியாயம்? 

இன்று நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதுமில்லை, இறைவார்த்தைக்கு ஏற்ப நடப்பதும் இல்லை. எனவே தான், நம்முடைய குடும்பங்களில் அமைதி இல்லாமல் போய்விட்டது. 

பணத்திற்கு இடம் இருக்கிறது, பெருமைக்கு இடமிருக்கிறது, புகழுக்கு இடம் இருக்கிறது, ஆணவத்திற்கு இடம் இருக்கிறது, அதிகாரத்திற்கு இடம் இருக்கிறது; ஆனால் அமைதிக்கு மட்டும் இடமில்லை.

உலகில் இரண்டே இரண்டு இடங்களில் தான் அமைதி தக்க வைக்கப்பட்டுள்ளது. 

1. கருவறை 

2. கல்லறை 

இறைவார்த்தைக்கு செவிமடுத்து அந்த இறைவார்த்தையை ஒவ்வொருவரும் வாழ முற்படுகின்ற போது அமைதி கிடைக்கும். நான் வாழ்வது போல மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிற போது அமைதி உருவாகும். 

தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு தெளிந்த மனநிலையோடு நம்மில் அமைதியை உண்டாக்கி மற்றவர் வாழ்விலும் அமைதியை உருபெறச் செய்வோம்.

அமைதியை விரும்பினால் அமைதி... அன்பை விதைத்தால் அன்பு... பணிவிருந்தால் இவை இரண்டும் நம் வாழ்வில் இருக்கும்.

பெயர் சொல்லி அழைக்கப்பட...


பொதுக்காலம் 14 ஆம் வாரம் 

10.07.2024 - புதன் கிழமை 

இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்; பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்" - எசாயா 45:3

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. சில வேளைகளில் அந்த சொந்த பெயரையும் கடந்து பல அடையாள பெயர்களும் (பட்டப் பெயர்) இருக்கின்றன.

ஆளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதலில் பயன்படுத்தப்படுவது பெயர் தான். ஒரு பெயரைச் சொன்னவுடன் எல்லோரும் வியந்து நிற்கிறார்கள் என்றால், அந்தப் பெயரைக் கொண்டவர் அத்தகைய சாதனையை படைத்திருக்கிறார் என்று தான் பொருள். சில பெயரை கேட்டதும் முகம் சுளிக்கிறது என்றால், செய்த செயல் அருவருப்பானது, இழிவானது என்று தான் அர்த்தம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 10:1-7) இயேசு பெயர் சொல்லி தன்னுடைய சீடர்களை அழைக்கிறார். அழைக்கப்பட்ட பெயர்கள் பின்னாளில் வியப்புக்குரிய பெயர்களாக மாறிப் போனது என்பது மறுப்பதற்கில்லை. 

சீடர்களின் பெயர்கள் முறையே, பேதுரு என்னும் சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. 

ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் அல்லது ஒரு வரலாறு புதைந்திருக்கிறது. இயேசு அவர்களை அழைத்த போது சில ஆற்றல்களையும் அதிகாரங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டார். வழிதவறி போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் செல்ல அவர் கட்டளையிட்டார்.

தொடக்கம் குறுகியதாக (இஸ்ரயேல் மக்களிடம் சொல்லுங்கள்) இருந்தது; நிறைவு எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது (விண்ணரசு அனைவருக்குமானது).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை (இஸ்ரேல் மக்களிடம் செல்லுங்கள்) மேலோட்டமாக காணுகிற போது, கடவுள் குறுகிய மனநிலையோடு செயல்படுகிறார் என்று தோணும்.

முதலில் வழி தவறியவர்களுக்கு வாய்ப்பு(கடவுளை ஏற்றுக் கொண்டு அவரை நிராகரித்து, வேறு தெய்வங்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தவர்கள்), அதன் பின் வழி மாறியவர்களுக்கு வாய்ப்பு (உண்மை கடவுளை அறியாத மக்கள்). 

அழைக்கப்பட்ட திருத்தூதர்கள், தங்களால் இயன்ற அளவில் திருத்தூது பணியை சிறப்பாக செய்தார்கள்.

தடைகளை தாண்டி, இடர்பாடுகளை கடந்து, நம்பிக்கை குறைவிலிருந்து நம்பிக்கை மிகுதி பெற்று அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம். வழி தவறி போகாதமாறு அவர் குரலைக் கேட்டு அவர் பின்னே செல்ல அழைக்கப்படுகிறோம்.

அவரை பின்தொடர்ந்து அவர் நமக்கு வகுத்திருக்கும் திட்டங்களை நாம் சரிவர செய்வதன் வழியாக நாம் அவரின் செயல் வீரர்களாக, திருத்தூதர்களாக, இயேசுவின் வழி நடக்கும் சீடர்களாக மாற முடியும்.

புரிதலும் அறுவடையும்...


பொதுக் காலம் 14ஆம் வாரம்

09.07.2024 - செவ்வாய்க் கிழமை

"காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை" -  எசாயா 1:3

புரிதல் இல்லாத வாழ்க்கையில் விளைச்சல் இருக்காது. புரிதல் இருந்தால் தான் பலன் இருக்கும். எத்தகைய வாழ்க்கை (துறவற/இல்லற) முறையாக இருந்தாலும் அங்கு புரிதல் கண்டிப்பாக தேவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:32-38) இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையை செய்தும், இறையரசை பற்றி போதித்தும் அவரைப் புரிந்து கொள்ளாத பரிசேயக் கூட்டத்தை பார்க்கிறோம்.

சிலர் பார்த்து புரிந்து கொள்வார்கள், சிலர் கேட்டு தெளிவுப் பெற்று புரிந்து கொள்வார்கள், ஆனால் பலர் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கூட புரிந்து கொள்வதில்லை. 

'இவன் பேய்களின் தலைவனை கொண்டு பேய்களை ஓட்டுகிறான்' என்று புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் பரிசேயர்கள்.  

இங்கு இயேசுவின் அன்பு பரிவாக பரிமாற்றம் பெறுகிறது. ஆயனில்லா ஆடுகளாய் இருந்த மக்களைக் கண்டு அவர் பரிவு கொள்கிறார். 

நாம் ஒருவரை அறிந்து புரிந்து கொண்டாலே பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும். அந்த புரிதலுக்கு திறந்த மனம் தேவை. சில பிரச்சனைகளை பேசி தீர்த்துவிடலாம், சில பிரச்சனைகள் அமைதியாக இருந்தாலே தீர்த்து விடலாம். அதற்கும் புரிதல் தேவை. 

நான் சொல்வது தான் சரி என்கிற போது அங்கு புரிதல் இல்லை, மற்றவர்கள் சொல்கிறதை ஏற்கிற போதுதான் புரிதல் உண்டாகிறது. 

இன்று பரிசேய மனநிலை நம்மில் அதிகம். ஒருவரை அழிக்க நாம் எடுக்கும் ஆயுதம் அவரைப்பற்றி தவறாக பேசுவதே. நல்லது பேசி விளைச்சல் காண மனம் இல்லாதவர்கள், மற்றவர்களை குறித்து அவதூறு பேசி வாழ்க்கையை சிதைத்து விடுகிறார்கள்.

இயேசு தனக்கு எதிராக தீமை செய்தவர்களையும் புரிந்து கொள்கிறார், தன்னை சாராதவர்களையும் புரிந்து கொள்கிறார், தன்னை தேடி வருபவர்களையும் புரிந்து கொள்கிறார். ஆனால் நம்மால், நம்மோடு இருப்பவர்களையே புரிந்து கொள்வது பெரும்பாடாக இருக்கிறது. 

புரிதல் இருக்கும் இடத்தில் ஏற்றுக் கொள்ளுதல் இருக்கும், ஏற்று கொள்ளுதல் இருக்கும் இடத்தில் மனநிறைவு குடிகொள்ளும். அங்குதான் அன்பு எனும் விளைச்சல் அதிகமாக இருக்கும். 

இங்கு பிரச்சினையே யார் யாரை புரிந்து கொள்வது என்பதுதான்! இயேசுவைப் போல காலத்தின் அறிகுறிகளை கண்டுகொள்ள தேவையில் இருப்போரை தேடிச் செல்ல மிகுதியான அறுவடைக்கு உரிய பணியாளராக நாம் மாற முன் வருவோம். 

புரிதலோடு பயணிக்கின்ற போது தடை கற்களும் படிக் கற்களாக மாறும். எதிர்ப்பவர்களையும் அன்பு செய்கிற போது விண்ணரசு நம் வசமாகும். 

பரிவும் புரிதலும் நம் உள்ளத்தில் விளைச்சலை கொடுக்கட்டும்.

நகைப்புக்கிடையில் (நம்பிக்கையினால்) வல்ல செயல்...



பொதுக் காலம் 14 ஆம் வாரம் 

08.07.2024 - திங்கட் கிழமை

சிலரது நம்பிக்கை சில வேளைகளில் நகைப்புக்கு உள்ளாகிறது. நம்பிக்கைக்குரியோர்  சிறுமைப்படுத்தபடுகின்றனர். நல்லவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றனர்.

இவ்வளவு வாழ்க்கையில் அடிபட்ட பிறகும், எப்படி தான் கடவுள் நம்பிக்கை நிலைத்திருக்கிறார்களே? இன்னும் என்னதான் பாடுபடப் போகிறார்களோ! என்று பிறர் பேசும் ஏளனப் பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:18-26) தொழுகை கூட தலைவரின் மகள் இறந்த நிலையில் இருந்து உயிர் பெறுகிறார். 12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பின் நலம் பெறுகிறார். 

12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் நிச்சயமாக பலரின் இகழ்ச்சிக்கு உள்ளாகி இருப்பார், பலர் இவரை ஏளனமாக பேசி இருப்பார்கள், பாவியென்று முத்திரை குத்தி இருப்பார்கள். எனவே தான் தயக்கத்தோடு, அதே வேளையில் மிகுந்த நம்பிக்கையோடு இயேசுவின் மேலுடையின் ஓரத்தை தொடுகிறார். நலம் பெறுகிறார். 

தொழுகைக்கு கூட தலைவரின் மகளை பார்த்து,  'சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்' என்று சொன்னதும் சூழ இருந்தவர்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். 

நகைத்தவர்களை இயேசு பார்க்கவில்லை, நம்பிக்கைக்குரிய தொழுகைக் கூடத் தலைவரை பார்க்கிறார், அவரின் மகளுக்கு உயிர் கொடுக்கிறார்.

ஒரு இடத்தில் பாதிக்கப்பட்டவர்(12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்தியவர்) நகைப்புக்கு உள்ளாகிறார்; மற்றொரு இடத்தில் நலம் அளிக்க சென்ற இயேசு நகைப்புக்கு உள்ளாகிறார், தொழுகைக் கூடத் தலைவரைக் குறித்தும் மற்றவர்கள் எள்ளி நகையாடி இருப்பார்கள் (மகள் இறந்துவிட்டார் இன்னும் இவர் நம்பிக்கையோடு இருக்கிறாரே என்று).

நம்முடைய வாழ்க்கையிலும் பல தருணங்களில் சொந்த உறவுகளாலேயே நாம் நகைப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடும். இவர்கள் வாழ்க்கையில் எங்கு முன்னேற போகிறார்கள்? இவர்கள் பிழைப்பது கஷ்டம் தான் என்று சொல்லி நம்மை ஊசி போன்ற வார்த்தைகளால் குத்தி கிழித்து இருக்கக்கூடும். 

நம்முடைய வளர்ச்சி மீது பொறாமை கொண்டவர்கள் கூட, நம் வளர்ச்சியை குறித்து தவறாக பேசியிருக்கக்கூடும். 

எது எப்படி இருந்தாலும், நாம் நம்பிக்கையில் நிலைத்திருக்கும் போது பிறரின் நகைப்பு, பிறரின் ஏளனம், பிறரின் எச்சரிக்கை நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

நம்பிக்கையோடு கூடிய செயல் நிச்சயம் நம்மை ஒரு நாள் உயர்த்தும். அது நோயிலிருந்து விடுதலையாக இருக்கலாம், தாழ்வு நிலையிலிருந்து உயர்நிலையாக இருக்கலாம், இகழ்ச்சியிலிருந்து புகழ்ச்சியாக இருக்கலாம்.

நம் நம்பிக்கையால் நாம் உயர்வை காண்பது உறுதி. அதே நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையால் மற்றவர் வாழ்வையும் உயர்த்துவோம்...

தயக்கம் என்னும் தடை...


பொதுக் காலம் 14ஆம் வாரம்

07.07.2024 - ஞாயிற்றுக் கிழமை

வாழ்க்கையில் சில தடைகள் நம்முடைய உள்ளத்தில் இருந்து எழுகிறது. சில தடைகள் மற்ற மனிதர்கள் வழியாக உருவாகிறது. தடைகளை தாண்டி வருவதே, சவாலாக இருக்கிறது. ஒரு தடையை தாண்டிய பிறகு மற்றொரு தடை என்று தொடர் தடையாக நம் வாழ்க்கை உள்ளது. 

இவரைப் பற்றி நமக்குத் தெரியாதா? இவர் குடும்பம் நமக்கு தெரியாதா? என்று பொது இடத்தில் ஒருவரைப் பற்றி சொல்கின்ற போது அவரை நாம் முன்னேற விடாமல் தடுக்கிறோம்.

வார்த்தைகளால் மற்றவர்களை வசை பாடி ஏற்றுக்கொள்ள தயங்குகிறபோது நாம் ஒருபோதும் முன்னேற போவதில்லை.

சொந்த மக்களாலும் இடர், பிற மக்களாலும் இடர் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:1-6) இயேசுவை சொந்த மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். வல்லமை பொருந்திய இறைமகனுக்கு மனிதர்களது நம்பிக்கையின்மை, தயக்கம் வல்ல செயல் செய்ய தடையாய் இருக்கிறது.

நற்செய்தி பதிவு செய்கிறது, "உடல் நலமற்றோர் சிலர் மேல் கைகளை வைத்து குணமாக்கியதை தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை". அந்த அளவுக்கு அவர்களது நம்பிக்கையின்மையை கண்டு இயேசுவே வியப்புறுகிறார். 

அவர்களின் தயக்கம் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. ஒரு சிலரது தயக்கத்தின் காரணமாக இயேசு அப்படியே துவண்டு போவதில்லை. காரணம் அவர் நன்மையை செய்வதற்கு தயக்கம் காட்டாதவர்.

தடைகள், இடர்கள் வந்த போதிலும் அதை கடந்த நன்மைகளை செய்பவர் இயேசு. 

துணிச்சல் மிக்க இயேசு மனித பலவீனத்தால் சிறிது தடைப்பட்டு நிற்கிறார். ஆனால் இது முடிவல்ல; அவருடைய பணி நிறைவு பெறுவதில்லை.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலின் வலுவின்மையை, அவரை குத்திக் கொண்டிருக்கும் முள்ளை நாம் உணர முடிகிறது. 

"என் அருள் உனக்கு போதும்" என்ற கடவுளின் வார்த்தை திருத்தூதர் பவுலை அகமகிழச் செய்தது. 'என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு அவர் மனஉறுதி பெறுகிறார்.

வலுவின்மை தொடக்கத்தில் தடையாக இருந்தது; பின்னர் அதுவே அருளை பெற்று தருவதாக மாறியது. 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் செவிசாய்க்காத, கலகம் செய்கிற மக்களிடையே அனுப்பப்படுகிறார். இறைவாக்கினர் அனுப்பப்படுவது கடவுளின் வார்த்தை அவர்கள்(கலகம் செய்வோர்) மத்தியிலே இறக்கப்பட வேண்டும் என்பதற்காக.

இன்றைய மூன்று வாசகங்களும் கலகத்தோடு இடர்களோடு தயக்கத்தோடு தொடங்குகிறது. ஆனால் இத்தனை தடைகளும் பணி வாழ்வினை சரித்துவிட போவதில்லை.

இறை வார்த்தைகள் தடையை குறைக்கும் ஒரு முன்னேற்ற படிக்கற்கள். விவிலியத்தில் தடைகள் ஆயிரம் கண்ட மனிதர்கள் நமக்கு முன்னால் உதாரணங்களாக இருக்கின்றார்கள். இடர்களை அவர்கள் துணிச்சலோடு எதிர்கொண்டனர்.

தடைகளை கண்டு பின்வாங்கியவர்கள் ஒருபோதும் தடம் பதிப்பதில்லை. தடம் பதிக்கவில்லை என்று சொன்னால் நமது பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட போவதில்லை.

ஒருவேளை, நம் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டாம், ஆனால் நாம் வாழ்வதற்கு தடைகளை கடந்தே ஆக வேண்டும்.

உள் மனதில் எழும் அல்லது மற்ற மனிதர்களால் கொடுக்கப்படும் தடைகளை கடந்து பயணிப்போம்... நம்பிக்கையோடு புது வாழ்வு வாழ்வோம்...

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...