பொதுக் காலம் 17ஆம் ஞாயிறு 28.07.2024 - ஞாயிற்றுக் கிழமை
"நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்" - எசாயா 1:17
நன்மை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்யக்கூடிய நன்மை அந்த நேரத்தில் நமக்கு கை கொடுக்காவிட்டாலும் எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்து சேரும் என்பது இயற்கையின் நியதி.
பலனை எதிர்பாராமல் செய்கின்ற அனைத்து உதவிகளும் எதிர்பாராத நேரத்தில் நிச்சயம் வந்து சேரும். இயேசு தன்னுடைய வாழ்வில் தன்னுடைய சீடர்களை அருகில் வைத்துக்கொண்டு பல நன்மைகளை செய்தார். காரணம் அவர்களும் நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காக தான்.
அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டதால் இயேசுவை பலர் தேடி சென்றார்கள். ஆனால் இயேசுவின் உள்ளமோ அன்பினால் பற்றியெரிந்தது. எனவே அவர் நன்மை செய்வதற்கு எதுவும் தடையாய் இல்லை.
திருத்தூதர் பணிகள் 8: 26-40 இல் பிலிப்பு (திருத்தொண்டர் பிலிப்பு) எத்தியோப்பிய நிதியமைச்சர் இருவரிடையே நடைபெறும் உரையாடலை நாம் வாசிக்க முடிகிறது. எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலை படித்துக் கொண்டிருந்தார். பிலிப்பு அவரை நெருங்கி நீர் வாசிப்பதன் பொருள் உமக்கு தெரிகின்றதா என்று கேட்க, யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்து கொள்ள முடியும்? என்று அவர் பதில் சொல்ல, பிலிப்பும் அவருக்கு அந்த மறைநூல் பகுதியை விளக்கி கூறினார் (எசாயா 53:7,8).
பிலிப்பு, தொடர்ந்து இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அப்போது இறைவார்த்தையால் தூண்டப்பட்ட எத்தியோப்பிய நிதியமைச்சர் தண்ணீர் இருக்கக்கூடிய ஒரு பகுதிக்கு வந்ததும், நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா? என்று கேட்டார். நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடை இல்லை என்று பிலிப்புச் சொல்ல, உடனே அமைச்சர் தேரை நிறுத்த பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர்.
பிலிப்பு அவருக்கு திருமுழுக்கு கொடுத்ததாக திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்கிறது. நன்மை செய்ய எதுவும் தடையாக இருப்பதில்லை.
இயேசுவிடமிருந்து எதைப் பெற்றுக் கொண்டார்களோ அதைத்தான் திருத்தூதர்கள் மற்றவர்களுக்கு கொடுத்தார்கள். திருத்தூதர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதை திருத்தொண்டர்கள் மற்றவர்களுக்கு கொடுத்தார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான்6:1-15)இல் இயேசு அப்பத்தையும் மீன்களையும் பகிர்ந்து கொடுக்கிறார். நடக்க இருக்கிற எல்லாவற்றையும் அறிந்த இயேசு, இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? என்று பிலிப்பிடம் கேட்கிறார். நற்செய்தி பதிவு செய்கிறது, தான் செய்யப் போவதை அறிந்திருந்தும் அவரை சோதிப்பதற்காகவே இக்கேள்வியை இயேசு கேட்டார் என்று. 200 தெனாரித்துக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே? என்று பிலிப்பு மறுமொழி பகர்கிறார்.
(பிலிப்பு என்னும் திருத்தூதரிடம் பணமும் மனமும் குறைவாக இருந்தது, திருத்தூதர் பேதுருவின் சகோதரரான அந்திரேயாவிடம் ஒன்றும் இல்லை. ஆனால், ஒரு சிறுவனிடம் 5 வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருப்பதை அவர் கண்டு கொள்கிறார். இறந்தபோதிலும் இத்தனை பேருக்கு இவை எப்படி போதும்? என்கிறார்).
இயேசுவின் மனம் நிறைந்திருந்ததால் மக்களை அமரச் செய்யுங்கள்.
நன்மை செய்ய பொருள் இல்லாவிட்டாலும் மனதில் சிறிதளவாது இடமிருக்க வேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு சுட்டிக்காட்டும் முதல் பாடம்.
இருந்த அப்பங்களை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுக்கிறார் இயேசு. எப்பொழுதும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு இருக்க வேண்டும் என்பது இயேசு சுட்டிக் காட்டும் இரண்டாம் பாடம்.
ஒன்றும் வீணாகாதபடி மீதமுள்ள துண்டுகளை சேர்த்து வையுங்கள் என்று தம் சீடர்களிடம் அவர் கூறுகிறார். எதையும் வீணடிக்க கூடாது, சேர்த்து வைக்க வேண்டும் என்பது இயேசுவின் மூன்றாம் பாடம்.
நன்மையின் ஊற்றான இயேசு, நன்மையை தன் திருத்தூதர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டார்.
முதல் வாசகம் - ஆண்டவரின் வார்த்தையை ஏற்று எலிசா, பாகால் சாலிசாவை சார்ந்த ஒரு மனிதரிடம் அவர் கொண்டுவந்த உணவை மக்களுக்கு கொடுக்கச் சொல்கிறார். அந்த மனிதரோ, நூறு பேருக்கு இதை நான் எப்படி பரிமாறு என்று கேட்கிறார்.
உண்டப் பின்னும் மீதி இருக்கும் நீ மக்களுக்கு உண்ணக்கொடு என்று கடவுளின் வார்த்தையை எலிசா சொல்ல, அந்த மனிதரும் செய்கிறார். ஆண்டவரின் வாக்கின்படி உணவு மீதி இருந்ததாக முதல் வாசகம் பதிவு செய்கிறது.
இரண்டாம் வாசகம் - நாம் பெற்றுக் கொண்டு அழைப்பிற்கு ஏற்ப வாழ திருத்தூதர் பவுல் நம்மை அழைக்கிறார். அன்போடு வாழ, அமைதியோடு வாழ, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டை காத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஏற்ப வாழ்வதும் நன்மையான காரியம் தான். கடவுள் கொடுத்த அழைப்பிற்கு ஏற்ப நாம் வாழ்கின்ற போது நம் வாழ்வே நமக்கும் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும்.
நாம் கடவுளிடமிருந்து நன்மையை பெறுவதற்கு எதுவும் தடையாய் இல்லாதது போல், நாமும் பிறருக்கு நன்மை செய்வதற்கு எதுவும் தடையாய் இருக்கக் கூடாது.
வாழ்வால் வார்த்தையால் பிறருக்கு நன்மை செய்வோம்...