பொதுக்காலம் 14ஆம் வாரம்
12.07.2024 - வெள்ளிக் கிழமை
"மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்" - 2 கொரிந்தியர் 6:4.
மனம் உறுதி இழப்பதே இடர்களினால் தான். ஆனால் அந்த இடர்களுக்கு இடையிலும் மன உறுதியோடு இருக்க இறைவன் அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 10:16-23) தன்னுடைய சீடர்களை பணி வாழ்வுக்கு அனுப்புவதற்கு முன்பு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார் இயேசு. பிரச்சனைகள் இதுதான் என்று தெரிந்தும் ஒருவர் முன் வருகிறார் என்றால் அவர் தான் உண்மையான சீடராக இருக்க முடியும்.
யூதச் சங்கங்களிடம் உங்களை ஒப்புவிப்பார்கள், தொழுகை கூடங்களில் உங்களை சாட்டையால் அடிப்பார்கள், உங்களை ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்வார்கள் என்று தன்னுடைய சீடர்கள் அனுபவிக்க இருக்கக்கூடிய துன்பங்களை இயேசு முன்னுரைக்கிறார்.
குழி/பள்ளம் என்று தெரிந்தும் யாரும் குழியில் அல்லது பள்ளத்தில் விழுவதில்லை. கிறித்தவ மறையை ஏற்று இருக்கிறோம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்றால் நாமும் துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது நம் முன்னால் வைக்கப்படக்கூடிய முதல் சவால்.
துன்பங்கள் இல்லாமல் கிறித்தவ வாழ்வு இல்லை. வாழ்வு என்பது இன்பமாக வாழ்வதற்கு தான்; அப்படி இன்பமான வாழ்வை கிறிஸ்து/கிறித்தவம் கொடுக்கவில்லை என்று சொன்னால் ஏன் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும்? கிறித்துவ மதத்தில் இருக்க வேண்டும்? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்!
இங்கு வரக்கூடிய துன்பம் என்பது நீதியோடும் நேர்மையோடும் உண்மையோடும் நடப்பதனால் வரக்கூடிய துன்பத்தை குறிக்கிறது. ஒருவேளை நான் என்னுடைய வாழ்க்கையில் நீதியோடும் உண்மையோடு நடக்கவில்லை என்றால் துன்பம் என்னை நெருங்காது எனக்கான விண்ணக இன்பமும் கிடைக்காது.
கிறித்தவம், விண்ணக வாழ்வை சொல்லிச் சொல்லி மண்ணக வாழ்வின் மகிழ்வை குறைப்பது அல்ல, மாறாக மண்ணக வாழ்விலே விண்ணகத்தை சுவைக்க வேண்டும் என்பது தான் எதார்த்தம்.
மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வின் முன் சுவை.
இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்கப்படுவர் என்கிறார் இறைமகன் இயேசு. அந்த இறுதி எதுவரை? என்று நமக்கு தெரியாது. இடர்களைக் கண்டு துணிந்து நின்றால் இடர்களும் இடறி போகும்.
இந்த உலக காரியங்களை பார்க்கின்ற போது இடர்கள் வெளியிலிருந்து வருவதை காட்டிலும், வீட்டின் உள்ளே இருந்து அதிகமாக வருகிறது. பிள்ளைகளுக்கு எதிராகப் பெற்றோரும் சகோதர சகோதரிகளுக்கு எதிராக உடன்பிறப்புகளும் கிளர்ந்து எழுந்து வருகின்றனர். இதை அன்றே இயேசு சுட்டிக்காட்டி விட்டார்.
முன்மதியோடும் கபடு அற்றவர்களாகவும் இருக்க இறைவன் அழைக்கிறார்.
இத்தகைய வாழ்வை வாழ்ந்தவர்கள் தான் திருத்தூதர்கள், புனிதர்கள்.
நாமும் மண்ணக வாழ்வை மன உறுதியோடு வாழ இவர்கள் நமக்கு முன்மாதிரிகள். துன்பங்களை சந்திக்காமல் இடர்களை எதிர்கொள்ளாமல் திருத்தூதர்களும் புனிதர்களும் அந்த நிலையை அடையவில்லை.
நாமும் நம்பிக்கை நிலைத்திருந்து, உண்மைக்கு செவிமடுத்து மன உறுதியோடு வாழ்வோம்... மண்ணிலே விண்ணகத்தை காண்போம்...
No comments:
Post a Comment