பொதுக் காலம் 14ஆம் வாரம்
13.07.2024 - சனிக் கிழமை
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமா யிருப்பார்" - நீதிமொழிகள் 14:26
மனிதத்தை அச்சம் மூடிக் கொண்டிருக்கிறது. அச்சமின்றி யாரும் இங்கு வாழ்வதில்லை. பல தருணங்களில் அச்சத்தினாலே வாழ்வு முடிந்திருக்கிறது (உதாரணமாக கொரோனாவை சொல்லலாம்). பயம், நடுக்கம், அச்சம் இவை மனிதனின் உயிரை அணு அணுவாகக் கொல்லும்.
சில பயம் காரணம் ஒன்றுமில்லாமே நம் மனதில் எழுகிறது. அது தேவையற்ற பயம். (அடுத்து என்ன நடக்கும்? நம் வாழ்க்கை எதுவரை இருக்கும்? யார் நமக்காக அழுவார்?).
சில பயம் மற்ற மனிதர்கள் மூலம் உண்டாகிறது (நம்முடைய வாழ்வை அழிக்க மற்றவர் சதித்திட்டம் தீட்டுவது தெரிய வரும்பொழுது, நம் பெயரை கெடுக்கும் பொழுது, நம் வேலையை ஒருவர் பறிக்க எண்ணும்போது...).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு 'அஞ்சுங்கள்' என்றும் சொல்கிறார், 'அஞ்சாதிருங்கள்' என்றும் சொல்கிறார்.
எரியும் நரகத்தில் உங்களை அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள் எனவே அஞ்சாதிருங்கள்,
மனிதருக்கு அஞ்சுவதை விட கடவுள் அச்சத்தோடு வாழ்வது நல்லது. கடவுள் பயம் இருக்கின்ற போது தவறுவதற்கு தயங்குவோம். ஆனால் மனிதர் மீது பயம் இருக்கின்ற போது இடத்திற்கு ஏற்றார் போல் நாம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டே இருப்போம்.
மனிதர்களால் நம்முடைய உடலை அழித்து விட முடியும். ஆனால் நம்முடைய ஆன்மாவை நம்மிடமிருந்து ஒருபோதும் பிரித்து விட முடியாது. மனிதர் மீது கொள்ளும் மதிப்பின் காரணமாக பயம் இருக்க வேண்டுமே தவிர, மனிதர் கொண்டுள்ள அதிகாரத்தின் காரணமாக பயம் எழக் கூடாது.
இவ்வுலகில் மனிதர்கள் கடவுளுக்கு அஞ்சுவதை விட மனிதர்களுக்கு அஞ்சுவது போல தங்களை அதிகம் காட்டிக் கொள்கிறார். எல்லாருடைய சுய ரூபங்களும் தனித்து விடப்படும் போது தான் தெரிய வருகிறது அல்லது தான் எதற்காக காத்திருந்தாரோ அந்த நிலைக்கு வருகின்ற போது தான், ஒருவரின் உண்மை முகம் வெளி வருகிறது.
சீடர் குருவை விட பெரியவர் அல்ல பணியாளரும் தன் தலைவரை விட பெரியவர் அல்ல. நாம் எந்நிலைக்கு வந்தாலும் ஒருபோதும் கடவுளை விட பெரியவர் ஆக முடியாது. ஆனால் அவர் வார்த்தைகளை உள்ளத்தில் இருத்தி தியானிக்கின்ற போது கடவுள் விரும்புவது போல நாம் ஆக முடியும்.
பயனற்ற பயம் தேவையில்லை, அதிகார அச்சம் தேவையில்லை. இறையச்சமும் இறைவனில் பணிவும் நம்முடைய வாழ்க்கையின் இலக்காக இருக்கட்டும்.
No comments:
Post a Comment