பொதுக்காலம் 13 ஆம் வாரம்
04.06.2024 - வியாழக் கிழமை
வாழ்க்கையில் வறுமையில் வாடினாலும் ஒருவேளை உணவின்றி தவித்தாலும் பரவாயில்லை; நோய் மட்டும் வந்து விடக்கூடாது, முதுமைக் காலத்தில் படுக்கையில் விழுந்து விடக்கூடாது என்பது பலருடைய வேண்டலாக இருக்கிறது.
எழுந்து நடமாடக்கூடிய வேளையிலேயே, இந்த உலகம் ஒருவரை மதிப்பதில்லை. படுத்தப் படுக்கையாய் கிடந்தால், நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டால் இந்த உலகம் நம்மை ஏளனம் செய்ய ஆரம்பித்து விடும். சிலருக்கு நோயும் சிலருக்கு வறுமையும் வாழ்க்கை மீது வெறுப்பை கொடுத்து விடுகிறது.
நோயும் வறுமையும் சிலரை சாபக்கேடாய் வாட்டி வதைக்கிறது. சிலர் முன்னால் செய்த தீமைகள், அவர்களுக்கு பின்னால் தீவினையாய் மாறுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:1-8) கட்டிலில் கிடத்தப்பட்டு தூக்கிவரப்பட்டவர் கடைசியில் கட்டிலை தூக்கி கொண்டு செல்கிறார். இது இறைவனின் வல்லமை...
அவர் செய்யக்கூடிய நல்லதை கூட பாராட்ட மனம் இல்லாத மறைநூல் அறிஞர்கள் 'இவன் கடவுளை பழிக்கிறான்' என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். ஒருவருக்கு நல்லது செய்வது எப்படி கடவுளை பழிப்பதாகும்?
இயேசு அந்த முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். நோயை குணப்படுத்தும் முன், ஏன் உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்கிறார்?
ஒருவர் செய்த தவறு அவரை நோயாளியாக மாற்றி விடுகிறது. பாவம் அதிகமாக அது அவர்மீது சுமையாக மாறிவிடுகிறது. எனவேதான் பலவேளைகளில், நோயாளர்களை இயேசு குணப்படுத்தும் முன் 'உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். மன்னிப்பதன் வழியாக பாவங்கள் குறைக்கப்படுகிறது, அங்கு நோயாளர்கள் நலம் பெறுகிறார்கள்.
இயேசு நலம் அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அதை மறைநூல் அறிஞர்கள் கூட்டம் கேள்வி கேட்டது. ஆனால் எதற்கும் பயப்படாத இயேசு செய்ய வேண்டிய நன்மையை தைரியத்தோடு செய்தார் அதிகாரத்தோடு செய்தார்.
நம் வாழ்வில் நாம் செய்யும் பாவங்கள் நம்மீது மலைக் குவியல் போல இருக்கிறது. மலைக்குவியல்கள் பனிபோல் உருக, அவர் (கடவுள்) நம் பாவங்களை மன்னிக்க வேண்டும்; நமக்கு எதிராக தவறு செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.
சில வேளைகளில் மன்னிக்க முடியாத மனநிலை கூட நம்மை பாவிகளாக மாற்றி விடுகிறது.
நாம் ஒருவரை மனதார மன்னிக்கும்போது நம் மனப் பாரங்கள் குறையும். இயேசுவின் மன்னிக்கும் அதிகாரம் சீடர்களோடு பகிரப்பட்டது, நமக்கும் கொடுக்கப்படுகிறது. (யோவான் 20:23 - "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்).
மன்னிப்போம்... அதன் வழியாக மற்றவர்களுக்கு நலம் கொடுப்போம்... நாமும் நலம் பெறுவோம்...
No comments:
Post a Comment