24_07

பாவிகளோடு உறவும் பாவிகள் மீது இரக்கமும்...


பொதுக்காலம் 13ஆம் வாரம்

05.07.2024 - வெள்ளிக் கிழமை

இறைவனுடைய விருப்பம் பாவம் பெருக வேண்டும் என்பதல்ல, பாவிகள் மனமார வேண்டும் என்பதே! பாவியை அன்பு செய்வதன் வழியாக, பாவத்தை வெறுக்கிறார் ஆனால் பாவம் செய்தவரை அல்ல.

ஒருவேளை அவர் பாவத்தோடு சேர்த்து பாவியை வெறுத்தார் என்றால் நம் நிழல் இவ்வுலகில் நிலைத்திருக்காது. நாம் என்றோ மடிந்திருப்போம்; மண்ணுக்குள் போய் இருப்போம். 

ஆனால் அவர் இரக்கம் அளவற்றது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:9-13) பரிசேயர் இயேசுவின் சீடரிடம் 'உங்கள் போதகர் பாவிகளோடும் வரிதண்டுவோரோடும் சேர்ந்து உண்பது ஏன்? என்ற கேள்வியை கேட்கின்றனர். இயேசு பாவிகளோடு உணவு உண்பதற்கு காரணம், நெருக்கமான உறவு தான் தவறுகளை தட்டிக் கேட்கும். பாவிகளோடு நெருக்கமான உறவு கொண்டு அவர்கள் வாழ்வை திசை மாற்றுவது தான் இயேசுவின் குறிக்கோளாக இருந்தது.  

நோயற்றவருக்கல்ல நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை, பலியை அல்ல இரக்கத்தை விரும்புகிறேன் என்ற சொல்லி அவர் பாவிகளை தேடி சென்றார், பாவிகளின் மேல் சுமத்தப்பட்ட பாரத்தை குறைத்தார்.

இயேசுவால் பாவம்/குற்றம் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தவறுவதற்கு வாய்ப்பே இல்லை.

மற்றவர்கள் (பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள், திருச்சட்ட அறிஞர்கள்) சமூகத்தில் தங்களை உயர்ந்தவர்களாக, தூயவர்களாக காட்டிக்கொண்டனர். மற்ற அனைவருமே பாவிகள் என்ற கண்ணோட்டம் அவர்களிடம் இருந்தது. குறிப்பாக ஏழைகளும், பெண்களும், நோயாளிகளும் பாவிகளாக கருதப்பட்டனர்.

அத்தகைய நிலையில் இருந்து சமூகத்தால் புறம் தள்ளப்பட்ட மானுடத்தை தேடிய பயணமாக இயேசுவின் பயணம் இருந்தது. இது பாவம் போக்கும் பயணம், பலியினால் அல்ல இரக்கத்தால் உருவான பயணம்.

இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள் இயேசுவால் தூய்மைப்படுத்தப்பட்டு மற்றவர்களை தூய்மைப்படுத்தும் பணிக்கு உயர்த்தப்பட்டார்கள். 

சீடத்துவ வாழ்வு என்பது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு கடந்து செல்வது. அது ஒரு சுத்திகரிப்பு நிலையம். 

'என்னை பின்பற்றி வா' என்ற வார்த்தையில் அந்த சுத்திகரிப்பு நிகழ்கிறது. 

நம் இறைவன் நம் மீதும் இரக்கம் கொள்கிறார்; நம்மை தூய்மைப்படுத்துகிறார். அவர் பணி செய்ய அவர் குரல் கேட்போமா!

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...