பொதுக்காலம் 16ஆம் வாரம்
26.07.2024 - வெள்ளிக் கிழமை
இயேசுவின் மறையுரைகள், இயேசுவின் உவமைகள் ஒவ்வொன்றிலும் மறையுண்மைகள் பொதிந்திருக்கும். அந்த மறையுண்மைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு வெளிக் கொணர்கிறார்.
விதைப்பவர் உவமையைச் சொல்லி அதற்கான விளக்கத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13: 18-23) இயேசு விவரிக்கிறார்.
இறையாட்சியை குறித்து கவலை கொள்ளாதோர், இறைவார்த்தையை கேட்டு சிறிது மகிழ்ச்சி கொள்பவர்கள் ஆனால் வேரற்றவர்கள், இறைவார்த்தையை கேட்டு பயன் அளிக்காதவர்கள், இறைவார்த்தையை கேட்டு பலன் கொடுப்பவர்கள் என்று நான்கு வகை மனநிலை கொண்ட மக்களை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
விதை என்பது இறைவார்த்தை. இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுவோர் பலன் கொடுப்பர்.
நம் உள்ளங்களில் இறைவார்த்தை விதைக்கப்படுகிறது. ஆனால் அது பலனளிப்பதும் பலனளிக்காமல் போவதும் நம் செயல்களில் இருக்கிறது.
இறைவார்த்தையை உள்ளத்தில் நிறுத்தி சிந்தித்தவர்கள் எல்லாம் அதற்கேற்ற பலன் கொடுத்தார்கள், அதற்கு சிறந்த உதாரணம் அன்னை மரியா. எல்லாவற்றையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவர், இறைவார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவர், இறைவார்த்தையை கேட்டு அதன்படி நடந்து இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர் அன்னை மரியா.
நாம் இறைவார்த்தையின் விளைநிலங்களாக மாறுவது எப்போது? இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டுமல்ல இறைவார்த்தையை உள்ளத்தில் பதித்து அதன்படி நடப்பவர்களாக மாறுவது எப்போது?
நாம் நூறு மடங்காக, 60 மடங்காக, 30 மடங்காக பலன் கொடுக்க வேண்டும். பலன் கொடுக்காதவையெல்லாம் தறித்து விடப்படும், அல்லது நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நல்ல மண் நல்ல விளைச்சலை கொடுக்கும், நல்ல மனம் நற்பலனை கொடுக்கும்.
மண்ணும் விதையும் இணைகின்றபோது ஒரு உயிர் உருவாகிறது. மனமும் இறைவார்த்தையும் இணைகிறபோது நல்வாழ்க்கை பிறப்பெடுக்கிறது.
நம் மனதினுள் இருக்கும் உண்மைகள் வெளிகொணரப்படட்டும்... உண்மைகள் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கட்டும்...
26.07.2024 - வெள்ளிக் கிழமை
புனித அன்னா, சுவக்கீன் திருவிழா...
- கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்த குடும்பம்
- தங்கள் வருமானத்தில் இருந்து எருசலேம் கோவிலுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து தங்களுக்கும் வைத்துக் கொண்டவர்கள்.
- கடவுளின் அருளை முதுமையில் கண்ட தம்பதி.
- மாசு அணுகா முறையில் இறைவனின் தாயை (மரியாவை) பெற்று எடுத்தவர்கள்.
No comments:
Post a Comment