பொதுக் காலம் 17ஆம் வாரம்
29.07.2024 - திங்கட் கிழமை
ஒன்றின் துவக்கம் சரியாக இருந்தால் அதன் நிறைவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். துவங்கி வைத்துவிட்டு, வேடிக்கை பார்த்தால் நிறைவை காண முடியாது. ஒன்றை தொடங்குவதற்கு கொடுத்த அதே ஆற்றல், உத்வேகம் அது நிறைவுக்கு கொண்டு வரும் வரை இருக்க வேண்டும்.
விதைக்கப்படும் விதை மண்ணுக்குள் முடங்கியே கிடப்பதில்லை. விதைக்கேற்ற உரம், வெப்பம், நீர், காற்று எல்லாம் சரிவர கிடைக்கின்றபோது அந்த விதை வளர்ச்சி என்னும் நிறைவை நோக்கி பயணிக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:31-35) கடுகு விதையையும் புளிப்பு மாவையும் விண்ணரசுக்கு இயேசு ஒப்பிடுகிறார். சிறிய விதை பெரிய மரமாக உருவெடுக்கிறது. சிறிது புளிப்பு மாவு முழுவதையும் புளிப்பேற செய்கிறது.
சிறிய வாய்ப்பு தான் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது போல இந்த உவமை கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசு ஏன் இதை விண்ணரசுக்கு ஒப்பிடுகிறார்? இயேசு விதைத்த இறையாட்சி இத்தகையது தான். தந்தை கடவுளின் விருப்பத்தை, இறைவார்த்தை வாயிலாகவும் நற்செயல்கள் வாயிலாகவும் எடுத்து சொன்னவர், செய்தவர் இறையாட்சியை (அன்று) இம்மண்ணில் பரப்பினார். அவர் அன்று விதைத்த விதை இன்று உலகம் முழுவதும் கிறித்தவமாக பரவி இருக்கிறது. சிறிய தொடக்கம் தான் ஆனால் அது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
நம் வாழ்வின் தொடக்கம் பெற்றோரிடமிருந்து ஆரம்பித்தது, அது இல்லறம் என்னும் நிலையில் அல்லது துறவறம் என்னும் நிலையில் முடிவு பெறுகிறது. பல்வேறு மாற்றங்களை சந்தித்த நம்முடைய வாழ்க்கை நிறைவில் எத்தகைய மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்பதுதான் சிந்திக்கப்பட வேண்டியது?
தொடங்கியது போலவே நிறைவும் இருந்தது என்று சொன்னால் தொடங்கப்பட்டதனுடைய நோக்கம் அடிபட்டு போகிறது.
ஒரு மரம் வளராமல் அப்படியே இருந்தது என்றால் அதனால் பயன் என்ன?
அதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையும் இயேசுவில் வளர்ச்சியை காணவில்லை என்றால் அது முற்றிலும் வீண்.
இன்று புனிதர்களான மார்த்தா, மரியா, லாசர் நினைவு
மார்த்தா - இயேசுவை வரவேற்றவர், பரபரப்போடு பற்பல பணி செய்தவர் (லூக்கா 10:38,40)
நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்கு தெரியும் என்றவர் (யோவான் 11:21,22) - தன் சகோதரரின் இறப்பைக் குறித்து இயேசுவிடம் பேசியவர்
மரியா - ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் (லூக்கா 10:39)
இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசி தமது கூந்தலால் அவரின் காலடிகளை துடைத்தவர் (யோவான் 11:2)
நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்றவர் (யோவான் 11:32)
இலாசர் - இயேசுவின் நண்பர் (யோவான் 11:3)
No comments:
Post a Comment