பொதுக்காலம் 13ஆம் வாரம்
02.07.2024 - செவ்வாய்க் கிழமை
கடலில் அலைகள் எழுவது போல வாழ்க்கையில் துன்ப அலைகள் எழுவது எதார்த்தம். துன்பத்தைக் கடந்த மறுவுலக வாழ்வை நோக்கிய பயணத்திற்காக துன்பங்களை கடக்க வேண்டி இருக்கிறது. துன்பம் வந்ததும் உள்மனம் தடுமாற்றம் அடைந்து விடுகிறது.
சில துன்பங்கள் நம்முடைய நம்பிக்கையை புடமிடுவதற்காக, சில துன்பங்கள் நாம் கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது என்பதற்காக...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 8: 23-27) இயேசுவோடு பயணம் செய்யும் சீடருக்கு உள்மன தடுமாற்றம், நம்பிக்கை தளர்வு ஏற்படுகிறது. நாங்கள் சாகப் போகிறோமே உமக்கு கவலை இல்லையா? என்று சொல்லி இயேசுவிடம் வாதிடும் அளவுக்கு நம்பிக்கை குறைவு சீடரிடம் காணப்பட்டது.
சீடர் பக்கம் இயேசு திரும்பி, 'நம்பிக்கை குன்றியவர்களே! ஏன் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டு காற்றையும் கடலையும் கடிந்து கொள்கிறார். நற்செய்தி பதிவு செய்கிறது 'உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று'.
இந்த அமைதி கடலில் மட்டுமல்ல, நம்பிக்கை தளர்வு ஏற்பட்ட சீடர்களுக்குள்ளும் ஏற்பட்ட அமைதி.
அமைதியற்ற உள்ளத்தால் எதையும் செய்ய முடியாது. மனம் பதட்டத்தோடு இருக்கின்ற போது எந்த காரியத்தை முன்னெடுத்தாலும் அது நமக்கு வெற்றியை கொடுப்பதில்லை.
உள்மனம் அமைதி பெற வேண்டும். நமக்குள் இருக்கும் அமைதி மற்றவர்களிடமும் பரவ வேண்டும். இதைத்தான் இயேசு சொல்கிறார் 'என் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்று.
அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அமைதி நம் வழியாக மற்றவரிடம் பரவ வேண்டும்.
கடலில் ஏற்படும் அமைதி கடல் பயணத்திற்கு நல்லது. நம் மனதில் ஏற்படும் அமைதி நம் வாழ்க்கைக்கு நல்லது.
கடலில் எழும் அலை கடலை இயக்க நிலையில் வைத்திருப்பதை சுட்டுகிறது, அதுபோல வாழ்வில் வரக்கூடிய இடங்கள், துன்பங்கள் என்னும் அலைகள் வாழ்வினை இயக்க நிலைக்கு அழைத்துச் செல்கிறது. வாழ்க்கைக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
நம் மனம் தடுமாறும் வேளைகளிலெல்லாம் நம் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது. நம்பிக்கை மிகுதிப்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment