24_07

உடனிருந்த மகதலா மரியா


புனித மகதலா மரியா - விழா

22.07.2024 - திங்கட் கிழமை

மகிழ்ச்சியில் மட்டும் உடனிருப்பது சீடத்துவத்தின் அடையாளம் அல்ல. மரணம் வரைக்கும் உடனிருப்பது தான் உண்மையான சீடத்துவத்தின் அடையாளம். 

இயேசுவால் ஏழு பேய்கள் நீக்கப் பெற்றவர், இயேசுவின் பாதங்களை கழுவிய பாவிப் பெண், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணாக இருக்கலாம் என்று மகதலா மரியா பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறார். 

சமூகம் அவரை பல வகையில் பார்த்தாலும் அவர் இயேசுவோடு இறுதிவரை உடனிருந்த வீர பெண்மணியாக இருக்கிறார். 

பலர் இயேசுவிடமிருந்து நலன்களை, கைம்மாறை பெற்று விட்டு கடந்து சென்றார்கள். ஆனால் மகதலா மரியா மட்டும் இயேசுவின் இறப்பின் உயிர்ப்பின் சாட்சியாக இருக்கிறார். 

புனித மகதலா மரியா, தன்னுடைய கையில் இயேசு உயிர்த்து விட்டார் என்று பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான முட்டை வைத்திருப்பது போன்ற ஓவியங்கள் இருக்கும். அதனுடைய பின்னணி என்ன என்று பார்க்கின்ற போது, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இயேசுவின் தாய் மரியாவும் மகதலா மரியாவும் ஒரு கூடை நிறைய முட்டைகளை எடுத்து, அவற்றை இயேசு அறையப்பட்ட சிலுவையின் அடியில் வைத்தனர். இயேசுவின் உடலில் இருந்து வழிந்த செங்குருதி, கீழே வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் பட்டு அவை செந்நிறமாய் மாறிப் போயின. அவற்றை எடுத்து பார்த்த போது அவை சிவப்பு நிறமாக மாறி, இயேசு உயிர்த்து விட்டார் என்று பொறிக்கப்பட்டிருந்தது (இது மரபுச் செய்தி).

இவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு, இயேசுவின் தாய் மரியாவோடும் நற்செய்தியாளர் யோவானோடும் எபேசு நகருக்கு சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:1,11-18) மற்ற சீடர்கள் பயந்து நடுங்கி இருந்த வேளையில், துணிச்சலோடு கல்லறைக்கு செல்கிறார் மகதலா மரியா. இயேசுவை தோட்டக்காரர் என்று எண்ணி ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் என்று சொல்லும், நான் சென்று அவரை எடுத்துச் செல்வேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். (அவர் அழுதார், அழுது கொண்டே கல்லறைக்கு சென்றார் என்று சொல்லப்பட்டிருக்கிறது அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு).

இயேசு அவரிடம் 'மரியா' என்றதும் மரியா திரும்பி பார்த்து, 'ரபூனி' என்று சொல்லி இயேசுவை பற்றிக் கொள்கிறார்.

அதோடு நின்று விடவில்லை உயிர்த்த ஆண்டவரை கண்டவர் உயிர்ப்பின் சாட்சியாய், சீடரிடம் சென்று 'நான் ஆண்டவரை கண்டேன்' என்று அறிவிக்கிறார்.

இதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு. தன் உள்ளத்தை தொட்டவரை இறுதிவரை பின்பற்றுகிற வாழ்வு உன்னதமான வாழ்வு. 

கடவுள் இருக்கிறார், கடவுள் இன்றும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நம்பினால் நாமும் அவரைப் பற்றிக் கொள்வோம். அவர் தரும் துணிச்சலால் அவரை (நீதியை, உண்மையை, அன்பை...) நம் வாழ்வால் அறிவிப்போம்...

புனித மகதலா மரியா போல துணிவோடு நம்பிக்கையோடு இயேசுவை அறிவிப்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...