24_07

பெயர் சொல்லி அழைக்கப்பட...


பொதுக்காலம் 14 ஆம் வாரம் 

10.07.2024 - புதன் கிழமை 

இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்; பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்" - எசாயா 45:3

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. சில வேளைகளில் அந்த சொந்த பெயரையும் கடந்து பல அடையாள பெயர்களும் (பட்டப் பெயர்) இருக்கின்றன.

ஆளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதலில் பயன்படுத்தப்படுவது பெயர் தான். ஒரு பெயரைச் சொன்னவுடன் எல்லோரும் வியந்து நிற்கிறார்கள் என்றால், அந்தப் பெயரைக் கொண்டவர் அத்தகைய சாதனையை படைத்திருக்கிறார் என்று தான் பொருள். சில பெயரை கேட்டதும் முகம் சுளிக்கிறது என்றால், செய்த செயல் அருவருப்பானது, இழிவானது என்று தான் அர்த்தம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 10:1-7) இயேசு பெயர் சொல்லி தன்னுடைய சீடர்களை அழைக்கிறார். அழைக்கப்பட்ட பெயர்கள் பின்னாளில் வியப்புக்குரிய பெயர்களாக மாறிப் போனது என்பது மறுப்பதற்கில்லை. 

சீடர்களின் பெயர்கள் முறையே, பேதுரு என்னும் சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. 

ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் அல்லது ஒரு வரலாறு புதைந்திருக்கிறது. இயேசு அவர்களை அழைத்த போது சில ஆற்றல்களையும் அதிகாரங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டார். வழிதவறி போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் செல்ல அவர் கட்டளையிட்டார்.

தொடக்கம் குறுகியதாக (இஸ்ரயேல் மக்களிடம் சொல்லுங்கள்) இருந்தது; நிறைவு எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது (விண்ணரசு அனைவருக்குமானது).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை (இஸ்ரேல் மக்களிடம் செல்லுங்கள்) மேலோட்டமாக காணுகிற போது, கடவுள் குறுகிய மனநிலையோடு செயல்படுகிறார் என்று தோணும்.

முதலில் வழி தவறியவர்களுக்கு வாய்ப்பு(கடவுளை ஏற்றுக் கொண்டு அவரை நிராகரித்து, வேறு தெய்வங்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தவர்கள்), அதன் பின் வழி மாறியவர்களுக்கு வாய்ப்பு (உண்மை கடவுளை அறியாத மக்கள்). 

அழைக்கப்பட்ட திருத்தூதர்கள், தங்களால் இயன்ற அளவில் திருத்தூது பணியை சிறப்பாக செய்தார்கள்.

தடைகளை தாண்டி, இடர்பாடுகளை கடந்து, நம்பிக்கை குறைவிலிருந்து நம்பிக்கை மிகுதி பெற்று அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம். வழி தவறி போகாதமாறு அவர் குரலைக் கேட்டு அவர் பின்னே செல்ல அழைக்கப்படுகிறோம்.

அவரை பின்தொடர்ந்து அவர் நமக்கு வகுத்திருக்கும் திட்டங்களை நாம் சரிவர செய்வதன் வழியாக நாம் அவரின் செயல் வீரர்களாக, திருத்தூதர்களாக, இயேசுவின் வழி நடக்கும் சீடர்களாக மாற முடியும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...