பொதுக் காலம் 16ஆம் ஞாயிறு
21.07.2024 - ஞாயிற்றுக் கிழமை
"பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்" - ஒசேயா 11:4
பரிவு மிக்கவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். மற்றவர்கள் என் மீது பரிவு காட்ட வேண்டும், என் மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே தவிர, நாம் பரிவுமிக்கவர்களாக மாற எண்ணுவதில்லை.
பரிவு என்பது தூய ஆவியாருடைய கனிகளில் ஒன்று. கலாத்தியர் திருமுகம் 6:2 இவ்வாறு சொல்கிறது, ஒருவர் மற்றவருடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.
இயேசு காட்டும் பரிவைப் போல நாம் பரிவை காட்ட முடியாது, நன்மை செய்தவர்களுக்கும் அவர் பரிவை காட்டினார், தீமை செய்தவர்களுக்கும் பரிவை காட்டினார், எதுவும் செய்யாதவர்களுக்கும் பரிவு காட்டினார். அதுதான் இயேசுவின் பரிவு.
பரிவு என்பது வேறு, அனுதாபம் என்பது வேறு. ஒருவருக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி, இறங்கி வந்து அவருக்கு சேவை செய்வது பரிவு. இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதோடு நிறுத்தி விட்டால் அதுதான் அனுதாபம். (நல்ல சமாரியன் செய்தது பரிவிரக்கச் செயல்...)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:30-34) இயேசு தன்னுடைய சீடர்கள் மீதும் பரிவு கொள்கிறார். ஆயரில்லா ஆடுகளைப் போல இருந்த மக்கள் மீதும் பரிவு கொள்கிறார்.
திருத்தூதர்களின் இயேசுவிடம் கூடி தாங்கள் செய்ததை, கற்பித்தவையெல்லாம் அவருக்கு தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்ததன் மூலம் அவர்கள் களைப்புற்று இருப்பது இயேசுவுக்கு தெரிய வருகிறது. எனவே அவர்களுக்கு ஓய்வு தேவை. நீங்கள் பாலை நிலத்தில் தனிமையான ஓர் இடத்திற்கு சென்று, சற்று ஓய்வெடுங்கள் என்று அவர் அவர்கள் மீது அக்கறை கொண்டு பரிவு காட்டுகிறார்.
ஆனால் மக்கள் கூட்டம் அவர்களை விட்டபாடில்லை. மக்கள் கூட்டம் பெருந்திரளாய் அவர்களை தேடி வருவதை கண்டு இயேசு அவர்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் மீது பரிவு கொடுக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 23:1-6) தன் மக்களை சரிவர நடத்தாத மேய்ப்பர்களை இறைவன் கண்டிக்கிறார். துரத்தி அடிக்கப்பட்ட ஆடுகளாய் இருக்கக்கூடிய தன் மக்களை மீண்டும் பாதுகாப்பாக இடத்திற்கு கொண்டு வருவதாக வாக்கு கொடுக்கிறார். மக்கள் மீது பரிவு கொள்கிறார்.
இதோ நாட்கள் வருகின்றன. அப்போது நீதியும் நேர்மையும் நாட்டில் நிலைத்திருக்கும், துரத்தடிக்கப்பட்ட ஆடுகள் ஆட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்படும், அவை பல்கி பெருகும், அவற்றை பேணி காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா, திகிலுறா, காணாமலும் போகா என்று ஆடுகள் மீது பரிவு கொண்டவராக கடவுள் இருக்கிறார். (ஆடுகள் - தவறிப் போன மக்கள்).
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 2:13-18) தொலைவிலிருந்த நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார் திருத்தூதர் பவுல்.
கிறிஸ்து யூத சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதோர் மனித இனமாக படைத்து, அமைதி ஏற்படுத்த இவ்வாறு செய்தார். சிலுவையின் வழியாக தாமே துன்புற்று பகைமையை அழித்தார் என்கிறார். பிளவுபட்டிருந்த இரு இனத்தை ஒன்று சேர்க்க தம்மையே இழந்தார்.
இதன் வழியாக இயேசுவின் பரிவு வெளிப்படுத்தப்படுகிறது.
இருக்கிற வரை பரிவுள்ளத்தோடு இருந்தால் நாமும் பரிவை பெறுவோம். பரிவில்லா வாழ்க்கை பயணம் பாதியிலேயே முடிந்து விடும்...
இயேசுவைப் போல பரிவு மனப்பான்மையோடு செயல்படுவோம்.
No comments:
Post a Comment