24_07

தயக்கம் என்னும் தடை...


பொதுக் காலம் 14ஆம் வாரம்

07.07.2024 - ஞாயிற்றுக் கிழமை

வாழ்க்கையில் சில தடைகள் நம்முடைய உள்ளத்தில் இருந்து எழுகிறது. சில தடைகள் மற்ற மனிதர்கள் வழியாக உருவாகிறது. தடைகளை தாண்டி வருவதே, சவாலாக இருக்கிறது. ஒரு தடையை தாண்டிய பிறகு மற்றொரு தடை என்று தொடர் தடையாக நம் வாழ்க்கை உள்ளது. 

இவரைப் பற்றி நமக்குத் தெரியாதா? இவர் குடும்பம் நமக்கு தெரியாதா? என்று பொது இடத்தில் ஒருவரைப் பற்றி சொல்கின்ற போது அவரை நாம் முன்னேற விடாமல் தடுக்கிறோம்.

வார்த்தைகளால் மற்றவர்களை வசை பாடி ஏற்றுக்கொள்ள தயங்குகிறபோது நாம் ஒருபோதும் முன்னேற போவதில்லை.

சொந்த மக்களாலும் இடர், பிற மக்களாலும் இடர் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:1-6) இயேசுவை சொந்த மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். வல்லமை பொருந்திய இறைமகனுக்கு மனிதர்களது நம்பிக்கையின்மை, தயக்கம் வல்ல செயல் செய்ய தடையாய் இருக்கிறது.

நற்செய்தி பதிவு செய்கிறது, "உடல் நலமற்றோர் சிலர் மேல் கைகளை வைத்து குணமாக்கியதை தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை". அந்த அளவுக்கு அவர்களது நம்பிக்கையின்மையை கண்டு இயேசுவே வியப்புறுகிறார். 

அவர்களின் தயக்கம் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. ஒரு சிலரது தயக்கத்தின் காரணமாக இயேசு அப்படியே துவண்டு போவதில்லை. காரணம் அவர் நன்மையை செய்வதற்கு தயக்கம் காட்டாதவர்.

தடைகள், இடர்கள் வந்த போதிலும் அதை கடந்த நன்மைகளை செய்பவர் இயேசு. 

துணிச்சல் மிக்க இயேசு மனித பலவீனத்தால் சிறிது தடைப்பட்டு நிற்கிறார். ஆனால் இது முடிவல்ல; அவருடைய பணி நிறைவு பெறுவதில்லை.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலின் வலுவின்மையை, அவரை குத்திக் கொண்டிருக்கும் முள்ளை நாம் உணர முடிகிறது. 

"என் அருள் உனக்கு போதும்" என்ற கடவுளின் வார்த்தை திருத்தூதர் பவுலை அகமகிழச் செய்தது. 'என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு அவர் மனஉறுதி பெறுகிறார்.

வலுவின்மை தொடக்கத்தில் தடையாக இருந்தது; பின்னர் அதுவே அருளை பெற்று தருவதாக மாறியது. 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் செவிசாய்க்காத, கலகம் செய்கிற மக்களிடையே அனுப்பப்படுகிறார். இறைவாக்கினர் அனுப்பப்படுவது கடவுளின் வார்த்தை அவர்கள்(கலகம் செய்வோர்) மத்தியிலே இறக்கப்பட வேண்டும் என்பதற்காக.

இன்றைய மூன்று வாசகங்களும் கலகத்தோடு இடர்களோடு தயக்கத்தோடு தொடங்குகிறது. ஆனால் இத்தனை தடைகளும் பணி வாழ்வினை சரித்துவிட போவதில்லை.

இறை வார்த்தைகள் தடையை குறைக்கும் ஒரு முன்னேற்ற படிக்கற்கள். விவிலியத்தில் தடைகள் ஆயிரம் கண்ட மனிதர்கள் நமக்கு முன்னால் உதாரணங்களாக இருக்கின்றார்கள். இடர்களை அவர்கள் துணிச்சலோடு எதிர்கொண்டனர்.

தடைகளை கண்டு பின்வாங்கியவர்கள் ஒருபோதும் தடம் பதிப்பதில்லை. தடம் பதிக்கவில்லை என்று சொன்னால் நமது பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட போவதில்லை.

ஒருவேளை, நம் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டாம், ஆனால் நாம் வாழ்வதற்கு தடைகளை கடந்தே ஆக வேண்டும்.

உள் மனதில் எழும் அல்லது மற்ற மனிதர்களால் கொடுக்கப்படும் தடைகளை கடந்து பயணிப்போம்... நம்பிக்கையோடு புது வாழ்வு வாழ்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...