பொதுக்காலம் 15ஆம் வாரம்
17.07.2024 - புதன் கிழமை
"இறைவா! உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!" - திருப்பாடல்கள் 139:17
நம்முடைய பின்னணியில் அறிதலுக்கும் புரிதலுக்கும் இடைவெளி அதிகம். அறிதல் என்பது இவர் யார் என்று தெரிந்து கொள்வது. புரிதல் என்பது ஒருவரோடு வாழுகின்ற சூழலிலும் நிறை குறைகளோடு அவரை ஏற்றுக் கொள்வது, அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்வது.
ஆனால் இயேசுவின் பார்வையில் அறிதல் என்பது முழுமையான அறிதல். இங்கு அறிதலும் புரிதலும் ஒன்றே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:25-27) தந்தை கடவுளை இயேசு போற்றுகிறார். ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம் என்கிறார் இயேசு. தந்தை மகனை அறிதலும் மகன் தந்தையை அறிதலும் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கிறார்.
எல்லாவற்றையும் அறிந்த கடவுள் எல்லாரும் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். (கடவுளை அறிதல் என்பது அவர் திருவுளத்தை செயல்படுத்துவதே...)
ஆனால் மனிதனின் பலவீனம் கடவுளைத் தவிர எல்லாவற்றையும் தேடுகிறது, தேடிக் கொண்டே இருக்கிறது. நிறைவில்லாத மனித வாழ்க்கை நிலையில்லாத உலகில் பயணிக்கிறது.
எல்லாவற்றையும் இவ்வுலகில் நாம் விட்டு தான் செல்ல வேண்டும் என்ற எதார்த்தத்தை நாம் அறிந்திருந்தாலும் எல்லாவற்றையும் அடைந்தே தீர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது.
கடவுளுக்குரிய இடத்தில் மனிதர்களையும் பொருட்களையும் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் நாம் செய்யக்கூடிய எதையும் அறியவில்லை பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். திருப்பாடல்கள் 139:3 இவ்வாறு சொல்கிறது, "நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே".
கடவுளின் கண்களில் இருந்து எதுவும் மறைவாய் இல்லை. கடவுள் ஒவ்வொரு நாளும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இறைவார்த்தை வாயிலாக, அருளடையாளங்கள் வாயிலாக, மனிதர்கள் வாயிலாக, இயற்கையின் வாயிலாக என்று இறைவெளிப்பாடு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் இறைவனை தேடும் பணி தான் தொய்வடைந்து கொண்டிருக்கிறது.
மனிதர்களுக்கு இடையே அறிதல், புரிதல் தேவை. ஒருவரை அறிந்திருந்தால் மட்டும் போதாது அவரைப் பற்றிய புரிதலும் தேவை.
ஒருவரை புரிந்து கொள்ளும் பொழுது தான் அவரிடமிருந்து நன்மைகளை பெற முடியும். புரிதல் வரக்கூடிய இடத்தில் ஏற்றுக்கொள்ளுதல் இருக்கும். ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அன்பு இருக்கும்.
தந்தை மகனை, மகன் தந்தையை அறிந்துள்ளது போல நாம் கடவுளை அறிந்து கொள்வோம். அதன் வழியாக அவருடைய திருவுளத்தை நம் வாழ்வில் செயல்படுத்துவோம்.
No comments:
Post a Comment