24_07

களைகள் நீக்கப்பட வேண்டும்...


பொதுக் காலம் 16ஆம் வாரம்

27.07.2024 - சனிக் கிழமை

தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்" - திருப்பாடல்கள் 37:9

நல்லவரிடமிருந்து நன்மை வெளிப்படும், தீயோரிடமிருந்து தீமை வெளிப்படும். நல்லவர்கள் தீமை செய்வோர் பார்வையில் தீயவர்களாக பார்க்கப்படுகிறார்கள். தீயவர்கள் தீமை செய்வோர் மத்தியில் நல்லவராக பார்க்கப்படுகிறார். 

வாழ்க்கை முரண்பாடுகளை உள்ளடக்கியது. நல்லது செய்வோருக்கும் நல்லது சொல்பவருக்கும் இங்கு வாய்ப்பும் வாழ்நாளும் குறைவு.

பொறாமையினால், நல்லவர்களை தீயவர்களாக மாற்ற எண்ணக்கூடிய நபர்கள்  இவ்வுலகில் இருக்கிறார்கள். நற்பெயரைக் கெடுக்க, நல்வாழ்வை சிதைக்க ஒவ்வொரு நாளும் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 

தீமை என்னும் களைகளும் தீயோர் என்னும் நிலைகளும் இங்கு அகற்றப்பட வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:24-30) வேறொரு விதைப்பவர் உவமையை பற்றி இயேசு பேசுகிறார். நில உரிமையாளர் தனது தோட்டத்தில், நல்ல விதைகளை விதைத்து விட்டு போய்விடுகிறார், பகைவரோ நல்ல விதைகளுக்கு இடையில் களைகளை விதைத்து விட்டு சென்று விடுகிறார். இந்த விதைப்பவர் உவமையை இறையாட்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். 

இவ்வுலகில் நல்ல மனிதர்கள் தீமை செய்வோரின் சூழ்ச்சியினால் நெருக்கப்படுவதை நாம் காண முடிகிறது. கடவுள் உலகை படைத்த போது அனைத்தையும் நல்லது என்று கண்டார். ஆனால் மனிதரின் கீழ்ப்படியாமையால், பொறாமையால், ஆணவத்தால், செருக்கால் மனிதன் நன்மை செய்ய மறந்து போனான். நன்மைக்கு கைம்மாறாக தீமை செய்ய துணிந்து விட்டான். 

நன்மை செய்பவருக்கு, நல்ல பலனை கொடுப்பவருக்கு விண்ணகம் திறந்து இருக்கிறது. 

எனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பது சாத்தான் என்னும் பகைவனின் எண்ணம். இந்த மனநிலை தான் இன்று மனிதர்களை தீயவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

நல்ல விதைகளோடு களைகள் கலக்கப்படுவது போல, நன்மை செய்வோரோடு தீமை செய்வோர் இணைந்து வாழ்கின்றனர். தீமை செய்வோர் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இறுதிவரை, தீமையில் நிலைத்திருக்கிறாரா? அல்லது மனமாறுகிறாரா? என்ற வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.

தீமையிலிருந்து நன்மையின் பக்கம் சாய்பவருக்கு விண்ணக களஞ்சியத்தில் இடம் உண்டு.

தீமையிலேயே நிலைத்திருப்பவர் அணையா நெருப்பால் எரியூட்டப்படுவது உறுதி.

நம்முடைய நிலத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் களைகள் நீக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...