பொதுக் காலம் 17ஆம் வாரம்
30.07.2024 - செவ்வாய்க் கிழமை
"ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்". 2 கொரிந்தியர் 5:10
இந்த உலகில் நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே போராட்டம் நடைபெறுவதில்லை மாறாக, நன்மைக்கும் தீமைக்கும் இடையே தான் போராட்டம் நடைபெறுகிறது. ஏனென்றால் ஒருவருக்குள் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும், தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.
திருத்தூதர் பவுலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உரோமையர் 7:18,19இல், இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது "ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்". திருத்தூதர் பவுலுக்கு இத்தகைய மனப்போராட்டம் இருந்தது.
நன்மைக்கு செவிமடுப்பதா? தீமைக்கு செவிமடுப்பதா? என்ற மனக் குழப்பம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய நிலைப்பாடு ஏதாவது ஒன்றாக தான் இருக்க முடியும். தீமைக்கு செவிமடுப்பவர்கள் தீமையின் மறு உருவமாகவே மாறி விடுகிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:36-43) வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை சீடர்களுக்கு விளக்குகிறார் இயேசு. நல்ல விதைகளை விதைப்பவர் - மானிட மகன், வயல் - இவ்வுலகம், நல்ல விதைகள் - கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள், களைகள் - தீயோனைச் சேர்ந்தவர்கள், களைகளை விதைக்கும் பகைவன் - அலகை, அறுவடை - உலகின் முடிவு, அறுவடை செய்வோர் - வான தூதர். இவை தான் உவமைக்கு இயேசு கொடுத்த விளக்கம்.
இந்நிகழ்வை நம்முடைய வாழ்க்கைக்கு பொருத்திப் பார்க்கின்ற போது, வயல் நம்முடைய உள்ளமாக இருக்கிறது. நல்ல விதைகளை விதைப்பவர் இறைவனாக இருக்கிறார், அதே வேளையில் களைகளை விதைப்பவன் அலகையாக இருக்கிறான்.
1 பேதுரு 5:8 சொல்கிறது, அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது".
அலகையின் அறுவடைக்கு பல நபர்கள் மனமுவந்து தங்களை கையளிக்கிறார்கள். நாமும் அந்த வரிசையில் இருக்கிறோமா அல்லது சிறிது விலகி நின்று நன்மைக்கு செவிமடுக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
தீமை செய்பவருக்கு வாழ்நாள் நீட்டி கொடுக்கப்படுகிறது, ஏனென்றால் இவ்வுலகில் தீமையின் வழியாக மகிழ்ச்சி அடைந்தவர்கள், அவ்வுலகில் விண்ணக மகிழ்வை அடைவதில்லை என்பதனால்.
நீண்ட நாள் வாழ்வதை விட நலமுடன் வாழ்வது சிறந்தது.
நமக்குள் எழும் நன்மை தீமை இவற்றிற்கிடையே உள்ள போராட்டத்தில், நன்மைக்கு செவிமடுத்து நேர்மையாளராய் தந்தையின் ஆட்சியில் ஒளி வீசுவோம்.
உலக முடிவில் தலை நிமிர்ந்து நிற்போம்...
No comments:
Post a Comment