பொதுக் காலம் 14 ஆம் வாரம்
08.07.2024 - திங்கட் கிழமை
சிலரது நம்பிக்கை சில வேளைகளில் நகைப்புக்கு உள்ளாகிறது. நம்பிக்கைக்குரியோர் சிறுமைப்படுத்தபடுகின்றனர். நல்லவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றனர்.
இவ்வளவு வாழ்க்கையில் அடிபட்ட பிறகும், எப்படி தான் கடவுள் நம்பிக்கை நிலைத்திருக்கிறார்களே? இன்னும் என்னதான் பாடுபடப் போகிறார்களோ! என்று பிறர் பேசும் ஏளனப் பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:18-26) தொழுகை கூட தலைவரின் மகள் இறந்த நிலையில் இருந்து உயிர் பெறுகிறார். 12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பின் நலம் பெறுகிறார்.
12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் நிச்சயமாக பலரின் இகழ்ச்சிக்கு உள்ளாகி இருப்பார், பலர் இவரை ஏளனமாக பேசி இருப்பார்கள், பாவியென்று முத்திரை குத்தி இருப்பார்கள். எனவே தான் தயக்கத்தோடு, அதே வேளையில் மிகுந்த நம்பிக்கையோடு இயேசுவின் மேலுடையின் ஓரத்தை தொடுகிறார். நலம் பெறுகிறார்.
தொழுகைக்கு கூட தலைவரின் மகளை பார்த்து, 'சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்' என்று சொன்னதும் சூழ இருந்தவர்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள்.
நகைத்தவர்களை இயேசு பார்க்கவில்லை, நம்பிக்கைக்குரிய தொழுகைக் கூடத் தலைவரை பார்க்கிறார், அவரின் மகளுக்கு உயிர் கொடுக்கிறார்.
ஒரு இடத்தில் பாதிக்கப்பட்டவர்(12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்தியவர்) நகைப்புக்கு உள்ளாகிறார்; மற்றொரு இடத்தில் நலம் அளிக்க சென்ற இயேசு நகைப்புக்கு உள்ளாகிறார், தொழுகைக் கூடத் தலைவரைக் குறித்தும் மற்றவர்கள் எள்ளி நகையாடி இருப்பார்கள் (மகள் இறந்துவிட்டார் இன்னும் இவர் நம்பிக்கையோடு இருக்கிறாரே என்று).
நம்முடைய வாழ்க்கையிலும் பல தருணங்களில் சொந்த உறவுகளாலேயே நாம் நகைப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடும். இவர்கள் வாழ்க்கையில் எங்கு முன்னேற போகிறார்கள்? இவர்கள் பிழைப்பது கஷ்டம் தான் என்று சொல்லி நம்மை ஊசி போன்ற வார்த்தைகளால் குத்தி கிழித்து இருக்கக்கூடும்.
நம்முடைய வளர்ச்சி மீது பொறாமை கொண்டவர்கள் கூட, நம் வளர்ச்சியை குறித்து தவறாக பேசியிருக்கக்கூடும்.
எது எப்படி இருந்தாலும், நாம் நம்பிக்கையில் நிலைத்திருக்கும் போது பிறரின் நகைப்பு, பிறரின் ஏளனம், பிறரின் எச்சரிக்கை நம்மை ஒன்றும் செய்ய இயலாது.
நம்பிக்கையோடு கூடிய செயல் நிச்சயம் நம்மை ஒரு நாள் உயர்த்தும். அது நோயிலிருந்து விடுதலையாக இருக்கலாம், தாழ்வு நிலையிலிருந்து உயர்நிலையாக இருக்கலாம், இகழ்ச்சியிலிருந்து புகழ்ச்சியாக இருக்கலாம்.
நம் நம்பிக்கையால் நாம் உயர்வை காண்பது உறுதி. அதே நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையால் மற்றவர் வாழ்வையும் உயர்த்துவோம்...
No comments:
Post a Comment