திருத்தூதர் தோமா பெருவிழா (இந்தியாவின் திருத்தூதர்)
03.07.2024 - புதன் கிழமை
திதிம் என அழைக்கப்படும் தோமா கலிலேயாவைச் சார்ந்தவர். இவரும் பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு போன்றே மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தவர். ஆண்டவர் இயேசு அழைத்த உடன், இவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார். திருவிவிலியத்தில் யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற நற்செய்தி நூல்களில் இவரைக் குறித்த செய்திகள் காணப்படவில்லை.
இயேசுவின் நெருங்கிய நண்பரான இலாசர் இறந்தபோது, இயேசு பெத்தானியாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார். அப்பொழுது சீடர்கள் எல்லாரும் இயேசுவிடம் “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மைக் கொல்ல கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரே?” என்று சொல்லி அவரைத் தடுத்தார்கள் (யோவா 11:8), ஆனால் தோமாவோ, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று சொல்லி, தான் இயேசுவுக்காக எதையும் செய்ய துணிந்தவர் என்பதை நிருப்பித்தார்.
யோவான் 14:1-6இல் இயேசுவிடம் கேள்வி கேட்க மற்ற சீடர்கள் தயங்கிய நேரத்தில், துணிச்சலோடு கேள்வி எழுப்பி, அதற்கு தெளிவை பெற்றுக் கொடுத்தவர் புனித தோமா. “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துக் கொள்ள இயலும்? என்று கேள்வி கேட்கிறார் தோமா. அதற்கு இயேசு, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்று கேள்விக்கான தெளிவு கொடுக்கிறார்.
அதே தோமா இயேசுவின் உயிர்ப்பை நம்ப தயங்கினார். “நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயங்களில் என் விரலையும் அவருடைய விலாவில் ஏற்பட்ட காயத்தில் என்னுடைய கையையும் விட்டால் ஒழிய நம்ப மாட்டேன்” என்று கூறினார். அங்கு இயேசு தோன்றி அவர் சந்தேகத்திற்கான தெளிவைக் கொடுக்கிறார்.
தெளிவை பெற்றுக் கொண்ட தோமா, எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்று அறிக்கையிடுகிறார்.
கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க இந்தியா வருகிறார் புனித தோமா. சென்னையிலுள்ள மயிலாப்பூர் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். இவருடைய போதனையைக் கேட்டு நிறைய மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். இதனால் இவர் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது. இருந்தபோதிலும் இறைவார்த்தையை துணிச்சலோடு அறிவித்தார்.
இறுதியாக சின்ன மலையில் வேண்டிக் கொண்டிருந்த போது பகைவர்களால், ஈட்டியால் குத்தப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.
1972ஆம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பவுல் தோமாவை இந்திய நாட்டின் திருத்தூதராக அறிவித்தார்.
புனித தோமா நம்முடைய நம்பிக்கையை மிகுதிப்படுத்துபவராக, நம்பிக்கையின் விளைநிலமாக இருக்கிறார்.
ஒருவரால் நம்பிக்கை விதைக்கப்பட்டால் தான் அதிலிருந்து மற்றவர் நம்பிக்கையை பெற முடியும். வாயால் நம்பிக்கையை அறிக்கையிடுவதை விட, வாழ்வால் நம்பிக்கையை அறிக்கையிடுவது சிறந்தது.
அந்த வகையில் நம்பிக்கை குறைவுபடுகின்ற போது அதை தெளிவுபடுத்துபவராக அதன் வழியாக மற்ற சீடர்களின் நம்பிக்கையை மிகுதிப்படுத்துவராக திருத்தூதர் தோமா விளங்குகிறார்.
அவருடைய நம்பிக்கை "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" என்ற வார்த்தைகளால் வெளிக்கொணரப்பட்டது. அந்த கடவுளுக்காக மறைபரப்பு பணியை தேர்ந்தெடுத்து இந்திய நாட்டிற்கு மறைத்தூதராக வந்து தனது இன்னுயிரை தியாகம் செய்தார். (சொல்லாலும் செயலாலும் நற்செய்திப் பணி).
அவர் வழியாக இன்று நம்பிக்கையின் விளைநிலங்களாக, விளைச்சல் கொடுப்பவர்களாக நாம் மாறி இருக்கிறோம்.
பெயரளவு கிறிஸ்தவர்களாக அல்ல வாழ்க்கையால் கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்களாக நாம் மாறி இருக்கிறோம்.
ஈட்டியால் குத்தப்பட்டவர் தனது இரத்தத்தை சிந்தி இயேசுவின் இரத்தத்தோடு நம்மை இணைத்து இருக்கிறார். தன்னை இழந்து இயேசுவுக்கு சான்று பகர்ந்திருக்கிறார்.
நம் வாழ்வு கண்டு நம்பிக்கை கொள்ள விரும்புகிறதா? அல்லது காணாமலே நம்பிக்கை கொள்கிறதா? அதிசயங்களை கண்டதால் நம்புகிறதா? அல்லது அன்றாட வாழ்வுக்காக நன்றி சொல்கிறதா?
நாம் நம்பிக்கையின் விளைநிலம் ஆவது எப்போது?
No comments:
Post a Comment