பொதுக்காலம் 15ஆம் வாரம்
20.07.2024 - சனிக் கிழமை
"குற்றம் செய்ததற்காக நீங்கள் அடிக்கப்படும்போது பொறுமையோடு இருப்பதில் என்ன சிறப்பு? மாறாக, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும்" - 1 பேதுரு 2:20
நன்மை செய்வதற்கு எதிர்ப்பு வருவது எதார்த்தம் தான். நன்மை செய்வோரை அழிக்கவும் ஒழிக்கவும் பலர் திட்டம் தீட்டுவார்கள். நான் தான் நன்மை செய்யவில்லை, மற்றவர்களாவது நன்மை செய்யட்டுமே என்று தீமை செய்கிறவர்கள் நன்மை செய்பவர்களை விட்டு வைப்பதில்லை.
இது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம்.
(நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்; நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர் - திருப்பாடல்கள் 38:20)
பிலாத்து இயேசுவைப் பார்த்து உண்மையா! அது என்ன? என்று கேட்டது போல, இன்று பலர், நன்மையா! அது என்ன? என்று கேட்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 12:14-21) இயேசுவை ஒழிக்க பரிசேயர் சூழ்ச்சி செய்கிறார்கள். தனக்கு எதிராக மற்றவர்கள் தீங்கு செய்ய என்னும் போதும் கூட இயேசு நன்மையே செய்கிறார். இறைவாக்கினர் எசாயா உரைத்த வாக்குகள் இயேசுவில் நிறைவேறுவதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.
“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.” (எசாயா 42:1-4)
பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்டவை இயேசுவின் நிறைவேறுவதை இங்கு நாம் பார்க்கிறோம். இறை தந்தையின் மகனாக இறைதிருவுளத்தை நிறைவேற்றுபவராக நன்மைகளின் ஊற்றாக இயேசு இருக்கிறார்.
இயேசுவை பின்பற்றும் நாம் இயேசுவின் நன்மை செய்யும் ஊழியர்கள். யாக்கோபு 4:17இவ்வாறு சொல்கிறது, "நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்".
பாவம் என்பது ஒருபுறம். இயேசுவின் சாயலை பெற்றவர்கள் என்ற நிலையை நாம் இழந்து விடுகிறோம். நன்மையைப் பற்றிக் கொள்ளாமல் தீமைக்கு செவிசாய்க்கின்ற போது நாம் இயேசுவின் எதிர்ப்பாளர்கள்.
ஆடுகிற வரை ஆட்டத்தை ஆடிவிட்டு முடியும் காலத்தில் தவறிவிட்டேன், நன்மை செய்ய மறந்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்பது எந்த வகையில் நியாயம்?
வாழ்கின்ற வாழ்க்கையை நீதியோடும் நேர்மையோடும் வாழ வேண்டும். நாம் சொல்வது உண்மை இல்லை என்று வெளிப்படையாக தெரிய வருகின்ற போது நம்முடைய குரல் அதிகமாகிறது (கத்துகிறோம், எரிச்சல் அடைகிறோம்). (நீதிக்கு குரல் கொடுக்கின்ற போது சத்தம் வருவது வேறு, நாம் செய்தது தவறு என்று வெளியே தெரிய வருகிறபோது எழுகிற சத்தம் வேறு).
நன்மைக்கும் உண்மைக்கும் இவ்வுலகில் நகை/பகை தான் பரிசு. ஆனால் மறு உலகிலோ கடவுளுக்கு அருகில் அமரும் இருக்கை பரிசு.
நன்மையை செய்வோம்... உண்மையைச் சொல்வோம்... இயேசுவின் தலைசிறந்த ஊழியர்களாக மாறுவோம்.
No comments:
Post a Comment