24_07

(நெறிதவறிய) கிறித்தவருக்கு தண்டனை உண்டு...


பொதுக்காலம் 15ஆம் வாரம்

16.07.2024 - செவ்வாய்க்கிழமை

"தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது" - நீதிமொழிகள் 11-21. 

வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அல்லது மனம் மாறுவதற்கான வாய்ப்பு. இது மனிதர்களால் மனிதருக்கு கொடுக்கப்படுகிறது அல்லது கடவுளால் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்று சொல்வார்களே, அதுதான் வாய்ப்பு. வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு ஐயோ! நான் வாய்ப்பை சரிவர பயன்படுத்தவில்லையே, எல்லாம் என்னைவிட்டு கடந்து போய்விட்டது என்று புலம்புவதனால் ஒன்றும் திரும்ப போவதில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:20-24) மனம் மாறாத கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் நகரங்களை இயேசு கண்டிக்கிறார். வல்ல செயல்கள் பல செய்யப்பட்டும் மனம் மாறாத மக்களாய் இருப்போருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. 

கொராசின், பெத்சாய்தா நகர்களுக்கு ஐயோ கேடு! என்றும், கப்பநாகுமே நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய் என்றும் கண்டனக் குரல் எழுப்புகிறார் இயேசு. 

உங்களில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன், சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அந்த மக்கள் மனம் மாறி இருப்பார்கள், அந்த நகர் இன்றுவரை நிலைத்திருந்திருக்கும் என்று சொல்கிறார்.

மனம்மாற வாய்ப்பு கொடுத்தும் அதை பயன்படுத்தாதவருக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகப் பெரியது. அறியாமல் தெரியாமல் செய்யப்படக்கூடிய தவறுக்கு கிடைக்கும் தண்டனை விட முழு மன விருப்பத்தோடு நன்கு அறிந்தே ஒரு தீய செயலை செய்வதனால் தண்டனை பன்மடங்கு பெருகும்.

நம் வாழ்க்கையில் கடவுளால் மனிதரால் கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவன்(ள்) என்ற போர்வையில் கிறிஸ்துவை பின்பற்றாமல் கிறிஸ்துவை சாராத மற்றவற்றை பின்பற்றிய எனக்கு கிடைக்கும் தண்டனை என்ன?

கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ வேண்டும். 

பொல்லாருக்கும் இறப்பு உண்டு, நல்லாருக்கும் இறப்பு உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கேற்ற கைம்மாறு உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

சபை உரையாளர் 12:14 இவ்வாறு சொல்கிறது, "நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்".

கடவுளை முன்னிலைப்படுத்த வேண்டிய இடத்தில் நம்மை முன்னிலைப்படுத்தியிருக்கிறோம்.

பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறோம். 

உண்மைக்காக நீதிக்காக குரல் கொடுக்கும் கிறித்தவர்களை வார்த்தையால் செயலால் கொலை செய்திருக்கிறோம்.

நானே கடவுள்! என்ற மனப்பான்மையில் வாழ்ந்திருக்கிறோம். 

கடவுள் நம்பிக்கையை வியாபாரம் செய்திருக்கிறோம்.

வட்டிக்கு கொடுத்திருக்கிறோம்.

பிறர் உடைமைகளை பறித்திருக்கிறோம்...

நெறிதவறிய கிறித்தவராகிய நமக்கு கிடைக்கும் தண்டனை என்ன?


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...