பொதுக் காலம் 16ஆம் வாரம்
24.07.2024 - புதன் கிழமை
"உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது" - திருப்பாடல்கள் 143-6
ஒவ்வொரு உள்ளமும் ஒவ்வொரு நிலத்தை பிரதிபலிக்கிறது. இங்கு பலன் தருகின்ற உள்ளம்/நிலம், பலன் தராத உள்ளம்/நிலம் என்று உள்ளது... எல்லாம் பலன் தருவதற்கென்றே உருவாக்கப்பட்டது.
விதை நிலத்தில் விதைக்கப்படுகிறது என்றால் அது செடியாக, மரமாக வளரும் அல்லது உரமாக மடியும். ஏதாவது ஒரு வகையில் விதை இங்கு பலன் கொடுக்கிறது. அதற்கு நிலம் உதவுகிறது.
நம் உள்ளங்கள் பண்படுத்தப்படவில்லை என்றால் விதைக்கப்படும் அனைத்தும் வீணாய் போகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:1-9) இயேசு கடலோரத்தில் அமர்ந்து தன்னைத் தேடி வந்த மக்களுக்கு உவமை வாயிலாக பலவற்றை குறித்து விளக்குகிறார். விதைப்பவர் உவமை அவர்கள் முன் தூவப்படுகிறது.
விதை ஒன்றுதான் ஆனால் விதைக்கப்படும் இடங்கள் அல்லது தூவப்படும் இடங்கள் நான்கு வகையாக இருக்கிறது. விதையானது பாதையோரம், மண் ஆழமாக இல்லாத பகுதி, முட்செடிகளிடையே, நல்ல நிலம் என்று நான்கு இடங்களில் தூவப்படுகிறது (விழுகிறது). ஒவ்வொரு விதையும் அந்த இடத்திற்கு ஏற்ப பலன் கொடுக்க முயற்சி செய்கிறது. சில விதைகள் எழும்ப இயலாமல், கருகி நெருக்கப்பட்டு வளர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. நல்ல நிலத்தில் விழுந்த விதை மட்டும் பலன் கொடுக்கிறது.
நம்முடைய உள்ளங்கள் வெளிப்புற காரணங்களினால் சிதைப்பட்டு தகுதியற்ற, கடினமான, இறுக்கமான நிலங்களாக மாறிவிடுகின்றன.
இறைவார்த்தை உள்ளே சென்றாலும் அவை பலன் தராமல் இருப்பதற்கு வெளிப்புற காரணிகளான சமூகச் சூழ்நிலைகள், குடும்ப பிரச்சினைகள், மனநிறைவற்ற வாழ்க்கை ஆகியவை தான் காரணமாக இருக்கிறது.
இந்த எதிர்மறை சூழ்நிலைகள் யாரால் உருவாக்கப்பட்டது என்பதற்கான கேள்வி கிடைக்கப்பெற்றால் மனம் தெளிவடையும், உள்ளம் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். களைகள் நிலத்திலிருந்து நீக்கப்படுவது போல உள்ளத்தில் இருந்து கவலைகள் நீக்கப்பட வேண்டும். அதை நீக்குவது யார் (கடவுளா? நாமா? பிறரா? இயற்கையா?) என்பது நமக்குத் தெரிய வேண்டும்.
களைகலற்ற/கவலையற்ற உள்ளம் எல்லோரிடமும் இருப்பதில்லை. களைகளைப் பிடுங்கி எடுத்து, நிலத்தை/உள்ளத்தை பண்படுத்தி விட்டால் எல்லாம் (பிரச்சினை, துன்பம், நெருக்கடி, இடர்...) இலகுவாக மாறும்.
நாம் எவ்வகை நிலமாக இருக்கப் போகிறோம்? நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்சனைகளினால் அல்லது மற்றவர்கள் மீது திணிக்கும் பிரச்சனைகளினால் நம் வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோமா? அல்லது களைகளை நீக்க முன் வருகிறோமா? என்பது நம் சிந்தனையில் இருக்கட்டும்.
நம் சிந்தனை இறைவன் பக்கம் திரும்பினால் தேவையற்ற களைகள் நீங்கி போய்விடும். பலன் கொடுக்கும் நல்ல நிலமாக நம் உள்ளம் மாறும்.
No comments:
Post a Comment