புனித லொயோலா இஞ்ஞாசியார் - நினைவு
31. 07.2024 - புதன் கிழமை
இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள லொயோலா என்னும் இடத்தில் 1491ஆம் ஆண்டு பிறந்தார். அரச குடும்பத்தைச் சார்ந்தவர். யாதொரு குறைவும் இல்லாமல் எல்லா செல்வமும் பெற்று மகிழ்ந்தவர். இவருக்குள் ஒரு ஆசை வேரூன்றியது, சிறந்த போர் வீரனாக மாற வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
ஆனால் 1521ஆம் ஆண்டில், ஒரு நாள் பிரான்ஸ் நாட்டில் ராணுவம் இவர் இருந்த பம்பிலோனா கோட்டையை சுற்றி வளைத்துக் கொண்டது. நடைபெற்ற போராட்டத்தில் இவருடைய கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது, இங்கு வாசிப்பதற்கு ஏதேனும் புத்தகம் இருக்கிறதா? என்று கேட்டார். இயேசுவின் வாழ்க்கை வரலாறு புத்தகமும் புனிதர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமும் இவருக்கு கொடுக்கப்பட்டது. அவற்றை வாசிக்க வாசிக்க இவருக்குள் ஒரு புத்துணர்வு ஏற்பட ஆரம்பித்தது. தன்னுடைய வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று சொல்லி, நான் ஏன் புனிதராக மாறக்கூடாது? என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
அந்த மாற்றம்தான், "எல்லாம் இறைவனின் அதிமுக மகிமைக்காக" என்று இவரை செயல்பட வைத்தது.
மன்ரேசா குகைக்கு சென்று அங்கு 11 மாதங்கள் இறைவேண்டலிலும் நோன்பிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். தன்னோடு 6 இளைஞர்களை சேர்த்துக்கொண்டார். அவர்களைக் கொண்டு "இயேசு சபை" என்னும் புதிய சபையை தோற்றுவித்தார். மறைக்கல்வி போதிப்பது, மறைப் போதகப் பணி செய்வது, ஒப்புரவு அருள் அடையாளங்களை வழங்குவது, நோயாளர்களை, சிறையில் இருப்பவர்களை சந்திப்பது ஆறுதல் கூறுதல் என்று அவர்களின் பணி தொடர்ந்தது. குருத்துவ வாழ்வுக்காக தன்னை முழுவதும் கையளித்து 1538ஆம் ஆண்டு குருவாக மாறினார்.
கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளோடு சேர்த்து திருத்தந்தைக்கு எப்போதும் கீழ்ப்படிதல் என்ற புதிய வார்த்தைப்பாட்டினையும் இந்த சபை ஏற்றுக் கொண்டது.
இறைவனின் அதிமிக மாட்சிக்காக ஓய்வில்லாமல் உழைத்த புனித இஞ்ஞாசியார் 1554ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் இந்த மண்ணுலகில் வாழ்வை துறந்தார்.
தன்னுடைய புகழுக்காகவும் பெருமைக்காகவும் போராடும் இந்த உலகில் இறைவனின் அதிமிக மகிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணம் செய்தவர் புனித லொயோலா இஞ்ஞாசியார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13:44-46) விண்ணரசானது புதையலுக்கும் நல் முத்துக்கும் ஒப்பிடப்படுகிறது.
இருப்பதையும் வைத்துக்கொண்டு இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதுதான் மூளை நமக்குச் சொல்லும் கதை.
ஆனால் மேலான ஒன்றை பெறுவதற்காக தன்னிடம் இருப்பதை (அகங்காரம், ஆணவம், கர்வம், அதிகாரம், தற்பெருமை...) இழக்க மனம் வருகின்ற போது தான், உயர்ந்தது நம் வாழ்வில் வரும்.
ஒருவர் நிலத்தில் இருந்த புதையலுக்காக தமக்குள் யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார், வணிகர் ஒருவர் நல்முத்துக்களைத் தேடி செல்கிறார், விலை உயர்ந்த ஒரு முத்தை கண்டவுடன் போய் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார் என்று நற்செய்தி பதிவு செய்கிறது.
நம் புனிதர், செல்வங்களைத் துறந்து மேலான புதையலும் முத்துமான இயேசுவை கண்டு கொண்டார். உலகம் இன்பங்கள் இந்த உலகிலே முடிந்து விடும். ஆனால் விண்ணக இன்பம் தான் நீடித்த மகிழ்வு தரும் என்பதில் கவனமாய் இருந்தவர், கிறிஸ்துவுக்காக தன்னிடம் இருப்பதை இழக்க முன் வந்தார்.
தியாகமும் ஒறுத்தலும் இழப்பும்தான் ஒருவரை புனிதராக மாற்றுகிறது.
மனிதரில் நமக்கான வீண் பெருமையை தேடாமல் இறைவனில் நிறைவை பெறுவோம். நம் மகிமையல்ல இறைமகிமை நிலைக்கட்டும்.
No comments:
Post a Comment