பொதுக் காலம் 15ஆம் வாரம்
14.07.2024 - ஞாயிற்றுக் கிழமை
நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்; பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்; ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்! - சாலமோனின் ஞானம் 5:7
பயணம் செய்ய எல்லோரும் விரும்புவோம். ஆனால் பயணத்தில் சில தடங்கல்கள் வந்தால் அல்லது பயணம் செய்ய சில பரிந்துரைகள் வைக்கப்பட்டால் தடைபடும் நம் பயணம்.
மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை நோக்கிய ஒரு பயணம். தடுமாற்றங்கள் தடைகள் எல்லாவற்றையும் கடந்து உண்மையை நோக்கிய ஒளியை நோக்கிய பயணம். பள்ளம் என்று தெரிந்தும் யாரும் பள்ளத்தில் விழுவதில்லை, ஆனால் இருளென்று தெரிந்து இருளான வாழ்வை, இருளான பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
தீய வாழ்வால், பாதைகள் தடுமாற கூடாது. பயணங்கள் தடைபட கூடாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்திற்கு சில பரிந்துரைகள் வைக்கப்படுகிறது. உணவு, பை, இடைக் கச்சை, செப்பு காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம், கைத்தடி எடுத்துக் கொள்ளலாம், மிதியடி போட்டுக் கொள்ளலாம் அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும். இதுதான் சீடர்களின் பயணத்திற்கான இயேசுவின் பரிந்துரைகள்.
இந்த பயணத்தில் சீடர்கள் நலம் பெறுவதை காட்டிலும் தேவையில் இருப்போர் பயனடைகின்றார்கள். நோயுற்றோர் நலம் பெறுகிறார்கள், மக்கள் மனமாற்றம் அடைகிறார்கள், பேய்கள் ஓட்டப்படுகின்றன.
பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும்.
இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மேலும் சொல்லக்கூடிய அறிவுரை, 'உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'.
இருவர் இருவராக சீடர்களை அனுப்புவதன் நோக்கம் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்ள, சோர்வில் துணை நிற்க, இணைந்து பணியாற்ற.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் பெத்தேலுக்கு பயணம் மேற்கொண்டு கடவுளின் வார்த்தையை அறிவிக்கிறார். அவருடைய பணிக்கு இடையூறாக பெத்தேலின் குருவாகிய அமட்சியா முன்வருகிறார். அதற்கு ஆமோஸ் நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்தி மர தோட்டக்காரன், ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு" என்று அனுப்பினார் பதில் சொல்கிறார். இறைவாக்கினரின் பயணம் இறைவாக்கை எடுத்துச் சொல்லவற்காக.
இன்றைய இரண்டாம் வாசகமானது, தந்தை கடவுளுக்கும் நமக்குமான நெருக்கத்தை இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்கிறது. விண்ணகத்திலிருந்து மண்ணகம் நோக்கி பயணத்தினால் இந்த நெருக்கம் ஏற்பட்டது. விண்ணகத்தையும் மண்ணகத்தையும் ஒன்று சேர்ப்பதற்கான ஒரு திட்டமே இயேசு கிறிஸ்துவின் மண்ணக பயணம்.
இவ்வுலகில் நம் வாழ்வு நகர்கிறது நாம் பயணிக்கிறோம். இவ்வுலகில் இருந்து அவ்வுலகை அடைவது தான் நம்முடைய இலக்கு.
அதற்கான இயேசுவின் பரிந்துரை, இறையாட்சியின் விழுமியங்களை உள்வாங்கி அதை செயல்களால் வெளிப்படுத்துவது தான்.
- நன்மை செய்ய கூடுமானால் நன்மை செய்
- ஒடுக்கப்பட்டோருக்கு விரைந்து உதவு
- தாழ்ந்தோரை உயர்த்து
- உண்மை பேசு
- அமைதியை ஏற்படுத்து
- யாரையும் இகழாதே...
No comments:
Post a Comment