29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை
சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. நொந்து போய் விடுவார்கள். வாழ்க்கையை வெறித்து விடுவார்கள். இப்படி இருக்க கூடிய மனிதர்களிடம் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டால், என் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால் வாழ்க்கையில் பல அடிகள் பட்ட மனிதர்கள், வாழ்க்கையை எதார்த்த நிலையில் ஏற்றுக் கொள்வார்கள். இப்படி சிறிய வலிகளை பெரிதாக காண்போரும் உண்டு, பெரிய வலிகளை பெரிதாக எண்ணாதவர்களும் உண்டு.
எசாயா 48:10 இவ்வாறு சொல்கிறது
நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
துன்பம் நம்மை உறுதிப்படுத்தும், நல்வழிப்படுத்தும்.
ஆனால் அந்த துன்பம் யாரால், எதனால் உண்டானது என்பது முக்கியம். சில துன்பங்கள் வாய்க் கொழுப்பால் வரும், சில துன்பம் தேவையற்ற செயல்களால் வரும், ஒருசில இடங்களில் உண்மைக்கு சான்று பகர்ந்தால் வரும், ஒருசில இடங்களில் நேர்மையாய் இருந்தால் வரும்.
மேலே சொல்லப்பட்ட 2 வழிகளில் வரும் துன்பங்கள் கொடுக்கும் வலிகளை விட கீழே சொல்லப்பட்ட துன்பங்கள் அதிக வேதனையை கொடுக்கும்.
ஆனால் இப்படிப்பட்ட வேதனைகளுக்கு மத்தியிலும் புனிதர்களான பவுல், பேதுரு ஆகிய இருவரும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார்கள், நன்றி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்தார்கள்.
வாழ்க்கையில் ஒருவரால் நமக்கு நல்லது நடக்கிறது என்றால் நாம் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். அதுவும் காரியம் நடக்கும் வரை மட்டுமே. காரியம் முடிந்தவுடன் பலர் நம்மை கழட்டி விடுவார்கள் அல்லது நாம் கழட்டி விடுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 12: 1-11) புனித பேதுரு சிறையில் அடைக்கப்பட்டு கைதியாக இருக்கிறார், ஆண்டவரின் தூதர் அவரை சிறையில் இருந்து வெளியே அழைத்து வருகிறார். அப்போது, பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.
தான் செய்யக்கூடிய இறைப்பணியில் தடங்கல்கள் பல வந்தாலும், கடவுளை விட்டு ஓடி விடவில்லை. தடைகளை, துன்பங்களை கடந்தும் பணி செய்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (2 திமொத்தேயு 4: 6-8, 17-18) நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! என்கிறார் திருத்தூதர் பவுல்.
நம்முடைய துன்பங்களை இவர்களோடு ஒப்பிட முடியாது. நாமோ நம் வாழ்க்கை முன்னேற துன்பப்படுகிறோம், இவர்களோ இறைப்பணிக்காக, இறைமக்களுக்காக துன்பப்பட்டார்கள்.
(திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 11:23– 28 வரை தனது துன்பங்களை பட்டியலிடுகிறார், "அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.)
இத்தகைய துன்பங்களை அனுபவித்த பிறகும் கூட தங்கள் பணியை தொடர்ந்தார்கள்.
இன்றும் நாம் வாழும் சமூகத்தில் அநீதி, அக்கிரமங்களை எதிர்த்து குரல் கொடுத்து பலர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள், பலர் தங்கள் உயிரை தியாகம் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சமூகத்தின் மீது அக்கறை, இயற்கை மீது அக்கறை, ஊரின், நாட்டின் மீது அக்கறை, ஏழை எளியவர்கள் மீது அக்கறை என்று பிறருக்காக வாழ்ந்து தங்கள் வாழ்வின் துன்பத்தை கண்டு கொள்ளாத உயர்ந்த உள்ளங்கள் பல உள்ளன.
இத்தகையோர் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடம் இரண்டு
1. யாருக்கும் இடையூறாய் இராதீர்
2. இடையூறு வந்தால் துவண்டு போகாதீர்
இவ்வுலகில் இறந்த பின்னரும் பலர் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் நலனில் அக்கறை கொள்ளாதவர்கள்.
சிறு துன்பம் வந்தால் துவண்டு போய் வாழ்க்கையை வெறுக்கும் மனிதராய் இராமல், பிறரின் துன்பத்தில் பங்கெடுத்து இறைவனின் செயல்களுக்கு நன்றிக்குரியவர்களாய் இருப்போம்.