15.06.2026 - ஞாயிற்றுக் கிழமை
மூவொரு இறைவன் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார்.
பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக் கூறும்போது, “மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம்.
எப்படி மூவரும் ஒரே கடவுள்?
யாதொரு வேறுபாடின்றி ஒரே அன்பு உறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.
இதை நம்முடைய மனித அறிவால் புரிந்து கொள்வது மிகவும் கடினம். படைக்கப்பட்ட பொருள் படைத்தவரை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
சில வேளைகளில் நம்மையே நாம் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ள முடியாத நிலையில், எப்படி நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட, நம்மையெல்லாம் படைத்து வழி நடத்துகிற கடவுளை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனை நமக்குள் இருக்க வேண்டும்.
“என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார் இயேசு - லூக்கா 10:22
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வின் போது தந்தை, மகன், தூய ஆவியாரின் நெருக்கமான அன்பு உறவை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே கடவுள் மூவராக செயல்படுகிறார். ஒரு மனிதன் நல்லவராக கெட்டவராக செயல்படும்போது, எல்லாவற்றையும் எல்லாரையும் படைத்தவர் மூவராக செயல்படுவதில் ஒன்றும் தவறில்லையே.
நம்முடைய மனித அறிவுக்கு இவை அப்பாற்பட்டவையாக தோன்றினாலும் இவ்விழா நமக்கு உணர்த்தக்கூடிய செய்தி என்பது ஒற்றுமை, அன்பு உறவு, பணித்தெளிவு, இலக்கு ஆகியவை தான்.
வழிபாட்டின் எல்லா நிகழ்வுகளும் மூவொரு கடவுளை போற்றி தொடங்குகிறது, மூவொரு கடவுளை போற்றி நிறைவு பெறுகிறது, "தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்".
மூவொரு கடவுளை போற்றி புகழ்கிற நாம், மூவொரு கடவுள் நமக்கு கொடுக்க கூடிய வாழ்வில் சிந்தனைகளையும் (ஒற்றுமை, அன்பு, உறவு, வல்லமை...) ஏற்று நடக்க வேண்டும்.
மூவொரு கடவுளை போல உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம், உணர்வுகளை மதித்து நடப்போம். அதன் வழியாக மூவொரு இறைவன் பெருவிழா அர்த்தம் பெறும்.
From Vatican News Page👇
வரலாற்றுப் பின்புலம்
பழங்காலத்திலிருந்தே இது 'தமத்திருத்துவ விழா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி. 155-230-இல் வாழ்ந்த திருஅவையின் தந்தை தெர்த்தூலியன் தான் இந்தத் 'தமத்திருத்துவம்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர். தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் ஒரே இயல்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒரே ஆள் இல்லை. மூன்று ஆட்களாக இருக்கின்றனர் என்று தெர்த்தூலியன் போதித்தார்.
கி.பி. 325-இல் ஆயர் அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா மன்றம் இதனை செய்து முடித்தது. இதற்குப் பின்னால் இருந்த முக்கியக் காரணம் எரியஸ் என்பவருடைய தப்பறைக்கொள்கை. இவர் இயேசு கிறிஸ்து கடவுளுடைய முதல் படைப்பு என்று போதித்தார். இந்தத் தப்பறைக் கொள்கையை நைசியா மன்றம் கண்டித்ததுடன், தமத்திருத்துவம் குறித்த சரியான போதனையையும் வரையறை செய்தது. இதன் காரணமாக, நிசேன் நம்பிக்கை அறிக்கை உருவாக்கப்பட்டது. இதைத்தான் (பெரியது) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறிக்கையிடுகின்றோம்.
இதில் தமதிருத்துவம் பற்றிய வார்த்தைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்நாளில் மீண்டும் ஒருமுறை அதனை நினைவுகூர்வோம்.
அதில் தந்தையைப் பற்றி கூறும்போது, "விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே" என்று சொல்கின்றோம்.
மகன் இயேசுவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்று ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார் என்று கூறுகின்றோம்.
தூய ஆவியாரைக் குறித்து சொல்லும்போது, "தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே" என்று அறிக்கையிடுகின்றோம்.
ஆக, மேற்கண்ட இந்த அறிக்கை மூன்று பேரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி சமநிலையில் இருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
No comments:
Post a Comment