பொதுக்காலம் 11ஆம் வாரம்
18.06.2025 - புதன் கிழமை
எல்லா மனிதருக்கும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள ஆசை உண்டு. செயல் பெரிதோ? செயல் சிறிதோ? தான் செய்ததற்கான அங்கீகாரம் தனக்கு வேண்டும் என்று ஏதாவது வகையில் தேடி ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
பெருமை யாரையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு பாராட்டு தேவை இல்லை என்பவர்கள் கூட மறைமுகமாக பாராட்டை எதிர்பார்ப்பார்கள்.
சிலர் சிலவற்றை செய்து பெருமை தேடுவார்கள், ஒரு சிலர் மற்றவர்கள் செய்தவற்றை வைத்துக் கொண்டு தனக்கு பெருமை தேடிக் கொள்வார்கள்.
வறுமை உள்ள இடத்தில் வயிறு குளிர வேண்டும் என்பதை வாய்ப்பாக கொண்டு, பெருமை தேடும் மனிதர்கள் தங்கள் மனதை குளிர வைக்கிறார்கள். தாங்கள் செய்வதை 4 அல்லது 5 கேமரா எடுக்கும் நபர்களோடு சென்று உலகறிய செய்கிறார்கள். இது விளம்பர உலகம்.
நாம் செய்வதை நாமே சொல்லிக் காட்டுவது கேவலத்தின் உச்சம். நம் செயல்கள் வாயிலாக நாம் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர, நாம் செய்ததை சொல்லி அடையாளம் தேடக் கூடாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6: 1-6, 16-18) மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது என்கிறார் இயேசு.
ஒரு வகையில் இவ்வாறு செய்வோரை (விளம்பரப்படுத்தி காரியங்களை செய்வோரை) பாராட்ட வேண்டி இருக்கிறது. அவர்களால் ஏதாவது நடக்கிறது என்பதால். ஆனால் இயேசு அதையும் தேவையில்லை என்கிறார்.
சீராக்கின் ஞானம் 35:9 இவ்வாறு சொல்கிறது, "உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு; உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு".
பெற்றுக் கொண்டதை கொடுக்க போகிறோம், அதில் எதற்கு பெருமை.
நாம் இன்று வைத்திருப்பது எல்லாம் நாம் பெற்றுக் கொண்டவையே...
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 4: 7இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?"
விளம்பரம் இவ்வுலகில் தேடாதோர் அவ்வுலகில் நிறைவை பெறுவர்.
No comments:
Post a Comment