24.06.2025 - செவ்வாய்க் கிழமை
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக" - திருப்பாடல்கள் 149:2
மனிதனாக குழந்தை பிறக்கின்ற போது, குழந்தை பிறந்ததை எண்ணி பலர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமல் இருந்து, குழந்தை பேற்றை பெறும் வாய்ப்பு கிடைக்கின்ற போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தை வளர்ந்த பிறகு மகிழ்ச்சி தொடருமா என்பது கேள்விக் குறியே. நம்முடைய மகிழ்ச்சியை யார்? எது? தீர்மானிப்பது என்பது நம் கையில் தான்.
பிறக்கின்ற குழந்தையை குறித்து இறைவாக்கு சொல்லப்படும் போது, அது நேர்மறையாக இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும், அதுவே குழந்தையை குறித்து எதிர்மறையாக சொல்லப்பட்டால் ஆழ்ந்த துயரம் தான் ஏற்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1: 57-66, 80) குழந்தையின்றி இருந்த செக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் முதிர் வயதில் குழந்தை பேற்றை பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. குழந்தை பற்றி நேர்மறைக் கருத்துகள் சொல்லப்படுகிறது.
இந்த செய்தியை பெறுவதற்கு முன் செக்கரியா செய்து கொண்டிருந்தது என்ன?
யோவானின் தாயும் (ஆரோனின் வழிமரபு) தந்தையும் (அபியா வகுப்பு) குருத்துவ மரபை சார்ந்தவர்கள். கடவுளுக்கு பணி செய்யும் பொறுப்பை தாங்கள் சார்ந்திருக்கும் மரபு வழியாக பெற்றவர்கள்.
செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவ பணி ஆற்றி வந்தார் என்கிறது இன்றைய நற்செய்தி.
திருக்கோவிலுள் எல்லோரும் எளிதாக சென்று விட முடியாது. ஏராளமான குருக்கள் இருந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை தான் சீட்டுப் போட்டு குருக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருத்தூயகத்துக்குள் செல்ல குரு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த அளவுக்கு மிகவும் கடினமான சட்டங்கள் இருந்தன. இந்த முறை சீட்டு செக்கரியாவுக்கு விழவே அவர் உள்ளே சென்று பணி செய்தார்.
கடவுளின் தூதர் தோன்றி திருமுழுக்கு யோவானின் பிறப்பை அறிவிக்கிறார். தூதர் சொல்ல சொல்ல எல்லாவற்றையும் கேட்ட பிறகு, " இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்" என்று சந்தேகம் கொள்கிறார்.
ஆபிரகாம் சாரா வாழ்வை பற்றி செக்கரியா நிச்சயம் தெரிந்திருப்பார். வயதான நிலையிலும் கடவுளின் அருளை பெற்ற அத்தம்பதியினர் ஓர் எடுத்துக்காட்டு.
தெரிந்திருந்தும் கூட ஐயம் கொள்கிறார், அதற்காக தான் கடவுளின் தூதர் சொன்னவை நிறைவேறும் வரை வாய் பேச முடியாதவராய் நின்றார்.
திருமுழுக்கு யோவானை குறித்த பிறப்பு செய்தி, தூய ஆவியால் அவர் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார், கடவுளை நோக்கி மக்களை திரும்ப செய்யும் பணி அவரது பணி என்பதுமாக அமைந்தது.
தனக்காக வாழாதவர் தன்னை படைத்தவருக்காக, படைக்கப்பட்டவர்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்.
திருமுழுக்கு யோவானின் பிற்கால செய்திகள் மக்களுக்கு பாவத்திலிருந்து மனம்மாற அழைப்பு விடுத்தது.
வழியை ஆயத்தம் செய்தார், கிறிஸ்துவை முன்னறிவித்தார், மகிழ்ச்சியை மனம் மாற்றத்தின் வழியாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்தார்.
நம் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், ஆனால் நம்முடைய தொடர் வாழ்வு மகிழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும்.
இறப்பு ஒருநாள் வரும், அதற்கு முன்னே செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்ய வேண்டும்.
இல்லாதவர்களுக்கு இருப்பதை பகிர்ந்து, இயலும் மட்டும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.
தனக்காக வாழாதவர் நிச்சயம் மற்றவரை வாழ வைப்பார். நாம் எப்படி?
No comments:
Post a Comment