பொதுக் காலம் 10ஆம் வாரம்
12.06.2025 - வியாழக்கிழமை
வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள் - சீராக்கின் ஞானம் 27:30
ஒரு தவறை செய்வதற்கு முன் அதற்கு தூண்டுதலாக இருப்பதைக் குறித்துக் கவனமாய் இருந்தால் போதும், தவறுகள் குறையும். கணவன் மனைவி இடையே சண்டை என்றால் யாராவது ஒருவர் (குறிப்பாக பிரச்சினைக்கு காரணம் ஆனவர்) அமைதியாக இருந்தாலே பிரச்சினை ஓய்ந்து விடும்.
இங்கு பிரச்சினை அதிகமாவதற்கு காரணம் பிரச்சினைக்குரியவர் தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ள துடிப்பது தான்.
எல்லார் பக்கம் நியாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. நியாயம் என்பது ஒரு பக்கம் தான் இருக்க முடியும்.
தவறுகளை உணர்தலும், தவறுகளை சரி செய்ய விரும்புதலும் தான் பிரச்சினைகளை சரி செய்யவதற்கான தீர்வு.
மற்றொரு தீர்வு, பிரச்சினைக்கு காரணமாய் இருக்கும் காரணிகளை கண்டுணர்ந்து அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். (இப்பொழுது பிரச்சனை ஆரம்பிக்க போகிறது என்பதை உணர்ந்து அதற்கு முன்னே அதிலிருந்து கவனமாய் இருத்தல் சிறந்தது).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 20-26) இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
அந்த சிறந்த நெறி என்பது தவறுகள் உருவாவதற்கு முன்பே அவற்றை சரி செய்வது தான்.
தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஒரு சிறிய ஆரம்பம் தான் பெரிய பிரச்சனைக்கு வழி வகுக்கும். வார்த்தையில் ஆரம்பிக்கின்ற சண்டைகள் கடைசியில் கைகலப்பில் முடிகின்றன.
எனவே தான் இயேசு சொல்கிறார், கொலை நடைபெறுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும் என்று.
பல கலவரங்கள் வாய் தகறாரில் தான் ஆரம்பிக்கின்றன. சாதாரணமாக சொல்லப்பட்ட வார்த்தை, அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனிதரை பொறுத்து பிரச்சனையாக பார்க்கப்படுகிறது/மாறுகிறது.
ஆரம்பம் சரி செய்யப்பட்டால் முடிவு சரியானதாக இருக்கும்.
நம்மை பாவிகளாக மாற்ற நினைக்கும் காரணிகளை கண்டு உணர்ந்து அவற்றிலிருந்து விலகி இருந்தால் பிரச்சனைகளுக்கு இங்கு இடமில்லை.
No comments:
Post a Comment