பெந்தகோஸ்து ஞாயிறு
08.06.2025 - ஞாயிற்றுக் கிழமை
மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும் -1 கொரிந்தியார் 2:14
மூவொரு இறைவனில் மூன்றாம் ஆள் இந்த தூய ஆவியார். மறக்கப்பட்ட கடவுளாகவே, முக்கியத்துவம் பெறாத நபராகவே இவர் பார்க்கப்படுகிறார்.
படைப்பின் தொடக்கத்தில் நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தவர், மனிதர்கள் இறைவாக்கு உரைக்க காரணமானவர், ஆற்றல் படுத்தியவர்.
பழைய ஏற்பாட்டில் ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு பல்வேறு நபர்கள் இறைவாக்கு உரைத்தார்கள்.
எண்ணிக்கை 11:27,28,29 இல் கடவுளின் ஆவியாரை குறித்துக் காண்கிறோம்.
ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்” என்று சொன்னான்.
உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார்.
ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார்.
கடவுளின் ஆவியார் ஆற்றல் அளிப்பவர், வழிநடத்துபவர். திருமுழுக்கின் வழியாக அந்த ஆவியானவர் அனைவர் மேலும் பொழியப்படுகிறார்.
இதே ஆவியானவர் தொடக்கக் கால திருஅவையில் திருத்தூதர்கள் மேல் பொழியப்பட்டார்.
இயேசு கிறிஸ்து தனக்குப்பின் துணையாளராம் தூய ஆவியாரை தருகிறார். இயேசுவோடு இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் பணி வாழ்வில் ஈடுபட்டாலும், இயேசு அவர்களோடு இருந்தபோது இயேசுவைப் போல அவர்களால் பணியை செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து அதிகாரங்களை பெற்று இருந்தார்கள், ஆற்றலை பெற்றிருந்தார்கள். ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வராமல் இருந்தது.
இந்த பெந்தகோஸ்து பெருவிழாவின் வழியாக பிளவுற்ற நாவு அவர்கள் மேல் இறங்கி வர, அவர்கள் தூய ஆவியை பெற்றுக் கொண்டார்கள். துணிச்சலோடு இறந்த இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள் (சான்று பகர வாய்ப்பை பெற்றார்கள்).
பொது இடங்களுக்கு செல்வதற்கே பயப்பட்டவர்கள், தூய ஆவியைப் பெற்ற பின்பு பொது இடங்களுக்கு சென்று, இயேசுவை கொலை செய்த யூதர்களை பார்த்து, நீங்கள்தான் இயேசுவை கொன்றீர்கள் என்று தைரியத்தோடு பறைசாற்ற தொடங்கினர்.
அந்த தூய ஆவியானவர் அவர்களுக்குள் செயலாற்றி உண்மைக்கு சான்று பகர தூண்டுதலாக இருந்தார்.
யாரெல்லாம் உண்மைக்கு சான்று பகர்கிறார்களோ அவர்கள் தூய ஆவியை பெற்றுக் கொண்டவர்கள். உண்மைக்கு சான்று பகர்கின்றபோது தடுமாற்றங்கள், தடைகள், இடையூறுகள், நெருக்கடிகள் என பல வரலாம், ஆனால் உண்மையானது எது? நேரியது எது? என்று தீர்ந்து தெளியக் கூடிய ஆற்றலை தூய ஆவியானவர் கொடுக்கிறார்.
தூய ஆவியை பெற்றுக் கொண்டு திருத்தூதர்கள் இடம் பெற்றார்கள், அந்த துணிவின் வழியாக அவர்கள் பொது இடங்களில் உண்மைக்கு சான்று பகந்தார்கள்.
நாம் வாழும் சமூகத்திலும் உண்மைக்கு சான்று பகிர பல வாய்ப்புகள் நமக்கு கொடுக்கப்படுகிறது.
பல மனிதர்கள் உண்மைக்கு சான்று பகர்ந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள்.
(தவறு செய்து கொண்டிருக்கக் கூடிய மனிதர்களுக்கும் மன உறுத்தல் உண்டு, அது உடலின் பலம் இருக்கின்ற போது வெளியே காட்டப்படுவதில்லை, வலிமையிலிருந்து பலம் குறைந்து போகின்ற நேரத்தில் தான் செய்த அனைத்து தவறுகளும் ஆளையும் மனதையும் உறுத்தும்.)
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:26 இவ்வாறு சொல்கிறது, "இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்."
நாம் தூய ஆவியார் ஆட்கொள்ளப்படவும் அவர் நம்மில் செயலாற்றவும் வரம் வேண்டுவோம்.
No comments:
Post a Comment