பொதுக் காலம் 10ஆம் வாரம்
13.06.2025 - வெள்ளிக் கிழமை
நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே; ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்; ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம் - சாலமோனின் ஞானம் 15:2
எது பெரியது? பாவமா? அதை கடந்த நிலை வாழ்வா? உலக பார்வையில் பாவமும் அதன் வழியாக கிடைக்கும் மகிழ்ச்சியும் பெரிதாக பார்க்கப்படுகிறது. நிலை வாழ்வா! அது என்ன என்ற கேள்வி மனிதர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கண்ணால், சொல்லால், செயலால், சிந்தனையால் என்று பாவ வரிசை நீளுகிறது. பின்னால் வருவதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ண ஓட்டம் தான் நம்மில் அதிகமாக இருக்கிறது.
(சபை உரையாளர் 8:11
மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்)
அடுத்தவருக்குரியதை கவர்ந்திட இங்கு நமக்கு ஆசை அதிகம் இருக்கிறது. அடுத்தவருக்குரியது பொருளானாலும் சரி மனிதர்களானாலும் சரி, தான் ஆசைப்பட்டு விட்டால் அது வேண்டும் அவ்வளவு தான்.
அற்ப ஆசைக்காக நிலை வாழ்வை இழக்க துணிந்து விட்டோம். சிறிது நேர இன்பம் நேரிய வாழ்வுக்கான கதவை அடைத்து விடுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 27-32) ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என்று சொல்கிறார் இயேசு.
நம் உடலின் ஆசைகளுக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்தால் ஒன்று நாம் நம்மை அழிப்போம், இல்லை மற்றவர்கள் வாழ்வை அழிப்போம்.
பாவத்திற்கு நாம் ஒருபோதும் அடிமைகள் அல்ல.
(உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:22
ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு.
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:23
பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.)
நன்மை செய்தால் நல்லது விளையும்; தீமை செய்தால் தீமை நம்மில் குடிக் கொண்டு நம் நிம்மதியை பிற்காலத்தில் கெடுக்கும்.
தீயதை வேரறுப்போம்... நம் ஆன்மாவை நிலை வாழ்வுக்கு ஆயத்தம் செய்வோம்...
No comments:
Post a Comment