பொதுக் காலம் 10ஆம் வாரம்
11.06.2025 - புதன் கிழமை
அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள் - திருத்தூதர் பணிகள் 14:22
பலம் இழந்து, ஆற்றல் இழந்து வாழும் மனிதர்களை திடப்படுத்த ஆட்கள் தேவைப்படுகிறது. சாலையோரங்களில், தெருக்களில் கேட்பாரற்று இருக்கும் மனிதர்களை பார்க்கின்ற போது ஒன்றும் செய்யாமல் கடந்து செல்கின்ற போது மனம் வெட்கத்துக்கு உள்ளாகிறது.
உண்மையிலே தேவையோடு வருகிறவர்களுக்கு ஓரளவுக்கு மேல் கொடுக்க மனம் இல்லாத போது, கிறிஸ்துவின் விழுமியம் (பரிவு, உதவி, இரக்கம், அன்பு) தோற்று போகிறது.
கிறிஸ்துவின் போதனைகளை பேசிவிட்டு கடந்து செல்கிற போது வாய் இனிக்கிறது. செயலில் காட்ட தவறுகின்ற போது இதயம் வேதனைக்கு உள்ளாகிறது.
சக சகோதர சகோதரிகளில் இயேசுவை காண தவறுகின்ற உள்ளம் எப்போது மாறும்? மாற்றப்படும்? (நானும் நீங்களும் சுய ஆய்வு செய்ய வேண்டும்).
இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 11: 21b-26; 13: 1-3) திருத்தூதர் பர்னபாவை பற்றி வாசிக்கிறோம். பர்னபா உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
ஏனைய திருத்தூதர்களிடம் மனம்மாறிய பவுலை அழைத்து வந்தார். இந்த பர்னபாவும் பவுலும் தான் கிறிஸ்துவின் தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வைக்கபட்டார்கள்.
(திருத்தூதர் பணிகள் 4:36
சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.
திருத்தூதர் பணிகள் 4:37
அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.)
இருப்பதை கொடுத்து/ இருப்பதையெல்லாம் கொடுத்து திருஅவை வளர ஊக்குவித்தார்.
மக்களை இறைவனிடம் கொண்டு வந்தார். கிபி 45ஆம் ஆண்டு எருசலேமில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது இவர்தான் அந்தியோக்கு நகருக்கு சென்று அங்கிருந்து மக்களிடமிருந்து நிதி திரட்டி வந்து அதனை எருசலேமிலிருந்த இறை மக்களுக்கு கொடுத்து அவர்களின் பசியை போக்கினார் (திப 14:18-20).
மிலன் நகருக்கு சென்று நற்செய்தி அறிவித்தார். இவர் சைப்ரசுக்கு சென்று நற்செய்தி அறிவித்த போது அங்கு இருந்தவர்கள் இவரை கல்லால் எறிந்து கொன்றார்கள் என்ற செய்தி சொல்லப்படுகிறது.
இறுதிவரை தன்னுடைய வாழ்வால் தன்னுடைய சொற்களால் இறைவார்த்தையை அறிவித்தார். இறை மக்களை ஒன்று சேர்த்தார். எல்லோரையும் ஊக்கப்படுத்தி இறைவார்த்தையை அறிவித்தார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் நம்முடைய வார்த்தைகளால் மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் ஒருவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படாமல், அவர் முன்னோக்கி செல்ல வழிவகை செய்யும்போது, நாமும் இந்த இந்த திருத்தூதர் பர்னபாவோடு இணைகிறோம்.
No comments:
Post a Comment