அன்னை மரியா திருஅவையின் அன்னை - நினைவு
09.06.2025 - திங்கட்கிழமை
தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை; தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை - சீராக்கின் ஞானம் 3:11
நல்லதை செய்து இறுதியில் கிடைப்பதோ துயரமும் ஏமாற்றம் இந்த உலக தாய்மார்களுக்கு. தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக எல்லா தியாகங்களையும் செய்து கடைசியில் மிஞ்சுவதோ இழப்பும் சிலுவையும் தான்.
எல்லாம் தெரிந்தாலும் எல்லாவற்றையும் இழக்க துணியும் மனம் எல்லோருக்கும் எளிதாக வருவதில்லை (தாய், தந்தையை தவிர).
விரும்பியவர்களுக்காக சிலர் சிலுவைகளை சுமப்பார்கள், சிலர் விரும்பியவர்கள் மேல் சிலுவைகளை சுமத்துவார்கள்.
சில சிலுவைகளை தவிர்க்க முடியாது. சில சிலுவைகளை தாங்கிக் கொள்ள முடியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 19: 25-27) இயேசுவின் சிலுவை அடியில் அன்னை மரியா நிற்கிறார். இது தவறு செய்ததால் கிடைத்த தண்டனை அல்ல. உண்மைக்கு சான்று பகர்ந்ததால் கிடைத்த பரிசு. தன் மகனுக்கு கொடுக்கப்பட்ட சிலுவை என்னும் பரிசில் தாயும் பங்கெடுக்கிறார்.
சிலுவைகளை பாரமாக நினைப்பவர்கள் தொடக்கத்திலே உடைந்து போவார்கள். இங்கு சிலுவை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் பாரமாக தெரியவில்லை.
மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கும், வழிகாட்டும் வெற்றியின் பரிசாக தான் அது பார்க்கப்பட்டது.
சில மனிதர்கள் மற்றவர்களின் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கெடுப்பார்கள், துயர நேரங்களில் விலகி போவார்கள்.
தனது மகனின்/மகளின் வெற்றி தோல்வி என அனைத்திலும் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பால் என்றும் துணை நிற்பார்கள் இறை அன்னையும், நமது அன்னையரும்.
தேவைக்காக பயன்படுத்தும் நிலை மாறி, நம் அன்னையரை இறுதி வரை நேசிப்போம், அவர்களுக்கு உரிய இறுதிக்கால (தனிமை, நோய்...) சிலுவைகளை நாம் இணைந்து சுமப்போம்.
No comments:
Post a Comment