பொதுக் காலம் 12ஆம் வாரம்
23.06.2025- திங்கள் கிழமை
குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). இங்கு அழுக்கு வெளியே இருக்கிறது, உட்புறம் தூய்மை.
வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது? தீயது எது? என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம். (இங்கு வெளியில் தூய்மையாக இருப்பது போல காட்டப்படுகிறது ஆனால் உட்புறம் மாசுபடிந்திருக்கிறது).
தீமைகள் நமக்குள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மற்றவரை தவறாக மதிப்பிடக்கூடிய மனநிலையை நாம் பெருக்கிக் கொள்கிறோம்.
புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'
நாம் மாசுள்ளவர் என்பதை கண்டுணராத வரை, நாம் மற்றவர்களையும் தவறாக மதிப்பிட தான் செய்வோம். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7: 1-5) "வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" என்கிறார் இயேசு.
நம் குறைகள் களையப்பட வேண்டும். நம் குறைகள் களையப்பட்ட பிறகு தான் நாம் மற்றவர்களின் கறைகளை கழுவ முடியும்.
நாம் செய்வது தவறு என்பதை ஒருவேளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் செய்வது தவறு என்பது வெளியில் இருப்பவர்களுக்கு நன்றாய் தெரியும்.
சபை உரையாளர் நூல் 7:20 இவ்வாறு சொல்கிறது, "குற்றமே செய்யாமல் நல்லதே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை".
நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெரும்.
நம்முடைய வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதை முதன்மைப்படுத்துவோம். நாம் சரியாக இல்லாதபோது மற்றவரின் வாழ்வை நாம் ஒருபோதும் திருத்த முயலக் கூடாது.
குறையுள்ள மனிதர் குறைபாடுள்ள மனிதரை சரிப்படுத்த முடியாது.
நம்மை நன்மை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் தீய ஓட்டங்களை தடுத்து நிறுத்துவோம்.
நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டை முதலில் எடுக்கப்பட்டால் நம் வாழ்வு சிறப்பானதாக மாறும்.
அதன்பின் நாம் மற்றவரை மாற்ற வேண்டியதில்லை, நம்மை பார்த்து மற்றவர்கள் மாறிவிடுவார்.
நம் வாழ்வு பாடமாகட்டும்...
No comments:
Post a Comment