06.06.2025 - வெள்ளிக் கிழமை
அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது - 1 கொரிந்தியர் 13:5
சிலர் சிலரின் அன்பை செயல்களில் எதிர்பார்ப்பார்கள், சிலர் சொற்களில் எதிர்பார்ப்பார்கள். சிலர் அன்பு செய்வார்கள் ஆனால் பதில் அன்பை எதிர்பார்ப்பதில்லை, சிலர் அன்பு செய்து பதிலன்பு கிடைக்காத போது அவர்களை எதிர்க்க ஆரம்பிப்பார்கள், வெகு சிலரோ விலகிக் கொள்வார்கள்.
உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது, உண்மையான அன்புக்கு முன் எதுவும் ஈடாகாது.
மனிதர்கள் வித்தியாசமானவர்கள், எல்லா மனிதர்களும் ஒன்று போல சிந்திப்பது இல்லை. ஒரே மாதிரியான அன்பு எல்லோரிடமும் இருப்பதில்லை.
சில நேரங்களில் சில மனிதர்களின் தியாகம், அன்பு கேள்விக் குறியாகிறது. யாரோ என்றோ கொடுத்த காயத்திற்காக யாரையும் நம்பாதவர்களும் உண்டு, எதுக்கு அடுத்தவரிடம் அன்பு வைத்து கஷ்டப்பட வேண்டும் என்று விலகி இருப்போரும் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:15-19) இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்கிறார். ஒருமுறை மட்டுமல்ல 3 முறை அன்பு செய்கிறாயா? என்று கேட்கிறார்.
இந்த கேள்வி சாதாரணமாக கேட்டுவிட்டு கடந்து போகும் கேள்வி மட்டுமல்ல, என் அன்பு பணியை தொடர்வாயா? என்ற அர்த்தம் நிறைந்த கேள்வி.
நற்செய்தியின் தொடர்ச்சியில் இயேசு இவ்வாறு பேசுகிறார், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
துன்பங்களை ஏற்பது அன்பின் மற்றொரு பரிமாணம். தனக்கானவர்களின் துன்பங்களில் பங்கெடுப்பது தனி சுகத்தை கொடுக்கும்.
தன்னை இழந்து, தனக்கானவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது மற்றவர்களின் பார்வையில் முட்டாள்தனமாக தெரியலாம் (இதில் நேர்மறை/எதிர்மறை கூறுகள் இருக்கலாம்). ஆனால் அன்பு இழப்பிலிருந்து தான் ஆரம்பமாகும் (தன்னை இழத்தல், தனக்குரிய விருப்புகளை துறத்தல்).
நம்முடைய அன்பின் இலக்கணம் தான் என்ன? எதிர்பார்ப்பின்றி அன்பு கொடுக்கப்படுகிறதா? இழக்க தயாராக இருக்கின்றதா?
நம்மால் இலவசமாக கொடுக்க முடிந்தது அன்பு மட்டும் தான். கொடுப்போம் அன்பு என்னும் உணர்வை மட்டுமல்ல... அன்பின் பணிகளையும்... அவர் (இறை) அன்பையும் அடுத்தவருக்கு கொடுப்போம்...
No comments:
Post a Comment