பாஸ்கா காலம் 7ஆம் வாரம்
04.06.2025 - புதன் கிழமை
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார் - எபேசியர் 1:3
யாருக்கும் இவ்வுலகம் சொந்தமில்லை, யாரும் இவ்வுலகில் நிலைத்து நிற்க போவதில்லை. நிலையில்லா உலகில், நிலையில்லா உறவுக்காக, நிலையில்லா புகழுக்காக, நிலையில்லா செல்வத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
நிலையில்லா பொருளுக்காக மனித உயிர்கள் இங்கு சூறையாடப்படுகின்றன.
இந்த உலகத்தையே விலை பேச சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள், உலகத்தில் தாம் நிலைத்து நிற்க போவதில்லை என்பதை அறியாமல்.
இன்று படிப்பிற்காக, முதல் மதிப்பெண் எடுக்க, கல்லூரிக்காக, முதலிடத்தைப் பெற என்று பலர் போட்டி மனப்பான்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
யாரும் யாரையும் விழ வைக்க கூடாது, மற்றவர் கீழே விழுவதற்கு நாம் காரணமாகவும் இருக்க கூடாது. ஒவ்வொன்றிற்கும் கணக்கு கொடுக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17: 11b-19) உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் என்று வேண்டுகிறார் இயேசு.
நாம் உலகை சார்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்வதால் உலகில் உள்ளவர்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் இந்த உலகில் இருந்து கொண்டு மேலுலக காரியங்களை நாடித் தேடுவோர் வெறுப்புக்கு உள்ளாகிறார்கள்.
நாம் ஒன்றாய் இருக்க, ஒன்றுபட்டு செயல்பட இறைவன் விரும்புகிறார். பிளவு மனப்பான்மை மேலுலகு சார்ந்தது அல்ல.
இவ்வுலகின் தற்காலிக குடிகளான நாம் ஒருநாள் அவ்வுலகை அடைவோம். அதற்கு முன் அவ்வுலகின் காரியங்களை இவ்வுலகில் விதைப்போம். விண்ணகத்தை மண்ணகத்தில் கொண்டு வருவோம்...
No comments:
Post a Comment