பொதுக் காலம் 12ஆம் வாரம்
25.06.2025 - புதன் கிழமை
நல்லவர்கள் பொல்லாதவர்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு. ஆனால் நல்லவர்களை நல்லவர்கள் என்று அடையாளம் காண்பதை விட கெட்டவர்களை அடையாளம் காண்பது தான் மிக கடினம்.
நல்லவர்கள் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. கெட்டவர்கள் இடத்துக்கு ஏற்ப ஆளுக்கு ஏற்ப நடிப்பதால் அவர்களை எளிதாக கண்டுக் கொள்ள முடியாது.
நடிப்பவர்கள் அவ்வளவு சிறப்பாக நடிப்பார்கள். கொஞ்சம் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாது.
சிலருக்கு நடிப்பு திறமை அதிகமாக இருக்கும். இவர்களின் நடிப்பு திறமையால் அதிகம் பாதிக்கப்படுவது நல்லவர்கள் தான்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7: 15-20) இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள்.
கெட்ட மரம் நல்ல கனியை கொடுப்பதில்லை, அது போல் நல்ல மரம் கெட்ட கனிகளை கொடுப்பதில்லை.
மனிதர்கள் தான் அவரவருக்குரிய பலனை கொடுப்பதில்லை.
இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்ட ஓர் அருமையான/எதார்த்த வார்த்தை, "போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”
இது தான் ‘பல நாள் திருடன் ஒரு நாள் ஆகப்படுவான்’ என்பது.
பல நாட்கள் ஏமாற்றிக் கொண்டே இருந்தாலும், ஒருநாள் நம் செயல்களே நம்மை காட்டிக் கொடுக்கும்.
யாரும் பார்க்கவில்லை என்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் படைத்தவனால் அன்றாடம் பார்வையிடப்படுகிறது.
திருப்பாடல்கள் 139:1, 2 இவ்வாறு சொல்கிறது, "ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்."
நம்மை ஒரு கண் உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே போதும், நாம் நற்கனி தரும் மரமாய் மாறுவோம்..
நல்லதை நல்லதாக கொடுப்போம். தீமையை வேரறுப்போம்...
No comments:
Post a Comment