25_06

உப்பும் ஒளியும்...

பொதுக்காலம் 10ஆம் வாரம்

10.06.2025 - செவ்வாய்க் கிழமை 

"நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை; தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்; அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்" - உரோமையர் 13:3

நல்லவர்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களால் அடையாளம் காட்டப்படுவார்கள். தீயவர்கள் தங்களின் தீச்செயலால் அடையாளம் காட்டப்படுவார்கள். எது மற்றவர்களை கவர்ந்து இழுக்கும்? - நற்செயலா? தீச்செயலா? 

தீமைகள் கவர்ச்சியை கொடுக்கும், ஆனால் நிரந்தர மகிழ்ச்சியை கொடுக்காது. நற்செயல்கள் செய்வதன் வழியாக பல தடங்கல்கள் வரும், ஆனால் அது நீடித்த மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். அது மன நிறைவாகவும் வெளிப்படும்.

நற்செயல்கள் ஒளிரும் விளக்குகளாக இருக்கும். தீச்செயல்கள் அணைந்த விளக்குகளாக இருக்கும்.

அணைந்த விளக்குகளால் இருளில் இருப்பவருக்கு பயனில்லை. ஒளிரும் நற்செயல்களால் நற்செயல்களை புரிபவரும் மற்றவரும் பயனடைவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:13-16) உலகிற்கு உப்பாக, உலகிற்கு ஒளியாக இருக்க இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். உப்பின் தன்மையை உப்பு இழந்து விட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஒளி ஏற்றப்பட்ட விளக்கு அதற்குரிய இடத்தில் வைக்கப்படாவிட்டால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.

அதேபோல கடவுளிடமிருந்து நன்மையானவற்றை பெற்றவர்கள், அந்த நன்மையை நற்செயலின் வாயிலாக வெளிகாட்டாவிட்டால், அவர்கள் மனிதர்களாக இருப்பதில் ஒரு பயனும் இல்லை.

எபேசியர் 2:10இல் இவ்வாறு காண்கிறோம், "ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்"

நம் நற்செயல்கள் ஒளிர வேண்டும், நாம் செய்யும் நற்செயல்களால் மற்றவர் வாழ்வு மிளிர வேண்டும்.

உதவாத வாழ்க்கையாக அல்ல ஒளிரும் வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாற வேண்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...