27.06.2025 - வெள்ளிக் கிழமை
"விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்" - நீதிமொழிகள் 4:23
இதயம் இருக்குதா, உன் இதயம் எல்லாம் கல்லு என்ற வார்த்தைகள் இதயமற்ற, அன்பற்ற மனிதர்களை பார்த்து சொல்லக்கூடியவை.
இதயம் கனிந்து இருக்க வேண்டும். கனியாத இதயம் கல் போன்றது.
இன்று பல சமயங்களில் நாம் இதயமற்ற இரக்கமற்ற மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரக்கத்தோடு வாழ்வதனால் என்ன பயன்? அன்பு செய்வதனால் என்ன பயன்? என்ற கேள்விகள் பல தருணங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. (சில அன்புக்குரிய நபர்கள் ஏற்படுத்திய காயங்களினால் இக்கேள்விகள் எழுகிறது).
நம்முடைய இதயம் யாராவது ஒருவர் அமரக்கூடிய சிம்மாசனமாக இருக்கிறது, ஆனால் அந்த சிம்மாசனத்தின் இருக்கை என்பது தற்காலிகமானதாக இருக்கிறது. இதயத்தில் நிரந்தரமான இடம் யாருக்கும் நாம் கொடுப்பதில்லை, யாரும் நிரந்தரமாக அங்கு தங்குவதும் இல்லை. (சிலர் ஏற்படுத்திய காயங்களினால் சிலருக்கு இடமில்லாமல் போகிறது).
சில இதயங்கள் காயப்பட்டு போகின்றது, சில இதயங்கள் காயப்படுத்துகின்றது.
இன்று இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த இயேசுவின் இதயம் எல்லோருக்குமானது, பாகுபாடுகளைக் கடந்த இதயம், கனிவும் மனத் தாழ்மையும் உடைய இதயம், இழப்புகளை, எதிர்ப்புகளை சந்தித்தவர்களை தாங்கும் இதயம். இவ்வாறாக இயேசுவின் இதயம் பல பண்புகளை கொண்டுள்ளது.
இறுதியில் அந்த இதயமும் காயப்பட்டு தான் இருக்கின்றது. எங்கு அதிகமாக அன்பு இருக்கிறதோ, எங்கு அதிகமான கனிவு இருக்கிறதோ அங்கு காயங்கள் அதிகம். இயேசுவின் வாழ்க்கையிலும் அது விதிவிலக்கு அல்ல.
ஆனால் இயேசுவின் இதயம் காயப்பட்டாலும் மற்றவர்களின் காயங்களுக்கு கட்டு போடக்கூடிய இதயமாக தான் இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும்.
மாற்கு நற்செய்தி 19: 31-37இல், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
இரத்தத்தாலும் சதையாலும் சூழப்பட்ட இதயமாக இயேசுவின் இதயம் இருக்கிறது. அவருடைய இதயம் பலருக்காக குத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த காயங்களுக்கு மருந்து எது? அன்பு ஒன்றே மருந்து. அந்த அன்பை நாம் எப்படி செலுத்தப் போகிறோம்? இயேசுவின் காயங்களை எப்படி குணப்படுத்த போகிறோம்?
மற்றவரின் இதயத்தை புண்படுத்தாத போது, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப் போடும்போது நான் இயேசுவின் காயங்களுக்கு மருந்திடுகிறோம்.
நம் கனிவு நிறைந்த இதயம் பல காயங்களுக்கு மருந்தாகட்டும்.
காயப்படுத்தும் இதயமாக அல்ல, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப்போடும் இதயமாக நம் இதயம் மாற வேண்டும்.
இயேசுவின் திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு நம் இதயத்திலும் பொங்கி வழிய வேண்டும்.
No comments:
Post a Comment