கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்த பெருவிழா
22.06.2025 - ஞாயிற்றுக் கிழமை
மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். ஒவ்வொரு உணவையும் பல்வேறு மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். ஒவ்வொரு உணவு உற்பத்திலும் பல நபர்களுடைய தியாகம் இருக்கிறது. ஆனால் அந்த பணிக்குரிய மரியாதையை அதை உற்பத்தி செய்பவர்கள் பெறுவது இல்லை.
மனிதன் நாகரிகம் என்ற பெயரில் இன்று எல்லாவற்றையும் நுகர்ந்து கொள்ளக்கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். தான் உயிர் வாழ்வதற்காக எதையும் உண்ணலாம் எதையும் அழிக்கலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான்.
மனிதன் மாமிச உண்ணி, தாவர உண்ணி என்று எந்த வகையிலும் வருவான். இன்னும் மனிதன் மனிதனை தான் உண்ணவில்லை என்று கூட சொல்ல முடியவில்லை. அடுத்தவனை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் வளர்ச்சியை நோக்கி மனிதன் சென்றுக் கொண்டிருக்கிறான்.
ஒருவன் தன் உடலை வளர்த்துக் கொள்ள மற்றொரு உடலை அழிக்க வேண்டி இருக்கிறது. தன்னை இழந்து மற்றவரை வாழ வைப்பவர்களை இந்த உலகம் பாராட்டும். ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விரைவில் மறந்து விடும்.
எனக்கு எதுவும் வேண்டாம் என்று உலகை துறந்து தனிமையை தேடிச் செல்வோரும் உண்டு, எல்லோரும் உடன் இருந்தாலும் தனிமையில் வாழ்வோரும் உண்டு.
இப்படிப்பட்ட உலகில் ஒருவர், கடவுள் தன்மையை விடுத்து, மனித உரு எடுத்து தன்னை இழந்தார் என்றால் அது தான் அன்பின் உச்சக் கட்டம்.
தன்னை நேசிப்போருக்காக மட்டுமல்ல தன்னை வெறுப்போருக்காகவும் அவர் தன்னை துறந்தார்.
அப்படிப்பட்டவர் தனது இறுதி இராவுணவின் போது தனது உடலையும் இரத்தத்தையும் தனது சீடர்களுக்கு கொடுத்து, இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:11-17) இயேசு 5 அப்பங்களையும் 2 மீன்களையும் 5000 பேருக்கு பகிர்ந்து கொடுத்தார். இந்த பகிர்வுக்கு காரணம் அவர் கொண்டிருந்த பரிவு தான். சீடர்களின் எண்ணமோ "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்? என்பதாக இருந்தது.
பரிவு உள்ள இடத்தில் பல நற்காரியங்கள் நடைபெறும். பரிவு செயலாக மாறும், பிறர் வாழ்வு பெற உதவும்.
நற்கருணையை உட்கொள்வதோடு கிறித்தவ வாழ்வின் கடமை முடிந்து விடுவதாக நாம் எண்ணுகிறோம்.
நற்கருணையை பெறுவதில் இருந்து தான் நம் கடமை தொடங்குகிறது.
- சிலருக்கு நற்கருணையை பயபக்தியோடு பெற வேண்டும் என்ற ஆசை
யாரும் நற்கருணையை அவமரியாதை செய்து விட கூடாது என்ற வேட்கை ஒரு புறம்
கிறித்தவர் அல்லாதவர் நற்கருணை பெற்றால் தெய்வ நிந்தனை என்பது மற்றொரு புறம்.
சிலருக்கு நற்கருணையை ஒருமுறை மட்டும் பெறுவதா? இருமுறை பெறலாமா?
இவற்றில் எல்லாம் அதிக அக்கறை கொள்ளும் நாமே நற்கருணை உணர்த்தும் தியாகத்தை, பரிவை, அன்பை அவமரியாதை செய்கிறோம்.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 11:27,28,39 இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.
எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.
ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்."
பல வேளைகளில் கிறிஸ்தவர்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்ளும் நாமே நற்கருணைக்குரிய மரியாதை கொடுப்பதில்லை. நற்கருணை, அதில் வாழும் இயேசு கிறிஸ்து அவருடைய சொந்த மக்களாலே அவமரியாதைக்கு உட்படுத்தப்படுகிறார்.
நாம் உட்கொள்ளும் நற்கருணையை தகுதியான முறையில் உட்கொள்கிறோமா? நற்கருணையை பெறுபவராக மட்டும் இருந்து இறுதிவரை நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ள போகிறோமா? அல்லது நற்கருணை உணர்த்தும் தியாகத்தை வாழ்ந்துக் காட்ட போகிறோமா? என்பதை சிந்திப்போம்...
வரலாறு - வத்திக்கான் நியூஸ்
பெல்ஜியம் நாட்டில், புனித Juliana de Cornillon அவர்கள் அடைந்த, ஆழ்நிலை இறையனுபவத்தைத் தொடர்ந்து, 1247ம் ஆண்டில், அந்நாட்டின் Liège நகரில் கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா, முதன்முதலில் சிறப்பிக்கப்படத் தொடங்கியது.
அதற்கு பல ஆண்டுகள் சென்று, 1263ம் ஆண்டில், Bohemiaவைச் (செக் குடியரசு) சேர்ந்த ஓர் அருள்பணியாளர், திருநற்கருணையில் இயேசு உண்மையிலேயே பிரசன்னமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்துடன் இத்தாலிக்கு திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவர், இத்தாலியின் பொல்சேனா என்ற நகரில் திருப்பலி நிறைவேற்றியபோது, திருஅப்பம் உடைந்து சதையாக மாறியது மற்றும், அதிலிருந்து இரத்தமும் வடிந்தது. இந்த புதுமைக்குப்பின், 1264ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் உர்பான் அவர்கள், இந்தப் பெருவிழா, திருஅவை முழுவதிலும் சிறப்பிக்கப்படுமாறு பணித்தார்.
No comments:
Post a Comment