25_06

தீமைக்கு பதில் நன்மை...


பொதுக் காலம் 11ஆம் வாரம்

16.06.2025 - திங்கட் கிழமை

"பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்" - 1 பேதுரு 2:23

என்னுடைய எதிரி எனக்கு மேல் துன்பப்பட வேண்டும். நான் அனுபவித்த வேதனை என்னுடைய துரோகியும் அனுபவிக்க வேண்டும். என்னை அவமானப்படுத்தியவர்கள் முன்னிலையில் நான் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், அதோடு அவர்களை தலைகுனிய வைக்க வேண்டும். இது தான் இன்றைய காலக் கட்டத்தில் மனிதர்கள் எண்ணுவது. அன்பு, மன்னிப்பு எல்லாம் வேண்டாம், பகை, வெறுப்பு போதும் என்ற எதிர்மறை வாழ்வு தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

மன்னிப்பு, மறத்தல் இந்த வார்த்தை எல்லாம் அகராதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றன. நான் அனுபவித்த கொடுமை அவனு(ளு)ம் அனுபவிக்க வேண்டும். 

இரக்கம் காட்டுவதால் என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம்? என்ற எண்ணம் பிறர் செய்ய தவறுகளை மன்னிக்க முடியா மனநிலையை நமக்கு கொடுத்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:38-42) "உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள், உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து உங்கள் அங்கி எடுத்துக் கொள்ள விரும்பினால் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள், உங்களை ஒரு கல் தொலைவர கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள், கேட்கிறவர்களுக்கு கொடுங்கள்" என்று இயேசு தன் திருவாய் மலர்ந்து போதிக்கிறார். 

போதனை எல்லாம் வாழ்வாக்கப்பட்டால் இங்கு பிரச்சனை ஏது? ஆனால் பழைய ஏற்பாட்டில் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" என்று கூறப்பட்டிருப்பதை இயேசு இங்கு கோடிட்டு காட்டுகிறார். விவிலியம் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" (விடுதலைப் பயணம் 21:24, லேவியர் 24:20, இணைச் சட்டம் 19;21) என்று சொல்வது சரியான பார்வையா? என்ற கேள்வி எழுகிறது. எதற்காக இந்த சட்டம் கொடுக்கப்பட்டது என்ற பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழைய ஏற்பாட்டு காலச் சமூக சூழலில், ஒரு இனத்தைச் சார்ந்த ஒரு நபர் மற்றொரு இனத்தைச் சார்ந்த நபரை கொலை செய்துவிட்டாலோ அல்லது அடித்து துன்புறுத்தினாலோ தாக்கப்பட்ட நபரின் இனத்தை சார்ந்தவர்கள் ஒன்றுக் கூடி தாக்குதலை ஏற்படுத்திய நபரின் இனத்தில் உள்ள அனைவரையும் அழித்து விடுவார்கள். இதுதான் வழக்கமாக இருந்தது. எனவே யார் தவறு செய்திருக்கிறாரோ (என்ன இழப்பை ஏற்படுத்தியிருக்கிறாரோ), அவருக்கு நீங்கள் அதே தண்டனை கொடுக்க வேண்டும். எல்லோரையும் அழிக்க கூடாது என்ற பின்னணியில் தான் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" என்று சொல்லப்பட்டது.

ஆனால் இயேசு அதையும் மாற்றி நமக்கு எதிராக தவறு செய்தவர்களை மன்னித்து விட சொல்லுகிறார்.

ஒருவர் கன்னத்தில் நம்மை அறைகிறார் என்றால், சொல்ல முடியாத அளவுக்கு கோபம் நமக்குள் எழும். ஆனால் இயேசு சொல்லக்கூடிய பதில் மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். 

இதிலும் ஒரு யுக்தி இருக்கிறது. உரோமையர் 12:20,21இல், "உன் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால் அவன் குடிக்கக் கொடு; இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

நமக்கு எதிராக தீங்கு செய்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய நன்மையான காரியம் தான் அவர்களுக்கான பாடம் (திருப்பி அறைதல்).

தீமை செய்பவருக்கு தீமையை செய்து கொண்டிருந்தால் நாம் நன்மையை காண்பது எப்போது? 

'இழப்பதற்கு எதுவும் இல்லை' என்று சொல்வார்கள், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய நன்மைத் தனத்தை இழக்காமல் இருப்போம். 

ஒருவர் செய்த தீமைக்கு பதில் நன்மை செய்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...