05.06.2025 - வியாழக்கிழமை
சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது; மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார் - 2 கொரிந்தியர் 13:11
இன்றைக்கு பலர் முன் வைக்க கூடிய வாதம். ஏன் ஒன்றாய் இருக்க வேண்டும்? சேர்ந்து இருப்பதால் என்ன நன்மை? சேர்ந்து இருப்பதே பல நேரங்களில் பல பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது.
அதே நேரத்தில் இன்று ஒரு சிலர் சேர்ந்து இருக்கிறார்கள், சேர்ந்து செயல்படுகிறார்கள், சேர்ந்தே வாழ்கிறார்கள் அதனால் அவர்கள் குறைந்து போவதில்லை.
சேர்ந்து வாழ்தலின் அர்த்தம் புரிந்தால், இணைந்து வாழ்தலின் நோக்கம் புரிந்தால் பிரச்சினை இல்லை.
கூட்டத்தோடு கூட்டமாய் வாழ்ந்தால், நோக்கம் இன்றி வாழ்ந்தால் ஒற்றுமையின் பொருள் புரியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17:20-26) இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் என்று இயேசு வேண்டுகிறார்.
இந்த உலகில் இருக்க வேண்டியது ஒன்றிப்பு தான், ஆனால் இல்லாமல் இருப்பதும் அது தான்.
சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், எல்லா விரலும் ஒன்று போலவா இருக்கு! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி என்பார்கள். அனைவரும் வித்தியாசமானவர்கள் அது தவறில்லை, ஆனால் ஒன்றித்து செயல்படாதது தவறு தான்.
சிறிய குடும்பங்களில் ஒற்றுமை இருப்பதில்லை. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு, இவையெல்லாம் தான் பிள்ளைகளின் மனங்களையும் கெடுக்கிறது.
சிறிய குழு தொடங்கி பெரிய குழுவரை, சிறிய நாடு தொடங்கி பெரிய நாடு வரை இன்று அமைதியின்றி தவிக்கிறது, அதற்கு காரணம் ஒற்றுமையின்மை.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், பகையுணர்வு, பொறாமை, அகங்காரம், ஆணவம் இன்று ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கிறது.
உயிர் உடலை விட்டு போகுமுன் நம் வெறுப்புணர்வு மறைய வேண்டும். பகைமை மறைந்து அமைதி நிலவ வேண்டும்.
நம் உள்ளம் அதற்கு முதலில் அமைதியை அடைய வேண்டும், அமைதியில்லாமல் அலையும் உள்ளம் வெளியில் உள்ள அமைதியை கெடுக்க தான் நினைக்கும்.
ஒற்றுமை தான் உயர்வை கொண்டு வரும்.
ஒற்றுமையாய் இருக்க முயல்வோம், அடுத்தவர்களின் ஒற்றுமையை குலைக்காமல் இருப்போம்...
No comments:
Post a Comment