25_06

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...


புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா

29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை 

சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. நொந்து போய் விடுவார்கள். வாழ்க்கையை வெறித்து விடுவார்கள். இப்படி இருக்க கூடிய மனிதர்களிடம் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டால், என் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று சொல்வார்கள். 

ஆனால் வாழ்க்கையில் பல அடிகள் பட்ட மனிதர்கள், வாழ்க்கையை எதார்த்த நிலையில் ஏற்றுக் கொள்வார்கள். இப்படி சிறிய வலிகளை பெரிதாக காண்போரும் உண்டு, பெரிய வலிகளை பெரிதாக எண்ணாதவர்களும் உண்டு.

எசாயா 48:10 இவ்வாறு சொல்கிறது 

நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.

துன்பம் நம்மை உறுதிப்படுத்தும், நல்வழிப்படுத்தும்.

ஆனால் அந்த துன்பம் யாரால், எதனால் உண்டானது என்பது முக்கியம். சில துன்பங்கள் வாய்க் கொழுப்பால் வரும், சில துன்பம் தேவையற்ற செயல்களால் வரும், ஒருசில இடங்களில் உண்மைக்கு சான்று பகர்ந்தால் வரும், ஒருசில இடங்களில் நேர்மையாய் இருந்தால் வரும்.

மேலே சொல்லப்பட்ட 2 வழிகளில் வரும் துன்பங்கள் கொடுக்கும் வலிகளை விட கீழே சொல்லப்பட்ட துன்பங்கள் அதிக வேதனையை கொடுக்கும்.

ஆனால் இப்படிப்பட்ட வேதனைகளுக்கு மத்தியிலும் புனிதர்களான பவுல், பேதுரு ஆகிய இருவரும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார்கள், நன்றி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்தார்கள்.

வாழ்க்கையில் ஒருவரால் நமக்கு நல்லது நடக்கிறது என்றால் நாம் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். அதுவும் காரியம் நடக்கும் வரை மட்டுமே. காரியம் முடிந்தவுடன் பலர் நம்மை கழட்டி விடுவார்கள் அல்லது நாம் கழட்டி விடுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 12: 1-11) புனித பேதுரு சிறையில் அடைக்கப்பட்டு கைதியாக இருக்கிறார், ஆண்டவரின் தூதர் அவரை சிறையில் இருந்து வெளியே அழைத்து வருகிறார். அப்போது, பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.

தான் செய்யக்கூடிய இறைப்பணியில் தடங்கல்கள் பல வந்தாலும், கடவுளை விட்டு ஓடி விடவில்லை. தடைகளை, துன்பங்களை கடந்தும் பணி செய்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (2 திமொத்தேயு 4: 6-8, 17-18) நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! என்கிறார் திருத்தூதர் பவுல்.

நம்முடைய துன்பங்களை இவர்களோடு ஒப்பிட முடியாது. நாமோ நம் வாழ்க்கை முன்னேற துன்பப்படுகிறோம், இவர்களோ இறைப்பணிக்காக, இறைமக்களுக்காக துன்பப்பட்டார்கள்.

(திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 11:23– 28 வரை தனது துன்பங்களை பட்டியலிடுகிறார், "அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.)

இத்தகைய துன்பங்களை அனுபவித்த பிறகும் கூட தங்கள் பணியை தொடர்ந்தார்கள்.

இன்றும் நாம் வாழும் சமூகத்தில் அநீதி, அக்கிரமங்களை எதிர்த்து குரல் கொடுத்து பலர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள், பலர் தங்கள் உயிரை தியாகம் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சமூகத்தின் மீது அக்கறை, இயற்கை மீது அக்கறை, ஊரின், நாட்டின் மீது அக்கறை, ஏழை எளியவர்கள் மீது அக்கறை என்று பிறருக்காக வாழ்ந்து தங்கள் வாழ்வின் துன்பத்தை கண்டு கொள்ளாத உயர்ந்த உள்ளங்கள் பல உள்ளன.

இத்தகையோர் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடம் இரண்டு

1. யாருக்கும் இடையூறாய் இராதீர் 

2. இடையூறு வந்தால் துவண்டு போகாதீர் 

இவ்வுலகில் இறந்த பின்னரும் பலர் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் நலனில் அக்கறை கொள்ளாதவர்கள்.

சிறு துன்பம் வந்தால் துவண்டு போய் வாழ்க்கையை வெறுக்கும் மனிதராய் இராமல், பிறரின் துன்பத்தில் பங்கெடுத்து இறைவனின் செயல்களுக்கு நன்றிக்குரியவர்களாய் இருப்போம்.

மரியாளின் மாசற்ற இதயம்


பொதுக்காலம் 12ஆம் வாரம்

28.06.2024 - சனிக் கிழமை 

பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக மாறிவிடுகிறது. என் இதயம் கறை படிந்ததற்கு என்னை குறை சொல்வதா! என்னை சூழ்ந்து இருப்பவர்களை குறை சொல்வதா! காலத்தினுடைய மாற்றங்களை குறை சொல்வதா! யாரை குறை சொல்வது?

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. சிலருக்கு வாழ்க்கை கசப்பையும், சிலருக்கு வாழ்க்கை இனிமையும், சிலருக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. இயற்கை எல்லோருக்கும் சமமாக தான் இருக்கிறது. 

இயற்கையை ஒருபோதும் குறை சொல்ல முடியாது. ஆனால், இயற்கையை நாம் மாசுபடுத்துகின்ற போது இயற்கை அதன் விளைவுகளை நம்மீது திணிக்க தான் செய்யும். 

நம்முடைய உடல் கடவுள் வாழக்கூடிய ஆலயமாக தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த தூய்மையை நாம் வெளியிலிருந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நமக்குள் எழக்கூடிய தவறான சிந்தனைகளால், நம்முடைய நடத்தைகளால் மாசுப்படுத்தி விடுகிறோம். 

இன்று அன்னை மரியாவினுடைய மாசற்ற இதய விழாவை நினைவு கூறுகிறோம். அன்னை மரியாவும் எல்லோரும் வாழ்ந்த அதே சமூகத்தில் தான் வாழ்ந்தார் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் தான் அவருக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் அவரால் மட்டும் எப்படி தூய்மை நிறைந்த இதயத்தோடு வாழ முடிந்தது? 

கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை எல்லோர் மேலும் அருளை பொழிகிறார். பொழியப்பட்ட அருளை உள்ளத்தில் இருத்தி தியானித்தால் வாழ்வு நலமானதாக மாறும். 

அன்னை மரியாள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தார். வாழ்க்கையினுடைய புரியாத புதிர் தொடங்கி தன் மகனின் இறப்பு, இறப்பிற்குப் பின் வாழ்க்கை என எல்லாவற்றிலும் நடந்த நினைவுகள் அவரை காயப்படுத்தியது, ஆனால் அவர் கலங்கவில்லை. 

கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராக திரும்பவும் இல்லை. கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக் கொண்டார் என்ற மனநிலை அன்னை மரியாவிடம் இருந்ததனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய இதயம் தூய்மையை இழக்காமல் இருந்தது.

பல வியாகுலங்களை தாங்கிய போதிலும் அந்த இதயம் மாசுபடாமல் இருந்தது.

வரலாற்றுப் பின்னணி 

1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமாவில் காட்சி கொடுத்த பிறகு, இந்த பக்தி முயற்சி சிறப்பாக வளர்ந்தது. 1917 ஜூன் 13 ஆம் தேதி புதன் கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டார்.

1944ல் திருத்தந்தை 12ம் பயஸ் மரியாளின் மாசற்ற இதய விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து, ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். 1969இல் திருத்தந்தை 6ஆம் பவுல், இயேசுவின் தூய இதய பெருவிழாவுக்கு அடுத்த நாளில் மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவுகூரும் வகையில் இந்த திருநாளை மாற்றி அமைத்தார்.

மாசற்ற இதய படத்தின் விளக்கம்

எரியும் நெருப்பு - இயேசுவின், மக்களின் மீதான அன்பு

ஊடுருவிய வாள் - 7 வியாகுலங்கள்

மலர் - அன்னையின் தூய்மை

இதயம் - தாய்க்குரிய அன்பு

இதயத்தில் அன்பு...


இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை

"விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்" - நீதிமொழிகள் 4:23

இதயம் இருக்குதா, உன் இதயம் எல்லாம் கல்லு என்ற வார்த்தைகள் இதயமற்ற, அன்பற்ற மனிதர்களை பார்த்து சொல்லக்கூடியவை.

இதயம் கனிந்து இருக்க வேண்டும். கனியாத இதயம் கல் போன்றது. 

இன்று பல சமயங்களில் நாம் இதயமற்ற இரக்கமற்ற மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரக்கத்தோடு வாழ்வதனால் என்ன பயன்? அன்பு செய்வதனால் என்ன பயன்? என்ற கேள்விகள் பல தருணங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. (சில அன்புக்குரிய நபர்கள் ஏற்படுத்திய காயங்களினால் இக்கேள்விகள் எழுகிறது).

நம்முடைய இதயம் யாராவது ஒருவர் அமரக்கூடிய சிம்மாசனமாக இருக்கிறது, ஆனால் அந்த சிம்மாசனத்தின் இருக்கை என்பது தற்காலிகமானதாக இருக்கிறது. இதயத்தில் நிரந்தரமான இடம் யாருக்கும் நாம் கொடுப்பதில்லை, யாரும் நிரந்தரமாக அங்கு தங்குவதும் இல்லை. (சிலர் ஏற்படுத்திய காயங்களினால் சிலருக்கு இடமில்லாமல் போகிறது).

சில இதயங்கள் காயப்பட்டு போகின்றது, சில இதயங்கள் காயப்படுத்துகின்றது. 

இன்று இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த இயேசுவின் இதயம் எல்லோருக்குமானது, பாகுபாடுகளைக் கடந்த இதயம், கனிவும் மனத் தாழ்மையும் உடைய இதயம், இழப்புகளை, எதிர்ப்புகளை சந்தித்தவர்களை தாங்கும் இதயம். இவ்வாறாக இயேசுவின் இதயம் பல பண்புகளை கொண்டுள்ளது. 

இறுதியில் அந்த இதயமும் காயப்பட்டு தான் இருக்கின்றது. எங்கு அதிகமாக அன்பு இருக்கிறதோ, எங்கு அதிகமான கனிவு இருக்கிறதோ அங்கு காயங்கள் அதிகம். இயேசுவின் வாழ்க்கையிலும் அது விதிவிலக்கு அல்ல. 

ஆனால் இயேசுவின் இதயம் காயப்பட்டாலும் மற்றவர்களின் காயங்களுக்கு கட்டு போடக்கூடிய இதயமாக தான் இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும். 

மாற்கு நற்செய்தி 19: 31-37இல், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

இரத்தத்தாலும் சதையாலும் சூழப்பட்ட இதயமாக இயேசுவின் இதயம் இருக்கிறது. அவருடைய இதயம் பலருக்காக குத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த காயங்களுக்கு மருந்து எது? அன்பு ஒன்றே மருந்து. அந்த அன்பை நாம் எப்படி செலுத்தப் போகிறோம்? இயேசுவின் காயங்களை எப்படி குணப்படுத்த போகிறோம்?

மற்றவரின் இதயத்தை புண்படுத்தாத போது, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப் போடும்போது நான் இயேசுவின் காயங்களுக்கு மருந்திடுகிறோம். 

நம் கனிவு நிறைந்த இதயம் பல காயங்களுக்கு மருந்தாகட்டும்.

காயப்படுத்தும் இதயமாக அல்ல, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப்போடும் இதயமாக நம் இதயம் மாற வேண்டும்.

இயேசுவின் திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு நம் இதயத்திலும் பொங்கி வழிய வேண்டும்.

இயேசுவின் பெயரை இழிவுப்படுத்த வேண்டாம்...

பொதுக் காலம் 12ஆம் வாரம்

26.06.2025- வியாழக் கிழமை

நல்லவை இயேசுவின் பெயரால் நடைபெறுகிறது, கெட்டவை இயேசுவின் பெயரைச் சொல்லி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21-29) "என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்கிறார் இயேசு.

பலர், "ஆண்டவரே, ஆண்டவரே உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உன் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? என்பர். அதற்கு இயேசு உங்களை எனக்கு தெரியவே தெரியாது என்று பதில் சொல்வதாக இறைவார்த்தை பகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...

நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது. 

இன்று தெருவுக்கு தெரு பல கூட்டங்கள் இயேசுவின் பெயரைச் சொல்லி கூடுகின்றன. இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் என்று சொல்லி இயேசுவின் பெயரால் பல சுரண்டல்கள் நடைபெறுகின்றன. (இயேசுவின் பெயரால் அங்கு நல்லது நடந்தால் தவறல்ல...)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்வது போல், "நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும்.

அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.

இறைவார்த்தையைக் கேட்டு செயல்படும் (பாறை மீது வீட்டைக் கட்டிய) அறிவாளியாக நாம் இருக்கப் போகிறோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படாத (மணல் மீது வீட்டைக் கட்டிய) அறிவிலியாக இருக்கப் போகிறோமா? என்பது நம் கையில் இருக்கிறது.

இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.

பத்துக் கட்டளைகளில் 3வது, "கடவுளின் திருப்பெயரை வீணாக சொல்லாதிருப்பாயாக". 

தேவை உள்ள இடத்தில் கடவுளின் பெயரைச் சொல்லுவோம். மற்ற இடங்களில் நம் வாழ்க்கையால் கடவுளின் பெயரை மகிமைப்படுத்துவோம்.

நல்லது போல கெட்டதா???


பொதுக் காலம் 12ஆம் வாரம் 

25.06.2025 - புதன் கிழமை 

நல்லவர்கள் பொல்லாதவர்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு. ஆனால் நல்லவர்களை நல்லவர்கள் என்று அடையாளம் காண்பதை விட கெட்டவர்களை அடையாளம் காண்பது தான் மிக கடினம்.

 நல்லவர்கள் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. கெட்டவர்கள் இடத்துக்கு ஏற்ப ஆளுக்கு ஏற்ப நடிப்பதால் அவர்களை எளிதாக கண்டுக் கொள்ள முடியாது.

நடிப்பவர்கள் அவ்வளவு சிறப்பாக நடிப்பார்கள். கொஞ்சம் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாது. 

சிலருக்கு நடிப்பு திறமை அதிகமாக இருக்கும். இவர்களின் நடிப்பு திறமையால் அதிகம் பாதிக்கப்படுவது நல்லவர்கள் தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு  7: 15-20) இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள்.

கெட்ட மரம் நல்ல கனியை கொடுப்பதில்லை, அது போல் நல்ல மரம் கெட்ட கனிகளை கொடுப்பதில்லை.

மனிதர்கள் தான் அவரவருக்குரிய பலனை கொடுப்பதில்லை. 

இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்ட ஓர் அருமையான/எதார்த்த வார்த்தை, "போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

இது தான் ‘பல நாள் திருடன் ஒரு நாள் ஆகப்படுவான்’ என்பது.

பல நாட்கள் ஏமாற்றிக் கொண்டே இருந்தாலும், ஒருநாள் நம் செயல்களே நம்மை காட்டிக் கொடுக்கும்.

யாரும் பார்க்கவில்லை என்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் படைத்தவனால் அன்றாடம் பார்வையிடப்படுகிறது.

திருப்பாடல்கள் 139:1, 2 இவ்வாறு சொல்கிறது, "ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்."

நம்மை ஒரு கண் உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே போதும், நாம் நற்கனி தரும் மரமாய் மாறுவோம்..

நல்லதை நல்லதாக கொடுப்போம். தீமையை வேரறுப்போம்...

பிறப்பு பேசப்படட்டும் ...


திருமுழுக்கு யோவானின் பிறப்பு

24.06.2025 - செவ்வாய்க் கிழமை 

இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக" - திருப்பாடல்கள் 149:2

மனிதனாக குழந்தை பிறக்கின்ற போது, குழந்தை பிறந்ததை எண்ணி பலர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமல் இருந்து, குழந்தை பேற்றை பெறும் வாய்ப்பு கிடைக்கின்ற போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குழந்தை வளர்ந்த பிறகு மகிழ்ச்சி தொடருமா என்பது கேள்விக் குறியே. நம்முடைய மகிழ்ச்சியை யார்? எது? தீர்மானிப்பது என்பது நம் கையில் தான்.

பிறக்கின்ற குழந்தையை குறித்து இறைவாக்கு சொல்லப்படும் போது, அது நேர்மறையாக இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும், அதுவே குழந்தையை குறித்து எதிர்மறையாக சொல்லப்பட்டால் ஆழ்ந்த துயரம் தான் ஏற்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா  1: 57-66, 80) குழந்தையின்றி இருந்த செக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் முதிர் வயதில் குழந்தை பேற்றை பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. குழந்தை பற்றி நேர்மறைக் கருத்துகள் சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை பெறுவதற்கு முன் செக்கரியா செய்து கொண்டிருந்தது என்ன?

யோவானின் தாயும் (ஆரோனின் வழிமரபு) தந்தையும் (அபியா வகுப்பு) குருத்துவ மரபை சார்ந்தவர்கள். கடவுளுக்கு பணி செய்யும் பொறுப்பை தாங்கள் சார்ந்திருக்கும் மரபு வழியாக பெற்றவர்கள்.

செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவ பணி ஆற்றி வந்தார் என்கிறது இன்றைய நற்செய்தி.

திருக்கோவிலுள் எல்லோரும் எளிதாக சென்று விட முடியாது. ஏராளமான குருக்கள் இருந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை தான் சீட்டுப் போட்டு குருக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருத்தூயகத்துக்குள் செல்ல குரு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த அளவுக்கு மிகவும் கடினமான சட்டங்கள் இருந்தன. இந்த முறை சீட்டு செக்கரியாவுக்கு விழவே அவர் உள்ளே சென்று பணி செய்தார்.

கடவுளின் தூதர் தோன்றி திருமுழுக்கு யோவானின் பிறப்பை அறிவிக்கிறார். தூதர் சொல்ல சொல்ல எல்லாவற்றையும் கேட்ட பிறகு, " இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்" என்று சந்தேகம் கொள்கிறார்.

ஆபிரகாம் சாரா வாழ்வை பற்றி செக்கரியா நிச்சயம் தெரிந்திருப்பார். வயதான நிலையிலும் கடவுளின் அருளை பெற்ற அத்தம்பதியினர் ஓர் எடுத்துக்காட்டு.

தெரிந்திருந்தும் கூட ஐயம் கொள்கிறார், அதற்காக தான் கடவுளின் தூதர் சொன்னவை நிறைவேறும் வரை வாய் பேச முடியாதவராய் நின்றார்.

திருமுழுக்கு யோவானை குறித்த பிறப்பு செய்தி, தூய ஆவியால் அவர் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார், கடவுளை நோக்கி மக்களை திரும்ப செய்யும் பணி அவரது பணி என்பதுமாக அமைந்தது.

தனக்காக வாழாதவர் தன்னை படைத்தவருக்காக, படைக்கப்பட்டவர்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார். 

திருமுழுக்கு யோவானின் பிற்கால செய்திகள் மக்களுக்கு பாவத்திலிருந்து மனம்மாற அழைப்பு விடுத்தது.

வழியை ஆயத்தம் செய்தார், கிறிஸ்துவை முன்னறிவித்தார், மகிழ்ச்சியை மனம் மாற்றத்தின் வழியாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்தார்.

நம் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், ஆனால் நம்முடைய தொடர் வாழ்வு மகிழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும்.

இறப்பு ஒருநாள் வரும், அதற்கு முன்னே செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்ய வேண்டும்.

இல்லாதவர்களுக்கு இருப்பதை பகிர்ந்து, இயலும் மட்டும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.

தனக்காக வாழாதவர் நிச்சயம் மற்றவரை வாழ வைப்பார். நாம் எப்படி?

தூய்மை நமக்குள்ளும் இருக்கட்டும்...

பொதுக் காலம் 12ஆம் வாரம்
23.06.2025- திங்கள் கிழமை 

குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). இங்கு அழுக்கு வெளியே இருக்கிறது, உட்புறம் தூய்மை.

வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது? தீயது எது? என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம். (இங்கு வெளியில் தூய்மையாக இருப்பது போல காட்டப்படுகிறது ஆனால் உட்புறம் மாசுபடிந்திருக்கிறது).

தீமைகள் நமக்குள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மற்றவரை தவறாக மதிப்பிடக்கூடிய மனநிலையை நாம் பெருக்கிக் கொள்கிறோம். 

புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'

நாம் மாசுள்ளவர் என்பதை கண்டுணராத வரை, நாம் மற்றவர்களையும் தவறாக மதிப்பிட தான் செய்வோம். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7: 1-5) "வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" என்கிறார் இயேசு.

நம் குறைகள் களையப்பட வேண்டும். நம் குறைகள் களையப்பட்ட பிறகு தான் நாம் மற்றவர்களின் கறைகளை கழுவ முடியும். 

நாம் செய்வது தவறு என்பதை ஒருவேளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் செய்வது தவறு என்பது வெளியில் இருப்பவர்களுக்கு நன்றாய் தெரியும். 

சபை உரையாளர் நூல் 7:20 இவ்வாறு சொல்கிறது, "குற்றமே செய்யாமல் நல்லதே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை".

நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெரும்.

நம்முடைய வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதை முதன்மைப்படுத்துவோம். நாம் சரியாக இல்லாதபோது மற்றவரின் வாழ்வை நாம் ஒருபோதும் திருத்த முயலக் கூடாது. 

குறையுள்ள மனிதர் குறைபாடுள்ள மனிதரை சரிப்படுத்த முடியாது.

நம்மை நன்மை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் தீய ஓட்டங்களை தடுத்து நிறுத்துவோம்.

நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டை முதலில் எடுக்கப்பட்டால் நம் வாழ்வு சிறப்பானதாக மாறும். 

அதன்பின் நாம் மற்றவரை மாற்ற வேண்டியதில்லை, நம்மை பார்த்து மற்றவர்கள் மாறிவிடுவார். 

நம் வாழ்வு பாடமாகட்டும்...


தன்னை இழந்து நம்மை காத்தார்...


கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்த பெருவிழா

22.06.2025 - ஞாயிற்றுக் கிழமை 

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். ஒவ்வொரு உணவையும் பல்வேறு மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். ஒவ்வொரு உணவு உற்பத்திலும் பல நபர்களுடைய தியாகம் இருக்கிறது. ஆனால் அந்த பணிக்குரிய மரியாதையை அதை உற்பத்தி செய்பவர்கள் பெறுவது இல்லை. 

மனிதன் நாகரிகம் என்ற பெயரில் இன்று எல்லாவற்றையும் நுகர்ந்து கொள்ளக்கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். தான் உயிர் வாழ்வதற்காக எதையும் உண்ணலாம் எதையும் அழிக்கலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான்.

மனிதன் மாமிச உண்ணி, தாவர உண்ணி என்று எந்த வகையிலும் வருவான். இன்னும் மனிதன் மனிதனை தான் உண்ணவில்லை என்று கூட சொல்ல முடியவில்லை. அடுத்தவனை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் வளர்ச்சியை நோக்கி மனிதன் சென்றுக் கொண்டிருக்கிறான்.

ஒருவன் தன் உடலை வளர்த்துக் கொள்ள மற்றொரு உடலை அழிக்க வேண்டி இருக்கிறது. தன்னை இழந்து மற்றவரை வாழ வைப்பவர்களை இந்த உலகம் பாராட்டும். ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விரைவில் மறந்து விடும்.

எனக்கு எதுவும் வேண்டாம் என்று உலகை துறந்து தனிமையை தேடிச் செல்வோரும் உண்டு, எல்லோரும் உடன் இருந்தாலும் தனிமையில் வாழ்வோரும் உண்டு.

இப்படிப்பட்ட உலகில் ஒருவர், கடவுள் தன்மையை விடுத்து, மனித உரு எடுத்து தன்னை இழந்தார் என்றால் அது தான் அன்பின் உச்சக் கட்டம்.

தன்னை நேசிப்போருக்காக மட்டுமல்ல தன்னை வெறுப்போருக்காகவும் அவர் தன்னை துறந்தார்.

அப்படிப்பட்டவர் தனது இறுதி இராவுணவின் போது தனது உடலையும் இரத்தத்தையும் தனது சீடர்களுக்கு கொடுத்து, இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:11-17) இயேசு 5 அப்பங்களையும் 2 மீன்களையும் 5000 பேருக்கு பகிர்ந்து கொடுத்தார். இந்த பகிர்வுக்கு காரணம் அவர் கொண்டிருந்த பரிவு தான். சீடர்களின் எண்ணமோ "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்? என்பதாக இருந்தது. 

பரிவு உள்ள இடத்தில் பல நற்காரியங்கள் நடைபெறும். பரிவு செயலாக மாறும், பிறர் வாழ்வு பெற உதவும்.

நற்கருணையை உட்கொள்வதோடு கிறித்தவ வாழ்வின் கடமை முடிந்து விடுவதாக நாம் எண்ணுகிறோம்.

நற்கருணையை பெறுவதில் இருந்து தான் நம் கடமை தொடங்குகிறது. 

- சிலருக்கு நற்கருணையை பயபக்தியோடு பெற வேண்டும் என்ற ஆசை

யாரும் நற்கருணையை அவமரியாதை செய்து விட கூடாது என்ற வேட்கை ஒரு புறம் 

கிறித்தவர் அல்லாதவர் நற்கருணை பெற்றால் தெய்வ நிந்தனை என்பது மற்றொரு புறம்.

சிலருக்கு நற்கருணையை ஒருமுறை மட்டும் பெறுவதா? இருமுறை பெறலாமா?

இவற்றில் எல்லாம் அதிக அக்கறை கொள்ளும் நாமே நற்கருணை உணர்த்தும் தியாகத்தை, பரிவை, அன்பை அவமரியாதை செய்கிறோம்.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 11:27,28,39 இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.

எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.

ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்."

பல வேளைகளில் கிறிஸ்தவர்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்ளும் நாமே நற்கருணைக்குரிய மரியாதை கொடுப்பதில்லை. நற்கருணை, அதில் வாழும் இயேசு கிறிஸ்து அவருடைய சொந்த மக்களாலே அவமரியாதைக்கு உட்படுத்தப்படுகிறார்.

நாம் உட்கொள்ளும் நற்கருணையை தகுதியான முறையில் உட்கொள்கிறோமா? நற்கருணையை பெறுபவராக மட்டும் இருந்து இறுதிவரை நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ள போகிறோமா? அல்லது நற்கருணை உணர்த்தும் தியாகத்தை வாழ்ந்துக் காட்ட போகிறோமா? என்பதை சிந்திப்போம்...

வரலாறு - வத்திக்கான் நியூஸ் 

பெல்ஜியம் நாட்டில், புனித Juliana de Cornillon அவர்கள் அடைந்த, ஆழ்நிலை இறையனுபவத்தைத் தொடர்ந்து, 1247ம் ஆண்டில், அந்நாட்டின் Liège நகரில் கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா, முதன்முதலில் சிறப்பிக்கப்படத் தொடங்கியது.

அதற்கு பல ஆண்டுகள் சென்று, 1263ம் ஆண்டில், Bohemiaவைச் (செக் குடியரசு) சேர்ந்த ஓர் அருள்பணியாளர், திருநற்கருணையில் இயேசு உண்மையிலேயே பிரசன்னமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்துடன் இத்தாலிக்கு திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவர், இத்தாலியின் பொல்சேனா என்ற நகரில் திருப்பலி நிறைவேற்றியபோது, திருஅப்பம் உடைந்து சதையாக மாறியது மற்றும், அதிலிருந்து இரத்தமும் வடிந்தது. இந்த புதுமைக்குப்பின், 1264ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் உர்பான் அவர்கள், இந்தப் பெருவிழா, திருஅவை  முழுவதிலும் சிறப்பிக்கப்படுமாறு பணித்தார்.

கடவுளை தேடு... கவலை மற...


பொதுக்காலம் 11ஆம் வாரம் 

21.06.2025 - சனிக் கிழமை

ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே" - 2 சாமுவேல் 22:32

இன்று அன்புக்குரியவர்களாய் இருப்பவர்கள் நாளை பகைவராய் மாறுவதும், இன்று வெறுப்போடு இருப்பவர்கள் நாளை நண்பர்களாவதும் உண்டு. ஏனென்றால் ஒன்றிலிருந்து ஒன்று மாறிக்கொண்டே இருக்கும். 

நமக்கு ஏற்றார் போல் பேசுபவர்கள் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். நம் பக்கம் உள்ள தவறை சுட்டிக் காட்டுபவர்கள் நமக்கு விரைவில் (நம்மால்) பகைவர்களாய் மாறுவதும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:24-34) எவரும் இரு தலைவருக்கு பணிவிடை செய்ய முடியாது, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என கவலை கொள்ளாதீர்கள், கடவுளுடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் (உணவு, தண்ணீர், உடை, நல்வாழ்வு) உங்களுக்குச் சேர்த்து கொடுக்கப்படும் என்கிறார் இயேசு. 

இரு தலைவர்கள் = கடவுள்-செல்வம், உண்மை-பொய்மை, நீதி-அநீதி, பிறர் நலம்-தன்னலம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுதல் இயல்பாக இருக்கிறது. ஏனென்றால் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக தெரிகிறது. தனக்கு நலம் பயப்பவை தனக்கு மகிழ்ச்சி கொடுப்பவை எப்போதும் தனக்கு சிறந்தது தான். 

ஆனால் இயேசு, கடவுளது ஆட்சியையும், கடவுளுக்கு ஏற்புடையவற்றையும் நாட நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

பல வேளைகளில் வாழ்வில் எழக்கூடிய கவலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றன. கடவுளை சார்ந்து இருப்பதினால் என்ன பயன்? கடவுளுக்குரியவற்றை தேடுவதால் என்ன பயன்? என்ற குழப்பத்திற்குள் ஆழ்த்தி விடுகிறது. 

நேர்மையின் பக்கம் இருப்பதைவிட தீமையின் பக்கம் இருப்பது எவ்வளவோ நல்லது என்ற மாயையை கொடுத்து விடுகிறது.

எல்லோரும் பொய் பேசுவதனால் பொய் ஒருபோதும் சரியானதாக மாறிவிடாது.

எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கக்கூடிய பகுத்தறிவு நம்மிடமிருக்கிறது. 

தற்காலிக மகிழ்ச்சி கொடுப்பதை தேர்ந்தெடுப்பதை விட நிரந்தர மகிழ்ச்சி கொடுக்கும் கடவுளின் அரசை நாம் தேர்ந்து கொள்வோம்.

கடவுளின் அரசை தேர்ந்தெடுப்பதை விட சிறந்தது வேறொன்றுமில்லை

நம் செல்வம் எங்கே???

பொதுக்காலம் 11ஆம் வாரம்

20.06.2025 - வெள்ளிக் கிழமை 

நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கௌதாரி போன்றோர்; தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்; இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர் - எரேமியா 17:11

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பார்கள், ஆனால் செல்வமும் செல்வத்தின் மீதான பற்றும் எல்லா துன்பங்களுக்கும் காரணம். 

செல்வம் தேவையில்லை என்பது இயேசுவின் கருத்து அல்ல. செல்வம் மட்டும் போதும் என்பது சரியானது அல்ல என்பது தான் இயேசுவின் கருத்து.

செல்வத்தை சேர்க்கும் ஆர்வத்தில் சிலர் தன்னிடம் இருக்கும் செல்வத்தை (உறவுகளை) இழந்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பது போதாது என்று இருப்பதற்கும் மேலாக, இருப்பதையும் (நேரம், உறவு) இழந்து சிலர் நிலையற்ற செல்வத்தை தேடி ஓடுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:19-23) மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் என்று சொல்கிறார் இயேசு.

செல்வத்திற்காக அற்ப உயிர்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மனித உயிர்களை விட பணமும் செல்வமும் சிலருக்கு பெரிதாக தெரிகிறது. 

நம்பிக்கை துரோகங்கள் அதிகம் அரங்கேறுவது இந்த செல்வத்திற்காக தான்.

இது உலக செல்வம், இது அழிந்து போய்விடும். அழியா மற்றொரு செல்வமும் இருக்கிறது, அது நாம் செய்யும் நற்செயல்கள். நாம் செய்யும் நற்செயல்கள் வாயிலாக நமக்கான செல்வங்கள் விண்ணகத்தில் சேர்த்து வைக்கப்படும்.

அதை யாரும் பெரிதாக எண்ணுவதில்லை. இவ்வுலக செல்வங்களே எல்லோருக்கும் பெரிதாக தெரிகிறது. மடியில் கணம் இருப்பதால் வழியில் பயத்தோடு அலைந்து திரிகிறோம்.

அழிவற்ற நிலை வாழ்வு தரும் செல்வத்தை பெற இவ்வுலகில் நற்செயல்கள் புரிவோம். நமக்கான செல்வத்தை விண்ணகத்தில் சேர்ப்போம்.

மன்னிப்பு என்னும் இறைவேண்டல்


பொதுக்காலம் 11ஆம் வாரம்

19.06.2025  - வியாழக்கிழமை 

மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்? - சீராக்கின் ஞானம் 28:4

ஒரு மனிதன் தவற, மற்றொரு மனிதன் அவனை மன்னிக்கும் போது மன்னித்தவன் புனிதன் ஆகிறான். மன்னிப்பு பெற்றவன் மனிதனாக திருந்தி வாழும் வாய்ப்பு பெறுகிறான். 

மன்னிப்பு என்னும் உயரிய மருந்து எல்லோருக்கும் விலையேற பெற்றதாக தெரியாது. வாழ்க்கையில் தவறு செய்து, அடிபட்டு, இனி வேறு வழியில்லை என்று திருந்தி வரும் மனிதனை நம்பி அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு மனிதரை கண்டவர் அடையும் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அந்த இடத்தில் மன்னிப்பு உயரிய ஆற்றல் பெற்றது.

எல்லாரும் தவறக் கூடியவர்கள் தான். ஆனால் தவறுக்கு வருந்தும் மனிதருக்கு மன்னிப்பு என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மன்னிப்பிற்காக காத்திருக்கும் மனிதருக்கு சரியான நேரத்தில் மன்னிப்பு கொடுக்கப்படவில்லையென்றால் அவர் இன்னும் தீயவராக மாறிவிடுவார்.

காலம் தவறி கொடுக்கப்படும் மருந்து கொடுக்கப்பட்டு பயனில்லாமல் போவது போல, காலம் கடந்து மன்னித்தால் அதனால் ஒரு பயனும் இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:7-15) இறைவேண்டலும் மன்னிப்பும் இடம் பெறுகிறது. 

இறைவேண்டலில் பிதற்ற வேண்டாம், மிகுதியான சொற்கள் இறைவேண்டலுக்கு அவசியம் இல்லை என்கிறார் இயேசு. இறைவேண்டலுக்கு அவசியமான ஒன்று மன்னிப்பு என்னும் பண்பு தான். 

மன்னிக்க மனம் இல்லாதவர் இறைவனிடம் மன்னிப்பு கேட்க தகுதி அற்றவர். 

யாரால் தன்னோடு வாழ்பவரை மன்னிக்க முடிகிறதோ அவரே இறை மன்னிப்புக்கு உரியவர்.

பல மனிதர்கள் இறைவேண்டலில் சிறப்புக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இயல்பான வாழ்க்கையில் இறை மனித ஒன்றிப்புக்கு ஏதும் செய்வதில்லை. 

இறைபுகழ்ச்சி சக மனிதரோடு நாம் கொள்ளும் நல்லுறவில் தொடர்கிறது. இறைவன் புகழப்பட வார்த்தை முக்கியம் அல்ல, இறைவார்த்தை வாழ்வாக்கப்படுதலே அவசியம்...

மன்னிப்போடு கூடிய இறைவேண்டல் கேட்கப்படும். 

விளம்பரம் வேண்டாம்...


பொதுக்காலம் 11ஆம் வாரம்

18.06.2025 - புதன் கிழமை 

எல்லா மனிதருக்கும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள ஆசை உண்டு. செயல் பெரிதோ? செயல் சிறிதோ? தான் செய்ததற்கான அங்கீகாரம் தனக்கு வேண்டும் என்று ஏதாவது வகையில் தேடி ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம். 

பெருமை யாரையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு பாராட்டு தேவை இல்லை என்பவர்கள் கூட மறைமுகமாக பாராட்டை எதிர்பார்ப்பார்கள்.

சிலர் சிலவற்றை செய்து பெருமை தேடுவார்கள், ஒரு சிலர் மற்றவர்கள் செய்தவற்றை வைத்துக் கொண்டு தனக்கு பெருமை தேடிக் கொள்வார்கள்.

வறுமை உள்ள இடத்தில் வயிறு குளிர வேண்டும் என்பதை வாய்ப்பாக கொண்டு, பெருமை தேடும் மனிதர்கள் தங்கள் மனதை குளிர வைக்கிறார்கள். தாங்கள் செய்வதை 4 அல்லது 5 கேமரா எடுக்கும் நபர்களோடு சென்று உலகறிய செய்கிறார்கள். இது விளம்பர உலகம்.

நாம் செய்வதை நாமே சொல்லிக் காட்டுவது கேவலத்தின் உச்சம். நம் செயல்கள் வாயிலாக நாம் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர, நாம் செய்ததை சொல்லி அடையாளம் தேடக் கூடாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6: 1-6, 16-18) மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது என்கிறார் இயேசு.

ஒரு வகையில் இவ்வாறு செய்வோரை (விளம்பரப்படுத்தி காரியங்களை செய்வோரை) பாராட்ட வேண்டி இருக்கிறது. அவர்களால் ஏதாவது நடக்கிறது என்பதால். ஆனால் இயேசு அதையும் தேவையில்லை என்கிறார்.

சீராக்கின் ஞானம் 35:9 இவ்வாறு சொல்கிறது, "உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு; உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு".

பெற்றுக் கொண்டதை கொடுக்க போகிறோம், அதில் எதற்கு பெருமை.

நாம் இன்று வைத்திருப்பது எல்லாம் நாம் பெற்றுக் கொண்டவையே...

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 4: 7இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?"

விளம்பரம் இவ்வுலகில் தேடாதோர் அவ்வுலகில் நிறைவை பெறுவர்.

விண்ணகத்தில் கைம்மாறு...


பொதுக் காலம் 11ஆம் வாரம்
17.06.2025 - செவ்வாய்க் கிழமை 

மூன்று மனநிலை நம்மிடம் இருக்கிறது. 
1. கடவுள் சார்பாக செயல்படுவது 
2. மனிதர் சார்பாக செயல்படுவது
3. தனக்கு ஏற்றார் போல செயல்படுவது.
இந்த மூன்றும் இணைந்து செல்ல வேண்டும். இதில் கடைசி இரண்டு அதிகமானால் ஆபத்து தான். 

தன்னை பற்றி மட்டும் யோசிப்பவர் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவாதவர். பிறரை பற்றி யோசிப்பவர் சமூகத்தின் பாதி வளர்ச்சிக்கு உதவுகிறார்.

தன்னை போல பிறரை நினைப்பவர் சமூகத்தின் முழு வளர்ச்சிக்கும் உதவுகிறார். முழு மானிட உறவுக்கு வழிவகுப்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:43-48) இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

இயலாத ஒன்றாக மாறி போய்விட்டது பகைவரை அன்பு கூர்வது. வெறுப்பு, கசப்புணர்வு இன்று நம் மனதில் தேங்கி விட்டது.

கொடுப்பவருக்கு இன்னும் கொடுக்க நினைக்கும் மனம் திரும்ப செய்ய இயலாதவர்களுக்கு எதையும் செய்வதில்லை. நம் வாழ்க்கை பலனை எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ பழகி விட்டது. கொடுத்தல் வாங்கல் முறை தான் நம் வாழ்க்கை முறை.

விண்ணகத் தந்தையின் நிறைவுள்ள மனது நம்மிடம் இருந்தால், நாமும் ஆள் பார்த்து செயல்பட மாட்டோம், விருப்பு வெறுப்புகளை கடந்து பணி செய்வோம்.

திருப்பிக் கொடுப்பவருக்கே கொடுத்தால் நமக்கான கைம்மாறு இவ்வுலகிலே கிடைத்து விடும். நமக்கான கைம்மாறு எதையும் எதிர்பாராமல் செய்யும் போது விண்ணகத்தில் சேர்க்கப்படும்...

தீமைக்கு பதில் நன்மை...


பொதுக் காலம் 11ஆம் வாரம்

16.06.2025 - திங்கட் கிழமை

"பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்" - 1 பேதுரு 2:23

என்னுடைய எதிரி எனக்கு மேல் துன்பப்பட வேண்டும். நான் அனுபவித்த வேதனை என்னுடைய துரோகியும் அனுபவிக்க வேண்டும். என்னை அவமானப்படுத்தியவர்கள் முன்னிலையில் நான் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், அதோடு அவர்களை தலைகுனிய வைக்க வேண்டும். இது தான் இன்றைய காலக் கட்டத்தில் மனிதர்கள் எண்ணுவது. அன்பு, மன்னிப்பு எல்லாம் வேண்டாம், பகை, வெறுப்பு போதும் என்ற எதிர்மறை வாழ்வு தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

மன்னிப்பு, மறத்தல் இந்த வார்த்தை எல்லாம் அகராதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றன. நான் அனுபவித்த கொடுமை அவனு(ளு)ம் அனுபவிக்க வேண்டும். 

இரக்கம் காட்டுவதால் என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம்? என்ற எண்ணம் பிறர் செய்ய தவறுகளை மன்னிக்க முடியா மனநிலையை நமக்கு கொடுத்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:38-42) "உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள், உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து உங்கள் அங்கி எடுத்துக் கொள்ள விரும்பினால் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள், உங்களை ஒரு கல் தொலைவர கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள், கேட்கிறவர்களுக்கு கொடுங்கள்" என்று இயேசு தன் திருவாய் மலர்ந்து போதிக்கிறார். 

போதனை எல்லாம் வாழ்வாக்கப்பட்டால் இங்கு பிரச்சனை ஏது? ஆனால் பழைய ஏற்பாட்டில் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" என்று கூறப்பட்டிருப்பதை இயேசு இங்கு கோடிட்டு காட்டுகிறார். விவிலியம் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" (விடுதலைப் பயணம் 21:24, லேவியர் 24:20, இணைச் சட்டம் 19;21) என்று சொல்வது சரியான பார்வையா? என்ற கேள்வி எழுகிறது. எதற்காக இந்த சட்டம் கொடுக்கப்பட்டது என்ற பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழைய ஏற்பாட்டு காலச் சமூக சூழலில், ஒரு இனத்தைச் சார்ந்த ஒரு நபர் மற்றொரு இனத்தைச் சார்ந்த நபரை கொலை செய்துவிட்டாலோ அல்லது அடித்து துன்புறுத்தினாலோ தாக்கப்பட்ட நபரின் இனத்தை சார்ந்தவர்கள் ஒன்றுக் கூடி தாக்குதலை ஏற்படுத்திய நபரின் இனத்தில் உள்ள அனைவரையும் அழித்து விடுவார்கள். இதுதான் வழக்கமாக இருந்தது. எனவே யார் தவறு செய்திருக்கிறாரோ (என்ன இழப்பை ஏற்படுத்தியிருக்கிறாரோ), அவருக்கு நீங்கள் அதே தண்டனை கொடுக்க வேண்டும். எல்லோரையும் அழிக்க கூடாது என்ற பின்னணியில் தான் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" என்று சொல்லப்பட்டது.

ஆனால் இயேசு அதையும் மாற்றி நமக்கு எதிராக தவறு செய்தவர்களை மன்னித்து விட சொல்லுகிறார்.

ஒருவர் கன்னத்தில் நம்மை அறைகிறார் என்றால், சொல்ல முடியாத அளவுக்கு கோபம் நமக்குள் எழும். ஆனால் இயேசு சொல்லக்கூடிய பதில் மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். 

இதிலும் ஒரு யுக்தி இருக்கிறது. உரோமையர் 12:20,21இல், "உன் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால் அவன் குடிக்கக் கொடு; இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

நமக்கு எதிராக தீங்கு செய்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய நன்மையான காரியம் தான் அவர்களுக்கான பாடம் (திருப்பி அறைதல்).

தீமை செய்பவருக்கு தீமையை செய்து கொண்டிருந்தால் நாம் நன்மையை காண்பது எப்போது? 

'இழப்பதற்கு எதுவும் இல்லை' என்று சொல்வார்கள், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய நன்மைத் தனத்தை இழக்காமல் இருப்போம். 

ஒருவர் செய்த தீமைக்கு பதில் நன்மை செய்வோம்.

மூவொரு இறைவன் பெருவிழா


15.06.2025 - ஞாயிற்றுக் கிழமை 

புரியாத புதிர், ஆனால் உணர்ந்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. அறிவுக்கு எட்டாத தமதிருத்துவம். எப்படி மூன்று நபர்கள் ஒரே கடவுளாக இருக்க முடியும்? 

இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். இறைவன், மூன்று ஆட்களாய், அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று, தன் மூளையைக் கசக்கிப்பிழிந்து, விடை தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில், ஒரு சிறுவன், சிறியதொரு சிப்பியில், கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும், அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்" என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியுமா?" என்று கேட்டார். அச்சிறுவன், அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு, அளவுகடந்த கடவுளை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்துபோனான்.

நமக்கும் அதே பதில் தான்...

புரிந்துக் கொள்ள இடமில்லை... உணர்ந்துக் கொள்ள இடமுண்டு...

மூவொரு இறைவன் - இறை ஒன்றிப்பு


மூவொரு இறைவன் பெருவிழா

15.06.2026 - ஞாயிற்றுக் கிழமை 

மூவொரு இறைவன் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார்.

பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக் கூறும்போது, “மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம்.

எப்படி மூவரும் ஒரே கடவுள்?

யாதொரு வேறுபாடின்றி ஒரே அன்பு உறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள். 

இதை நம்முடைய மனித அறிவால் புரிந்து கொள்வது மிகவும் கடினம். படைக்கப்பட்ட பொருள் படைத்தவரை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

சில வேளைகளில் நம்மையே நாம் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ள முடியாத நிலையில், எப்படி நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட, நம்மையெல்லாம் படைத்து வழி நடத்துகிற கடவுளை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனை நமக்குள் இருக்க வேண்டும். 

“என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார் இயேசு - லூக்கா 10:22

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வின் போது தந்தை, மகன், தூய ஆவியாரின் நெருக்கமான அன்பு உறவை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே கடவுள் மூவராக செயல்படுகிறார். ஒரு மனிதன் நல்லவராக கெட்டவராக செயல்படும்போது, எல்லாவற்றையும் எல்லாரையும் படைத்தவர் மூவராக செயல்படுவதில் ஒன்றும் தவறில்லையே. 

நம்முடைய மனித அறிவுக்கு இவை அப்பாற்பட்டவையாக தோன்றினாலும் இவ்விழா நமக்கு உணர்த்தக்கூடிய செய்தி என்பது ஒற்றுமை, அன்பு உறவு, பணித்தெளிவு, இலக்கு ஆகியவை தான்.

வழிபாட்டின் எல்லா நிகழ்வுகளும் மூவொரு கடவுளை போற்றி தொடங்குகிறது, மூவொரு கடவுளை போற்றி நிறைவு பெறுகிறது, "தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்". 

மூவொரு கடவுளை போற்றி புகழ்கிற நாம், மூவொரு கடவுள் நமக்கு கொடுக்க கூடிய வாழ்வில் சிந்தனைகளையும் (ஒற்றுமை, அன்பு, உறவு, வல்லமை...) ஏற்று நடக்க வேண்டும்.

மூவொரு கடவுளை போல உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம், உணர்வுகளை மதித்து நடப்போம். அதன் வழியாக மூவொரு இறைவன் பெருவிழா அர்த்தம் பெறும்.

From Vatican News Page👇

வரலாற்றுப் பின்புலம்

பழங்காலத்திலிருந்தே இது 'தமத்திருத்துவ விழா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி. 155-230-இல் வாழ்ந்த திருஅவையின் தந்தை தெர்த்தூலியன் தான் இந்தத் 'தமத்திருத்துவம்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர். தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் ஒரே இயல்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒரே ஆள் இல்லை. மூன்று ஆட்களாக இருக்கின்றனர் என்று தெர்த்தூலியன் போதித்தார். 

கி.பி. 325-இல் ஆயர் அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா மன்றம் இதனை செய்து முடித்தது. இதற்குப் பின்னால் இருந்த முக்கியக் காரணம் எரியஸ் என்பவருடைய தப்பறைக்கொள்கை. இவர் இயேசு கிறிஸ்து கடவுளுடைய முதல் படைப்பு என்று போதித்தார். இந்தத் தப்பறைக் கொள்கையை நைசியா மன்றம் கண்டித்ததுடன், தமத்திருத்துவம் குறித்த சரியான போதனையையும் வரையறை செய்தது. இதன் காரணமாக, நிசேன் நம்பிக்கை அறிக்கை உருவாக்கப்பட்டது. இதைத்தான் (பெரியது) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறிக்கையிடுகின்றோம். 

இதில் தமதிருத்துவம் பற்றிய வார்த்தைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்நாளில் மீண்டும் ஒருமுறை அதனை நினைவுகூர்வோம். 

அதில் தந்தையைப் பற்றி கூறும்போது, "விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே" என்று சொல்கின்றோம். 

மகன் இயேசுவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்று ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார் என்று கூறுகின்றோம். 

தூய ஆவியாரைக் குறித்து சொல்லும்போது, "தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே" என்று அறிக்கையிடுகின்றோம். 

ஆக, மேற்கண்ட இந்த அறிக்கை மூன்று பேரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி சமநிலையில் இருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

மிகுதியாக பேசாதே!!!


பொதுக்காலம் 10ஆம் வாரம்

14.06.2025 - சனிக் கிழமை 

நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது - நீதிமொழிகள் 4:24

சில மனிதர்கள் பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம், சில மனிதர்கள் எப்போது பேசுவதை நிறுத்துவார்கள் என்று இருக்கும். இரண்டு வழிகளில் இதை நாம் வகைப்படுத்தலாம் 1. கருத்துச் செறிவின் அடிப்படையில் 2. நமக்கு பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் என்பதன் அடிப்படையில்.

பேசி பேசி பிறர் வாழ்வை அழித்தவர்களும் உண்டு, பேசி பேசி சாதித்தவர்களும் உண்டு... 

அதிக எண்ணிக்கையில் ஆட்கள் இருக்கும் போது அதிகம் பேசுவோர் அதிகம் சாதிப்பதில்லை. சிலர் எதற்கு எடுத்தாலும் ஆணையிடுவார்கள், நான் சொல்வது உண்மை என்பார்கள். எதற்காக இப்படி சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை கிடையாது. 

நம்முடைய நடைமுறை வாழ்வில் உண்மையை உண்மை என்று எடுத்துச் சொல்வதற்கு தான் போராட வேண்டியிருக்கிறது. பொய் எப்படியும் அரியணை ஏறி விடும். பொய்க்கு இங்கு விளம்பரம் தேவையில்லை. உண்மையை காக்க போராட வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 33-37) நீங்கள் பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது என்கிறார் இயேசு.

எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். 

நமது வார்த்தையிலும் வாழ்க்கையிலும் உண்மையும் தூய்மையும் நேர்மையும் இருந்தால் நாம் யாரையும் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நாவிலும் நடத்தையிலும் தூய்மை இல்லாதவர்கள் தான் மற்றவர்கள் ஆதரவுக்காக, மற்றவர்களின் காலை பிடிக்க வேண்டியிருக்கும்.

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டியதை மட்டும் பேச வேண்டும். பேச தேவையில்லாத இடத்தில் அமைதி காக்க வேண்டும். 

அதிகம் பேசுவது அதிக ஆபத்தை கொண்டு வரும்.

குறைவாக பேசுவோம், அதிகம் கேட்போம், விரைவாக செயல்படுவோம்...

நற்செய்தி மீதான தாகமே புதுமை புரிய வைத்தது...

பொதுக் காலம் 10ஆம் வாரம் 

13.06.2025 - வெள்ளிக் கிழமை

1195ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் தாய் தெரசா. 

புனித அகுஸ்தினின் சபையில் சேர்ந்து 1219ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 

பிரான்சிஸ்கன் சபை துறவிகள் (மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க சென்று) இயேசுவுக்காக மறைசாட்சியாக கொல்லப்பட்டதைக் கண்டு, தானும் கிறிஸ்துவுக்காக மறைசாட்சியாக வேண்டும் என்று எண்ணி, பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

அதன்படி இவர் கப்பலில் மொரோக்கோ நாட்டிற்கு பயணமானார்; ஆனால் போகும் வழியில் நோய்வாய்ப்பட்டு நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்படவே, தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது மறையுரை வாயிலாக பலரை மனமாற்றியவர், கடவுள் தந்த ஆற்றலால் பல புதுமைகளை செய்து பல உயிரை காப்பாற்றியவர், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையினால் தனது உயிரையும் இழக்க துணிந்தவர், அன்னை மரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர், நற்கருணையில் கடவுள் உண்மையாகவே பிரச்சன்னமாய் இருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னவர், மீன்களுக்கு இறை வார்த்தையை போதித்தவர், இறந்தவர்களை உயிர் பெற்றெழ செய்தவர் இத்தகைய பல சிறப்புக்கு உரியவர் புனித அந்தோனியார். 

புனித அந்தோனியார் பல புதுமைகளை அவருடைய வாழ்க்கையில் நிகழ்த்தினார். சொல்லப்போனால், அவருடைய வாழ்க்கையே ஒரு புதுமையாகத் தான் இருந்தது.

புனித அந்தோனியார் இறக்கும்போது அவருடைய வயது 36. அவருடைய உடல் பதுவை நகரில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (1263) இவருடைய உடலை இடமாற்றம் செய்யும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது இவருடைய கல்லறை திறந்து பார்த்தபோது இவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது. இதை பார்த்த பொனவந்தூர், "ஓ தூய நாவே, நீ எப்போதும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததால் அழியாமல் காக்கப்பட்டாய்" என்றார்.

யோவான் 14:12இல் இவ்வாறு காண்கிறோம், "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்".

இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதனால், இயேசுவைப் போல பல்வேறு வல்ல செயல்களை, புதுமைகளை செய்யும் ஆற்றலை பெற்றவராக புதுமைகளின் ஊற்றாக புனித அந்தோனியார் விளங்குகிறார். இறைவார்த்தை பற்று இவரை பல புதுமைகள் செய்ய வைத்தது. இறைவார்த்தையில் நம்பிக்கை இறைவனில் நம்பிக்கை இது தான் புனிதரின் வாழ்வு நமக்கு கற்றுத் தரும் பாடம்.

புதுமை என்பது வல்ல செயல்/நல்ல செயல்.

அடுத்தவருக்கு நாம் செய்யும் அனைத்து நல்ல செயல்களும் புதுமையாக கருதப்படும். அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய எண்ணங்கள் அடுத்தவருக்கும் ஆசிர்வாதத்தை கொணரும் நமக்கும் ஆசிர்வாதத்தை கொடுக்கும்.

புனித அந்தோனியாரைப் போல கடவுளில் நம்பிக்கை கொண்டு, மற்றவர் நலனில் அக்கறை கொண்டு, மற்றவர் நிலை உயர உழைப்போம். இச்செயல்கள் வாயிலாக நாம் நிறைஆசிரை பெற்றுக் கொள்வோம்.

எது பெரியது?


பொதுக் காலம் 10ஆம் வாரம் 
13.06.2025 - வெள்ளிக் கிழமை 

நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே; ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்; ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம் - சாலமோனின் ஞானம் 15:2

எது பெரியது? பாவமா? அதை கடந்த நிலை வாழ்வா? உலக பார்வையில் பாவமும் அதன் வழியாக கிடைக்கும் மகிழ்ச்சியும் பெரிதாக பார்க்கப்படுகிறது. நிலை வாழ்வா! அது என்ன என்ற கேள்வி மனிதர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கண்ணால், சொல்லால், செயலால், சிந்தனையால் என்று பாவ வரிசை நீளுகிறது. பின்னால் வருவதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ண ஓட்டம் தான் நம்மில் அதிகமாக இருக்கிறது. 

(சபை உரையாளர் 8:11
மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்) 

அடுத்தவருக்குரியதை கவர்ந்திட இங்கு நமக்கு ஆசை அதிகம் இருக்கிறது. அடுத்தவருக்குரியது பொருளானாலும் சரி மனிதர்களானாலும் சரி, தான் ஆசைப்பட்டு விட்டால் அது வேண்டும் அவ்வளவு தான்.

அற்ப ஆசைக்காக நிலை வாழ்வை இழக்க துணிந்து விட்டோம். சிறிது நேர இன்பம் நேரிய வாழ்வுக்கான கதவை அடைத்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 27-32) ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என்று சொல்கிறார் இயேசு.

நம் உடலின் ஆசைகளுக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்தால் ஒன்று நாம் நம்மை அழிப்போம், இல்லை மற்றவர்கள் வாழ்வை அழிப்போம்.

பாவத்திற்கு நாம் ஒருபோதும் அடிமைகள் அல்ல. 

(உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:22
ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு.

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:23
பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.)

நன்மை செய்தால் நல்லது விளையும்; தீமை செய்தால் தீமை நம்மில் குடிக் கொண்டு நம் நிம்மதியை பிற்காலத்தில் கெடுக்கும். 

தீயதை வேரறுப்போம்... நம் ஆன்மாவை நிலை வாழ்வுக்கு ஆயத்தம் செய்வோம்...

பாவ தூண்டலுக்கு இசைந்து போகாதே!


பொதுக் காலம் 10ஆம் வாரம்

12.06.2025 - வியாழக்கிழமை 

வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள் - சீராக்கின் ஞானம் 27:30

ஒரு தவறை செய்வதற்கு முன் அதற்கு தூண்டுதலாக இருப்பதைக் குறித்துக் கவனமாய் இருந்தால் போதும், தவறுகள் குறையும். கணவன் மனைவி இடையே சண்டை என்றால் யாராவது ஒருவர் (குறிப்பாக பிரச்சினைக்கு காரணம் ஆனவர்) அமைதியாக இருந்தாலே பிரச்சினை ஓய்ந்து விடும்.

இங்கு பிரச்சினை அதிகமாவதற்கு காரணம் பிரச்சினைக்குரியவர் தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ள துடிப்பது தான்.

எல்லார் பக்கம் நியாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. நியாயம் என்பது ஒரு பக்கம் தான் இருக்க முடியும். 

தவறுகளை உணர்தலும், தவறுகளை சரி செய்ய விரும்புதலும் தான் பிரச்சினைகளை சரி செய்யவதற்கான தீர்வு.

மற்றொரு தீர்வு, பிரச்சினைக்கு காரணமாய் இருக்கும் காரணிகளை கண்டுணர்ந்து அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். (இப்பொழுது பிரச்சனை ஆரம்பிக்க போகிறது என்பதை உணர்ந்து அதற்கு முன்னே அதிலிருந்து கவனமாய் இருத்தல் சிறந்தது).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 20-26) இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

அந்த சிறந்த நெறி என்பது தவறுகள் உருவாவதற்கு முன்பே அவற்றை சரி செய்வது தான். 

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஒரு சிறிய ஆரம்பம் தான் பெரிய பிரச்சனைக்கு வழி வகுக்கும். வார்த்தையில் ஆரம்பிக்கின்ற சண்டைகள் கடைசியில் கைகலப்பில் முடிகின்றன. 

எனவே தான் இயேசு சொல்கிறார், கொலை நடைபெறுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும் என்று. 

பல கலவரங்கள் வாய் தகறாரில் தான் ஆரம்பிக்கின்றன. சாதாரணமாக சொல்லப்பட்ட வார்த்தை, அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனிதரை பொறுத்து பிரச்சனையாக பார்க்கப்படுகிறது/மாறுகிறது. 

ஆரம்பம் சரி செய்யப்பட்டால் முடிவு சரியானதாக இருக்கும். 

நம்மை பாவிகளாக மாற்ற நினைக்கும் காரணிகளை கண்டு உணர்ந்து அவற்றிலிருந்து விலகி இருந்தால் பிரச்சனைகளுக்கு இங்கு இடமில்லை.

ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் பர்னபா...

பொதுக் காலம் 10ஆம் வாரம்

11.06.2025 - புதன் கிழமை 

அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள் - திருத்தூதர் பணிகள் 14:22

பலம் இழந்து, ஆற்றல் இழந்து வாழும் மனிதர்களை திடப்படுத்த ஆட்கள் தேவைப்படுகிறது. சாலையோரங்களில், தெருக்களில் கேட்பாரற்று இருக்கும் மனிதர்களை பார்க்கின்ற போது ஒன்றும் செய்யாமல் கடந்து செல்கின்ற போது மனம் வெட்கத்துக்கு உள்ளாகிறது.

உண்மையிலே தேவையோடு வருகிறவர்களுக்கு ஓரளவுக்கு மேல் கொடுக்க மனம் இல்லாத போது, கிறிஸ்துவின் விழுமியம் (பரிவு, உதவி, இரக்கம், அன்பு) தோற்று போகிறது.

கிறிஸ்துவின் போதனைகளை பேசிவிட்டு கடந்து செல்கிற போது வாய் இனிக்கிறது. செயலில் காட்ட தவறுகின்ற போது இதயம் வேதனைக்கு உள்ளாகிறது. 

சக சகோதர சகோதரிகளில் இயேசுவை காண தவறுகின்ற உள்ளம் எப்போது மாறும்? மாற்றப்படும்? (நானும் நீங்களும் சுய ஆய்வு செய்ய வேண்டும்).

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 11: 21b-26; 13: 1-3) திருத்தூதர் பர்னபாவை பற்றி வாசிக்கிறோம். பர்னபா உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

ஏனைய திருத்தூதர்களிடம் மனம்மாறிய பவுலை அழைத்து வந்தார். இந்த பர்னபாவும் பவுலும் தான் கிறிஸ்துவின் தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வைக்கபட்டார்கள்.

(திருத்தூதர் பணிகள் 4:36

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.

திருத்தூதர் பணிகள் 4:37

அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.) 

இருப்பதை கொடுத்து/ இருப்பதையெல்லாம் கொடுத்து திருஅவை வளர ஊக்குவித்தார்.

மக்களை இறைவனிடம் கொண்டு வந்தார். கிபி 45ஆம் ஆண்டு எருசலேமில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது இவர்தான் அந்தியோக்கு நகருக்கு சென்று அங்கிருந்து மக்களிடமிருந்து நிதி திரட்டி வந்து அதனை எருசலேமிலிருந்த இறை மக்களுக்கு கொடுத்து அவர்களின் பசியை போக்கினார் (திப 14:18-20).

மிலன் நகருக்கு சென்று நற்செய்தி அறிவித்தார். இவர் சைப்ரசுக்கு சென்று நற்செய்தி அறிவித்த போது அங்கு இருந்தவர்கள் இவரை கல்லால் எறிந்து கொன்றார்கள் என்ற செய்தி சொல்லப்படுகிறது. 

இறுதிவரை தன்னுடைய வாழ்வால் தன்னுடைய சொற்களால் இறைவார்த்தையை அறிவித்தார். இறை மக்களை ஒன்று சேர்த்தார். எல்லோரையும் ஊக்கப்படுத்தி இறைவார்த்தையை அறிவித்தார்.

இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் நம்முடைய வார்த்தைகளால் மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் ஒருவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படாமல், அவர் முன்னோக்கி செல்ல வழிவகை செய்யும்போது, நாமும் இந்த இந்த திருத்தூதர் பர்னபாவோடு இணைகிறோம்.

உப்பும் ஒளியும்...

பொதுக்காலம் 10ஆம் வாரம்

10.06.2025 - செவ்வாய்க் கிழமை 

"நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை; தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்; அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்" - உரோமையர் 13:3

நல்லவர்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களால் அடையாளம் காட்டப்படுவார்கள். தீயவர்கள் தங்களின் தீச்செயலால் அடையாளம் காட்டப்படுவார்கள். எது மற்றவர்களை கவர்ந்து இழுக்கும்? - நற்செயலா? தீச்செயலா? 

தீமைகள் கவர்ச்சியை கொடுக்கும், ஆனால் நிரந்தர மகிழ்ச்சியை கொடுக்காது. நற்செயல்கள் செய்வதன் வழியாக பல தடங்கல்கள் வரும், ஆனால் அது நீடித்த மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். அது மன நிறைவாகவும் வெளிப்படும்.

நற்செயல்கள் ஒளிரும் விளக்குகளாக இருக்கும். தீச்செயல்கள் அணைந்த விளக்குகளாக இருக்கும்.

அணைந்த விளக்குகளால் இருளில் இருப்பவருக்கு பயனில்லை. ஒளிரும் நற்செயல்களால் நற்செயல்களை புரிபவரும் மற்றவரும் பயனடைவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:13-16) உலகிற்கு உப்பாக, உலகிற்கு ஒளியாக இருக்க இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். உப்பின் தன்மையை உப்பு இழந்து விட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஒளி ஏற்றப்பட்ட விளக்கு அதற்குரிய இடத்தில் வைக்கப்படாவிட்டால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.

அதேபோல கடவுளிடமிருந்து நன்மையானவற்றை பெற்றவர்கள், அந்த நன்மையை நற்செயலின் வாயிலாக வெளிகாட்டாவிட்டால், அவர்கள் மனிதர்களாக இருப்பதில் ஒரு பயனும் இல்லை.

எபேசியர் 2:10இல் இவ்வாறு காண்கிறோம், "ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்"

நம் நற்செயல்கள் ஒளிர வேண்டும், நாம் செய்யும் நற்செயல்களால் மற்றவர் வாழ்வு மிளிர வேண்டும்.

உதவாத வாழ்க்கையாக அல்ல ஒளிரும் வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாற வேண்டும்.

சிலுவையடியில் அன்னை மரியா


அன்னை மரியா திருஅவையின் அன்னை - நினைவு
பொதுக்காலம் 10ஆம் வாரம்

09.06.2025 - திங்கட்கிழமை 

தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை; தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை - சீராக்கின் ஞானம் 3:11

நல்லதை செய்து இறுதியில் கிடைப்பதோ துயரமும் ஏமாற்றம் இந்த உலக தாய்மார்களுக்கு. தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக எல்லா தியாகங்களையும் செய்து கடைசியில் மிஞ்சுவதோ இழப்பும் சிலுவையும் தான்.

எல்லாம் தெரிந்தாலும் எல்லாவற்றையும் இழக்க துணியும் மனம் எல்லோருக்கும் எளிதாக வருவதில்லை (தாய், தந்தையை தவிர).

விரும்பியவர்களுக்காக சிலர் சிலுவைகளை சுமப்பார்கள், சிலர் விரும்பியவர்கள் மேல் சிலுவைகளை சுமத்துவார்கள். 

சில சிலுவைகளை தவிர்க்க முடியாது. சில சிலுவைகளை தாங்கிக் கொள்ள முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 19: 25-27) இயேசுவின் சிலுவை அடியில் அன்னை மரியா நிற்கிறார். இது தவறு செய்ததால் கிடைத்த தண்டனை அல்ல. உண்மைக்கு சான்று பகர்ந்ததால் கிடைத்த பரிசு. தன் மகனுக்கு கொடுக்கப்பட்ட சிலுவை என்னும் பரிசில் தாயும் பங்கெடுக்கிறார். 

சிலுவைகளை பாரமாக நினைப்பவர்கள் தொடக்கத்திலே உடைந்து போவார்கள். இங்கு சிலுவை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் பாரமாக தெரியவில்லை.

மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கும், வழிகாட்டும் வெற்றியின் பரிசாக தான் அது பார்க்கப்பட்டது.

சில மனிதர்கள் மற்றவர்களின் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கெடுப்பார்கள், துயர நேரங்களில் விலகி போவார்கள்.

தனது மகனின்/மகளின் வெற்றி தோல்வி என அனைத்திலும் ஆறுதல் அளிக்கும் உடனிருப்பால் என்றும் துணை நிற்பார்கள் இறை அன்னையும், நமது அன்னையரும்.

தேவைக்காக பயன்படுத்தும் நிலை மாறி, நம் அன்னையரை இறுதி வரை நேசிப்போம், அவர்களுக்கு உரிய இறுதிக்கால (தனிமை, நோய்...) சிலுவைகளை நாம் இணைந்து சுமப்போம்.

தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுவோம்...


பெந்தகோஸ்து ஞாயிறு 

08.06.2025 - ஞாயிற்றுக் கிழமை 

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும் -1 கொரிந்தியார் 2:14

மூவொரு இறைவனில் மூன்றாம் ஆள் இந்த தூய ஆவியார். மறக்கப்பட்ட கடவுளாகவே, முக்கியத்துவம் பெறாத நபராகவே இவர் பார்க்கப்படுகிறார். 

படைப்பின் தொடக்கத்தில் நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தவர், மனிதர்கள் இறைவாக்கு உரைக்க காரணமானவர், ஆற்றல் படுத்தியவர். 

பழைய ஏற்பாட்டில் ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு பல்வேறு நபர்கள் இறைவாக்கு உரைத்தார்கள்.

எண்ணிக்கை 11:27,28,29 இல் கடவுளின் ஆவியாரை குறித்துக் காண்கிறோம்.

ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்” என்று சொன்னான்.

உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார்.

ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார்.

கடவுளின் ஆவியார் ஆற்றல் அளிப்பவர், வழிநடத்துபவர். திருமுழுக்கின் வழியாக அந்த ஆவியானவர் அனைவர் மேலும் பொழியப்படுகிறார். 

இதே ஆவியானவர் தொடக்கக் கால திருஅவையில் திருத்தூதர்கள் மேல் பொழியப்பட்டார்.

இயேசு கிறிஸ்து தனக்குப்பின் துணையாளராம் தூய ஆவியாரை தருகிறார். இயேசுவோடு இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் பணி வாழ்வில் ஈடுபட்டாலும், இயேசு அவர்களோடு இருந்தபோது இயேசுவைப் போல அவர்களால் பணியை செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து அதிகாரங்களை பெற்று இருந்தார்கள், ஆற்றலை பெற்றிருந்தார்கள். ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வராமல் இருந்தது. 

இந்த பெந்தகோஸ்து பெருவிழாவின் வழியாக பிளவுற்ற நாவு அவர்கள் மேல் இறங்கி வர, அவர்கள் தூய ஆவியை பெற்றுக் கொண்டார்கள். துணிச்சலோடு இறந்த இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள் (சான்று பகர வாய்ப்பை பெற்றார்கள்).

பொது இடங்களுக்கு செல்வதற்கே பயப்பட்டவர்கள், தூய ஆவியைப் பெற்ற பின்பு பொது இடங்களுக்கு சென்று, இயேசுவை கொலை செய்த யூதர்களை பார்த்து, நீங்கள்தான் இயேசுவை கொன்றீர்கள் என்று தைரியத்தோடு பறைசாற்ற தொடங்கினர்.

அந்த தூய ஆவியானவர் அவர்களுக்குள் செயலாற்றி உண்மைக்கு சான்று பகர தூண்டுதலாக இருந்தார். 

யாரெல்லாம் உண்மைக்கு சான்று பகர்கிறார்களோ அவர்கள் தூய ஆவியை பெற்றுக் கொண்டவர்கள். உண்மைக்கு சான்று பகர்கின்றபோது தடுமாற்றங்கள், தடைகள், இடையூறுகள், நெருக்கடிகள் என பல வரலாம், ஆனால் உண்மையானது எது? நேரியது எது? என்று தீர்ந்து தெளியக் கூடிய ஆற்றலை தூய ஆவியானவர் கொடுக்கிறார்.

தூய ஆவியை பெற்றுக் கொண்டு திருத்தூதர்கள் இடம் பெற்றார்கள், அந்த துணிவின் வழியாக அவர்கள் பொது இடங்களில் உண்மைக்கு சான்று பகந்தார்கள். 

நாம் வாழும் சமூகத்திலும் உண்மைக்கு சான்று பகிர பல வாய்ப்புகள் நமக்கு கொடுக்கப்படுகிறது. 

பல மனிதர்கள் உண்மைக்கு சான்று பகர்ந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள்.

(தவறு செய்து கொண்டிருக்கக் கூடிய மனிதர்களுக்கும் மன உறுத்தல் உண்டு, அது உடலின் பலம் இருக்கின்ற போது வெளியே காட்டப்படுவதில்லை, வலிமையிலிருந்து பலம் குறைந்து போகின்ற நேரத்தில் தான் செய்த அனைத்து தவறுகளும் ஆளையும் மனதையும் உறுத்தும்.)

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:26 இவ்வாறு சொல்கிறது, "இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்."

நாம் தூய ஆவியார் ஆட்கொள்ளப்படவும் அவர் நம்மில் செயலாற்றவும் வரம் வேண்டுவோம்.

இயேசுவின் அன்பு சீடராக மாறுவோமா?


பாஸ்கா காலம் 7ஆம் வாரம்

07.06.2025 - சனிக் கிழமை 

சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?" - மத்தேயு 10:25

இயேசுவின் சீடருக்கு முன்னோக்கிய சிந்தனை இருக்க வேண்டும். பலவற்றை வாழ்க்கையில் கற்றுக் கொள்கிறோம். சில பாடங்களாக இருக்கின்றன, சில முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருக்கின்றன. 

அடுத்தவரை பற்றிய அக்கறை தேவை, அடுத்தவரை பற்றிய பொறாமை தேவையில்லை. 

என்னால் அடுத்தவருக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பது தான் நம்முடைய கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர அடுத்தவருக்கு என்ன ஆகும்? அடுத்தவர் நிலை என்ன? என்பது நம்முடைய தேடலாக இருக்கக் கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:20-25) பேதுரு இயேசுவிடம் ஆண்டவரே இவருக்கு (அன்புச் சீடருக்கு) என்ன ஆகும்? என்ற கேள்வியை கேட்கிறார். இயேசுவின் பதில் நீ என்னை பின்தொடர்ந்து வா என்பதே. பேதுரு ஏன் இந்த கேள்வியை கேட்கிறார்?

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை பார்த்து, "நீ கைகளை விரித்து கொடுப்பாய். வேறொருவர் உன்னை கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு கூட்டி செல்வார்" என்று சொல்லி இருப்பார்.

தனக்கு இந்த நிலை என்றால் இயேசுவோடு இருக்கக்கூடிய மற்ற சீடர் குறிப்பாக அவருடைய அன்புச் சீடருக்கு என்ன ஆகும் என்ற ஆர்வம் பேதுருவிடம் இருந்தது. 

இயேசுவின் அன்பு சீடராக மாறுவது என்பது இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்ட அன்பை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதே. 

அன்பு பகிரப்படும் போது பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு இயேசு ஒரு முன்மாதிரி.

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...