24_02

சுதந்திரத்தை சரியாய்ப் பயன்படுத்த…

01.03.2024 - வெள்ளிக் கிழமை

“கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்” - பிலிப்பியர் 2:13

கடவுள் ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்துவதும் தவறாக பயன்படுத்துவதும் அவரவர் கையில் உள்ளது. அதே வேளையில், தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் கடவுள் தந்திருக்கிறார். அவருடைய விருப்பம் என்பது எல்லாரும் எல்லாமும் பெற்று ஒன்றாய் வாழ வேண்டும் என்பதே. 

நான் எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் போது, மற்றவர்களை நான் அழிப்பதுபோல  தோன்றலாம், ஆனால் அழிவு எனக்கு தான் என்பதை உணர வேண்டும். சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும்போது நாம் கடவுளுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறோம்.

ஒருவர் தனக்குரியதை பெற்றுக் கொள்வதும், அடுத்தவருக்குரியதை அடுத்தவருக்கு கொடுப்பதும் தான் சமூக நீதி. அடுத்தவருக்குரியதை நான் எடுத்துக் கொள்ள நினைப்பது அக்கிரமச் செயல். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 21:33-43,45-46) தோட்ட உரிமையாளர் தனக்குரியதை பெற்று வர, தம் பணியாளர்களை தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாசை, மண்ணாசை கொண்டவர்களாய் இழிவான செயல்களை செய்தார்கள். கொலை செய்தார்கள், கல்லால் எறிந்தார்கள், அடித்தார்கள்… எனக்குரியது போதும் என்ற மனப்பாங்கு இல்லாதது தான் இதற்கு காரணம். இறந்தபிறகு நம்மை கல்லறை வரை சுமப்பதற்கே நான்கு பேர் தேவைப்படுகிறது. நாம் பதுக்கி வைத்தவைகளை யார் கொண்டு வந்து கொடுப்பார்?

கடவுள் யாருடைய சுதந்திரத்தையும் தடை செய்வதில்லை. (அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினார்; தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார்” - சீராக் 15:14)

ஆனால் தீங்கு செய்யும் தீயோரை தோட்ட உரிமையாளர் (கடவுள்) ஈவிரக்கமின்றி அழித்து விடுவார். நம்முடைய தேவைக்கு அதிகம் சேர்க்காமல் கடவுளுக்கு ஏற்ற முறையில் செயல்படுவோம். நாம் புறக்கணிக்கப்பட்ட கல் அல்ல… நாம் தான் மூலைக்கல்

(பொருள் - பழம் பறிக்கும் காலம் என்பது இறையாட்சியின் அறுவடை காலம். தலைவர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர் தந்தை கடவுள் அனுப்பிய பணியாளர்கள். கடவுளின் வார்த்தையை சொல்ல வந்த அவர்களை உலகினர் ஏற்றுக் கொள்ளாமல் துன்புறுத்தினார்கள். இறுதியில் அவர் தம் மகன் இயேசுவையும் அனுப்பினார். அவரையும் கொலை செய்தார்கள்.)


இறப்பதற்கு முன் இரக்கத்தோடு…


“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்” - மத்தேயு 5:7

இரக்கமுடையவர்கள் எளியோரை, தேவையில் இருப்போரை கண்டு இறங்கி வருவார். இறங்கி வருவோரை இறைவன் இரக்கத்தோடு நோக்குவார். இங்கு ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு பற்றாக்குறை ஒரு காரணமல்ல… பகிராக்குறையே ஒரு காரணம்… பகிரப்பட வேண்டியது பொருளாகவோ, பணமாகவோ, ஆறுதலாகவோ இருக்கலாம். 

புனித அன்னை தெரசா சொல்வார், ‘இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 16:19-31) செல்வர் ஏழைக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, அதே வேளையில் இரக்கமும் காட்டவில்லை, எந்த நன்மையும் செய்யவில்லை. (“நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்” - யாக்கோபு 4:17). 

இறந்தநிலையில் இரக்கத்திற்காக செல்வந்தர் ஆபிரகாமிடம் வேண்டுவது போல, இன்றைய நற்செய்தி வாசகம் கொடுக்கப்பட்டுள்ளது. இறப்பிற்கு பின் என்னவாகும் என்பதை இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது (இரக்கம் காட்டாதோருக்கு கொடிய தண்டனை). உயிரோடு இருந்தபோது தன் வீட்டு வாயில் அருகே கிடந்த ஏழை இலாசருக்கு இரக்கம் காட்டாதவர், இறந்தபிறகு தன் சகோதரர்கள்மீது இரக்கம் கொள்கிறார். 

சிலர் இவ்வாறு எண்ணிக் கொள்கின்றனர், கடைசியில உள்ளத கடைசியில பார்த்துக்கலாம் என்று. எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளாவிடில் பெரும் இழப்பு உண்டு என்பதை மறந்துவிட கூடாது. 

இந்த உலகில் இரண்டு வகையான ஏழைகள் இருக்கின்றனர், 1. எல்லாம் இருந்தும் அதை மறைத்து தன்னை ஏழை போல காட்டிக் கொள்வோர் 2. எதுவும் இல்லாத ஏழை

சிலர் தர்மம் எடுப்பதை தொழிலாக செய்கின்றனர். அதிலே இன்பம் காண்கின்றனர். இவர்கள் ஒருபோதும் நிறைவு அடைவதில்லை. நாம் உதவ வேண்டியது எதுவும் இல்லாத ஏழைக்கே. உண்மையில் தேவையில் இருப்போர் பிறரிடம் உதவி கேட்பதற்கே கூச்சப்படுவர். வாய் திறந்து கேட்க முடியாத நிலையில் இருப்பர். நாம் இத்தகைய வருந்தும் எளியோருக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

இரக்கமுடையோர் மட்டுமல்ல, இன்னலை அனுபவித்தோரும் மறுமையில் இரக்கம் பெறுவர். ஆனால் யாக்கோபு திருமுகம் 2:13இல் சொல்லப்பட்டுள்ளது போல, “இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்” - 

போகும்போது எதையும் கொண்டு போக போவதில்லை, முடிந்தவரை இரக்கச் செயல்களை செய்துவிட்டாவது செல்வோம்.


கடவுளை மறக்க செய்யும் பதவிவெறி

28.02.2024 - புதன் கிழமை

“உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்” - இணைச் சட்டம் 32:18

வாழ்க்கைக்கு அருள் தேவையா? பதவி தேவையா? என்றால் பதவியே தேவை என்கிறது மனித இதயம். மனிதர் தரும் அற்ப புகழுக்காக அருளை இழக்க மனம் துணிந்து விடுகிறது. கடவுளுக்காக என்று சொல்லி பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறது. இறுதியில் கடவுள் மறக்கடிக்கப்படுகிறார். தற்பெருமை தலை தூக்குகிறது. 

(தனக்கு பிடித்தவர்கள் பதவியில் இருந்து தவறே செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறது மனம். தனக்கு பிடிக்காதவர்கள் பதவியில் இருந்து நல்லதே செய்தாலும் அது நம் கண்களுக்கு தவறாக தான் தெரிகிறது. இங்கு கோபமும் பொறாமையும் தலை தூக்குகிறது.)

பதவிவெறி, கோபம், பொறாமை ஆகிய எல்லாவற்றையும் கடவுள் புறக்கணிக்கிறார். இவைகள் கடவுளை விட்டு நம்மை நகர்த்தும் பிரிவினைக் கருவிகள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 20:17-28) பதவி வெறியோடு வந்தவர்களின் மனதை பக்குவப்படுத்துகிறார் இயேசு. கோபம் கொண்ட 10 பேருக்கும் தலைமைத்துவத்தை புரிய வைக்கிறார். இயேசுவோடு உடன் இருந்தவர்களே இத்தகைய (பதவிவெறியை) எண்ணத்தை கொண்டிருந்தார்கள் என்றால் நாம் எம்மாத்திரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள தோணுகிறது. (இது நம்மை நியாயப்படுத்தும் வார்த்தைகள்)

தலைவர்கள் கொண்டிருக்கிற அதிகாரம் (பதவி) மற்றவர்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மற்றவர்களுக்கு தொண்டு ஆற்றவே என்பதை இயேசு உணர வைக்கிறார். இங்கு ஒருவர் பெரியவர் என்ற நிலையை அடைய, அவர் தன்னை தாழ்த்த வேண்டும் என்பதே இயேசுவின் பாடம். அதற்கு இயேசு முன் உதாரணம். 

“கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” - பிலிப்பியர் 2:6-8

புனித அன்னை தெரசா சொல்வார், ‘பணிவோடு நடந்து கொள்ளும்போது, அடுத்தவர் நமக்கு கொடுக்கும் புகழ்ச்சியோ அல்லது இகழ்ச்சியோ நம்மை ஒருபோதும் தீண்டாது. பணிவோடு நடக்கும்போது தான், நாம் யாரென்று நமக்கு தெரியும்.

நமக்கு தலைமைத்துவத்தில் பதவிவெறி தேவையில்லை, பணிவே அவசியம்.

 

போதனை வாழ்வாக…

 


“குருக்கள், “ஆண்டவர் எங்கே?” என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்” - எரேமியா 2:8

இன்றைய நாகரீக காலத்தில் இயேசுவை பின்பற்றுவதை விட்டுவிட்டு இயேசுவின் வார்த்தையை போதிப்பவர்களை பின்பற்ற, பற்றிக்கொள்ள ஒரு கூட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது. (போதகர்களின் ரசிகர்கள்)

பல வேளைகளில் இயேசுவினுடைய வார்த்தைகளை அறிவிக்க இங்கு போட்டி  இல்லை. யார் சிறந்த போதகர் என்பதை காட்டிக் கொள்ளவே இங்கு போட்டி நடைபெறுகிறது. போதிப்பவரும் போதனையை பின்பற்ற வேண்டும் போதனையை கேட்போரும் பின்பற்ற வேண்டும். (திருமுழுக்கு பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் வார்த்தையை போதிக்க அழைக்கப்பட்டவர்கள்).

பிரான்சிஸ் டி சலேஸ் சொல்வார், 'நல்ல மறையுரை என்பது இறைவார்த்தை (மறையுரை) எவ்வளவு அருமையாக இருந்தது என்று மக்கள் கூட்டத்தால் பாராட்டப்படுவது அல்ல; மாறாக, இந்த மறையுரையை கேட்டதிலிருந்து என்னை மாற்றிக் கொள்வேன் அல்லது இறைவார்த்தையை வாழ்வாக்குவேன் என ஒருவரை உணர வைப்பதுதான்'. 

சில இடங்களில் போதனை வேறு போதிப்பவர் வேறு. சில இடங்களில் போதிப்பவர் வாழ்வே சிறந்த போதனை தான். நம் வாழ்வுக்கு போதனை தான் தேவை. யார் போதிக்கிறார் என்பது முக்கியமல்ல.

அவர்கள் சொல்வது போல நடங்கள், அவர்கள் செய்வது போல ஒருபோதும் செய்யாதீர்கள் என்று அன்றே இயேசு சொல்லிவிட்டார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23: 1-12) மக்களுக்கு கடவுளின் சட்டத்தை எடுத்துச் சொல்கிற நிலையில் இருக்கக்கூடியவர்கள் பற்றி இயேசு கூறுகிறார். கையால் எதையும் அசைத்துக் கூட பார்க்காதவர்கள் தங்களுடைய நாவால் மற்றவர்களை அசைக்கிறார்கள். இயேசுவின் காலத்தில் மோசேயின் அதிகாரத்தை கொண்டிருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்களை சட்டங்களினால் வாட்டி வதக்கினார்கள். வலுவான சுமத்தற்கரிய சுமைகளை மக்கள் மீது திணித்தார்கள். கடவுளை அல்ல தங்களை அவர்கள் முதன்மைப்படுத்திக் கொண்டார்கள். இத்தகைய செயல்களை எல்லாம், கண்ணுற்ற இயேசு அவர்களை வன்மையாக கண்டித்தார்.

மதிப்பு என்பது நம்முடைய செயல்பாடுகளை வைத்து நமக்கு கொடுக்கப்பட வேண்டுமே தவிர, நாம் அதைக் கேட்டு வாங்க கூடாது. மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மக்கள் தங்களை மதிக்க வேண்டும், பொது இடங்களில் வணக்கம் செலுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தின் மைய சிந்தனை அல்லது போதனை என்பது 'நாம் நம்மை தாழ்த்திக் கொள்ள வேண்டும்'. இதுதான் இயேசுவின் போதனை. இதை இயேசு தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார். நாமும் அந்த போதனையை வாழ்வாக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார்.


செவிமடுத்து செயல்படுத்துவோர் பேறுபெற்றோர்

 


“பிள்ளாய்! எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே” - நீதிமொழிகள் 5:7

செவிகள் உண்டு ஆனால் செவிசாய்ப்பதில்லை, நன்மைகள் செய்ய வாய்ப்புகள் உண்டு ஆனால் நல்லது செய்வதில்லை. செவிமடுக்காமல் இருப்பதால் காதுகள் நல்லதை கேட்க முடியாதவாறு நாளடைவில் அடைக்கப்படுகிறது. நல்லது செய்யாத காரணத்தால் நன்மைத்தனத்தை பெற முடிவதில்லை. கொடுத்தால் (செவிக்கொடுத்தால் அல்லது நல்லதைக் கொடுத்தால்) தானே பெற்றுக் கொள்ளமுடியும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6: 36-38) இயேசு 4 செயல்களுக்கு செவிமடுக்க அழைப்பு விடுக்கிறார். 1. பிறரை தவறாக தீர்ப்பளிக்க கூடாது 2. மற்றவர்களை கண்டனம் செய்ய கூடாது 3. மன்னிக்க வேண்டும் 4. நம்மிடம் இருப்பதை கொடுக்க வேண்டும். 

இரண்டு செயல்கள் எதிர்மறையானவை (செய்யக்கூடாதவை), இரண்டு செயல்கள் நேர்மறையானவை(செய்யவேண்டியவை). நாம் எதை விதைத்தோமோ அது நமக்கு வளர்ந்து பலன் தரும். அதை போலவே நாம் மற்றவர்களுக்கு செய்த செயல்கள் (நன்மையோ, தீமையோ) நம்மை பின்தொடரும் அல்லது நமக்கு திருப்பிக் கொடுக்கப்படும்.

அமைதியான உள்ளத்தினால் மட்டுமே நாம் கடவுளுக்கு எப்போது செவிமடுக்க முடியும். எப்படி பேறுபெற்றவராக முடியும்? செவிமடுத்ததை செயல்படுத்தும்போது தான் அது சாத்தியம். 

‘கடவுளுக்கு கீழ்ப்படிவது என்பது கடவுளுக்கு செவிமடுப்பதே. திறந்த மனதுடன் கடவுள் நமக்கு காட்டக்கூடிய பாதையை பின்பற்றுவதே செவிமடுப்பதாகும்’ - திருத்தந்தை பிரான்சிஸ்

அவருக்கு செவிமடுத்து அவருக்குரிய பாதையில் நடப்போம்

இயேசுவில் உருவாக… இயேசுவாக உருமாற…


“அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்” - பிலிப்பியர் 3:21

இயேசு காட்டும் படிப்பினையில் நாம் உருவாக வேண்டும், இயேசுவை போல நாம் உருமாற வேண்டும். 

நம்மை மாற்றுவதற்கு எல்லா ஆற்றலும் பெற்றவர் இயேசு. இங்கு அவர் எதிர்பார்ப்பது மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதுதான்.  அது உடல், உள்ளம், ஆன்மா சார்ந்த முழுமாற்றம்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 3:8இல், “என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” என்று சொல்வார். 

இயேசுவில் உருபெற வேண்டும் என்றால் எல்லாவற்றையும் இழப்பது நல்லது. குறைவில் (வெறுமையில்) தான் நிறைவை கொண்டு வர முடியும். இயேசுவாக நாம் உருமாற வேண்டும் என்றால் நமக்குள் இருக்கக் கூடிய கோபம், பொறாமை, எரிச்சல், பழிவாங்குதல், அகந்தை… இவையெல்லாம் வெளியேற வேண்டும். ஒளி இருக்கும் இடத்தில் இருளுக்கு வேலை இல்லை (“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” யோவான் 1:5).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற் 9:2-10) இயேசு உருமாறுகிறார் (தோற்றம் மாறுகிறார்). மனிதத் தன்மையில் இருக்கும் இயேசு, தெய்வீக தன்மையை வெளிக்காட்டும் தருணம் அது. இயேசு இறைமகன் என்பது மீண்டும் வலியுறுத்தப்படும் இடம். தந்தையாம் கடவுள், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று கூறுகிறார். இயேசு மீண்டும் இங்கு இறைமகனாக அங்கீகாரம் பெறுகிறார்.

முதல் வாசகத்தில் (தொடக்க நூல் 22:1-2,9-13:15-18) ஆபிரகாம் சோதிக்கப்பட்டார், ஆனால் அவர் கைவிடப்படவில்லை. மகனை பலியிட சென்றார், ஆனால் மகனை பலியிடவில்லை. கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயம் இல்லாமல் இருந்தார். இறைவனின் ஆசிரை நிரம்ப பெற்றுக் கொண்டார். இதற்கு காரணம் அவர் நம்பிக்கையில் உருபெற்றார். நிலைதடுமாறவில்லை.

இரண்டாம் வாசகத்தில் (உரோ 8:31-34) இயேசு நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் யார் இருக்க முடியும்? யார் நமக்கு எதிராக செயல்பட முடியும்? என்கிறார் திருத்தூதர் பவுல். கடவுள் நம்மில் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால், நாம் கடவுளின் உருவை மாசுபடாமல் காக்கிறோமா? கடவுளின் உருவில் நிலைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். 

இயேசுவின் தோற்ற மாற்றத்தில் சீடர்கள் அச்சம் கொண்டார்கள், நாம் கடவுளின் தோற்றத்தை பெற்றிருக்கிறோம் என்ற அச்சம் நம்மில் இருக்க வேண்டும். அவரில் உருவாகுவோம், அவராக உருவாகுவோம்…


கைம்மாறு எதிர்பாரா அன்பு

“இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்; உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார்” - சீராக் 12:2

எனக்குரியது நிச்சயம் என்னிடம் வரும். அது நான் செய்த நன்மைக்கான கைம்மாறாக இருக்கலாம் அல்லது நான் செய்த தீமைக்கான தண்டனையாக இருக்கலாம். “நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்” - சபை உரையாளர் 12:14

எந்த நன்மையை யாருக்கும் செய்யாமல் ஆதாயம் தேடுவோரும் உண்டு, மற்றவர்கள் செய்யக்கூடிய நன்மையில் குறுக்கிட்டு, சுரண்டல் செய்து அதன் வாயிலாக பலன்பெறுவோரும் உண்டு. இவையெல்லாம் சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே. (நிலையற்ற உலகில் நிலையில்லா மனித அன்புக்காக, பொருளுக்காக ஏங்குகிறது மனித உள்ளம்)

இந்த உலகம் யாருக்கும் நிரந்தரம் அல்ல, நாம் இந்த உலகத்தில் தற்காலிகமாக குடியிருக்கிறோம். நாம் வாழக்கூடிய வாழ்க்கை தான் நமக்கான கைம்மாறை பெற்றுக் கொடுக்கும். நாம் செய்யக் கூடிய நன்மைகளுக்கான பலனை இவ்வுலகிலே எதிர்பார்த்தால் நாம் மறுஉலக வாழ்வில் கைம்மாறை பெற முடியாது. 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு. திருக்குறள் - 211

மழை பொழியும் மேகம் எந்த கைம்மாறையும் எதிர்பார்ப்பதில்லை; மழை போன்று உதவுவோர் கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை.

கடமையை செய்து பலனை எதிர்பாராத வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாற வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5: 43-48) இறைவன் நம்மிடம் விரும்புவதும் அதுதான். தெரிந்தவர்களுக்கும் அன்புக்குரியோருக்குமே நாம் உதவிகள் அல்லது நன்மைகள் செய்கிறோம் என்றால் நமக்கான கைம்மாறு இந்த உலகிலே கிடைத்துவிடும். (“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” - மத்தேயு 6:20) நமக்கு திரும்ப உதவி செய்ய இயலாதவருக்கே நாம் உதவ முன்வர வேண்டும். 

திரும்ப கிடைக்கும் என்று எதிர்பாராமல் உதவினால், விண்ணகத்தில் நாம் நிறைவான கைம்மாறை பெறுவோம். எதிர்பாராமல் செய்யும் உதவிகள் ஒருபோதும் ஏமாற்றத்தை தராது.


புதிய நெறி எங்கே?

“ஆண்டவரின் நெறிமுறைகளை எண்ணிப்பார்; அவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து. அவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்; நீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார்” - சீராக்கின் ஞான நூல் 6:37

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை நெறிமுறை உண்டு. அவரவருக்கென்று தனிப்பட்ட பாதை உண்டு. என் விருப்பப்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எனக்கு முழுசுதந்திரம் உண்டு. ஆனால் எனது வாழ்க்கை நெறி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது. 

இங்கு நெறிபிறழ்ந்து வாழ்வோரும் உண்டு (எப்படியும் வாழலாம்), நெறிமுறைகளோடு வாழ்வோரும் உண்டு (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு). தாங்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் மற்றவர்கள் அதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் (அதிகாரம் செலுத்துதல்) என்று வலியுறுத்துவோரும் உண்டு. 

இவ்வுலக தலைவர்கள் காட்டுகிற நெறிமுறைகள் எல்லாம், ஒருவரை உயர்த்தி பிடிக்கவும் மற்றொருவரை அடிமைப்படுத்தவும் பயன்படுகிறதே ஒழிய, சமத்துவ சமுதாயம் படைக்க உதவுவதில்லை. 

அன்பு செய்வோரை மட்டுமல்ல பகைவரையும் அன்பு செய்ய, செயல்களில் மட்டும் தவறாமல் இருப்பதல்ல சொல்லிலும் தவறாமல் இருக்க (முட்டாளே, அறிவிலியே என்று சொல்லாதே), கடவுளோடு மட்டுமல்ல சக மனிதனோடும் நல்லுறவு கொள்ள (ஒப்புரவு செய்து கொள்ள) அழைப்பதே இயேசுவின் புதிய நெறி.

அடக்குமுறைகளை வழிவகுக்கும் அர்த்தமற்ற நெறிமுறைகளை (சடங்குகளை, சட்டங்களை) விலக்கி, இயேசுவின் புதிய நெறியை கருத்தில் கொள்வோம். புதிய நெறியில் மனிதம் தழைக்கட்டும்.

கேள்வி

1. கொலை செய்வதை விட ஒருவரை திட்டுவது  பாவமா?

வார்த்தைகளால் ஒருவரை திட்ட ஆரம்பிப்பது தான், செயல்வழி கொலைக்கு ஒருவரை இழுத்து செல்கிறது. பேச்சு நீண்டு கொண்டே செல்வது கைகலப்புக்கு வழிவகுக்கும். (பேச்சில் ஆரம்பிப்பது பிரச்சனையில் முடிகிறது). எனவே கொலை செய்வற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சொற்களை பயன்படுத்துவதே பாவம் என்கிறார் இயேசு.


நான் யார்?

 

“நான் ஆண்டவரிடமிருந்து ஒளிந்து கொள்வேன்; உயர் வானிலிருந்து யார் என்னை நினைப்பார்? இத்துணை பெரிய மக்கள் திரளில் என்னை யாருக்கும் தெரியாது; அளவற்ற படைப்பின் நடுவே நான் யார்?’ என்று சொல்லிக் கொள்ளாதே”. - சீராக்கின் ஞானம் 16:17

நான் யார்? என்னை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? என்னை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? இவையெல்லாம் மனிதருக்குள் இயல்பாய் எழும் கேள்விகள்.

இன்று விளம்பரப்படுத்திக் கொள்வதில் மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த விளம்பரத்தின் வழியாக தற்பெருமை, ஆணவம் அதிகரிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் தன்னை கண்டுக் கொள்ளமாட்டார்கள்.

‘தன்னை அறிவதே ஞானத்தின் தொடக்கம்’ என்பார் சாக்ரட்டீஸ். தன்னை அறிதல் என்பது தலைக்கணத்தின் அடையாளம் அல்ல, மாறாக தனக்குள் இருக்கும் கடவுளை கண்டுக் கொள்வதற்கான வெளிப்பாடு. (‘நான் யார்’ என்று கேள்வி கேட்பதோடு நின்றுவிட கூடாது. கேள்விகளுக்கான தொடர் தேடலில் ஈடுபட வேண்டும்.)

“கடவுள் நம்முடன் இருக்கிறார்” - மத்தேயு 1:23. 

“இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்”. 2கொரிந்தியர் 13:5

தன்னை அறிதலும் கடவுள் தனக்குள் இருப்பதை உணர்வதும் ஒருவரை முழுமனிதனாக்கும். தன்நிலை உணர்ந்தவர் பிறர்நிலை உணர்ந்து செயல்படுவார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 16:13-19) மானிடமகனை மக்கள் யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்ற இரண்டு கேள்விகளை கேட்கிறார் இயேசு. எதற்காக இந்த கேள்விகள்? இயேசுவின் பணிவாழ்வை பார்த்து, இயேசுவை யாரென்று மக்கள் உணர்ந்து கொண்டார்களா? இயேசுவின் இறையாட்சி பணி குறித்த தெளிவை பெற்றுக் கொண்டார்களா? என்பதை அறிந்து கொள்ளவும் அதனை தனது சீடர்கள் புரிந்துக் கொள்ளவுமே இத்தகைய கேள்விகள். 

சீமோன் பேதுரு இயேசுவை இன்னாரென்று கண்டு கொண்டு, ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என்று அறிவித்தார். இயேசுவும் அவரை தமது பணியின் முதன்மையாக தேர்ந்துக் கொண்டார்.

புனித அகுஸ்தினாரின் இறைவேண்டல், ‘கடவுளே! நான் உம்மை அறியவும் என் நிலை உணரவும் எனக்கு  கற்பியும்’.

நாம் இறைவனின் படைப்பில் அழகுமிக்கவர்கள். தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். நம் நிலை உணர்வோம்… பிறர்நிலை உயர வைப்போம்… இயேசுவை கண்டு கொள்வோம்…


நம்புவதற்கு அடையாளம் தேவையா?

 


“நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்; என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்; ஏனெனில் ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணை செய்து ஆறுதல் அளித்துள்ளீர்” - திருப்பாடல்கள் 86:17

ஒருவர் நம்பிக்கைக்குரியவரா என்பதை கண்டு கொள்ள சில அடையாளங்கள் தேவைப்படுகிறது. முன் பின் தெரியாத ஒரு மனிதரை நம்பி ஒரு செயலை செய்வதற்கு தயக்கம் வருகிறது. ஆனால் நம்பிக்கை இல்லாமல் நம் வாழ்க்கை இயங்காது. (“நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்” - யூதா 1:22)

நிச்சயமாக, நம்பிக்கை இழந்தோருக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது நம் கடமை. ஆனால் நம்ப மறுப்போரை என்ன செய்வது?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:29-32) இயேசு செய்த அனைத்து வல்ல செயல்களையும் அரும்அடையாளங்களையும் கண்ட பிறகும், ஒரு கூட்டம் நம்புவதற்கு இன்னும் அடையாளம் கேட்கிறது. அவர் செய்த அரும்அடையாளங்கள் தான் எத்தனை! இயேசு சாலமோனை விட, யோனாவை விட பெரியவராக இருந்தும், அவர்களை ஏற்றுக் கொள்வதை போல கூட அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

தங்களை முதன்மைப்படுத்திக் கொள்பவர்கள் மற்றவர்களின் உயர்நிலையை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. மற்றவர்களை நம்புவதுமில்லை.

‘முழுமையான படிக்கட்டுகளை (பாதைகளை) காணாதபோதும், முதல் அடி எடுத்து வைப்பதுதான் நம்பிக்கை’ என்பார் மார்ட்டின் லூத்தர் கிங்.

நினிவே மக்கள் மனம்மாற இறைவாக்கினர் யோனா வழியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அடையாளம் கேட்டு யோனாவை சோதிக்கவில்லை. மாறாக, கடவுளை நோக்கி மன்றாடினார்கள்,  தீய வழிகளினின்று விலகினார்கள், அவர்கள் செய்து வந்த கொடுஞ்செயல்களை விட்டுவிலகினார்கள். அவர்களுடைய நம்பிக்கை நிறைந்த வாழ்வு அவர்களை  அழிவிலிருந்து மீட்டது..

நினிவே மக்களின் வாழ்வு சுட்டுகிற பாடம், நம்புவதற்கு அடையாளம் தேவையில்லை என்பதே… ஒருவரின் நம்பிக்கை நிறைந்த வாழ்வு, மற்றொருவர் தனது வாழ்வில் நம்பிக்கை பெறுவதற்கான அடையாளம் (வழி).

 நம்புவோம்… வாழ்வு பெறுவோம்…

 

எளிய இறைவேண்டல் பெரிய ஆசிர்வாதம்!

 


“இந்நிலையில், நான் செய்ய வேண்டியதென்ன? தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன்”. - 1 கொரிந்தியர் 14:15

மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டு போவதால் யாருடைய இறைவேண்டலும் கேட்கப்படாது. வாழ்க்கை ஒருமாதிரியாகவும் வார்த்தை வேறுமாதிரியாகவும் இருப்பது பயனற்றது. இறைவேண்டல்களும் வாழும் வாழ்க்கையும் எளிமையாக இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டுமென்று இறைவேண்டல் செய்யும் உதடுகள் கைம்மாறு பெறுவதில்லை. 

இறைவேண்டலானது புகழ்ச்சி, நன்றி, பரிந்துரை, விண்ணப்பம் என பல வடிவங்களை கொண்டுள்ளது. 

“தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே”. - யாக்கோபு 3:9

இறைவேண்டலில் இறைவனை புகழ்கிற அந்த நாவே, அவரது சாயலில் படைக்கப்பட்ட மனிதரை இகழ்ந்து பேசுகிறது. இறைவேண்டல்கள் கேட்கப்பட வேண்டும் என்றால் அடுத்தவருக்கு ஆசிராக இருக்க வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6: 7-15) இயேசு விண்ணக தந்தையை நோக்கி வேண்டுவதற்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு கற்பித்த இறைவேண்டல் இரு பிரிவுகளை கொண்டுள்ளது. 1. தந்தையை புகழ்தல் 2. தேவைக்காக வேண்டல்

உணவிற்காக, மன்னிப்பிற்காக, பாதுகாப்பிற்காக வேண்டுகிறோம். முடிந்த மட்டும் உணவு, மன்னிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். பகிர்பவர்கள் அதிகம் பெற்றுக் கொள்வார்கள். வெற்று வார்த்தைகளும், வெற்று சடங்குகளும் தேவையில்லை. நம்பிக்கையோடு கூடிய எளிய இறைவேண்டல் இறையாசிரை பெற்றுத்தரும்.

‘கடவுள் அமைதியான இதயத்தில் பேசுவார்; அவருக்கு செவிமடுப்பதே இறைவேண்டலின் தொடக்கம்’ என்பார் புனித அன்னை தெரசா.

கடவுளுக்கு செவிமடுப்போம்… இறையாசிரை பகிர்ந்தளிப்போம்…


நாம் வலப்பக்கமா? இடப்பக்கமா?

 


"ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார்" - நீதிமொழிகள் 19:17

இவ்வுலகில் நல்லவர்களும் உண்டு தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்கிறவர்களும் உண்டு, தீயவர்களும் உண்டு சமூகத்தால் தீயவர்களாக மாற்றப்பட்டவர்களும் உண்டு. நல்லவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்கிறவர்களாலும் தீயவர்களாலும் இந்த சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. 

ஆண்டவர் காயினிடம், "நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார். தொடக்க நூல் 4:7 

தாங்களும் நல்லது செய்வதில்லை நல்லது செய்வோரையும் நல்லது செய்ய விடுவதில்லை. இத்தகையோர் தான், இந்த சமூகத்தில் நலமோடு வாழ்கிறார்கள் என்ற பிம்பம் கொடுக்கப்படுகிறது. ஏழைகளை வஞ்சித்து, ஒடுக்கி, அவர்களிடம் இருப்பதை சுரண்டி வாழக்கூடிய அந்தக் கூட்டம் தான் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பது போல காட்டப்படுகிறது.  

நல்லது செய்யாவிட்டாலும் தீமையாவது (இடையூறு) செய்யாமல் இருக்கலாம். நல்லது செய்வோரையும் கெடுக்கிறது, நல்லது நடைபெறுவதையும் தடுக்கிறது கயவர் கூட்டம்.. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 25: 31-46) இயேசு இரண்டு பிரிவினரை சுட்டிக்காட்டுகிறார். ஒன்று வலப்பக்கத்தில் உள்ளோர் மற்றொன்று இடப்பக்கத்தில் உள்ளோர். என் சின்னஞ்சிறிய ஏழை சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் எதையெல்லாம் செய்தீர்களோ அவற்றையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொல்கிறார். எவற்றையெல்லாம் செய்யாமல் விட்டு விட்டீர்களோ அதை எனக்கு செய்யவில்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார் / கண்டிக்கிறார். 

நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு நாம் நன்மை செய்கிறபோது, நாம் இயேசுவுக்கு நன்மை செய்கிறோம். நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு தீமை செய்கிறபோது, நாம் இயேசுவுக்கே தீமை செய்கிறோம்.

"நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்". - யாக்கோபு 4:17 

புனித அன்னை தெரசா சொல்வார், " உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒரு நபருக்காவது உணவு அளியுங்கள்"

மற்றவர்களுக்கு நன்மை செய்து, இயேசுவுக்கு கடன் கொடுப்போம், அவரது வலப்பக்கத்தில் அமர்வோம். 

எது நற்செய்தி?


“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்” - திருத்தூதர் பணிகள் 10:38

நன்மை + செய்தி = நற்செய்தி

நன்மை + செயல்  = நற்செயல்

இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே சென்றார். நோயிலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, உளநோயிலிருந்து விடுதலை இதுதான் இயேசுவின் பணிவாழ்வு. தன்னுடைய பணிவாழ்வை தொடங்குவதற்கு முன் இயேசு பாலைநிலத்தில் தவம் (அ) தியானம் செய்தார். அந்த தியானத்தில் அவர் சாத்தானால் அதிகமாக சோதிக்கப்பட்டார். இதே நிகழ்வு புனித மத்தேயு நற்செய்தியிலும்(4:1-11) புனித லூக்கா நற்செய்தியிலும்(4:1-13) விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் எல்லாம் அவருடைய தெய்வீகத் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் இடையேயான பரிசோதனை. சாத்தான் சொல்வதை செய்தால் சாத்தான் வெற்றி பெறுவான், இயேசு மனிதத் தன்மையில் பலவீனப்பட்டு போனார் என்றாகிவிடும். சாத்தான் சொல்கிற சவால்களில் பங்கெடுக்கவில்லையென்றால் இயேசுவின் தெய்வீகத் தன்மை நிரூபிக்கப்படாது.

இங்கு இயேசுவின் நோக்கம் சாத்தானுக்கு செவிமடுப்பதல்ல, சோதனைகளை முறியடிப்பது தான். அவர் சோதனைகளை முறியடிக்க பயன்படுத்திய கருவி இறைவார்த்தை. சாத்தானும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டியது. (“உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்” திபா 91:11). இயேசு நிலை தடுமாறவில்லை.

இயேசுவுக்கே சோதனை என்றால் நாம் எம்மாத்திரம். இங்கு சோதிக்கிறவர்களும் அதிகம்; சோதனைகளும் அதிகம். 

சோதிக்கப்படுவது நற்செய்தி ஆக முடியுமா? சோதனை நற்செயல் ஆக முடியுமா? நிச்சயம் இல்லை. ஆனால் சோதனைகளிலிருந்து வெளிவருபவர்கள் நிச்சயம் நற்செயல் புரிவார்கள்.

“தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” - எபிரேயர் 2:18. இயேசு தாம் மனித நிலையில் சோதிக்கப்பட்டாலும் பாவம் செய்யவில்லை. சோதனைகளை எதிர்த்தார். அவர் நமக்கு உதவுவார்.

புனித பிரான்சிஸ் அசிசியார் சொல்வார், ‘எல்லா வேளையிலும் நற்செய்தியை அறிவி; தேவைப்பட்டால் வார்த்தையால் அறிவி’. அப்படியென்றால் வாழ்க்கையால் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய கருத்து.

பலர் சோதனைகளின் மத்தியிலும் நற்செய்தியை அறிவிக்கிறார்கள் (வாழ்க்கையால் அறிவிக்கிறார்கள்). சிலர் சோதனை வந்ததும் நற்செய்தியை மறுதலிக்கிறார்கள் (வாழ்க்கையை வெறுத்து விடுகிறார்கள்). 

“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்” - யாக்கோபு 1:12.

முதல் வாசகத்தில், “மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது” (தொ.நூல் 9:11) என்று கடவுள் சொன்னாரே அது நற்செய்தி.

இறைவன் அழிவை விரும்புபவர் அல்ல; அழியா நிலைவாழ்வை கொடுக்கிறவர்.

இரண்டாம் வாசகத்தில், “அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்” (1பேதுரு 3:18) என்பது நற்செய்தி. 

இயேசுவின் இறப்பு ஒருவேளை அவரை எதிர்த்தவர்களுக்கு நற்செய்தியாக இருந்திருக்கலாம்... ஆனால் அவரை நம்புவோருக்கு அவர் வாழ்கிறார், நம் வழியாக (நற்கருணை, இறைவார்த்தை) செயலாற்றுகிறார் என்பதே அழியாத நற்செய்தி.

இயேசுவை பிரதிபலிக்க, நாம் வாழும் வாழ்க்கை தான் நற்செய்தி. மற்றவர் வாழ்வு பெற நம் வாழ்வு எனும் நற்செய்தி ஒளியாகட்டும்.


வலுவற்ற நாம்...



 நலமாக இருக்கக்கூடியவருக்கு எந்த மருத்துவரும் தேவையில்லை எந்த மருந்தும் தேவையில்லை. மனதளவிலும் உடலளவிலும் நோயுற்று வலுவற்று இருக்கக்கூடியவருக்கு தான் மருத்துவரும் மருத்துவமும் தேவை. காயங்கள் இருக்கக்கூடிய இடத்தில் மருந்திடும் போது அந்த காயங்கள் ஆறி விடுகின்றன. அந்த மருந்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால் அங்கு ஒரு குறைபாடு உள்ள இடம் தேவைப்படுகிறது. குறைபாடுள்ள இடத்தில் தான் வலிமையான சக்தி உள்ள அந்த மருந்து வேலை செய்ய முடிகின்றது. 

அதே போலவே அருள் இருக்கக்கூடிய இடத்தில் வல்லமை தேவையில்லை, ஏனென்றால் அங்கு அருள் நிரம்பி வழிகிறது. எங்கு ஒரு ஆன்மா வலுவற்று மாசுள்ளதாக இருக்கிறதோ அங்கே அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான கடவுளின் அருள், வல்லமை தேவைப்படுகிறது.

"எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்" (2 கொரிந்தியர் 12:7-9).

இங்கு திருத்தூதர் பவுல் தன்னை ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார். அதை நீக்கிவிடுமாறு வருந்தி கேட்டுக் கொள்கிறார். ஆனால் ஆண்டவர் என் அருள் உனக்கு போதும் என்று சொல்கிறார். உன்னுடைய வலுவின்மையில் தான் என்னுடைய வல்லமை வெளிப்படும் என்பதை அவர் தெளிவுப்படுத்துகிறார். வலுவற்ற நிலையில் திருத்தூதர் பவுல் இருக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம் அல்ல, மாறாக அவர் தன்னுடைய நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும், அந்த நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது கடவுள் விருப்பம்.

"ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்" (எபிரேயர் 4:15). கடவுளால் நம்முடைய வலுவற்ற நிலையை மாற்ற முடியாது என்று இல்லை. நம்மை போலவே இயேசு சோதிக்கப்பட்டார், இருந்தபோதிலும் பாவம் செய்யாமல் இருந்தார். மனித நிலையில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய சுயநலன்களினால் அல்லது மற்றவர்களுடைய ஆதிக்கத்தினால் துன்புறும்போது, வலுவை இழந்து காணப்படும்போது கடவுள் நம்மீது பரிவு கொள்கிறார். ஏனென்றால் இயேசு பாவம் தவிர அனைத்திலும் மனிதரைப் போல் இருந்தார் என்கிறது விவிலியம்.

இயேசு தன்னுடைய பணி வாழ்வில் பாவிகள் என்று புறம் தள்ளப்பட்டவர்கள் மீது பரிவு கொண்டார். அவர்களை தேடி சென்றார் நோயாளர்களை தொட்டார். தீட்டு என்று கருதப்பட்டவர்களையும் தொட்டு குணமாக்கினார். 

வலுவுள்ள நிலையில் இருக்கக்கூடிய நாம் வலுவற்றவர்களை இயேசுவை போல தேடிச் செல்ல வேண்டும். தொட வேண்டும், ஆறுதல் கூற வேண்டும்...

பாவத்திலிருந்து (திசை) மாற

 


“நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே;  ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்; ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்” - சாலமோனின் ஞானம் 15:2

பாவமும் நன்மையும் இணைந்தே செல்ல முடியாது. பாவியும் நேர்மையாளனும் இணைந்து வாழ முடியாது. பாவம் பாவியோடும் நன்மை நேர்மையாளனோடும் இணைந்து செல்லும். 

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5:27-32) ஒரு முரண்பாடு இருக்கிறது. இயேசு பாவிகளை தேடி செல்கிறார். லூக்கா 5:32இல் “நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்கிறார். இங்கு இயேசுவின் எதிர்பார்ப்பு பாவமும் பாவிகளும் பெருக வேண்டும் என்பதல்ல, மாறாக பாவிகள் பாவத்திலிருந்து மனம் (திசை) மாற வேண்டும் என்பதுதான். 

பாவம் தன்னையும் அழிக்கும் தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும். “பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது” - 1யோவான் 1:8. 

அலிஸ்டர் பெக் சொல்வார், ‘பாவியை கண்டுபிடிக்க நமக்கு ஒரு கண்ணாடி தான் தேவை’ (அந்த கண்ணாடி பிரதிபலிப்பது நம்மையும் நம் பாவத்தையும் தான்). நாம் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்கிற போது தான், அதிலிருந்து வெளிவர முடியும். நாம் செய்வது பாவம் என்பதை அறிந்திருந்தும், தொடர்ந்து அதையே செய்கிற போது அதிலே சுகம் கண்டு விடுகிறோம்.

“உண்மை அறிந்தபின்னரும் வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது” - எபிரேயர் 10:26

சமூகத்தில் பாவிகள் என்று யாரெல்லாம் முத்திரை குத்தப்பட்டார்களோ அவர்களை இயேசு தேடிச் சென்றார். ஒருவேளை அவர்கள் பாவம் செய்ததனால் அல்லது பாவிகளோடு கைக்கோர்த்ததனால் அவர்கள் பாவிகள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். (லேவி- வரிதண்டும் பணியை செய்தார், உரோமையர்களுக்கு கீழ்ப்படிந்து, யூதர்களிடமிருந்து வரி வசூலிப்பது பாவமாக கருதப்பட்டது. அதை செய்வோர் பாவி. அத்தகையோரை யூதர்கள் வெறுத்தனர்) 

அத்தகைய சூழலில், இயேசு பாவியென கருதப்பட்டோரையும் தேடி சென்றார். வெறுக்கப்பட்டோரை நேசித்தார். மனம் மாற அழைத்தார். ஏனென்றால், கடவுள் பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளை அல்ல. ஆகவே, பாவத்திலிருந்து திசை மாறுவோம். இயேசுவின் நண்பர்களாவோம்.


(நான்) நோன்பு இருக்கிறேன்


“நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது, சாக்கு உடுத்திக் கொண்டேன்; நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்; முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்” - திருப்பாடல்கள் 35:13

தவக்காலத்தில் பலவகை ஒறுத்தல்கள் செய்யப்படுகின்றன. நாம் விரும்புபவற்றை ஒடுக்குவது தான் நோன்பு. நோன்புகளில் உண்ணா நோன்பு, ஊடக நோன்பு, சொல் நோன்பு, தொலைக்காட்சி நோன்பு, துக்க நோன்பு இன்னும் பல இருக்கின்றன.

விவிலியம் சுட்டிக் காட்டும் நோன்பு 

1. பாவக் கழுவாய் நிறைவேற்றுவதற்கு முன் செய்ய வேண்டிய நோன்பு - (லேவியர் 16: 29-34)

2. போரில் வெற்றிக் காண நோன்பு (நீதித் தலைவர்கள் 20: 25-35)

3. இறப்பை குறித்து நோன்பு (1சாமுவேல் 31:13, 2சாமுவேல் 12:16)

4. உயிர்ப் பிழைக்க நோன்பு (எஸ்தர் 4:3)

5. அழிவிலிருந்து காப்பாற்றப்பட நோன்பு (யோவேல் 1:14)

நெகேமியா 1:4இல் “நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்” என்கிறார் நெகேமியா. அடிமைத்தனத்தில் இருந்து தப்பியவர்கள் துயரும் சிறுமையும் அடைகிறார்கள் என்நு கேள்விப்பட்டதும் தன் ஆதங்கத்தை நோன்பின் வழியாக கடவுளிடம் தெரிவிக்கிறார்.

இரண்டு நோன்புகளை இறைவன் இன்றைய முதல் வாசகத்தின் (எசாயா 58: 1-9) வழியாக நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

1. அடிமைத்தளைகளை துடைத்தெறியும் நோன்பு (எசாயா 58:6)

2. அயலானை அரவணைக்கும் நோன்பு (எசாயா 58:7)

யோவானின் சீடர்கள் தாங்கள் நோன்பு இருப்பதால், தங்களை உயர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டார்கள். எனவே இயேசுவிடம் அவர்களின் கேள்வி இவ்வாறு அமைந்தது. “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” - மத்தேயு 9:14

இயேசு ‘நோன்பு இருக்க வேண்டிய காலத்தில் அவர்களும் நோன்பு இருப்பார்கள்’ என்று கூறினார்.   

நான் நோன்பு இருக்கிறேன் என்று பெருமைத் தேடுவதற்கு இங்கு என்ன இருக்கிறது. மற்றவர்கள் நோன்பு இருக்கிறார்களா இல்லையா என்று ஆராய்வதால் எனக்கு ஒரு பயனும் இல்லை. நான் இருக்கக் கூடிய நோன்பு, என் வாழ்வையும் முடிந்த அளவுக்கு மற்றவர்கள் வாழ்வையும் சீர்ப்படுத்த வேண்டும். 


தன்னலம் மறக்க…


“எவரும் தன்னலம் நாடக்கூடாது; மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” - 1 கொரிந்தியர் 10:24

தன்னைக் குறித்து கவலைக் கொள்கிறவர் கடவுளின் சீடராக இருக்க முடியாது. இயேசுவை பின்பற்ற விரும்புகிறவர் தன்னலம் துறந்து, அவரவர் சிலுவையை சுமந்துக் கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும் ((மத்தேயு 16:24). 

இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்கள் அதிகம். ஆனால் சிலுவைகளோடு பின்பற்ற விரும்புபவர்கள் குறைவு. “கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்” - 1பேதுரு 2:21 

இங்கு பின்பற்றுதலும் தன்னலம் துறத்தலும் இணைந்து பயணிக்கிறது. தன்னிலை உணர்தலும் பிறர்நிலை கண்டு கொள்வதும் கடவுளின் விருப்பமே. தன்நிலையை உணர்ந்தால் இயேசுவை பின்பற்ற தயக்கம் இருக்காது. பிறர்நிலை கண்டு அவர்நிலை உயர உழைத்தால் அங்கு செய்யப்படும் நற்செயல் வாயிலாக இறைவன் அறிவிக்கப்படுகிறார். 

புனித பெனடிக்ட் சொல்வார், ‘நமக்கு நலமெனப்படுவதை (நம் நலனை) ஒருபோதும் நாம் பின்பற்ற கூடாது, மாறாக அடுத்தவரின் நலனையே கருத்தில் கொள்ள வேண்டும்’.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 9:22-25) இயேசு தன்னிலை துறப்பு (துன்பம், இறப்பு) பற்றியும் அதன் வாயிலாக பெறப்படும் மாட்சி (உயிர்ப்பு) பற்றியும் கூறுகிறார். உலகை பற்றிக்கொள்ள விரும்புவோர் தன்னை அறியாமலேயே தன் வாழ்வை இழந்துவிடுவர். இழக்க வேண்டியது வாழ்வை அல்ல தன்னலத்தை…  

இயேசுவில் அன்பு கொண்டுள்ளோர் தன்னலம் நாடமாட்டார். “அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது” - 1 கொரிந்தியர் 13:5

தன்னலம் மறக்கப்பட்டும் பிறர்நிலை உயர்த்தப்படட்டும்


தூசியும் சாம்பலுமான நாம்…

“அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது” - திருப்பாடல்கள் 103:14

மனிதர் அனைவரும் தூசியும் சாம்பலுமே ஆவர். தாம் எந்த நிலையிலிருந்து வந்தோம் என்பதை உணராத மனிதர்கள் தங்களை கடவுளாகவே எண்ணிக் கொள்கிறார்கள். தன்னை உயர்த்தி மற்றவர்களை தன் காலடியில் வைக்க நினைக்கும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் அதிகம் தான். 

தவக்காலத்தில் நுழைய இருக்கிறோம். நோன்புகள் ஏற்கவும் தவறுகளுக்கு மனம் வருந்தவும் புதிய வாழ்வு வாழவும் அழைப்பு விடுக்கிறது சாம்பல் புதன். சாம்பலை பூசுவதோடு எல்லாம் முடிவடைவதில்லை. சாம்பல் பூசிக் கொள்வதும் சாக்கு உடை உடுத்துவதும் நோன்பின் வெளிஅடையாளங்கள். அதையும் கடந்த சில வெளிப்புற அடையாளங்கள்  நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. 

இறைவாக்கினர் எசாயா நூல் 58: 6-7இல் “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!” என்று காண்கிறோம். 

இவை தான் இறைவன் எதிர்பார்க்கிற நோன்பு! ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையை உணர்ந்து பார்த்து செயல்பட்டாலே இவ்வுலகம் விண்ணகமாய் மாறும்.

நம் நிலை என்ன ?

- “உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே!” - திருப்பாடல்கள் 39:11

- “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளி பூவே!” - எசாயா 40:6

- “புழுவைப்போன்ற  மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!” - யோபு 25:6

- “மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார்” - திருப்பாடல்கள் 94:11

- “மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்கள்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை” - திருப்பாடல்கள் 144:4

இத்தகைய நிலையில் இருக்க கூடிய நாம் பெருமைப் பாராட்டலாமா? நம்மை முதன்மைப்படுத்தலாமா? (கொண்டு வந்தது என்ன? கொண்டு போவது என்ன?)

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘உனது வேண்டல்கள் கடவுளை நோக்கி எழுப்பப்பட வேண்டுமா? இரண்டு காரியங்களை செய்; ஒன்று உண்ணா நோன்பு, மற்றொன்று உதவி’.

நோன்பின் சில அடிப்படைக் கூறுகள்

- பிறரின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்த வேண்டும்

- விரும்பாததை துறப்பதல்ல விரும்புவதை துறக்க வேண்டும்

- 40 நாட்களுக்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்

எளிதானதை செய்வதல்ல நோன்பு, எளியவரை இல்லாதவரை தாங்குவது தான் நோன்பு. நம் நிலை உணர்ந்து நம்மாலான உதவியை செய்வோம். தொடரட்டும் தவக்காலத்தின் ஒறுத்தல்களும் நற்செயல்களும் வாழ்நாள் முழுவதும்.


இலக்கு தெளிவு நோக்கி…


“மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்; நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல் அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்” - சாலமோனின் ஞானம் 5:21

இலக்கு தெளிவில்லாத சீடத்துவ வாழ்வு இடையூறாய் அமையும். தலைவனின் பாதையில் நடந்தும் அவரை புரிந்துக் கொள்ளாதவர்கள் தலைவரை பின்தொடர்ந்தும் பயனில்லை. ஏனென்றால், பணித் தெளிவோ இலக்குத் தெளிவோ இல்லாமல் பின்தொடர்வது வீணானது.

‘நான் கிறித்தவன் என்று அழைக்கப்படுவது என் இலக்கு அல்ல; நான் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் அதுதான் என் இலக்கு’ என்பார் புனித அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார்.

கிறித்தவர்கள் என்று யாரும் அழைக்கப்படலாம். அது மட்டும் நம்முடைய இலக்காக இருக்க கூடாது. மாறாக கிறிஸ்துவின் இறையாட்சி கனவை கண்முன் கொண்டு, நாம் அவருடைய விழுமியங்களை வாழ்வாக்க வேண்டும். “இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டது” - உரோமையர் 14:17

இயேசுவின் இலக்கு என்பது நீதி, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம். இதை வாழ்வாக்குவது தான் கிறித்தவரின் இலக்காக இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:14-21) இயேசுவோடு உடன்இருந்தவர்கள், இயேசு வல்ல செயல்கள் செய்தபோது கண்கூடாக கண்டவர்கள் இயேசுவின் வல்லமையை உணராதவர்களாய் இருந்தார்கள். “அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்” மாற்கு 8:16. சீடர்களின் கவலைகளெல்லாம் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்தது. இயேசுவின் இலக்கோடு அவர்கள் இணைந்து பயணிக்க மறந்துவிட்டார்கள்.

இலக்கு இல்லாத படகு திசை மாறும். இலக்குகளற்ற கிறித்தவ வாழ்க்கை நிலை தடுமாறும்.

எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம், எது நமக்கான பாதை என்பதில் தெளிவு கொள்வோம். இலக்கு தெளிவானால் சோதனைகளும் சாதனைகளாகும்.

 

 

 

  

சோதனைகளை கடந்து வர...

 


“குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்” – சீராக் 2:1

இன்று நாம் சந்திக்கின்ற சோதனைகள் அல்லது துன்பங்களெல்லாம் 3 வழிகளில் வருகிறது.

1. நாமே உருவாக்கிக் கொண்டது 

“செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை” 

- 1திமொத்தேயு 6:9

“ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்” 

- யாக்கோபு 1:14

2. மற்றவர்கள் நமக்கு கொடுப்பது

“ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது” 

- சபை உரையாளர் 8:9 

சாத்தான் யோபை சோதித்தல் - யோபு 1, 2 அதிகாரங்கள்

3. கடவுளிடமிருந்து வருகிறது (இது சோதனையல்ல பரிசோதனை)

“நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” – எசாயா 48:10

நமக்கு நாமே உருவாக்கி கொண்ட சோதனையாக இருக்கலாம் அல்லது மற்றவர்கள் நமக்கு கொடுக்கின்ற துன்பமாக இருக்கலாம் இவை இரண்டையும் வெல்லவதற்கான ஆற்றலை தருபவர் இறைவன். (“தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” (எபிரேயர் 2:18)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:11-13), இயேசு சோதிக்கப்படுகிறார். மனிதர் என்ற நிலையில் அவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அடையாளம் கேட்டு பரிசேயர் அவரை சோதித்தனர். இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்துவிட்டார். சோதனை நீண்டு போகாமல் தடுத்துவிட்டார். அவர்கள் அடையாளம் கேட்டது நம்புவற்கு அல்ல, அதை இயேசு உணர்ந்ததால் அவ்வாறு சொன்னார். 

நற்செய்தி இவ்வாறு நிறைவுபெறுகிறது, “அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறுகரைக்குச் சென்றார்”. சோதனைகளை தகர்த்துவிட்டு, சோதிப்பவர்களை விட்டு விட்டு இயேசு மறுபகுதிக்குச் சென்றார்.

ஜான் பன்யன் சொல்வார், ‘சோதனைகளை முதலில் நாம் சந்திக்கும்போது, அவை சிம்சோன் சந்தித்த கர்ச்சிக்கும் சிங்கத்தை போன்று இருக்கும்; அதை நாம் வெற்றிக் கொண்டோம் என்றால் அதனுள் தேன் கூட்டை காணலாம்’. (காண்க - நீதித் தலைவர்கள் 14:8)

இயேசுவை போன்று துணிச்சலோடு சோதிப்பவர்களை எதிர்க்க வேண்டும். தேவையற்ற நேரங்களில் அவர்களை விட்டு ஒதுங்க வேண்டும். 



நோய் நீங்கி நலம் பெற

நோயில்லா நல்வாழ்வு தேவை என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு. நோயில்லா வாழ்வு தான் ஒருவருக்கு மனநிறைவை கொடுக்கும். இன்று மட்டுமல்ல அன்றும் பல்வேறு நபர்கள் இயேசுவிடம் நலம்வேண்டி நின்றார்கள். 

இயேசுவை தேடிவந்தவர்கள், இயேசுவை தொட்டவர்கள், இயேசு யாரை தேடி சென்றாரோ, இயேசு யாரை தொட்டாரோ அவர்கள் எல்லோரும் நலம் பெற்றார்கள். (“பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்” – மத்தேயு 21:14). 

நோய் நீங்க நலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

நோய் நீங்க 

1. இயேசுவில் நம்பிக்கை கொள்ள வேண்டும்

2. இயேசுவை தேடிவர வேண்டும்

3. இயேசு தொட அனுமதிக்க வேண்டும் (அ) இயேசுவை தொட வேண்டும்

4. இயேசுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்

நலம் பெற

1. தவறுகளுக்கு மனம்வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் (“உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்” – சீராக் 21:1)

2. தவறுகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் (மன்னிக்க வேண்டியவர்களை மன்னிக்க (அ) மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்) (“மன்னியுங்கள்; மன்னிப்பு பெறுவீர்கள்” – லூக்கா 6:37)

3. கோபம், எரிச்சல், பகைமை, பழிவாங்கும் எண்ணம் ஆகியவற்றை நீக்க வேண்டும். (“என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்” – திருப்பாடல்கள் 66:18)

4. மருத்துவரின் அறிவுரைக்கு செவிமடுக்க வேண்டும் (“உன் தேவைக்கு ஏற்ப மருத்துவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கு; ஆண்டவரே அவர்களை படைத்தார்” – சீராக் 38:1)

இவற்றையெல்லாம் செய்கின்ற போது நோயும் நீங்கும் நலமும் பெறுவோம். இன்று உடல் நோயாலும் உளநோயாலும் வருந்துவோர் ஏராளம். மருந்து மட்டும் நலமளிக்காது, செயல்களற்ற நம்பிக்கை நலம் அளிக்காது, நம்பிக்கையோடு கூடிய செயல்முறைகளே நமக்கு நல்வாழ்வு அளிக்கும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:40-45) தொழுநோயாளர் இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவரை தேடி வந்தார், தன்னை முழுவதும் கையளித்தார். “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” (மாற்கு 1:40) என்ற உயர்ந்த நம்பிக்கை அவரிடம் இருந்தது (“நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” - மாற்கு 9:23). அவருடைய செயல்களோடு கூடிய (தேடி வருதல், தன்னை கையளித்தல்) நம்பிக்கை அவருக்கு நலம் தந்தது. அவர் நோய் நீங்கி நல்வாழ்வு பெற்றார்.

இன்றைய நற்செய்தி குறித்த சில கேள்விகளும் பதில்களும்

1. இயேசு ஏன் தொழுநோயாளரை குணப்படுத்தினார்?

தொழுநோயாளர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். (காண்க - லேவியர் 13:45-46) அவர்கள் மனிதராக வாழ்வதற்குரிய மாண்பை இழந்து இருந்தார்கள். எனவே இயேசு தொழுநோயாளரை தொட்டு குணப்படுத்துகிறார்.

2. தொழுநோயாளர் தான் நலம்பெற்றதை ஏன் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு கூறினார்?

இயேசு வல்ல செயல்கள் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் மக்கள் வருவதைவிட, இறைவார்த்தைமேல் கொண்ட தாகத்தால் மக்கள் அவரிடம் வர வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

3. தொழுநோயாளர் நலம்பெற்றதை ஏன் குருவிடம் காட்ட வேண்டும்?

குரு பரிசோதனை செய்து தொழுநோய் இல்லை என்று சான்று பகர்ந்தால் மட்டுமே, அவர் ஊருக்குள்ளே நுழைய முடியும். (காண்க - லேவியர் 14:1-32) ஆகவே தான் இயேசு அவரை குருவிடம் காட்ட சொல்கிறார்.

4. தொழுநோயாளர் இயேசுவுக்கு கீழ்ப்படியவில்லையா?

ஒருவகையில் சொல்லப்போனால், இயேசு பணித்ததை அவர் நிறைவேற்றவில்லை. அதே வேளையில், தான் பெற்றுக்கொண்ட நன்மைத்தனத்தை மற்றவர்களும் அறிந்து கொள்ள அறிவித்தார்.


உண(ர்)வு பற்றாக்குறை

 

“இவரோ (ஏழைக் கைம்பெண்) தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” – மாற்கு 12:44

இந்த உலகில் பற்றாக்குறையில் இருப்பவர்கள் அதிகம் தான். ஆனால் பற்றாக்குறையில் இருப்பவர்கள் பற்றாக்குறையில் நீடித்து இருப்பதற்கு முக்கிய காரணம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளாதது தான். 

ஒருபுறம் உணவு வீணாக்கப்படுகிறது, தேவையற்ற வழிகளில் உணர்வுகள் (காதல், கூடா நட்பு) சிதறடிக்கப்படுகின்றன. மறுபுறம் உணவு தேவைப்படுவோரும் அன்பு இல்லாமல் அனாதையாக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:1-10) இயேசு தன் உணர்வை வெளிப்படுத்துகிறார். “அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்” (யோவான் 6:27) என்றவர், (தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதுதான் முதன்மை என்பதில் இயேசு தெளிவாக இருந்தார்) மக்களின் தளர்வை புரிந்துக் கொள்கிறார். ஆன்ம உணவை பெற்றவர்கள்மீது (இறைவார்த்தைக்கு செவிசாய்த்தவர்கள்மீது)  பரிவு கொண்டு, உணவு பற்றாக்குறையை போக்க பகிர்வு மனப்பான்மையை உருவாக்குகிறார். 

இல்லாமையிலிருந்து உருவாக்கவில்லை இருப்பதிலிருந்து உருவாக்குகிறார் இயேசு. உணவும் உணர்வும் பகிரப்படும்போது குறைந்து போவதில்லை, நிறைவு பெறுகிறது. இவை இரண்டும் இருப்பவரோடு மேலும் பகிரப்படுகிறதா? அல்லது இல்லாதவரோடு பகிரப்படுகிறதா? என்பதில் தெளிவு தேவை.

‘மற்றவர்களை வரவேற்பதிலும் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதிலும் மற்றவர்களை ஆதரிப்பதிலும் நாம் தாராளமாக இருந்தோம் என்றால், ஒருபோதும் நாம் ஏழையாவதில்லை, மாறாக நமது வாழ்வு வளம்பெறும்’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பதுக்கல்கள் மறைய வேண்டும், பகிர்வுகள் பெறுக வேண்டும். அப்போது தான் நாம் இயேசுவோடு இணைந்து இறையாட்சியை கட்டியெழுப்ப கைக்கோர்க்க முடியும். (‘நன்மை செய்வது நமது மேலான கடமை’ – திருத்தந்தை பிரான்சிஸ்).


திறக்கப்படட்டும்…



“நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை; அவர்களால் செவிகொடுக்க முடியாது; ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று; அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை” – எரேமியா 6:10

    திறக்கப்பட வேண்டி இருப்பது கதவுகள் மட்டுமல்ல காதுகளும் நாவுகளும் தான். இன்று உறவினர்களுக்கு கதவுகள் கடினப்பட்டு தான் திறக்கப்படுகிறது. கதவுகளே கடினப்பட்டு திறக்கப்படுகின்ற போது, எப்படி பேசுவதற்கு நாவுகளும் கவனிப்பதற்கு காதுகளும் திறக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. கடினப்பட்டிருக்கும் மனங்களும் திறக்கப்பட வேண்டும்.

    இன்றைய நற்செய்தி (மாற்கு 7:31-37) வாசகத்தில், காது கேளாதவரின் காதும் வாய் பேசாதவரின் நாவும் திறக்கப்படுகின்றன. திறக்கப்பட்டதும் நலம் பெற்றவர் தன் வாய் திறந்து இயேசுவின் நற்செய்தியை யாவரும் கேட்க உரக்க அறிவிக்கிறார். 

  இறைவார்த்தைக்கு செவிமடுக்க இயலாதவாறு நம் உள்ளங்களும் காதுகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருமுழுக்கு அருளடையாளத்தின் போது அருள்பணியாளர் குழந்தையின் காதிலும் நாவிலும் சிலுவை அடையாளம் வரைந்து சொல்லும் இறைவேண்டல், ‘காதுகேளாதவர் கேட்கவும் வாய்ப்பேசாதவர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை, தந்தையாகிய இறைவனின் புகழும் மகிமையும் விளங்க காதால் கேட்கவும் அந்த நம்பிக்கையை நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக’.
    இன்றைய நாளின் நற்செய்தி தான் இதற்கு அடிப்படை. நம் காதுகள் திறக்கப்படுவதன் வழியாக நாம் கடவுளின் வார்த்தையை கேட்கவும் கேட்ட வார்த்தையை நாவால் அறிக்கையிடவும் அழைக்கப்படுகிறோம்.

    ‘நான் பெரிய செயல்களை செய்ய முடியாது. ஆனால், நான் என்னால் முடிந்த சிறிய செயல்களையெல்லாம் செய்ய முடியும். அவையெல்லாம் கடவுளின் மகிமைக்காகவே’ என்பார் புனித தோமினிக் சாவியோ.

நம் கதவுகளும் திறக்கப்படட்டும் கடவுளின் அதிமிக மகிமைக்காக…

பெருமைப்படுத்தப்பட்ட நம்பிக்கை

 


“என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? – யாக்கோபு 2:14

   ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கை சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்பட வேண்டும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நலம்பெற காரணமாய் இருந்தது, நலமளிப்பவரின் ஆற்றலும் நலம்பெறுபவரின் நம்பிக்கையும் தான். (“உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்” – மாற்கு 6:5,6). இயேசு வல்ல செயல் செய்ய, உதவி நாடிநின்றவர்களின் நம்பிக்கை தேவைப்பட்டது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் நம்பிக்கை முதிர்ச்சி பெறுவதில்லை. இறைவன் என்னை நினைக்க (எனக்கானதை செய்ய) நான் என்ன செய்ய வேண்டும் என்பதே நம்பிக்கையின் முதிர்ச்சி.

  கிரேக்கப் பெண்ணின் நம்பிக்கை இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. இங்கு நம்பிக்கை சிறுமைப்படுத்தப்படவில்லை மாறாக பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. நாய்களுக்கு போடுவது முறையல்ல என்றதும் மனம் சோரவில்லை அந்த பெண்(தாய்). நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவாறு அவருடன் உரையாடுகிறார், தேவையானதை பெற்றுக் கொள்கிறார். (“எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது” – திருப்பாடல்கள் 9:18).

  காலில் விழுந்து கேட்டதால் அல்ல மாறாக, நம்பிக்கை குறைவில்லாமல் கேட்டதால் அவர் மகளிடமிருந்து பேய் நீங்கியது.

    ‘நம்பிக்கை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை, நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே’ என்பார் கல்வியலாளர் மேரி மெக்லியொட் பெத்யூன்.

   நாம் பெருமைப்படுத்தப்படுவது நாம் இறைவனில் வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையினால்தான். நம்புவோம்… நல்லதை பெறுவோம்…

உள்ளே தீட்டு...


மனிதனின் உள் இருந்து வெளியே வருவது தான் மனிதனையும் மனிதத்தையும் தீட்டுப்படுத்துகிறது...

குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது தீயது எது என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம். 

புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'

நான் மாசுள்ளவன்(ள்) என்பதை கண்டுணராத வரை, நான் மற்றவர்களையும் அவர்கள் செய்வதையும் தீட்டாகத் தான் கருதுவேன். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.

"வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" - மத்தேயு 7:5. நம் குறைகள் களையப்பட வேண்டும். நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெரும்.

தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!

 உரோமையர் 12:21

தீட்டுப்பட்ட இதயம்


“நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன” - எசாயா 64:6

    இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகம், ஏதேன் தோட்டமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை நம்மிடம் இருக்கிறது. நாம் வாழக்கூடிய உலகம், இன்றும் ஏதேன் தோட்டமாக தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய தீட்டுப்பட்ட இதயத்தால் அவை இன்று களங்கடிக்கப்படுகின்றன. இயற்கையை அழிப்பதால், மாசுபடுத்துவதால் நாம் வாழும் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். (“ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்” – தொடக்க நூல் 3:23) இயற்கை நமக்கு எதிரி போல மாறிக் கொண்டிருக்கிறது. பருவநிலை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது (எப்போது மழை பொழியும் என்று முன்புபோல யூகிக்க முடிவதில்லை). 

இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதன் தன்னுடைய தீட்டுப்பட்ட இதயத்தால், தன்னுடைய சுயநலத்தால் இயற்கையை பாழ்படுத்தியதுதான். மனிதனின் உள்புறம் மாசுபட்டு போனதால் வெளிப்புறமும் மாசுப்பட்டு போக வேண்டும் என்று நினைக்கிறான்.

இயற்கையையும் தாண்டி, மனிதன் மற்றொரு மனிதனையும் தீட்டுள்ளவனாக மாற்றியுள்ளான். தான் செய்வது தான் சரியென மெய்ப்பிக்க, மற்றவரை அடக்க ஆள மனிதன் தன் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் “தீட்டு”. கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதன் எப்படி தீட்டுள்ளவனாக இருக்க முடியும். (“கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்…” – தொடக்க நூல் 1:27). கடவுளின் பார்வையில் அனைவரும் சமம். 

உயர்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற வேறுபாடு இங்கில்லை. “புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்” – கொலோசையர் 3:11

தீட்டுப்பட்ட இதயம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நம் குறைகளை களைந்து பிறரில் நிறைவு காண வேண்டும். தூய்மையான இதயத்தோடு நாமும் ஏதேன் தோட்டத்திற்குள் செல்வோமா!


கண்டு கொள்ள… கண்டு கொள்ளப்பட…


“அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்” – லூக்கா 10:33

நாம் பலவீனமானவர்கள். அன்பிற்கு அடிமையானவர்கள். ஒருவரின் மாய வலையில் (கண்மூடித்தனமான அன்பில்) விழுந்துவிட்டோம் என்றால், எத்தனை மருத்துவமனை சென்றாலும், மனநல நிபுணர்களிடம் சென்றாலும் நாம் இயல்பாக இருக்க முடியாது. அந்த வேளைகளில் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழும் கேள்விகள் - எனக்கென்று யார் இருக்கிறார்? யார் என்னை அன்பு செய்வார்? யார் என்னை கண்டு கொள்வார்? இது ஒரு வகையினர்.

கடன் சுமையினால் அவதிப்படக் கூடிய நிலையில் உள்ள ஒருவரின் உள்ளம், யாராவது என்னை கண்டு கொண்டு என் சுமையை குறைக்கமாட்டார்களா என்று ஏங்கும். இது வேறு வகையினர்.

உளவியல் சிக்கலோ பொருளாதாரா நெருக்கடியோ ஒருவரை அழுத்துகிறபோது, அவரில் எழும் கேள்வி எனக்கென்று யார் இருக்கிறார் என்பதுதான். 

இந்த வேளைகளில் நல்ல சமாரியர்கள் தேவைப்படுகிறார்கள். தன் நிலையிலிருந்து இறங்கி வந்து, அவல நிலையில் உள்ளவரை கண்டு கொள்வதற்கும் அவரை அந்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கும் நல்ல சமாரியர்கள் தேவை. 

“ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் என்பார்” - மத்தேயு 25:35,36. இத்தகையோரை கண்டு கொள்கிறபோது நாம் இயேசுவையே கண்டு கொள்கிறோம்.

தேவையில் இருப்போரை கண்டு கொள்வோம். இறைவன் நம்மை கண்டு கொள்வார்… 


நற்செய்தி அறிவிக்க... நற்செயல்கள் புரிந்திட...

 

"இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு;  கடிந்துகொள்; அறிவுரை கூறு;  மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு" - 2 திமொத்தேயு 4:2

திருமுழுக்கு பெற்ற அனைவரும் நற்செய்தியை தங்களது வாழ்க்கையால் அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். திருவிவிலியம் ஏந்தி நற்செய்தி அறிவிப்பதைவிட திருவிவிலியத்தின் விழுமியங்களை ஏந்தி நற்செய்தி அறிவிப்பது இன்று சவாலாக இருக்கிறது. 

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 

சொல்லிய வண்ணம் செயல் (குறள் - 664) 

சொல்வது எல்லோருக்கும் எளிது. ஆனால் சொல்லியதை செய்து முடிப்பதுதான் கடினம். இது இறைவார்த்தை அறிவிப்பிற்கும் பொருந்தும். அன்பு செய்ய வேண்டும், நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் அதை வாழ்க்கையில் செயல்படுத்தாவிட்டால் அறிவித்த நற்செய்தி பலனற்றதாய் போய்விடும். 

 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்பை பற்றி கூறுகையில், ‘நாம் அறிவிக்கின்ற நற்செய்திக்கு நம் வாழ்க்கையால் சான்று பகர நாம் ஒருபோதும் மறந்துவிட கூடாது’ என்பார். 

ஆலயத்தில் இருந்து நாம் வெளியேறுகிறோம் என்றால், நாம் நடமாடும் இறைவார்த்தையாக மாறுகிறோம். இயேசுவின் வார்த்தை நலமளித்தது, ஆறுதளித்தது, புத்துணர்வு கொடுத்தது, புதுவாழ்வு கொடுத்தது, பேய்களை ஓட்டியது, நீதியை நிலைநாட்டியது… இன்னும் பலவற்றை இயேசுவின் வார்த்தை செய்தது. இயேசுவின் வார்த்தையை சுமக்கின்ற நாமும் சமூகத்தில் நற்செயல்கள் புரிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.  

வார்த்தைகளை விட செயல்கள் தான் அதிகம் பேசும். நம் செயல்கள் (நற்செயல்கள்) பேசட்டும்.


பரிவு பகிரப்படுமா?


“பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்” - ஒசேயா 11:4

வாழ்க்கையில் இடர்களும் துயர்களும் வருவது யதார்த்தம். அந்த இடர்களிலும் துயர்களிலும் வாழ பழகிக் கொள்ள அல்ல, அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். அந்த இடர்களினின்று மீண்டு வர நமக்கு உதவுவது தான் ஒருவர் நமக்கு காட்டும் பரிவு. பரிவுமிக்கவர் பிறரின் பாரம் குறைப்பார். தன்னலம் பாராது பிறர்நலம் பேணுவார். 

‘பரிவு என்பது பிறரை நம்மை விட தாழ்ந்தவராகவோ அல்லது நம்மை உயர்ந்தவராகவோ மதிப்பிடுவது அல்ல. மாறாக நம்மை போல பிறரையும் எண்ணுவது’ என்பார் திமொத்தி மில்லர். (“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” – மத்தேயு 19:19) ஏனென்றால் பரிவில் சுழல்கிறது பார் (உலகம்).

மற்றவர்களை, நான் என்னை போல் நினைக்கும்போது, அவர்களது துன்பத்தில் தூர தள்ளி நிற்க மாட்டேன்; மாறாக அவர்களது துயரத்தில் பங்குக்கொள்வேன்.

இயேசு தன் பணிவாழ்வில் இலக்காக கொண்டிருந்ததே துயரில் துணைநிற்பதும், துயரை துடைப்பதும் தான். அதுதான் அவரது பரிவிரக்க செயல்கள். (“அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்” – மாற்கு 6:34). 

சீராக்கின் ஞான நூல் (5:5) சொல்வதுபோல “ஆண்டவரின் பரிவு எல்லையற்றது”. பரிவை அவர் பகிர்ந்தளித்தார். தந்தை கடவுளின் அன்பை உலகறிய செய்தார். இரக்கச் செயல்கள் இயங்கும் செயல்களாக மாறும்போது இவ்வுலகம் புத்துணர்ச்சி பெறும். இவ்வுலகம் புத்துணர்ச்சி பெற, எப்போது நாம் பரிவை பகிரப் போகிறோம்? 

 

கடவுளுக்கு (எந்த) காணிக்கை தேவை(யா)?


“இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்” - விடுதலைப் பயணம் 25: 2

கடவுளுக்கு காணிக்கை தேவையா? கடவுளுக்கு எந்த காணிக்கை தேவை? கடவுளுக்கு காணிக்கை தேவையில்லை. சொல்லப்போனால் நாம் அவருக்கு கொடுப்பதெல்லாம் நாம் அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டது தான். (“கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை” – சபை உரையாளர் 5:19) நாம் கடவுளுக்கு எதையும் புதிதாக கொடுப்பதில்லை, மாறாக கடவுள் நமக்கு கொடுத்ததையே நாம் அவரிடம் திருப்பிக் கொடுக்கிறோம்.  

  பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட காணிக்கைகளான தானியப் படையல்கள், நல்லுறவுக் காணிக்கைகள், அறியாமல் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள், பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள் (லேவியர் நூல் 2-5 அதிகாரங்கள்) போன்றவற்றை அடையாள முறையில் குரு மக்கள் சார்பாக கடவுள் முன் கொண்டு வருவார், அல்லது எரிபலியாக்குவார். இது அவர்கள் செய்த தவறுகளுக்கு ஈடாக செய்யப்பட்டவை. 

இத்தகைய பலிகளை, காணிக்கைகளை இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (“சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை” – எரேமியா 6:20) ஆனால் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நொறுங்கிய நெஞ்சம். பாவத்திற்கு மனம்வருந்தி பாவத்திற்கு பரிகாரம் செய்து கடவுளிடம் திரும்பி வர வேண்டும். (“கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை” – திருப்பாடல்கள் 51:17) கடவுளுக்கு ஏற்ற காணிக்கை மனம்மாறிய உள்ளமே!


அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...