24_06

திரும்பிச் செல்வதும் திரும்பி பார்த்தலும் ஒன்றே!


பொதுக்காலம் 13ஆம் வாரம்

01.07.2024 - திங்கட் கிழமை

"யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட" - பாரூக்கு 4-2

இலக்குகள் அற்ற வாழ்க்கை நம்மை திசை திருப்பிவிடும். ஒரு பணியை செய்கின்ற போது அந்த பணியின் மீதான முழுக் கவனம் தேவை. இல்லையென்று சொன்னால் நாம் செய்யக்கூடிய பணியில் தொய்வு ஏற்பட்டு விடும் அல்லது பணியில் பாதிப்பு ஏற்படும். 

ஒரு செயலை செய்து கொண்டிருக்கின்ற போது அதை விட்டு விட்டு செல்வதும், அந்த பணி செய்கின்ற வேளையில் மற்றொன்றின் மீது கவனம் செலுத்துவதும் ஒன்றே.

ஒரு பணிக்கென அழைக்கப்பட்டவர் அந்த பணியின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 8:18-22) ஒருவர் இயேசுவை பின்பற்ற விரும்புகிறார், மற்றொருவர் இயேசுவை பின்பற்றிய நிலையில், தன்னுடைய  தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கேட்கிறார். மானிட மகனுக்கு தலைசாய்க்க கூட இடமில்லை, இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம் என்ற இயேசுவுடைய இரண்டும் பதிலும் சரியானதே. 

மேலோட்டமாக பார்க்கின்ற போது, ஒருவர் இயேசுவை பின்பற்ற விரும்புகிறார் ஆனால் இயேசு அவரிடம் நேர்மறையாக பேசாமல் எதிர்மறையாக பேசுகிறார் என்று தோன்றும். 

என்னை பின்பற்றினால் துன்பங்கள் உண்டு, வாழ்க்கை எளிதானது அல்ல என்பதை இயேசு அங்கு தெளிவுபடுத்துவதற்காக அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

இரண்டாவது தந்தையை அடக்கம் செய்ய கூட இயேசு அனுமதிக்கவில்லையே என்ற கேள்வி எழும். இங்கு தந்தையை அடக்கம் செய்வதனுடைய (அடக்கம் செய்ய அவர் விரும்பிய) பின்னணி என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்தையை அடக்கம் செய்வதற்கு முன்பு சொத்துக்கள் பகிர்ந்து கொடுக்கப்படும். அதை பெறுவதற்காக, இயேசுவின் சீடராக இருக்க கூடிய அந்த நபர் செல்ல விரும்புகிறார். எனவே தான் இயேசு இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம் என்று சொல்கிறார். 

இயேசுவோடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிய வாழ்க்கையை பற்றி கவலை கொள்ளக்கூடாது. பின்னால் என்ன நடைபெறும் என்பதை குறித்தும் கவலை கொள்ளக் கூடாது. 

எதிர்கால வாழ்வை நோக்கிய பயணமாக நம் வாழ்வு இருந்தாலும் கூட நிகழ்கால வாழ்வை நிறைவாக வாழ வேண்டும். "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்" இறையரசு பணிக்கு சரியானது அல்ல.

தெளிந்த மனநிலையும் தீர்க்கமான முடிவும் கொண்டு இயேசுவை நாம் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். தடுமாற்றங்கள் தடைகள் வருகின்ற போது பின் வாங்குவது கிறிஸ்தவத்தின் அடையாளம் அல்ல. 

திரும்பிச் செல்வதும் திரும்பிப் பார்த்தலும் ஒன்றே. 

லூக்கா 9-62இல், “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்று சொல்கிறார் இயேசு.

வாழ்வு தரும் தொடுதல்...


பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு 

30.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

கவலையோடும் கண்ணீரோடும் இருக்கின்ற நபர் அருகில் இருந்து அவருடைய தோள் மீது கை போட்டு அல்லது அவருடைய கரங்களை பற்றிக் கொண்டால் எவ்வளவு பெரிய கவலைகளோடு இருக்கின்ற நபரும் (சிறிதளவாது) ஆறுதல் பெறுவார். தொடுதலுக்கு அவ்வளவு சிறப்பு உண்டு. (அந்த தொடுதலும் கூட சில நேரங்களில் சிலரால் தவறாக மாறிவிடுகிறது- Bad Touch). 

சில தொடுதல்கள் நம்பிக்கை கொடுக்கிறது, ஆறுதலை கொடுக்கிறது, அரவணைப்பை கொடுக்கிறது, துணிச்சலை கொடுக்கிறது...

தொட முடியாத இடத்தில் இருப்பவர்களை கூட உணர்வு தொட்டு விடுவதனால் சில ஆற்றல்களை, சக்திகளை மனிதர்கள் பெறுகிறார்கள். 

எடுத்துக்காட்டாக, ஒரு தாயினுடைய உணர்வின் தொடுதல் வெளிநாட்டில் இருக்கும் மகனை தேற்றுகிறது. இதை எவராலும் மறுக்க முடியாது. கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய இடைவெளி அன்பின் தொடுதலால் குறைந்து போகிறது. 

தானியேல் 10:18 இவ்வாறு சொல்கிறது, "அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்".

தொடுதலுக்கு வலுவூட்டும் ஆற்றல் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 5:21-43) இயேசுவை ஒரு பெண் தொடுகிறார், 12 ஆண்டுகள் இரத்த போக்கினால் வருந்திய அந்த பெண் நலம் பெறுகிறார், இயேசு ஒரு பெண்ணை (சிறுமியை) தொடுகிறார். இறந்த நிலையில் இருந்து அவர் மீண்டும் உயிர் பெற்று எழுகிறார்.

தொடுதலுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும்  12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணும் சரி, சிறுமியும் சரி தொடக்கத்தில் பேசவில்லை. புதுமை நடந்த பிறகு, உடலில் மாற்றம் ஏற்பட்ட பிறகு தான் பேச ஆரம்பிக்கின்றனர். 

ஆனால் இரண்டு நிகழ்வுகளிலும் இயேசு பேசுகிறார், 1. என் மேலுடையை தொட்டவர் யார் என்ற கேள்வி கேட்பதன் வழியாக, 2. சிறுமி உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு என்று சொல்வதன் வழியாக...

அவர் இறை மகன் ஆற்றல் அவரிடம் இருந்தது என்பதை காட்டிலும், அவரிடம் அன்பு நிறைந்த பார்வை இருந்தது, நலம் தர வேண்டும் என்று எண்ணம் இருந்தது. எனவே தொட்டவர்களும் நலம் பெற்றார்கள் அவர் யாரை தொட்டாரோ அவர்களும் நலம் பெற்றார்கள்.

நாமும் நம்பிக்கையோடு மற்றவரை தொடுகின்ற போது நம்மால் தொடப்பட்டவர் நலம் பெறுவார்...

இயேசுவின் தொடுதலைப் போல நம் தொடுதலும் மற்றவருக்கு வாழ்வு கொடுக்கட்டும்.


தூண் துரும்பாகிறது... துரும்பு தூணாகிறது...

29.06.2024 - சனிக் கிழமை

திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழா

இன்று திருத்தூதர்களும் திருஅவையின் இரு பெரும் தூண்களுமான புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் பெருவிழாவை தாய்த் திருஅவை கொண்டாடி மகிழ்கின்றது.

புனித பேதுரு (இராயப்பர்) யோவானின் மகனாக, கெனசரேத் ஏரிக்கரையின் பெத்சாயிதா ஊரில், சீமோன் என்ற பெயர் தாங்கிப் பிறந்தவர், புனித அந்திரேயாவின் சகோதரர். இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியபோது, இவர் கப்பர்நாகூமிற்கு குடிபெயர்ந்திருந்தார். அலெக்சாந்திரியாவின் கிளமென்டின் எழுத்துக்களின்படி பார்த்தால், புனித பேதுரு எனும் சீமோனுக்கு, திருமணம் ஆகி, குழந்தைகளும் இருந்தன. இவர் மனைவி, மறைசாட்சியாக உயிரிழந்தார் எனவும் அறிகிறோம்.

புனித பேதுருவை, இயேசுவுக்கு, அல்லது, இயேசுவை, புனித பேதுருவுக்கு, அறிமுகப்படுத்தி வைப்பவர் அவரின் சகோதரர் புனித அந்திரேயா தான். முதல் பார்வையிலேயே புனித பேதுருவின் தனித்தன்மையை இயேசு புரிந்துகொள்கிறார். பாறை எனும் பொருள்படும்படியாக, தன் தாய்மொழியான அரமேயு மொழியில், ‘கேபா’ என புதுப்பெயர் சூட்டுகிறார் இயேசு.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, புனித பேதுரு, கி.பி.67 அல்லது 68ம் ஆண்டில், அதாவது, மன்னர் நீரோவின் ஆட்சிக் காலத்தில், 13 அல்லது 14வது ஆண்டில், தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார்.

புனித பவுல் (சின்னப்பர்) கிறிஸ்துவை கண்டுணர்ந்த புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோமை குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவர்களைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

தமஸ்கு நகர் செல்லும் வழியில் கிறிஸ்துவால் தடுத்து நிறுத்தப்பட்டு, கிறிஸ்துவின் தனிப்பட்ட பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர். சவுல் என்னும் பெயரை துறந்து பவுலாக மாறியவர். கிறிஸ்துவுக்காக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டவர். கிறிஸ்துவின் திருத்தூதனாக மாறி பல்வேறு இடங்களுக்கு சென்று நற்செய்தி பணியாற்றியவர். குறிப்பாக புறஇனத்து மக்களுக்கு கிறிஸ்துவை எடுத்து சொன்னவர்.

கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் தனது உயிரையே தியாகம் செய்தவர் திருத்தூதர் பவுல்.

இருவருக்குள்ளும் பல ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் இருக்கின்றன. 

திருத்தூதர் பேதுரு சாதாரண எளிய குடும்பப் பின்னணியை கொண்டவர், படிப்பறிவற்றவர், இயேசுவால் திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இயேசுவோடு இருந்தபோது இயேசுவை முழுமையாக அறிந்து கொண்டிராதவர், எதிலும் அவசரப்படுபவர், துணிச்சல் மிக்கவர்...

திருத்தூதர்களின் கடையவனாக தன்னை மாற்றிக் கண்ட திருத்தூதர் பவுல் பெரிய குடும்ப பின்னணியைக் கொண்டவர், நன்கு கற்றுத் தேர்ந்தவர், கிறிஸ்தவர்களை கொன்றழிக்க புறப்பட்டவர், கிறிஸ்துவால் தடுத்து நிறுத்தப்பட்டவர், கிறிஸ்துவை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டவர், அதே கிறிஸ்துக்காக தனது உயிரை இழக்க துணிந்தவர்.

தூண்கள் துரும்பாவதும் துரும்பு தூணாவதும் திருத்தூதர்கள் பவுல், பேதுரு வாழ்க்கையில் நடைபெறுவதை நம்மால் காண முடிகிறது. கடவுளின் பார்வையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு கிடையாது, மேலானவர் கீழானவர் என்ற பிரிவினையும் கிடையாது.

தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் தாழ்த்தப்படுவதும், தங்களை தாழ்த்தி கொண்டவர்கள் உயர்த்தப்படுவதும் இயேசுவின் கணக்கு...

இயேசுவை அறியா நிலையிலிருந்து, அறிந்து கொண்ட பிறகு இயேசுவுக்காக தங்களது உயிரை மறைச்சாட்சியாக கொடுக்க முன் வந்த புனித பவுல் பேதுருவைப் போல நாமும் இயேசுவுக்காக, இயேசு விழுமியங்களுக்காக நம்மை இழப்போம்.

விரும்பினால் நடக்கும்...


பொதுக் காலம் 12ஆம் வாரம்

28.06.2024 - வெள்ளிக் கிழமை 

"உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவாராக!" - திருப்பாடல்கள் 20:4

நல்லது நடக்க வேண்டும் என்று தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தால் வாழ்வில் நல்லது நடக்கும். இப்படி ஆகிவிடுமோ அல்லது அப்படி ஆகிவிடுமோ என்று எதிர்மறையாக சிந்திக்க ஆரம்பித்தால் அவை தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும். 

நாம் விரும்பியது விரும்பியபடி நம்முடைய வாழ்க்கையில் நடக்கும், அதற்கு நம்பிக்கை அடிப்படையாக இருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 8:1-4) தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்கிறார். 

விரும்புவதால், நம்புவதால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அந்த நபரிடம் இருந்தது. இயேசுவும் அவரது நம்பிக்கையை கண்டு அவருக்கு நலம் கொடுக்கிறார், குருவிடமும் காட்டச் சொல்கிறார். 

குருவிடம் காட்டச் சொல்வதற்கான காரணம், குரு பரிசோதனை செய்து இவருக்கு தொழுநோய் இல்லை என்று சொன்னால் மட்டுமே இவர் ஊருக்குள், தன்னுடைய வீட்டிற்குள் நுழைய முடியும். அதற்காகத்தான் அவர் குணமானதை குருவிடம் காட்டச் சொல்கிறார் (லேவியர் நூல் 14ஆம் அதிகாரம்).

இயேசு தனக்கு குணமளிக்க வேண்டும் என்று அந்த தொழுநோயாளர் விரும்பினார், தொழுநோயாளருக்கு நலம் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இங்கு விரும்பினதால் நலம் பெற்றுக் கொண்டார் அந்த நபர்.

இயேசுவுக்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த நபர், அனைவராலும் கைவிடப்பட்டு, மனித மாண்பை இழந்து இருந்தார். அவரும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் தன் உறவினரோடு இணைக்கப்பட வேண்டும் என்று இயேசு விரும்பியதால் நலம் கொடுக்கிறார். 

நம்முடைய வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமென்று நம்முடைய சிந்தனையில் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் நிச்சயம் நாம் விரும்பியபடி நல்லது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்.

இங்கு பலர் விரும்புகிறார்கள்; ஆனால் விரும்பியபடி நடக்கும் என்று நம்பிக்கை கொள்வதில்லை.

நம்புவோம்... நல்லதை விரும்புவோம்...

இயேசுவின் பெயரால்...


பொ
துக் காலம் 12ஆம் வாரம்

27.06.2024 - வியாழக் கிழமை

நல்லவை இயேசுவின் பெயரால் நடைபெறுகிறது, கெட்டவை இயேசுவின் பெயரைச் சொல்லி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21-29) "என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்கிறார் இயேசு.

பலர், "ஆண்டவரே, ஆண்டவரே உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உன் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? என்பர். அதற்கு இயேசு உங்களை எனக்கு தெரியவே தெரியாது என்று பதில் சொல்வதாக இறைவார்த்தை பகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...

நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது. 

இன்று தெருவுக்கு தெரு பல கூட்டங்கள் இயேசுவின் பெயரைச் சொல்லி கூடுகின்றன. இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் என்று சொல்லி இயேசுவின் பெயரால் பல சுரண்டல்கள் நடைபெறுகின்றன. (இயேசுவின் பெயரால் அங்கு நல்லது நடந்தால் தவறல்ல...)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்வது போல், "நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும்.

அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.

இறைவார்த்தையைக் கேட்டு செயல்படும் (பாறை மீது வீட்டைக் கட்டிய) அறிவாளியாக நாம் இருக்கப் போகிறோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படாத (மணல் மீது வீட்டைக் கட்டிய) அறிவிலியாக இருக்கப் போகிறோமா? என்பது நம் கையில் இருக்கிறது.

இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.

பத்துக் கட்டளைகளில் 3வது, "கடவுளின் திருப்பெயரை வீணாக சொல்லாதிருப்பாயாக". 

தேவை உள்ள இடத்தில் கடவுளின் பெயரைச் சொல்லுவோம். மற்ற இடங்களில் நம் வாழ்க்கையால் கடவுளின் பெயரை மகிமைப்படுத்துவோம்.


ஏமாற்றுகிற மனிதர்களும் போலி நடத்தைகளும்...


பொதுக் காலம் 12ஆம் வாரம்

26.06.2024 - புதன் கிழமை

முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்" - 2 பேதுரு 2:1

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சில மனிதர்கள் தெரிந்து ஏமாறுகிறார்கள். சில மனிதர்கள் அறியாமல் ஏமாறுகிறார்கள். 

தெரிந்து ஏமாறுபவர்கள் பலவீனத்தால், பாச பிணைப்பினால் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். 

நாம் அறிந்த நபர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் ஏமாறுகிறோம் என்றால், தவறு ஏமாற்றுகிறவர்கள் மேல் இல்லை மாறாக ஏமாறுகிறவர்கள் அதற்கு காரணம். அதற்கு அன்பு ஒரு சாக்கு போக்கு. 

நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிக எளிது. ஆனால் தீயவர்களை அவருடைய செயல்களோடு அடையாளம் காண்பது மிக மிகக் கடினம். காரணம் தீமை செய்கிறவர்கள் எளிதாக அகப்பட்டு விட மாட்டார்கள். ஆனால் தீமைக்கும் ஒரு முடிவு உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:15-20) போலி இறைவாக்கினரை குறித்து, நல்ல கனிகொடாத மரங்களை குறித்து இயேசு எச்சரிக்கிறார்.

இயேசுவின் காலத்திலும் பல்வேறு போலி இறைவாக்கினர்கள் மக்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள, தங்கள் நடத்தையால் உண்மை உள்ளவர்களாக இல்லாது இருந்தும், வார்த்தைகளால் மாய வளைக்குள் மக்களை சிக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இயேசு அறிவுறுத்தினார்.

நல்லது செய்கிறவர்கள் நல்லவற்றால் அடையாளப்படுத்தப்படுவார்கள். தீமை செய்கிறவர்கள் தீமையை மறைத்து செய்வதனால், எளிதாக அவர்களை அடையாளம் காண முடியாது. 

ஆனால் தீமை செய்கிறவர்கள் கொடுக்கக்கூடிய பலன், தீமையாக தான் இருக்கும். கெட்ட மரம் நல்ல கனிகளை ஒருபோதும் கொடுக்க முடியாது. 

'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது போல் போலி வாழ்க்கை வாழக்கூடியவர்கள், போலியான மனநிலை உடையவர்கள் நிச்சயம் தாங்கள் செய்யும் சூழ்ச்சிகளால் கையும் களவுமாக பிடிபட்டு போவார்கள். 

போலி நடத்தை வாழாதவாறு பார்த்துக்கொள்வோம். ஏமாற்றுகிறவர்கள் ஒருநாள் நிச்சயம் ஏமாற்றப்படுவார்கள்.

உண்மையான வாழ்க்கை முறையும் உண்மையான மனநிலையும் நம் வாழ்வை ஒருநாள் உயர்த்தும். 

போலித்தனம் இல்லாத நேரிய வாழ்க்கை வாழ்வது நமக்கான கைம்மாறை நிச்சயம் பெற்றுக் கொடுக்கும்.

இடுக்கமான வாயிலும் கடினமான செயலும்...


பொதுக் காலம் 12ஆம் வாரம்

25.06.2024 - செவ்வாய்க் கிழமை

"அன்பார்ந்தவர்களே, இவ்வாறு நாங்கள் பேசினாலும், உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் மேலான வழியில் நடந்து, மீட்புக்குரியவர்களாய் இருக்கிறீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" - எபிரேயர் 6:9

நம்மை நாம் வருத்திக்கொண்டு, எந்த ஒரு கடினமான செயலையும் செய்ய விரும்புவதில்லை. ஒருவேளை அந்த வருத்தக்கூடிய செயலின் காரணமாக நல்லது நடைபெற்றாலும் கூட எந்த ஒரு வலியையும் வேதனையும் நம்மால் தாங்க முடிவதில்லை. 

நமக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்றால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். விதைப்பதை தானே அறுவடை செய்ய முடியும், விதைக்காத ஒன்றை எதிர்பார்ப்பது நியாயமற்ற செயல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:6,12-14) கடினமான செயல், இடுக்கமான வாயில் பற்றி இயேசு பேசுகிறார். கடினமான செயல் என்பது மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வது (நமக்கு பிறர் என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்). 

இடுக்கமான வாயில் என்பது நாம் மீட்பை பெறுவதற்கான கடினமான பாதையை கடந்து செல்வதை குறிக்கிறது(இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; வாழ்வுக்கு செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகலானது). 

இடுக்கமான வாயில் பல தியாகங்களை, இடர்களை, துன்பங்களை குறிக்கிறது. அதை கடந்து வந்த பிறகு வெற்றி தான் என்பதை உணர்ந்தால் இடுக்கமான வாயிலை கடப்போம். 

குறுக்கு வழியை கண்டுபிடிப்பவர் பலர். ஆனால் குறுகலான பாதையின் வழியே செல்பவர் சிலர். 

குறுக்கு வழியினால் ஒரு செயல் விரைவாக செய்து முடிக்கப்படும். ஆனால் என்றும் நீடித்த பலனை தராது. ஆனால் குறுகலான பாதை கடப்பதற்கு கடினமானது; இலக்கை சென்று அடைவதற்கு பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். ஆனால் இலக்கை அடையும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

இடுக்கமான வாயிலும் கடினமான செயலும் மீட்பு என்னும் வாழ்வை கொடுக்கும்.

நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை நாம் மற்றவருக்கு செய்தால் இங்கு தீமைக்கு இடம் என்பது இல்லை. நமக்கான பாதையில் (அது குறுகலோ இடுக்கமானதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) நாம் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நமதே!

நல்லதை செய்து நல்வழியில் நடப்போம்...

மனிதருள் உயர்ந்தவர் புனித திருமுழுக்கு யோவான்......

 

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

24.06.2024 - திங்கட் கிழமை

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" - மத்தேயு 11:11

இயேசு, அன்னை கன்னி மரியாள் ஆகியோரைத் தொடர்ந்து திருஅவை வழிபாட்டு ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடப்படுவது திருமுழுக்கு யோவானுக்கு மட்டும் தான். 

'மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை' (லூக் 7:28) என்று இயேசுவால் புகழாரம் சூட்டப்பட்டவர். லூக்கா நற்செய்தியாளரை (லூக்கா 1:63) பொறுத்தவரை 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' என்பதை வாய்பேச முடியாத தந்தை செக்கரியா எழுதுபலகை ஒன்றை வாங்கி எழுதுகிறார்.

ஆண்டவர் இயேசு சொல்வது போன்று திருமுழுக்கு யோவான் சாதாரண மனிதர் அல்ல, அவர் மனிதராகப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 11:11), மற்ற இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கலாம், ஆனால் திருமுழுக்கு யோவானோ தாயின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் (லூக் 1: 41).

மற்ற இறைவாக்கினர்கள் மெசியாவைக் குறித்து முன்னறிவித்தார்கள், ஆனால் திருமுழுக்கு யோவானோ ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தார், அவர் வந்தபோது சுட்டிக்காட்டினார், அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அதனாலேயே திருமுழுக்கு யோவான் மற்ற எல்லா இறைவாக்கினர்களையும் விட உயர்ந்தவராக இருக்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களான செக்கரியாவும் எலிசபெத்தும் நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்கள். இருந்தபோதிலும், அவர்கள் கடவுளுடைய பார்வையில் நேர்மையுள்ளவர்களாக இருந்தார்கள் (லூக் 1:6), அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.

புனித திருமுழுக்கு யோவான் மெசியாவிற்கு முன்னோடியாக இருக்கிறார். ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்து, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, அறநெறிக்குப் புறம்பாக வாழ்ந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவராலேயே கொல்லப்பட்டு இறந்தார். 

திருமுழுக்கு யோவான் விவிலியத்தில் வந்த கடைசி இறைவாக்கினராக இருந்தாலும் அவர் மனிதர்களாய் பிறந்தவர்களுள் உயர்ந்தவராக விளங்குகின்றார்.

இந்நாளின் புனிதர் நமக்கு உணர்த்தும் செய்தி மனிதர்களாய் பிறந்தவர்கள் கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் தான்.

தாய்க்கு தன் பிள்ளை தவறு செய்தாலும் நல்ல பிள்ளையாகத்தான் தெரியும். ஊரார் தூற்றினாலும் தன் பிள்ளையை ஒருபோதும் தாய் தூற்ற மாட்டார்.

தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்றவர் கடவுள். நாம் வாழக்கூடிய வாழ்க்கை நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும். 

பயன்படா வாழ்க்கை வாழ்வது வீண். 

புனித திருமுழுக்கு யோவான் தன் வாழ்வை தியாகம் செய்து, துறவு வாழ்வு மேற்கொண்டு தன்னையும் தூய்மைப்படுத்திக் கொண்டார், மற்றவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறவும் உதவினார்.

பண்பட்ட நிலமாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள இவர் தன்னை இழந்தார். மனிதராய் இருந்தாலும் மனிதருள் உயர்ந்தவராய் மாறினார். 

கடவுள் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை, கைவிடுவதில்லை. நாம் அவருடைய சாயலை, உருவை பெற்று இருக்கிறோம் என்பதை மனதில் வைத்து அவருடைய உருவுக்கும் சாயலுக்கும் களங்கம் ஏற்படுத்தாமல் மனித மாண்பை உயர்த்தி பிடிப்போம்.



யார் இவர்??? மன நிறைவுள்ளவர்


பொதுக் காலம் 12ஆம் வாரம்

23.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

“ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார் - லூக்கா 9:20

ஒருவரை சுட்டிக்காட்டி "யார் இவர்?" என்று கேட்கப்படும் கேள்விக்கு பதில் உண்டு. ஆனால் அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். 

பதில் சொல்லும் ஆளைப் பொறுத்து அது அமையும். பிடித்த நபர் என்றால் நேர்மறையான பதிலும் பிடிக்காத நபர் என்றால் எதிர்மறையான பதிலும் வரும். 

பல நன்மையான காரியங்களை செய்பவர்கள் புகழ் விரும்பாமல், மறைத்து எல்லாவற்றையும் செய்வதனால் அவர்கள் அடையாளம் காட்டப்படுவதில்லை. சிறிதளவு நன்மை செய்யக்கூடியவர்கள் தம்பட்டம் அடித்து தங்களை பெருமைப்படுத்தி எல்லாவற்றையும் செய்வதனால் அவர்கள் புகழ் எங்கும் பரவி இருக்கிறது. இப்படிப்பட்ட நபரை குறித்து யார் இவர் என்ற கேள்வியை கேட்டால், "இவரா! இவர் உதவிகள் செய்யக்கூடியவர், தம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுக்கக்கூடியவர்" என்று பதில் வரும்.

நாம் செய்யக்கூடிய செயல்கள் நமக்கு மற்றொருவரிடமிருந்து பாராட்டை பெற்றுக் கொடுப்பதை விட, நாம் செய்யும் செயல்கள் நமக்கு மனநிறைவை கொடுக்க வேண்டும். 

பெருமைக்காகவும் புகழுக்காகவும் செய்யப்படக்கூடிய செயல்களால், மற்றவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதே வேளையில் மற்றவர் நம்மை பாராட்ட தவறிவிட்டால் அது ஆழ்ந்த வருத்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். 

நம்மை குறித்து நமக்குள் இருக்கக்கூடிய மன நிறைவு தான் நமக்கு தேவை. 

இயேசு முழு மன நிறைவை பெற்றவர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:35-41) இயேசு வெளிப்புற அலைகளினால் தடுமாறாதவராக இருந்தார். காரணம் அவருக்குள் மனம் உறுதியாய் இருந்தது. வெளியே நடக்கக்கூடிய அனைத்தும், தூக்க நிலையில் இருந்தாலும் அவருக்கு தெரியும். ஆனால் அவருடைய சீடர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள் அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என்று. 

தாங்கள் எழுப்பிய போது தான் அவர் எழுந்தார் என்று எண்ணிக்கொண்ட சீடர்களுக்கு அவர் நம்பிக்கை என்னும் கொடையை பரிசாக கொடுக்கிறார். சீடர்களின் பார்வையில் அவர் உறக்கத்திலிருந்து எழுந்தார்; இயேசுவின் செயல்களினால் அவர்கள் நம்பிக்கை குறைவிலிருந்து நிறைவை பெற்றார்கள்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் வெளிப்புற அலைகள், அடக்குமுறைகள், கொடுமைகள், தாக்குதல்கள் ஒரு ஆட்டத்தை கொடுக்கும். தன்னை கடவுளாக பாவித்து கொள்ளக் கூடியவர்கள் மற்றவர்களை மனிதராக கூட மதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் சிக்கிக் கொள்கின்ற போது பல்வேறு குழப்பமான தருணங்கள் நம்மை நிம்மதியற்ற நிலைக்கு தள்ளிவிடும்.

இயேசுவுக்கும் இத்தகைய காரணிகள் தடங்கல்களாக இருந்திருக்க கூடும். ஆனால், அந்தத் தடங்கல்களை எல்லாம் அவர் தவிடு பொடியாக்கினார். அதனால்தான் காற்றையும் கடலையும் கடிந்து கொண்ட போது மிகுந்த அமைதி உண்டாயிற்று. அப்போது, சீடர்கள் இவரைக் குறித்து "இவர் யாரோ?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

உட்புற அமைதி இருந்தால், வெளிப்புற சலனங்கள் நம்மை தாக்குவதில்லை. அதற்கு இயேசு ஒரு முன்மாதிரி.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை வழி நடத்துபவராக, மன அமைதியோடு உறங்கிக் கொண்டிருப்பவராக, காற்றையும் கடலையும் கடந்து கொள்பவராக, அச்சத்தை போக்குவராக, நம்பிக்கையை மிகுதி படுத்துபவராக படம்பிடித்து காட்டுகிறது. 

இயேசு யார்? என்று நற்செய்தி வாசகம் சுட்டிக்காட்டி விட்டது. 

நாம் யார் என்று நாம் எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறோம். புற காரணிகளால் மன நிறைவு இழந்து நம்மை நாமே சிதைத்து கொண்டிருக்கிறோமா?, அல்லது அக அமைதியினால் புறக் காரணிகளை (இடர்களை) சீர்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கடவுள் நம்முள் உறைபவராக, கடந்து உள் நிற்பவராக இருக்கிறார். இதை உணர்ந்தால் எத்தகைய இடர், துன்பம், அலைகள் வந்தாலும் தடுமாற்றம் நமக்கில்லை, நாம் யார் என்று நம்மால் அடையாளம் காட்ட முடியும்.

ஒன்றை விட ஒன்று (எப்போதுமே) உயர்ந்தது!!!


பொதுக் காலம் 11ஆம் வாரம்

22.06.2024 - சனிக் கிழமை 

"ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே" - 2 சாமுவேல் 22:32

இன்று அன்புக்குரியவர்களாய் இருப்பவர்கள் நாளை பகைவராய் மாறுவதும், இன்று வெறுப்போடு இருப்பவர்கள் நாளை நண்பர்களாவதும் உண்டு. ஏனென்றால் ஒன்றிலிருந்து ஒன்று மாறிக்கொண்டே இருக்கும். 

நமக்கு ஏற்றார் போல் பேசுபவர்கள் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். நம் பக்கம் உள்ள தவறை சுட்டிக் காட்டுபவர்கள் நமக்கு விரைவில் (நம்மால்) பகைவர்களாய் மாறுவதும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:24-34) எவரும் இரு தலைவருக்கு பணிவிடை செய்ய முடியாது, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என கவலை கொள்ளாதீர்கள், கடவுளுடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் (உணவு, தண்ணீர், உடை, நல்வாழ்வு) உங்களுக்குச் சேர்த்து கொடுக்கப்படும் என்கிறார் இயேசு. 

இரு தலைவர்கள் = கடவுள்-செல்வம், உண்மை-பொய்மை, நீதி-அநீதி, பிறர் நலம்-தன்னலம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுதல் இயல்பாக இருக்கிறது. ஏனென்றால் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக தெரிகிறது. தனக்கு நலம் பயப்பவை தனக்கு மகிழ்ச்சி கொடுப்பவை எப்போதும் தனக்கு சிறந்தது தான். 

ஆனால் இயேசு, கடவுளது ஆட்சியையும், கடவுளுக்கு ஏற்புடையவற்றையும் நாட நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

பல வேளைகளில் வாழ்வில் எழக்கூடிய கவலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றன. கடவுளை சார்ந்து இருப்பதினால் என்ன பயன்? கடவுளுக்குரியவற்றை தேடுவதால் என்ன பயன்? என்ற குழப்பத்திற்குள் ஆழ்த்தி விடுகிறது. 

நேர்மையின் பக்கம் இருப்பதைவிட தீமையின் பக்கம் இருப்பது எவ்வளவோ நல்லது என்ற மாயையை கொடுத்து விடுகிறது.

எல்லோரும் பொய் பேசுவதனால் பொய் ஒருபோதும் சரியானதாக மாறிவிடாது.

எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கக்கூடிய பகுத்தறிவு நம்மிடமிருக்கிறது. 

தற்காலிக மகிழ்ச்சி கொடுப்பதை தேர்ந்தெடுப்பதை விட நிரந்தர மகிழ்ச்சி கொடுக்கும் கடவுளின் அரசை நாம் தேர்ந்து கொள்வோம்.

கடவுளின் அரசை தேர்ந்தெடுப்பதை விட  சிறந்தது வேறொன்றுமில்லை...

விண்ணகத்தில் செல்வம் சேர்க்க...


பொதுக் காலம் 11ஆம் வாரம்

21.06.2024 - வெள்ளிக் கிழமை

நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கௌதாரி போன்றோர்; தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்; இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்" - எரேமியா 17:11

செல்வங்களை சேர்த்து வைக்க எல்லோருக்கும் ஆசை. சிலருக்கு அழியா செல்வத்தை சேர்த்து வைக்க ஆசை. சிலருக்கு பிறரை அழித்தாவது செல்வம் சேர்க்க வேண்டும் என்று ஆசை. 

மண்ணுலகில் நடைபெறும் போட்டி, பொறாமைக்கு அடிப்படை காரணம் பணம், செல்வம், பதவிவெறி. பணத்திற்கு, செல்வத்திற்கு, பதவிக்கு பலமில்லை என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டால் இங்கு மனிதர்கள் மனிதர்களாக வாழ ஆரம்பித்து விடுவார். பிறரின் உரிமையை பறித்து, பிறரின் உயிரைப் பறித்து செல்வம் திரட்டி வைக்க இங்கு திருட்டுக் கூட்டம் உலாவிக் கொண்டிருக்கிறது. 

ஒருவர் தான் சேமித்த செல்வத்தை தன்னுடன் எடுத்துச் செல்வதில்லை என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. சபை உரையாளர் நூல் 2:21 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே". வெற்று உடம்போடு வந்த நாம், வெறும் கையாக தான் திரும்பிச் செல்ல வேண்டும். 

இதற்கு இடையில் போட்டி பொறாமை, கர்வம், ஆணவம் இன்னும் பல...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:19-23) விண்ணகத்தில் செல்வத்தை சேர்த்து வைக்க இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். கண் தான் உடலுக்கு விளக்கு கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால் உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும் என்பதை இயேசு தெளிவுற எடுத்துச் சொல்கிறார். 

நம்முடைய கண்ணின் பார்வை தெளிவாக இல்லை என்றால் நம்முடைய எல்லா உறுப்புகளும் செயலிழந்து போய்விடும். சரியான வழிகாட்டுதல் இல்லாத கூட்டம் நிலை தடுமாறுவது போல இருள் அடைந்த கண்ணால் உடல் முழுவதும் இருளுக்குள் மூழ்கி விடும். 

பலரின் கண் இருள் அடைந்து காணப்படுவதால் மண்ணக செல்வங்களின் மீது மோகம் அதிகமாக இருக்கிறது. சேர்த்து சேர்த்து சோர்ந்து போய், களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்டத் திட்டமிடுபவர்கள் இங்கு ஏராளம். அறிவற்ற செல்வனுக்குச் சொல்லப்பட்ட வார்த்தை "அறிவிலேயே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக்கா 12:20) இந்த கேள்விகள் ஒவ்வொரு நாள் இரவிலும் நம்மால் கேட்கப்பட வேண்டும்.

விண்ணக செல்வம் என்பது நல் வாழ்க்கையை குறிக்கிறது. 

கடவுள் விரும்பும் இறையரசுக்கான அந்த பண்புகளை நம்முடைய வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க, நம்முடைய விண்ணக செல்வங்கள் கூடிக்கொண்டே இருக்கும். 

பூச்சியும், துருவும், திருடரும் அழிக்க இயலாத அந்த விண்ணக செல்வத்தை நாம் சேமிக்க தொடங்குவோம். சேமிப்பின் இறுதியில் நமக்கான கைம்மாறை வட்டியோடு பெற்றுக் கொள்வோம்.

வாழ்வே இறைவேண்டலாக... புகழ்ச்சியாக...

பொதுக் காலம் 11ஆம் வாரம்

20.06.2024 - வியாழக் கிழமை

"கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை" - சபை உரையாளர் 5:19

கடவுளை வாயார போற்றி விட்டு, அதே வாயால் மனிதரை தூற்றும் நாவுகள் தான் நம் நாவுகள்.

நல்லது செய்தால் நல்லது விளையும். தீமை செய்தால் தீமை தான் விளையும். (பருவநிலை மாற்றம் போல நல்லது செய்ததற்கு தீமையும், தீமை செய்ததற்கு நல்லதும் விளைவது போல இருக்கிறது). ஆனால் நல்லது செய்யாமல் நல்லதை பெற எண்ணுவது நூல் இல்லாமல் பட்டம் விட எண்ணுவது போலாகும். 

எது எப்படியோ, மன்னிக்க இயலாதவருக்கு மன்னிப்பு கிடைக்காது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:7-15) இறைவேண்டலும் வாழ்க்கை நெறி முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

செய்கிறவற்றையெல்லாம் செய்துவிட்டு, இறைவேண்டல் (புகழ்ச்சியாக, நன்றியாக, விண்ணப்பமாக) செய்வது கடவுளையே இழிவுப் படுத்துவதற்கு சமம். சொற்களை அடுக்கிக் கொண்டே போவதாலோ, வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துவதாலோ இறைவேண்டல் ஒருபோதும் கேட்கப்படுவதில்லை.

நல்மனமும், நல் வார்த்தைகளும், நற்செயல்களும் இணைகின்ற போது இறைவேண்டல்கள் பலனை கொடுக்கின்றன.

நம்முடைய தேவைகளை கடவுள் அறிந்திருக்கிறார். ஆனால் நம்மோடு இருப்பவர்களை நாம் கண்டு கொண்டிருக்கிறோமா? என்பது கேள்வியே. கண்ணால் காணக்கூடிய மனிதரை அன்பு செய்யாமல் கடவுளை நாம் ஒருபோதும் அன்பு செய்ய முடியாது. 

நம்முடைய குற்றங்களை கடவுள் மன்னிக்க, தீமையிலிருந்து நம்மை பாதுகாக்க நாம் இறைவேண்டல் செய்கிறோம்.

ஆனால் மற்றவரின் குற்றங்களை மன்னிக்க, மற்றவர்களை துன்பங்களிலிருந்து பாதுகாக்க நம்முடைய மனம் தயங்குகிறது.

நாம் எதை செய்கிறோமோ (நல்லதோ/கெட்டதோ) அது நமக்கு திருப்பிச் செய்யப்படும்.

வேண்டல்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல நம் வாழ்க்கையாக மாறட்டும்.

நாம் மற்றவருக்கு செய்யக்கூடிய நன்மைகளை நாம் நம்முடைய இறைவேண்டல் வழியாக கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம்.

போலியான செயல்கள்... போலியான வாழ்க்கை...

 


பொதுக் காலம் 11ஆம் வாரம்

19.06.2024 - புதன் கிழமை

"நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்" - மத்தேயு 7:19,20

ஏமாற்று வார்த்தைகள், ஏமாற்று செயல்கள் இவைகள் தான் மனிதரை கவர்ந்து இழுக்கிறது. உண்மையை உரக்கச் சொல்பவர்கள் நிராகரிக்கப்படுவதும் பொய்யை அழுத்தமாக பேசுபவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது தான் உலகின் எதார்த்தமாக இருக்கிறது. காரணம், போலிகளை நம்புவோர் அதிகம்.

போலி நபர்கள், போலியான வார்த்தைகள், போலியான செயல்கள் நிலைத்திருக்காது என்பதை அறிந்திருந்தாலும் போலித்தனத்தை தான் நாம் தலையில் தூக்கி வைக்கிறோம். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று செய்யக்கூடியவை சொல்லக்கூடியவை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கவர்ச்சியினால் தூண்டப்பட்டவர்கள் போலிகளிடம் மாட்டிக் கொள்கிறார்கள். 

தொடக்கம் போலியானால் முடிவும் போலி தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:1-6,16-18) தர்மம், இறைவேண்டல், நோன்பு ஆகியவை  பற்றி இயேசு எடுத்துச் சொல்கிறார். இவை மூன்றும் நம்மையும் கடவுளையும் இணைப்பதாக இருக்க வேண்டும். நமக்கான கைம்மாறை மனிதரிடமிருந்து பெற்றுக் கொண்டால், கடவுளிடமிருந்து நமக்கு கைம்மாறு கிடைக்காது.

கடவுளை திருப்திபடுத்த எதுவும் இங்கு செய்யப்படுவதில்லை. மனிதர்களை திருப்திபடுத்தவே, மனிதர்களின் கவனத்தை ஈர்க்கவே எல்லாம் செய்யப்படுகிறது.

ஆடம்பரம், பகட்டான வாழ்க்கை, ஆணவம் நிறைந்த சொற்கள் இவைகள் தான் மனிதரிடம் மேலோங்கி இருக்கிறது. இறைவேண்டலின் தாழ்ச்சியோ, நோன்பின் மகத்துவமோ, தர்மத்தின் ஆற்றலோ நம்மால் உணரப் படுவதில்லை.

மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக் கொண்டு போவது தான் இறைவேண்டல் என்ற பார்வையும், செய்யும் தர்மத்தை அடிக்கடி சொல்லிக் காட்டுவதும், நோன்பு இருப்பதாக தம்மை பெருமைப்படுத்தி கொள்வதும் உண்மையான செயல்பாடுகள் அல்ல. போலியான வாழ்க்கை முறை தான் இவைகள் என்பதை உணர மறுக்கின்றோம். 

இறை அச்சம் இருந்தால் போலித்தனம் நம்மை விட்டு தூர போகும். 

நிலையில்லா வாழ்வில் நிலையற்ற செயல்களை செய்யாமல், நிறை வாழ்வுக்கான செயல்களை செய்து அதன் வழியாக கைம்மாறை பெறுவோம்.

மக்கள் பார்க்க அறச் செயல் செய்யாமல், மறைவாய் நல்லதை செய்வோம். நல்லவர்களாய் வாழ்வோம்.

உள்ள(த்)தில் நிறைவு...

 


பொதுக் காலம் 11 ஆம் வாரம் 

18.06.2024 - செவ்வாய்க் கிழமை

அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" - உரோமையர் 13:10

தேவைகள், எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் போது நிறைவு கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். 

என் தேவைகளை மற்றவர்கள் அறிந்து கொள்வதும் மற்றவர்களின் தேவைகளை நான் அறிந்து கொள்வதும் மட்டும் வாழ்க்கைக்கு போதாது. நம்மால் இயன்றதை மற்றவருக்கு செய்ய வேண்டும். அதுதான் நிறைவிலும் நிறைவு கொடுக்கும். 

என்னுடைய தேவைகளை நிறைவு செய்பவரை நான் கண்டுக் கொண்டால் மறுபடியும் அவர் என்னுடைய தேவைகளை நிறைவு செய்வார். 

கொடுத்து திரும்ப வாங்குதல் அல்ல நிறைவு... கொடுப்பதன் வாயிலாக உள்ளத்தில் பெறுவது தான் நிறைவு.

எனக்கு பயன் தராத எனக்கு எதையும் திரும்பச் செய்ய இயலாத நபருக்கு நான் எப்படி ஒன்றை செய்ய முடியும்? என்று கேள்வி நம்மில் எழலாம். 

இயேசுவின் நிறைவு என்பது தன்னைக் கடந்து மற்றவர் நலனில் அக்கறை கொள்வதிலும் மற்றவரை உயர்த்தி விடுவதிலும் தான் இருந்தது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:43-48) "பகைவரிடம் அன்பு, துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல்" செய்ய இயேசு சொல்கிறார்.

இது நாம் நிறைவை பெறுவதற்கான ஒரு சோதனை ஓட்டம். 

என்னை துன்புறுத்தக்கூடிய அல்லது என் எதிரியாய் இருக்கக்கூடிய நபருக்கு நான் எப்படி நல்லது செய்ய முடியும்? அவரின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்? 

"இறைவன் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழ, மழைப் பெய்ய செய்கிறார்".

இங்கு இறைவன் நல்லோர் மேல் மட்டும் மழையை பொழியச் செய்தார் என்றால் தீமை செய்வோரின் நிலை என்னவாகும்? கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை காரணம் அவரிடம் நிறைவு குடிக் கொண்டிருக்கிறது. 

நாம் நன்மை செய்வோருக்கே நன்மை செய்வதனால், அன்பு செலுத்துவோரிடமே அன்பு செலுத்துவதினால் அந்த இடத்திலேயே கைம்மாறை பெற்று விடுகிறோம்.

அதனால் நமக்கான கைம்மாறு விண்ணகத்தில் சேமிக்கப்படுவதில்லை.

நம் விண்ணக தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவராய் இருப்போம். நம்மில் குடிகொள்ளும் நிறைவு ஆள்பார்த்து செயல்படாத, மனதில் வெறுப்பு இல்லாத, சுயநலம் இல்லாத நிறைவாக இருக்கட்டும். எதிர்பாராமல் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்யும் அன்பாக இருக்கட்டும்.

உள்ள(த்)தில் நிறைவுள்ளருக்கு எல்லாம் நிறைவாய் கிடைக்கும்.

பதிலுக்கு பதில் செய்ய வேண்டாம்...


பொதுக் காலம் 11ஆம் வாரம்

17.06.2024 - திங்கட் கிழமை

"பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்" - 1 பேதுரு 2:23

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை கோபம், எரிச்சல், பழிக்கு பழி, அதையும் கடந்து நாம் பெற்ற வலியை விட அவர்கள் இரண்டு மடங்கு பெற வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் இழிநிலை காரியங்களும் அதன் விளைவுகளும். 

மன்னிப்பு, மறத்தல் இந்த வார்த்தை  எல்லாம் அகராதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றன. நான் அனுபவித்த கொடுமை அவனு(ளு)ம் அனுபவிக்க வேண்டும். 

இரக்கம் காட்டுவதால் என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம்? என்ற எண்ணம் பிறர் செய்ய தவறுகளை மன்னிக்க முடியா மனநிலையை நமக்கு கொடுத்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:38-42) "உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள், உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து உங்கள் அங்கி எடுத்துக் கொள்ள விரும்பினால் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள், உங்களை ஒரு கல் தொலைவர கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள், கேட்கிறவர்களுக்கு கொடுங்கள்" என்று இயேசு தன் திருவாய் மலர்ந்து போதிக்கிறார். 

போதனை எல்லாம் வாழ்வாக்கப்பட்டால் இங்கு பிரச்சனை ஏது? ஆனால் பழைய ஏற்பாட்டில் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" என்று கூறப்பட்டிருப்பதை இயேசு இங்கு கோடிட்டு காட்டுகிறார். விவிலியம் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" (விடுதலைப் பயணம் 21:24, லேவியர் 24:20, இணைச் சட்டம் 19;21) என்று சொல்வது சரியான பார்வையா? என்ற கேள்வி எழுகிறது. எதற்காக இந்த சட்டம் கொடுக்கப்பட்டது என்ற பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழைய ஏற்பாட்டு காலச் சமூக சூழலில், ஒரு இனத்தைச் சார்ந்த ஒரு நபர் மற்றொரு இனத்தைச் சார்ந்த நபரை கொலை செய்துவிட்டாலோ அல்லது அடித்து துன்புறுத்தினாலோ தாக்கப்பட்ட நபரின் இனத்தை சார்ந்தவர்கள் ஒன்றுக் கூடி தாக்குதலை ஏற்படுத்திய நபரின் இனத்தில் உள்ள அனைவரையும் அழித்து விடுவார்கள். இதுதான் வழக்கமாக இருந்தது. எனவே யார் தவறு செய்திருக்கிறாரோ (என்ன இழப்பை ஏற்படுத்தியிருக்கிறாரோ), அவருக்கு நீங்கள் அதே தண்டனை கொடுக்க வேண்டும். எல்லோரையும் அழிக்க கூடாது என்ற பின்னணியில் தான் "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்" என்று சொல்லப்பட்டது.

ஆனால் இயேசு அதையும் மாற்றி நமக்கு எதிராக தவறு செய்தவர்களை மன்னித்து விட சொல்லுகிறார்.

ஒருவர் கன்னத்தில் நம்மை அறைகிறார் என்றால், சொல்ல முடியாத அளவுக்கு கோபம் நமக்குள் எழும். ஆனால் இயேசு சொல்லக்கூடிய பதில் மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். 

இதிலும் ஒரு யுக்தி இருக்கிறது. உரோமையர் 12:20,21இல், "உன் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால் அவன் குடிக்கக் கொடு; இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

நமக்கு எதிராக தீங்கு செய்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய நன்மையான காரியம் தான் அவர்களுக்கான பாடம் (திருப்பி அறைதல்).

தீமை செய்பவருக்கு தீமையை செய்து கொண்டிருந்தால் நாம் நன்மையை காண்பது எப்போது? 

'இழப்பதற்கு எதுவும் இல்லை' என்று சொல்வார்கள், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய நன்மைத் தனத்தை இழக்காமல் இருப்போம். 

ஒருவர் செய்த தீமைக்கு பதில் நன்மை செய்வோம்.

கடுகும் இறையாட்சியும்... உவமையும் உருவகமும்...

  


பொதுக்காலம் 11 ஆம் ஞாயிறு 

16.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

புரியும் வகையில் பேசினாலே சில வேளைகளில் நமக்கு புரிவதில்லை. புரியாத ஒன்றை பேசினால் எப்படி புரிந்து கொள்வது?

உவமை, உருவகம் என்பவை அந்த புரிந்துகொள்ள இயலா வரிசையில் தான் வருகின்றன. ஒன்றை பேசும் பொழுது நேரடியான கதாபாத்திரங்களை, நேரடியான ஆட்களை பயன்படுத்துவதற்கு முன், ஒரு பொருளையோ அல்லது ஒரு நிகழ்வையோ சுட்டிக்காட்டி அதன் வழியாக செய்தியை கொடுப்பதாக இந்த உவமை இருக்கிறது.

உருவகப்படுத்தி பேசும் பொழுது, நேரடியாக சில வேளைகளில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த உருவகம் வழியாக ஒன்று உருவகப்படுத்தப்படுகிறது என்பதை நாம் நிச்சயம் புரிந்து கொள்ளலாம்.

சில மறைபொருள்கள் உருவகம் வழியாகவே வெளிக்காட்டப்படுகின்றன. பழைய ஏற்பாட்டில் மனிதர்கள் திராட்சை கொடியோடும் மரங்களோடும் ஆட்டுமந்தையோடும் உருவக படுத்தப்பட்டனர். ஒரு சாதாரண திராட்சைக் கொடிக்கோ, மரத்திற்கோ, ஆட்டுக்கோ அந்த உரிமையாளர் அல்லது ஆயன் தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்யும்போது, எல்லாவற்றையும் படைத்த இறைவன் தனக்குரியவர்களை தனக்குரியவற்றை கைவிட்டு விடுவாரா? 

நிச்சயம் எல்லாவற்றிலும் உறைந்திருக்கும் இறைவன் எல்லாவற்றையும் புத்துணர்வு பெறச் செய்வார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:26-34) இறையாட்சி கடுகு என்னும் உருவகத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. 

முதலாவதாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லப்படக்கூடிய கடுகு சிறிய விதை, ஆனால் அது முளைத்தெழும் போது எல்லா செடிகளையும் விட பெரிதாகி வானத்து பறவைகள் அதன் நிழலில் தங்கும் அளவுக்கு பெருங்கிளைகள் விடும் என்று சொல்லப்படுகிறது. இதையே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

கடுகு என்பது அளவில் சிறியது, ஆனால் நம்முடைய பகுதி, நம்முடைய நாட்டை பொறுத்தவரை அதனுடைய வளர்ச்சியும் சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் இஸ்ரயேல் நாட்டில் வளரக்கூடிய இந்த கடுகு என்பது ஒரு பெரிய மரமாக வளர்ச்சியை கொடுத்து மற்றவற்றிற்கு தங்கும் இடத்தையும் கொடுக்கிறது. நம்முடைய பகுதி கடுகு செடியோடு இதை நாம் புரிந்து கொள்ள முடியாது. 

இத்தகைய கடுகு செடியோடு இறையாட்சி ஒப்பிடப்படுகிறது. 

கடுகு என்னும் விதை இறையாட்சியோடு ஒப்பிடப்படுவதற்கு காரணம் மரத்தின் வளர்ச்சி, விரிவாக்கும் இயல்பு, பலன் கொடுக்கும் பண்பு.

அடுத்ததாக, விதைக்கப்பட்ட இந்த சிறிய விதை பரவி, பெரும் பலனை கொடுக்கிறது. 

அதேபோலத்தான் இறையாட்சி என்னும் விதை இயேசுவால் இவ்வுலகில் விதைக்கப்பட்டது. விதைக்கப்பட்ட அந்த விதை இன்று விருட்சமாகி பலன் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதனுடைய பலனை யாராலும் தடுக்க முடியவில்லை. இன்று உலகம் முழுவதும் இறையாட்சி பரவி கிடக்கிறது, இறையாட்சியின் விழுமியங்கள் சிதறிக் கிடக்கிறது என்பதை நாம் கண்டுணர முடிகிறது.

ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகள் வாழ்வாக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே?

திருத்தூதர் பவுலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் "இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது"(உரோமையர் 14:17). 

அப்படிப்பட்ட இறையாட்சியின் விழுமியங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருக்கின்றனவா அல்லது எங்கும் பரவி இருக்கக்கூடிய இறையாட்சியினுடைய விதைகள் இன்றும் நம்மால் வாழ்வாக்கப்படுகின்றனவா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடுகோடு உருவகப்படுத்தப்பட்ட இறையாட்சி நம் வாழ்க்கையின் வழியாக வெளி காட்டப்பட வேண்டும். நீதி, அமைதி, மகிழ்ச்சி, உண்மை ஆகியவை நம்மில் இருந்து வெளிப்படும்போது நாமும் இறை ஆட்சியின் உருவகங்களே...

உண்மையை உண்மை என்று சொல்ல...



பொதுக் காலம் 10ஆம் வாரம்

15.06.2024 - சனிக் கிழமை 

"கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு" - இணைச் சட்டம் 18:13

சொன்ன பொய்யை கூட உண்மை என்று சத்தியம் செய்வோரும் உண்டு. சொன்னது உண்மையாய் இருந்தும் அமைதி காப்போரும் உண்டு.

தான் சொன்னது பொய் என்பது வெளியே தெரிந்துவிட்டால், தன் மானம் போய்விடும் என்பதால் மற்றவரை அதட்டி தன் தன்மானத்தை காக்கும் வீரர்களும்(வீரர் என்று எண்ணி கொள்வோரும்) உண்டு.

எது வீரம்? உண்மையாய் இருப்பதே வீரம். ஏமாற்றுவதும், பொய் சொல்வதும், பித்தலாட்டம் செய்வதும் வீரமல்ல.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:33-37) ஆணையிடவே வேண்டாம் விண்ணுலகின் மீதும் மண்ணுலகின் மீதும் ஆணையிட வேண்டாம், நீங்கள் பேசும் போது ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள் என்கிறார் இயேசு.

மிகுதியான பேச்சு மிகுதியான பிரச்சனையை கொண்டு வரும். சில நேரங்களில் சில நல்லவர்களின் மௌனம் கூட பிரச்சனையை அதிகப்படுத்தி விடுகிறது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். பேச தேவையற்ற இடத்தில் மௌனம் காக்க வேண்டும்.

ஆம் என்று சொல்ல வேண்டிய இடத்தில் ஆம் எனவும், இல்லை என்று சொல்ல வேண்டிய இடத்தில் இல்லை என்றும் சொல்ல பழகிக் கொள்ள வேண்டும்.

நமக்கு ஏன் வம்பு? நமக்கு ஏன் பிரச்சனை? என்று ஒதுங்கிக் கொள்வதனால் நாம் ஒருபோதும் நல்லவர்களாக மாறிவிட முடியாது. 

(ஆனால் சில இடங்களில் ஒரு தடவை, இரண்டு தடவை சொல்லிவிட்டு அமைதியாய் இருப்பதும் நல்லது தான். காரணம் - புரிந்து கொள்ளாத மனநிலையில் இருப்பவரிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லினாலும் அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை).

சரியாய் உள்ளதை சரியென்றும் தவறாய் உள்ளதை தவறென்றும் சொல்வோம். மனிதர்களிடம் நல்ல பெயர் எடுத்து நாம் ஒன்றையும் சாதித்து விடப் போவதில்லை. 

சத்தியம் செய்தல், ஆணையிடுதல் இனி வேண்டாம். தவறு செய்தால் தவறை ஏற்றுக் கொள்வோம், நல்லது செய்தால் பாராட்டைப் பெற்றுக் கொள்வோம். 

பொய்க்கு உண்மை என்னும் முலாம் பூசாமல் இருப்போம்... 


இணைந்து வாழ...


பொதுக்காலம் 10ஆம் வாரம்

14.06.2024 - வெள்ளிக் கிழமை 

"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" - தொடக்க நூல் 2:24

திருமணத்திற்கு முன்பும் திருமணத்தின் போதும் திருமணக் காரியங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. வெளி ஆடம்பரங்கள், கொண்டாட்டங்கள், சீர்வரிசைகள் என எல்லாம் சிறப்பாக அமைந்துவிடுகிறது. திருமணம் நடைபெறுகின்ற நாள் அல்லது நடைபெற்ற ஒரு சில வாரங்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணம் தொடர்கிறது. 

ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த பின்பு இருவருக்கிடையில் இருந்த மகிழ்ச்சியில் விரிசல் ஏற்படுகிறது. ஒருவரைப் பற்றி அறிவதற்கு முன் இருந்த தேடல், ஆர்வம், மகிழ்ச்சி, அக்கறை ஒருவரைப் பற்றி அறிந்த பின் வீழ்ச்சி அடைகிறது. 

இணைந்து வாழ வேண்டும், கைக் கோர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏன் கைக் கோர்த்தோம்? ஏன் திருமணம் செய்தோம்? என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

எல்லா மனிதருக்குள்ளும் நிறைகளும் குறைகளும் உண்டு, தடுமாற்றங்கள் தவறுகள் உண்டு என்பதை மனிதன் (கணவன்/மனைவி) ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது.

பல சாட்சிகள் முன்னிலையில் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தவர்கள், எந்த சாட்சியும் இல்லாமல் பிரிந்து வாழ முற்படுகிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:27-32) ஒரு பெண்ணை இச்சையோடு நோக்குபவர் அப்பெண்ணோடு விபச்சாரம் செய்கிறார், பரத்தமைக்காக அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் மனைவியை விலக்கி விடக்கூடாது என்கிறார் இயேசு.

"கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்று சொல்லப்பட்ட அந்த வாக்குறுதிகள் இக்கால திருமண உறவுகளில் பொய்யாக மாறுகிறது.

சில பிரிவுகளுக்கு சரியான காரணங்கள் கிடையாது (என்னை அவர் அல்லது அவள் மதிக்கவில்லை, என் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை, என்னை மகிழ்ச்சி கொடுக்கவில்லை, என்மீது அக்கறை இல்லை இவைதான் பிரிவிற்கு முன் வைக்கப்படக்கூடிய காரணங்கள்). 

ஒருவேளை இது சரியான காரணங்களாக இருக்கலாம். ஆனால் இதற்கு தீர்வு பிரிவு அல்ல, அமர்ந்து ஒருவருக்கொருவர் மனந்திறந்து பேசுதல் தான் இதற்கான தீர்வு.

அடுத்தவர் மீது அக்கறை(அடுத்தவர் மீது ஆசை) தனக்கானவர் மீதான அக்கறையை சிதைக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட/மணமுடிக்கப்பட்ட கணவன்/மனைவியோடு இணைந்து வாழ்வது தான் சரியான வாழ்க்கை.

இறைவன் இணைப்பில் இன்பம் காண வேண்டும். கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் இறுதிவரை புரிதலோடு இணைந்து வாழ வேண்டும்.


புதுமைகளின் வள்ளல் புனித அந்தோனியார்!!!

பதுவை நகர் புனித அந்தோனியார் 


பொதுக் காலம் 10ஆம் வாரம் 

13.06.2024 - வியாழக் கிழமை

1195ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் தாய் தெரசா. 

புனித அகுஸ்தினின் சபையில் சேர்ந்து  1219ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 

பிரான்சிஸ்கன் சபை துறவிகள் (மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க சென்று) இயேசுவுக்காக மறைசாட்சியாக கொல்லப்பட்டதைக் கண்டு, தானும் கிறிஸ்துவுக்காக மறைசாட்சியாக வேண்டும் என்று எண்ணி, பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

அதன்படி இவர் கப்பலில் மொரோக்கோ நாட்டிற்கு பயணமானார்; ஆனால் போகும் வழியில் நோய்வாய்ப்பட்டு நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்படவே, தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது மறையுரை வாயிலாக பலரை மனமாற்றியவர், கடவுள் தந்த ஆற்றலால் பல புதுமைகளை செய்து பல உயிரை காப்பாற்றியவர், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையினால் தனது உயிரையும் இழக்க துணிந்தவர், அன்னை மரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர், நற்கருணையில் கடவுள் உண்மையாகவே பிரச்சன்னமாய் இருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னவர், மீன்களுக்கு இறை வார்த்தையை போதித்தவர், இறந்தவர்களை உயிர் பெற்றெழ செய்தவர் இத்தகைய பல சிறப்புக்கு உரியவர் புனித அந்தோனியார். 

புனித அந்தோனியார் பல புதுமைகளை அவருடைய வாழ்க்கையில் நிகழ்த்தினார். சொல்லப்போனால், அவருடைய வாழ்க்கையே ஒரு புதுமையாகத் தான் இருந்தது.

புனித அந்தோனியார் இறக்கும்போது அவருடைய வயது 36. அவருடைய உடல் பதுவை நகரில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (1263) இவருடைய உடலை இடமாற்றம் செய்யும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது இவருடைய கல்லறை திறந்து பார்த்தபோது இவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது. இதை பார்த்த பொனவந்தூர், "ஓ தூய நாவே, நீ எப்போதும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததால் அழியாமல் காக்கப்பட்டாய்" என்றார்.

யோவான் 14:12இல் இவ்வாறு காண்கிறோம், "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்".

இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதனால், இயேசுவைப் போல பல்வேறு வல்ல செயல்களை, புதுமைகளை செய்யும் ஆற்றலை பெற்றவராக புதுமைகளின் ஊற்றாக புனித அந்தோனியார் விளங்குகிறார்.

அடுத்தவருக்கு நாம் செய்யும் அனைத்து நல்ல செயல்களும் புதுமையாக கருதப்படும். அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய எண்ணங்கள் அடுத்தவருக்கும் ஆசிர்வாதத்தை கொணரும் நமக்கும் ஆசிர்வாதத்தை கொடுக்கும்.

புனித அந்தோனியாரைப் போல கடவுளில் நம்பிக்கை கொண்டு, மற்றவர் நலனில் அக்கறை கொண்டு, மற்றவர் நிலை உயர உழைப்போம். இச்செயல்கள் வாயிலாக நாம் நிறைஆசிரை பெற்றுக் கொள்வோம்.



அழிப்பதற்கல்ல... நிறைவேற்றவே...

பொதுக்காலம் 10ஆம் வாரம் 

12.06.2024 - புதன் கிழமை 

"திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்" -1  திமொத்தேயு 1:8

ஒன்றை அழிப்பது மிக எளிது. ஆனால் ஒன்றை உருவாக்குவது மிக கடினம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:17-19) இறைவாக்கை, திருச்சட்டத்தை நிறைவுற செய்பவராக இயேசு காட்டப்படுகிறார். திருச்சட்டத்திலும் இறைவாக்கு நூல்களிலும் சொல்லப்பட்ட அந்த உண்மைகளை இயேசு  தெளிவுபடுத்துகிறார். 

திருச்சட்டத்தின், இறைவாக்குகளின் நோக்கம் கடவுள் மனித அன்பு தான். இதிலிருந்து தவறி சட்டங்களை மட்டும் கையில் தூக்கி பிடிக்கும் அதிகார வர்க்கத்தினரை இயேசு கண்டிக்கிறார்.

சட்டம் மனிதனை கட்டுப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நல்வழிப்படுத்துவதற்கு. இயேசுவின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அவர் சட்டத்தை மீறுகிறார், இறைவாக்குகளை புறந்தள்ளுகிறார் என்பதுதான். 

அதை அழிப்பவராக அல்ல, அதை முழுமை பெறச் செய்பவராக இயேசு இருந்தார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 

அவர் சட்டத்தை புதுப்பொலிவுடன் மக்களுக்கு கொடுக்கிறார். (கொலை செய்வது அல்ல, அறிவாளியே, முட்டாளே என்று கூட பேசாதே என்கிறார், விபச்சாரம் அல்ல இச்சையோடு கூட நோக்காதே, ஆணையிடவே வேண்டாம்). இவை தான் சட்டத்தின் முழுமை.

உருவாக்கப்பட்ட ஒன்றை அழிப்பது சிறப்பல்ல மாறாக, உருவாக்கப்பட்ட ஒன்றின் உண்மைத் தன்மை மறைக்கப்படும் போது அதை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் சிறப்பு. 

குடும்ப வாழ்க்கையிலும் துறவற வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் ஒருவர் மற்றவர் மீது திணிக்கும் சட்டம் முறையானதா? மற்றவரின் வளர்ச்சிக்குரியதா? என்பது ஆராயப்பட வேண்டும்.

சட்டம் நிறைவேற்றப்படும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அது வாழ்வுக்குரிய சட்டமாக இருக்க வேண்டும்.


ஒளிரும் நற்செயல்கள்...


பொதுக்காலம் 10ஆம் வாரம்
(திருத்தூதர் பர்னபா - நினைவு)

11.06.2024 - செவ்வாய்க் கிழமை 

"நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை; தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்; அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்" - உரோமையர் 13:3

நல்லவர்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களால் அடையாளம் காட்டப்படுவார்கள். தீயவர்கள் தங்களின் தீச்செயலால் அடையாளம் காட்டப்படுவார்கள். எது மற்றவர்களை கவர்ந்து இழுக்கும்? - நற்செயலா? தீச்செயலா? 

தீமைகள் கவர்ச்சியை கொடுக்கும், ஆனால் நிரந்தர மகிழ்ச்சியை கொடுக்காது. நற்செயல்கள் செய்வதன் வழியாக பல தடங்கல்கள் வரும், ஆனால் அது நீடித்த மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். அது மன நிறைவாகவும் வெளிப்படும்.

நற்செயல்கள் ஒளிரும் விளக்குகளாக இருக்கும். தீச்செயல்கள் அணைந்த விளக்குகளாக இருக்கும்.

அணைந்த விளக்குகளால் இருளில் இருப்பவருக்கு பயனில்லை. ஒளிரும் நற்செயல்களால் நற்செயல்களை புரிபவரும் மற்றவரும் பயனடைவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:13-16) உலகிற்கு உப்பாக, உலகிற்கு ஒளியாக இருக்க இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். உப்பின் தன்மையை உப்பு இழந்து விட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஒளி ஏற்றப்பட்ட விளக்கு அதற்குரிய இடத்தில் வைக்கப்படாவிட்டால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.

அதேபோல கடவுளிடமிருந்து நன்மையானவற்றை பெற்றவர்கள், அந்த நன்மையை நற்செயலின் வாயிலாக வெளிகாட்டாவிட்டால், அவர்கள் மனிதர்களாக இருப்பதில் ஒரு பயனும் இல்லை.

எபேசியர் 2:10இல் இவ்வாறு காண்கிறோம், "ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்"

நம் நற்செயல்கள் ஒளிர வேண்டும், நாம் செய்யும் நற்செயல்களால் மற்றவர் வாழ்வு மிளிர வேண்டும்.

உதவாத வாழ்க்கையாக அல்ல ஒளிரும் வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாற வேண்டும்.


நாம் பேறுபெற்றோர்!

 

பொதுக்காலம் 10 ஆம் வாரம் 

10.06.2024 - திங்கட் கிழமை 

"இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்" - பாரூக்கு 4:4

நீங்க நல்லா இருக்கணும், கடவுள் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிக்கனும், நீங்க இன்னும் நீடூழி வாழணும் இந்த வார்த்தைகள் எல்லாம் ஆசி பெற்ற வார்த்தைகள் அல்லது பேறுபெற்ற வார்த்தைகள். மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கேற்ற வகையில் நம்முடைய செயல்கள் அமைய வேண்டும். 

இவ்வுலக மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும் பெருமையையும் தேடுகிறோம். சாதாரண அற்ப மனிதர் தரக்கூடிய புகழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றால், நம்மை உருவாக்கிய, நம்மை செதுக்கிய கடவுள் தரக்கூடிய அந்த புகழ்ச்சி என்பது எத்துனை மேலானது.

சில இழப்புகளை சந்திக்கின்ற போது, சில கைம்மாறை நாம் மிகுதியாக பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:1-12) இயேசு 9 வகையான பேறுபெற்றோரை பதிவு செய்கிறார். (ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதியை நிலைநாட்டுவோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர், கடவுளின் பொருட்டு இகழ்ச்சியை துன்பத்தை ஏற்றுக் கொள்வோர்).

இந்த பேறுபெற்றோரில் நாம் எத்தகையோர் என்பதை சிந்திக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பேறுபெற்றோர் என்ற நிலையில் இருக்கிறோமா? அல்லது இழப்புக்களை, துயரங்களை மற்றவர்களுக்கு கொடுத்து மற்றவர்களை பேறுபெற்றோராக மாற்றிக் கொண்டிருக்கிறோமா! என்பதும் சிந்திக்கத்தக்கது.

கிறிஸ்தவ வாழ்வு மட்டும் துன்பம் நிறைந்தது அல்ல, கிறிஸ்துவில் வாழ்வோருக்கும் துன்பம் உண்டு.

கிறிஸ்துவை சார்ந்தவரை உலகம் வெறுக்கும். ஏனென்றால் கடவுளுக்குரியதை உலகு வெறுக்கும்.

உலகின் பார்வையில் பேறுபெற்றவராக அல்ல, உன்னதரின் பார்வையில்  பேறுபெற்றோராய் வாழ்வோம்.

உண்மையை மறக்கடிக்க துடிக்கும் பொய்கள்!

பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு 

09.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

"உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்" - திருப்பாடல்கள் 25:3

உண்மையை எவராலும் பொய்யாக்க முடியாது. அதே வேளையில், பொய்யை உண்மையாக்க முடியாது. விலை பேசப்பட்டாலும் மிரட்டப்பட்டாலும் உண்மை உண்மைதான், பொய் பொய் தான். வதந்திகளும் மிரட்டல்களும் சில வேளைகளில் உண்மையை விலைக்கு வாங்குவது போல தோன்றுகிறது. 

ஆனால் அங்கு உண்மை விலை பேசப்படுவதில்லை, மாறாக உண்மை திரையிட்டு மூடப்படுகிறது. 

ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் உண்மையின் பக்கம், பொய்யின் பக்கம் என இரண்டு பக்கம் இருக்கிறது. வெளியில் பெரும்பாலும் படம்பிடித்து காட்டப்படுவது பொய்யின் பக்கம் தான். அது அழகுப் படுத்தப்பட்டதாக மற்றவர்களை கவர்ந்து இழுக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் உண்மையின் பக்கம் கசப்பை கொடுப்பதனால், மற்றவர்களுக்கு எரிச்சலை கொடுப்பதனால் அது மறைத்து வைக்கப்படுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:20-35) இயேசுவுக்கு பேய் பிடித்திருக்கிறது, மதி மயங்கி இருக்கிறான் என்று ஒரு கூட்டம் இயேசுவின் மேல் பொய்யை திணிக்கிறது. ஒருவரை நேரடியாக அளிக்க முடியாவிட்டால் அவரை மறைமுகமாக தாக்க பயன்படும் யுக்திகள் இவைதான் (வதந்தி, பொய்). 

(பலரின் வாழ்க்கையில் அவ்வப்போது எழ வேண்டிய கேள்வி, அடுத்தவர் வாழ்க்கையை அழித்து நான் எதை பெரிதாக சாதித்து விடப் போகிறேன்?)

இயேசுவின் நற்பெயரை அழிப்பதற்கான சூழ்ச்சியை மறைநூல் அறிஞர்கள் செய்தார்கள். தங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழும் பெருமையும் இயேசுவை தேடிச் செல்கிற போது, அதை தடுப்பதற்கான வழியை இந்த மறைநூல் அறிஞர்கள் செய்தார்கள்.

தன்னை எதிர்ப்பவர்களை இயேசு எதிர்க்கவில்லை, எதார்த்தத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

எப்படி சாத்தான் தன்னை எதிர்த்து தானே சதி செய்ய முடியும்? தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன் அதிகாரத்தை இழக்க எப்படி சாத்தான் எண்ணுவான்? என்ற கேள்விகளை கேட்கிறார். 

இயேசுவின் ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் இயேசுவின் வல்லமையை உணர்ந்து கொள்ளாதவர்கள் இயேசுவை வீழ்த்த எண்ணுகிறார்கள். 

சதிகாரர்களின் மத்தியில் சாதனை மிக்கவராய் இயேசு துணிச்சலோடு பேசுகிறார். 

ஆனால் அவருடைய பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை மதி மயங்கியவர் என்று எண்ணினார்கள்.

நம்முடைய வாழ்க்கையில் உண்மைகள் ஓரம் கட்டப்படும் போது, உண்மைக்காக குரல் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படும் போது பொய் தலைவிரித்து ஆடுகின்றன. 

ஆனால், உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை. 

சில வேளைகளில் எது உண்மை? எது சரி? என்ற சந்தேகம் எழுகிறது. நான் சொல்வது தான் சரி நான் செய்வது தான் சரி என்பது ஒருபோதும் சரியாகாது. (எல்லோருக்கும் தெரியும் நாம் செய்வது அல்லது சொல்வது சரிதானா என்பது).

உண்மையை சரிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பொய்களை திணிக்காமல் இருந்தாலே உண்மை நிலைத்திருக்கும்.

நமக்கு எதிராக சதி செய்யும் சதிகார கூட்டத்தின் மத்தியில் உண்மையின் பக்கம் நாம் இருந்தால் சதிகாரர்கள் தளர்ந்து போய் விடுவார்கள். 

இயேசுவை எதிர்த்தவர்கள் உண்மையின் பக்கம் இல்லாத காரணத்தினால், அவர்களால் இறுதிவரை இயேசுவோடு போராட முடியவில்லை.

சில வேளைகளில் உண்மையை உண்மை என்று சொல்ல வேண்டி இருக்கிறது ஆனால் பொய்யை உண்மையாக திணிப்பது தவறிலும் தவறு.

இயேசுவின் பக்கம் நாம் இருந்தால், நாம் உண்மைக்கு செவிமடுக்கிறோம்.

துயரத்திலும் தூய்மை இழக்காத அன்னை மரியாவின் இதயம்...

மரியாளின் மாசற்ற இதயம் - நினைவு

பொதுக்காலம் 9ஆம் வாரம்

08.06.2024 - சனிக் கிழமை 

பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக மாறிவிடுகிறது. என் இதயம் கறை படிந்ததற்கு என்னை குறை சொல்வதா! என்னை சூழ்ந்து இருப்பவர்களை குறை சொல்வதா! காலத்தினுடைய மாற்றங்களை குறை சொல்வதா! யாரை குறை சொல்வது?

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. சிலருக்கு வாழ்க்கை கசப்பையும், சிலருக்கு வாழ்க்கை இனிமையும், சிலருக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. இயற்கை எல்லோருக்கும் சமமாக தான் இருக்கிறது. 

இயற்கையை ஒருபோதும் குறை சொல்ல முடியாது. ஆனால், இயற்கையை நாம் மாசுபடுத்துகின்ற போது இயற்கை அதன் விளைவுகளை நம்மீது திணிக்க தான் செய்யும். 

நம்முடைய உடல் கடவுள் வாழக்கூடிய ஆலயமாக தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த தூய்மையை நாம் வெளியிலிருந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நமக்குள் எழக்கூடிய தவறான சிந்தனைகளால், நம்முடைய நடத்தைகளால் மாசுப்படுத்தி விடுகிறோம். 

இன்று அன்னை மரியாவினுடைய மாசற்ற இதய விழாவை நினைவு கூறுகிறோம். அன்னை மரியாவும் எல்லோரும் வாழ்ந்த அதே சமூகத்தில் தான் வாழ்ந்தார் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் தான் அவருக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் அவரால் மட்டும் எப்படி தூய்மை நிறைந்த இதயத்தோடு வாழ முடிந்தது? 

கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை எல்லோர் மேலும் அருளை பொழிகிறார். பொழியப்பட்ட அருளை உள்ளத்தில் இருத்தி தியானித்தால் வாழ்வு நலமானதாக மாறும். 

அன்னை மரியாள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தார். வாழ்க்கையினுடைய புரியாத புதிர் தொடங்கி தன் மகனின் இறப்பு, இறப்பிற்குப் பின் வாழ்க்கை என எல்லாவற்றிலும் நடந்த நினைவுகள் அவரை காயப்படுத்தியது, ஆனால் அவர் கலங்கவில்லை. 

கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராக திரும்பவும் இல்லை. கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக் கொண்டார் என்ற மனநிலை அன்னை மரியாவிடம் இருந்ததனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய இதயம் தூய்மையை இழக்காமல் இருந்தது.

பல வியாகுலங்களை தாங்கிய போதிலும் அந்த இதயம் மாசுபடாமல் இருந்தது.

வரலாற்றுப் பின்னணி 

1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமாவில் காட்சி கொடுத்த பிறகு, இந்த பக்தி முயற்சி சிறப்பாக வளர்ந்தது. 1917 ஜூன் 13 ஆம் தேதி புதன் கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டார்.

1944ல் திருத்தந்தை 12ம் பயஸ் மரியாளின் மாசற்ற இதய விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து, ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். 1969இல் திருத்தந்தை 6ஆம் பவுல், இயேசுவின் தூய இதய பெருவிழாவுக்கு அடுத்த நாளில் மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவுகூரும் வகையில் இந்த திருநாளை மாற்றி அமைத்தார்.

படத்தின் விளக்கம்


எரியும் நெருப்பு - இயேசுவின், மக்களின் மீதான அன்பு

ஊடுருவிய வாள் - 7 வியாகுலங்கள்

மலர் - அன்னையின் தூய்மை

இதயம் - தாய்க்குரிய அன்பு


நிறைவுள்ள மனிதம் தேடி...

பொதுக்காலம் 9ஆம் வாரம்

 08.06.2024 - சனிக் கிழமை 

"நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார்" - சீராக் 18:25

சக மனிதர்களை நாம் ஏமாற்றி விடலாம், ஆனால் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. மனிதர்கள் முன்னிலையில் நல்லவர்கள் என்று நம்மை காட்டிக் கொள்ளலாம், அது நமக்கு ஒருபோதும் முழுமையான நிறைவை தராது. 

உட்புறமும் வெளிப்புறமும் இயல்பாக  (நடிக்காமல்) இருக்கின்ற போதுதான் நிறைவை நாம் பெற்றுக் கொள்ள முடியும். மத்தேயு 5:6இல் "நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்" என்று காண்கிறோம். 

நிறைவு பல்வேறு வழிகளில் பெறப்படுகிறது. நீதியை நிலைநாட்டும் போது, இருப்பதை பகிரும் போது, தன்னை தாழ்த்தும் போது, பிறரின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் போது நிறைவு நம்மை ஆட்கொள்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:38-44) இரண்டு வகையில் நிறைவு காணக்கூடிய மனிதர்களை நாம் பார்க்கிறோம்.  

முதலாவது, ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருப்பதை கொடுப்பதன் வழியாக, உண்மையிலேயே மனநிறைவை பெற்றார். இரண்டாவது, மறைநூல் அறிஞர்கள் மக்களிடமிருந்து எதிர்பார்த்த/பெற்ற  பெருமையினால் நிறைவை தேடிக் கொண்டார்கள். 

ஒரு ஏழைக் கைம்பெண் இழப்பதின் வழியாக நிறைவை பெற்றுக் கொள்கிறார் (இயேசுவால் பாராட்டப் பெற்றார்). 

மறைநூல் அறிஞர்கள் மக்களிடமிருந்து புகழை பெறுவதன் வழியாக இழப்பை சந்தித்தனர் (இயேசுவால் இவர்களது வாழ்க்கை  எச்சரிக்கப்படுகிறது). 

நம் வாழ்க்கை நிலையற்ற ஒன்றில் நிறைவை தேடுவதாக உள்ளது. நம் வாழ்க்கையை திரும்பி பார்க்கின்ற போது, புகழை, பெருமையை அடைவதற்காக நாம் ஆடிய ஆட்டங்கள் என்ன? என்ற கேள்வி எழுந்திருக்க கூடும். 

இறைவனின் வார்த்தையில், இறைவனில் நிறைவை காண்போம்... அதன் வழியாக இம்மையில் மகிழ்வும் மறுமையில் கைம்மாறும் பெறுவோம்.

சதையால் சூழப்பட்ட இயேசுவின் திருஇதயம்

 

இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

07.06.2024 - வெள்ளிக் கிழமை

"விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்" -   நீதிமொழிகள் 4:23

இதயம் இருக்குதா, உன் இதயம் எல்லாம் கல்லு என்ற வார்த்தைகள் இதயமற்ற, அன்பற்ற மனிதர்களை பார்த்து சொல்லக்கூடியவை.

இதயம் கனிந்து இருக்க வேண்டும். கனியாத இதயம் கல் போன்றது. 

இன்று பல சமயங்களில் நாம் இதயமற்ற இரக்கமற்ற மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரக்கத்தோடு வாழ்வதனால் என்ன பயன்? அன்பு செய்வதனால் என்ன பயன்? என்ற கேள்விகள் பல தருணங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. (சில அன்புக்குரிய நபர்கள் ஏற்படுத்திய காயங்களினால் இக்கேள்விகள் எழுகிறது).

நம்முடைய இதயம் யாராவது ஒருவர் அமரக்கூடிய சிம்மாசனமாக இருக்கிறது, ஆனால் அந்த சிம்மாசனத்தின் இருக்கை என்பது தற்காலிகமானதாக இருக்கிறது. இதயத்தில் நிரந்தரமான இடம் யாருக்கும் நாம் கொடுப்பதில்லை, யாரும் நிரந்தரமாக அங்கு தங்குவதும் இல்லை. (சிலர் ஏற்படுத்திய காயங்களினால் சிலருக்கு இடமில்லாமல் போகிறது).

சில இதயங்கள் காயப்பட்டு போகின்றது, சில இதயங்கள் காயப்படுத்துகின்றது. 

இன்று இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த இயேசுவின் இதயம் எல்லோருக்குமானது, பாகுபாடுகளைக் கடந்த இதயம், கனிவும் மனத் தாழ்மையும் உடைய இதயம், இழப்புகளை, எதிர்ப்புகளை சந்தித்தவர்களை தாங்கும் இதயம். இவ்வாறாக இயேசுவின் இதயம் பல பண்புகளை கொண்டுள்ளது. 

இறுதியில் அந்த இதயமும் காயப்பட்டு தான் இருக்கின்றது. எங்கு அதிகமாக அன்பு இருக்கிறதோ, எங்கு அதிகமான கனிவு இருக்கிறதோ அங்கு காயங்கள் அதிகம்.  இயேசுவின் வாழ்க்கையிலும் அது விதிவிலக்கு அல்ல. 

ஆனால் இயேசுவின் இதயம் காயப்பட்டாலும் மற்றவர்களின் காயங்களுக்கு கட்டு போடக்கூடிய இதயமாக தான் இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 19: 31-37) படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

இரத்தத்தாலும் சதையாலும் சூழப்பட்ட இதயமாக இயேசுவின் இதயம் இருக்கிறது. அவருடைய இதயம் பலருக்காக குத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த காயங்களுக்கு மருந்து எது? அன்பு ஒன்றே மருந்து. அந்த அன்பை நாம் எப்படி செலுத்தப் போகிறோம்? இயேசுவின் காயங்களை எப்படி குணப்படுத்த போகிறோம்?

மற்றவரின் இதயத்தை புண்படுத்தாத போது, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப் போடும்போது நான் இயேசுவின் காயங்களுக்கு  மருந்திடுகிறோம். 

நம் கனிவு நிறைந்த இதயம் பல காயங்களுக்கு மருந்தாகட்டும்.

காயப்படுத்தும் இதயமாக அல்ல, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப்போடும் இதயமாக நம் இதயம் மாற வேண்டும்.

இயேசுவின் திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு நம் இதயத்திலும் பொங்கி வழிய வேண்டும்.

பலிகளை விட மேலானது அன்பு...

06.06.2024 - வியாழக் கிழமை

"ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை" - திருப்பாடல்கள் 51:16

அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்பிற்கு பதிலாக/நிகராக எந்த ஒரு பொருளையோ, பொன்னையோ வைக்க முடியாது. அன்பு செய்வோரை, அன்பினால் மட்டுமே நிறைவுற செய்ய முடியும். 

சிலருக்கு பொன்/பொருள் மீது அன்பு இருக்கிறது, சிலருக்கு மனிதர்கள் மீது அன்பு இருக்கிறது, சிலருக்கு பதவி மீது அன்பு இருக்கிறது, சிலருக்கு உலக காரியங்கள் மீது அன்பு இருக்கிறது. அன்பில்லாமல் யாரும் இயங்கவில்லை. 

ஆனால் அந்த அன்பு உண்மையானதாக, ஆழமானதாக இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

அரைகுறை அறிவு ஆபத்து என்பது போல, அரைகுறை அன்பும் ஆபத்தானது.

சிலருக்கு சில இலக்குகள் முடிவடையும் வரை சிலர் மீது இனம் புரியாத அன்பு இருக்கிறது. தன் காரியங்கள் நிறைவேறியவுடன் அந்த அன்பு நிராகரிக்கப்படுகிறது. இது மனிதர்களிலும் விலங்கினங்களிலும் உண்டு. (சில தேவைகள் முடியும் வரை சிலர் தேவை/ சிலரின் தேவை).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:28-34) இயேசு இரண்டு வகை அன்பை சுட்டிக்காட்டுகிறார். 1. கடவுள் மீது அன்பு செலுத்துவது 2. மற்றவர்களை அன்பு செய்வது. இந்த இரண்டு நிறைவேற வேண்டும் என்றால் ஒருவர் தன்னை அன்பு செய்ய வேண்டும். தன் அன்பு இல்லையேல் பிறர் அன்பு இருக்காது.

தன்னை அன்பு செய்கிறவர், தன்னையே கடவுளுக்கு பலியாக கொடுக்கிறார். தன்னை அன்பு செய்கிறவர், தன்னலம் பாராது பிறர் நலனில் அக்கறை கொள்கிறார்.

இறையாட்சியை நெருங்குவதற்கு அன்பே அடிப்படையாக இருக்கிறது.

ஆயிரம் பொன்னும் பொருளும் பலியாக கொடுக்கப்பட்டாலும் அங்கு அன்பு இல்லையேல் அவை அனைத்தும் வீணானதே.

அன்பை பலியாய் கொடுப்போம், அன்பில் புத்துலகு படைப்போம்.

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...