பொதுக்காலம் 13ஆம் வாரம்
01.07.2024 - திங்கட் கிழமை
"யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட" - பாரூக்கு 4-2
இலக்குகள் அற்ற வாழ்க்கை நம்மை திசை திருப்பிவிடும். ஒரு பணியை செய்கின்ற போது அந்த பணியின் மீதான முழுக் கவனம் தேவை. இல்லையென்று சொன்னால் நாம் செய்யக்கூடிய பணியில் தொய்வு ஏற்பட்டு விடும் அல்லது பணியில் பாதிப்பு ஏற்படும்.
ஒரு செயலை செய்து கொண்டிருக்கின்ற போது அதை விட்டு விட்டு செல்வதும், அந்த பணி செய்கின்ற வேளையில் மற்றொன்றின் மீது கவனம் செலுத்துவதும் ஒன்றே.
ஒரு பணிக்கென அழைக்கப்பட்டவர் அந்த பணியின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 8:18-22) ஒருவர் இயேசுவை பின்பற்ற விரும்புகிறார், மற்றொருவர் இயேசுவை பின்பற்றிய நிலையில், தன்னுடைய தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கேட்கிறார். மானிட மகனுக்கு தலைசாய்க்க கூட இடமில்லை, இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம் என்ற இயேசுவுடைய இரண்டும் பதிலும் சரியானதே.
மேலோட்டமாக பார்க்கின்ற போது, ஒருவர் இயேசுவை பின்பற்ற விரும்புகிறார் ஆனால் இயேசு அவரிடம் நேர்மறையாக பேசாமல் எதிர்மறையாக பேசுகிறார் என்று தோன்றும்.
என்னை பின்பற்றினால் துன்பங்கள் உண்டு, வாழ்க்கை எளிதானது அல்ல என்பதை இயேசு அங்கு தெளிவுபடுத்துவதற்காக அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
இரண்டாவது தந்தையை அடக்கம் செய்ய கூட இயேசு அனுமதிக்கவில்லையே என்ற கேள்வி எழும். இங்கு தந்தையை அடக்கம் செய்வதனுடைய (அடக்கம் செய்ய அவர் விரும்பிய) பின்னணி என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்தையை அடக்கம் செய்வதற்கு முன்பு சொத்துக்கள் பகிர்ந்து கொடுக்கப்படும். அதை பெறுவதற்காக, இயேசுவின் சீடராக இருக்க கூடிய அந்த நபர் செல்ல விரும்புகிறார். எனவே தான் இயேசு இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம் என்று சொல்கிறார்.
இயேசுவோடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிய வாழ்க்கையை பற்றி கவலை கொள்ளக்கூடாது. பின்னால் என்ன நடைபெறும் என்பதை குறித்தும் கவலை கொள்ளக் கூடாது.
எதிர்கால வாழ்வை நோக்கிய பயணமாக நம் வாழ்வு இருந்தாலும் கூட நிகழ்கால வாழ்வை நிறைவாக வாழ வேண்டும். "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்" இறையரசு பணிக்கு சரியானது அல்ல.
தெளிந்த மனநிலையும் தீர்க்கமான முடிவும் கொண்டு இயேசுவை நாம் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். தடுமாற்றங்கள் தடைகள் வருகின்ற போது பின் வாங்குவது கிறிஸ்தவத்தின் அடையாளம் அல்ல.
திரும்பிச் செல்வதும் திரும்பிப் பார்த்தலும் ஒன்றே.
லூக்கா 9-62இல், “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்று சொல்கிறார் இயேசு.