பொதுக் காலம் 14 ஆம் வாரம்
11.07.2024 - வியாழக் கிழமை
"எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்” - நீதிமொழிகள் 1:33
நமக்கு தேவையான எல்லாம் நம்மிடம் இருக்கிறது ஒன்றைத் தவிர, அது அமைதி. உழைப்பின் வழியாக எல்லாவற்றையும் சேமித்து விடுகிறோம், சேகரித்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான அமைதியை மட்டும் தொலைத்து விடுகிறோம்.
அமைதி இல்லை என்றால் எதுவும் இல்லை. மனதில் அமைதி இருந்தால் எல்லாம் நம் கையில்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 10:7-15) இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து நலம் குன்றியவர்களை குணமாக்க, இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்ய, தொழுநோயாளரை நலமாக்க, பேய்களை ஓட்ட அனுப்புகிறார். வீட்டுக்குள் செல்லும்பொழுதே வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால் நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும் என்கிறார் இயேசு.
பணியின் வழியாக அமைதி பகிரப்படுகிறது. அந்த அமைதியை பெறுவதற்கு பணிவு தேவையாக இருக்கிறது.
நாம் வாழக்கூடிய இந்த உலகில், மற்றவருடைய அமைதியை குலைப்பதற்காக, மற்றொருவருடைய நிம்மதியை சிதைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகிறது.
நான் நன்றாக இல்லாத போது யாரும் நன்றாக இருந்து விடக்கூடாது என்பது தான் ஒவ்வொருவருடைய எண்ணமாக இருக்கிறது.
ஒரு மனிதனின் அமைதியை குறைப்பது சக மனிதன்தான். ஒருவர் மற்றவரை சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு ஒருவர் மற்றவரின் அமைதியை சிதைப்பது எந்த வகையில் நியாயம்?
இன்று நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதுமில்லை, இறைவார்த்தைக்கு ஏற்ப நடப்பதும் இல்லை. எனவே தான், நம்முடைய குடும்பங்களில் அமைதி இல்லாமல் போய்விட்டது.
பணத்திற்கு இடம் இருக்கிறது, பெருமைக்கு இடமிருக்கிறது, புகழுக்கு இடம் இருக்கிறது, ஆணவத்திற்கு இடம் இருக்கிறது, அதிகாரத்திற்கு இடம் இருக்கிறது; ஆனால் அமைதிக்கு மட்டும் இடமில்லை.
உலகில் இரண்டே இரண்டு இடங்களில் தான் அமைதி தக்க வைக்கப்பட்டுள்ளது.
1. கருவறை
2. கல்லறை
இறைவார்த்தைக்கு செவிமடுத்து அந்த இறைவார்த்தையை ஒவ்வொருவரும் வாழ முற்படுகின்ற போது அமைதி கிடைக்கும். நான் வாழ்வது போல மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிற போது அமைதி உருவாகும்.
தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு தெளிந்த மனநிலையோடு நம்மில் அமைதியை உண்டாக்கி மற்றவர் வாழ்விலும் அமைதியை உருபெறச் செய்வோம்.
அமைதியை விரும்பினால் அமைதி... அன்பை விதைத்தால் அன்பு... பணிவிருந்தால் இவை இரண்டும் நம் வாழ்வில் இருக்கும்.
வாழ்வில் அமைதி வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் கடினமாக இருக்கின்றது
ReplyDeleteவிரும்பியபடியே கிடைக்கட்டும்... பெருகட்டும்...
Delete♥️👍
ReplyDelete