பொதுக் காலம் 14ஆம் வாரம்
09.07.2024 - செவ்வாய்க் கிழமை
"காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை" - எசாயா 1:3
புரிதல் இல்லாத வாழ்க்கையில் விளைச்சல் இருக்காது. புரிதல் இருந்தால் தான் பலன் இருக்கும். எத்தகைய வாழ்க்கை (துறவற/இல்லற) முறையாக இருந்தாலும் அங்கு புரிதல் கண்டிப்பாக தேவை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:32-38) இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையை செய்தும், இறையரசை பற்றி போதித்தும் அவரைப் புரிந்து கொள்ளாத பரிசேயக் கூட்டத்தை பார்க்கிறோம்.
சிலர் பார்த்து புரிந்து கொள்வார்கள், சிலர் கேட்டு தெளிவுப் பெற்று புரிந்து கொள்வார்கள், ஆனால் பலர் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கூட புரிந்து கொள்வதில்லை.
'இவன் பேய்களின் தலைவனை கொண்டு பேய்களை ஓட்டுகிறான்' என்று புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் பரிசேயர்கள்.
இங்கு இயேசுவின் அன்பு பரிவாக பரிமாற்றம் பெறுகிறது. ஆயனில்லா ஆடுகளாய் இருந்த மக்களைக் கண்டு அவர் பரிவு கொள்கிறார்.
நாம் ஒருவரை அறிந்து புரிந்து கொண்டாலே பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும். அந்த புரிதலுக்கு திறந்த மனம் தேவை. சில பிரச்சனைகளை பேசி தீர்த்துவிடலாம், சில பிரச்சனைகள் அமைதியாக இருந்தாலே தீர்த்து விடலாம். அதற்கும் புரிதல் தேவை.
நான் சொல்வது தான் சரி என்கிற போது அங்கு புரிதல் இல்லை, மற்றவர்கள் சொல்கிறதை ஏற்கிற போதுதான் புரிதல் உண்டாகிறது.
இன்று பரிசேய மனநிலை நம்மில் அதிகம். ஒருவரை அழிக்க நாம் எடுக்கும் ஆயுதம் அவரைப்பற்றி தவறாக பேசுவதே. நல்லது பேசி விளைச்சல் காண மனம் இல்லாதவர்கள், மற்றவர்களை குறித்து அவதூறு பேசி வாழ்க்கையை சிதைத்து விடுகிறார்கள்.
இயேசு தனக்கு எதிராக தீமை செய்தவர்களையும் புரிந்து கொள்கிறார், தன்னை சாராதவர்களையும் புரிந்து கொள்கிறார், தன்னை தேடி வருபவர்களையும் புரிந்து கொள்கிறார். ஆனால் நம்மால், நம்மோடு இருப்பவர்களையே புரிந்து கொள்வது பெரும்பாடாக இருக்கிறது.
புரிதல் இருக்கும் இடத்தில் ஏற்றுக் கொள்ளுதல் இருக்கும், ஏற்று கொள்ளுதல் இருக்கும் இடத்தில் மனநிறைவு குடிகொள்ளும். அங்குதான் அன்பு எனும் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
இங்கு பிரச்சினையே யார் யாரை புரிந்து கொள்வது என்பதுதான்! இயேசுவைப் போல காலத்தின் அறிகுறிகளை கண்டுகொள்ள தேவையில் இருப்போரை தேடிச் செல்ல மிகுதியான அறுவடைக்கு உரிய பணியாளராக நாம் மாற முன் வருவோம்.
புரிதலோடு பயணிக்கின்ற போது தடை கற்களும் படிக் கற்களாக மாறும். எதிர்ப்பவர்களையும் அன்பு செய்கிற போது விண்ணரசு நம் வசமாகும்.
பரிவும் புரிதலும் நம் உள்ளத்தில் விளைச்சலை கொடுக்கட்டும்.
Good reflection fr
ReplyDelete