24_09

குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் தாழ்ச்சி நிறைந்த சிறுவழி...

பொதுக் காலம் 26ஆம் வாரம்

01.10.2024 - செவ்வாய்க் கிழமை 

"குழந்தை இயேசுவின் புனித தெரேசா, அன்பின் சிறிய வழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார்" – திருத்தந்தை பிரான்சிஸ்

1873ம் ஆண்டு, சனவரி 2ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Alençon என்ற ஊரில் பிறந்த தெரேசா, தன் நான்காவது வயதில் தாயை இழந்ததால், அவரது தந்தையும், மூத்த சகோதரியும் அவரை வளர்த்தனர்.

1886ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு நாளன்று, இறைவனின் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்ற இளம்பெண் தெரேசா, அதற்கடுத்த ஆண்டு, 14வயது நிறைந்த இளம்பெண்ணாக, உரோம் நகருக்கு மேற்கொண்ட ஒரு திருப்பயணத்தின்போது, திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களிடம், தான் துறவு சபையில் இணைவதற்குத் தேவையான உத்தரவை வழங்குமாறு கேட்டார்.

தன் 15வது வயதில், Lisieux என்ற ஊரில், கார்மேல் துறவு சபையில் இணைந்த தெரேசா, தன் வாழ்நாள் முழுவதையும், அத்துறவு மடத்தில், செபத்திலும், தவ முயற்சிகளிலும் கழித்தார். மறைபரப்பு பணியாளராக மாற வேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலுடன் தன் துறவற வாழ்வில் ஆரம்பித்தவர் குழந்தை புனித இயேசுவின் புனித தெரேசா. 

ஒரு மறைபரப்புப் பணியாளராக வாழ்ந்து, மறைசாட்சியாக உயிர் துறக்கும் கனவுகளுடன் வாழ்ந்த இளம்பெண் தெரேசா, தன் துறவு மடத்தில் மேற்கொள்ளும் செபங்கள் வழியே, அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை, இயேசு தனக்கு உணர்த்தினார் என்று, தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.

சிறைவாசி ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக தண்டனை பெற போகிறார் என்பதை செய்தித்தாள் வழியாக குழந்தை தெரேசா அறிய வருகிறார். அந்த நபர் தன்னுடைய தவறுகளுக்கு மனம் வருந்தாமல் இருக்கக் கூடாது என்பது புனிதையினுடைய மிகப்பெரிய செபமாக இருந்தது. அந்த நபருடைய மனமாற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செபித்து வந்தார். அந்த குற்றவாளி இறப்பதற்கு முன் சிறைச் சாலைக்கு வந்த குருவானவரிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டான், மனம் வருந்தினான், திருச்சிலுவையை கேட்டு வாங்கி அதை முத்தம் செய்தபின் தன்னுடைய மரணத்தை ஏற்றுக் கொண்டான். 

சிறிய செபம் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது 

இவர் தான் இருந்த இடத்தில் தனக்குள் இருந்த துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு செப, தப வாழ்க்கையின் வாயிலாக நற்செய்தி அறிவுப்பணியை செய்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:1-5) நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் இயேசு.

குழந்தையைப் போல தாழ்த்திக் கொள்ளக்கூடிய மனப்பான்மை நம்மை உயர்த்தும்.

எல்லாம் தெரிந்தும் நான் ஒன்றும் இல்லை என்ற மனப்பாங்கு இங்கு பலரிடம் இருப்பதில்லை. 

எதுவும் தெரியாதவராய் இருந்தாலும் கூட எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக் கொள்ளக்கூடிய மனப்பாங்கு இங்கு அதிகமாக இருக்கிறது. (தற்பெருமை, தலைக்கணம், வீண் விவாதம், அகங்காரம் ஆகியவை அழிவுக்கான வழிகள்).

தாழ்ச்சி என்பது கோழைத்தனத்தின் அடையாளம் அல்ல. தாழ்ச்சி என்பது துணிவின் அடையாளம்.

சிறுபிள்ளைத்தனம் என்பது வேறு, குழந்தையின் உள்ளம் என்பது வேறு. 

சிறுபிள்ளைத்தனம் என்பது எதையும் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது. ஆனால் குழந்தையின் உள்ளம் என்பது கள்ளம் கபடு இல்லாதது. 

புனித குழந்தை தெரசாவிடம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இருந்தது. எனவே தான் அறைக்குள் இருந்தவாறு தான் பட்ட வேதனைகளுக்கு மத்தியிலும் தன் பாடுகளை இயேசுவிடம் ஒப்படைத்து பலரின் மனமாற்றத்திற்காக அவர் உழைத்தார். 

இவர் மறைசாட்சியாக மரிக்கவில்லை ஆனால் பலரின் மனமாற்றத்திற்காக உழைத்தார்.

நம் உள்ளமும் தாழ்ச்சியை ஆடையாய் அணியட்டும். அதன் வழியாக நம்மீது ரோசா பூக்கள் பொழியப்படட்டும்.

(நான் விண்ணிலிருந்து ரோசா பூக்களை உங்கள் மீது பொழிவேன் - புனித குழந்தை இயேசுவின் தெரேசா)

ஆண்டவர் அளித்தார்... ஆண்டவர் எடுத்துக் கொண்டார்...


பொதுக் காலம் 26ஆம் வாரம்

30.09.2024 - திங்கட் கிழமை

நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? - 1 கொரிந்தியருக்கு 4:7

மனநிறைவை குறிக்கும் வார்த்தை, "எதுவும் என்னுடையது அல்ல, எல்லாம் பெற்றுக் கொண்டதே".

எல்லாம் எனக்குரியது என்கிற போது இங்கு பிரச்சினை. ஒன்றை இழக்கும் போது மனம் வாடி போகிறது. ஒன்றை பெறும் போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. 

எனக்குரியது என்று இப்போது உள்ளது எல்லாம், என்றோ ஒருநாள் யாரோ கொடுத்தது/விட்டு சென்றது. கொடுத்தவரும் ஏற்கனவே யாரிடமிருந்தோ பெற்றுக் கொண்டதுதான். இதை சபை உரையாளர் நூல் 2:21 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே". 

பெற்றுக் கொண்டதை எல்லாம் யாரும் எடுத்துச் செல்ல முடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 1:6-22) யோபு தன்னிடம் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்து விடுகிறார். பிள்ளைகள் தொடங்கி தன்னுடைய செல்வம் அனைத்தும் சூறையாடப்படுகிறது. 

இருந்தபோதிலும், என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியாய் யான் சொல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவர் பெயர் போற்றப்படுக! என்கிறார் யோபு.

 தன் மனைவி கடவுளை பழித்துரைக்கச் சொன்ன பதிலும் கூட அவர் கடவுள் மீது குற்றம் சாட்டவில்லை, பாவம் ஏதும் செய்யவில்லை.

யோபு கொண்டிருந்த மனநிலை, எல்லாம் கடவுளிடமிருந்து வந்தது என்பதுதான். (தொடர்ந்து யோபு நூலை படிக்கின்ற போது தன் பிறந்த நாளை பழிக்கிறார், புலம்புகிறார், வருந்துகிறார். இருந்தபோதிலும், அவர் கடவுளுக்கு எதிராக பாவம் ஏதும் செய்யவில்லை).

யோபுவின் மனநிலை நம் மனநிலையாக  வேண்டும். 

இருப்பதை இழந்த போதிலும் நம்பிக்கை குறைவு படாத மனநிலை.

இருப்பதற்கு மேல் எல்லாவற்றையும் குவித்து வைக்க வேண்டும் என்ற மனநிலை மறைய வேண்டும். 

இறுக்கமான மனநிலையில் இருந்து இரக்கமான மனநிலை நம்மில் உருவாக வேண்டும்.

இரக்கம் இருக்கும் இடத்தில் இருப்பதை இழக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். 

இருப்பதை இழக்கின்ற போது நமக்கான செல்வம் விண்ணகத்தின் சேர்க்கப்படும். 

இறையாட்சிக்கு தடையாய் இருப்பவற்றை தடை செய்ய...


பொதுக் காலம் 26 ஆம் வாரம்

29.09.2024 - ஞாயிற்றுக்கிழமை 

"அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்; குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்" எசாயா 5:23

 நாம் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லதே செய்தாலும் தடுத்து நிறுத்துவோம். நமக்கு பிடித்தவர்கள் தவறே செய்தாலும் அதை நாம் தட்டிக் கொடுப்போம். 

இந்த உலகில் நாம் வாழ்வதால் இந்த உலக ஞானத்தை நாம் முதன்மையானதாக கொண்டிருக்கிறோம். இந்த உலகம் எதை உண்மையென்று சொல்கிறதோ அதை நாமும் உண்மையென நம்புகிறோம். போலியான விளம்பரங்கள், போலியான உறவுகள், போலியான வார்த்தைகள் என நம்முடைய வாழ்க்கை போலித்தனமானதாக மாறிவிட்டது.

எத்தனையோ நல்லவர்கள் இவ்வுலகில் காணப்படும் போலித்தனத்தை/பயங்கரவாதத்தை/அடக்குமுறையை தடுத்து நிறுத்த பார்த்து   (இவ்வுலகின் பார்வையில்) தோற்றுப் போனார்கள். கடைசியில் நல்லவர்கள் மூச்சு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (அருட்சகோதரி. ராணி மரியா, அருட்பணி. ஸ்டேன், இன்னும்...) 

இந்த உலகில் பலர் தவறு செய்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியும். ஆனால் அவர்கள் தவறு செய்தாலும் கூட ஆதாரம் இல்லை என்று சொல்லி, அவர்கள் செய்த தவறுகள் சரி என்று மாற்றப்படும். தவறே செய்யாதவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். 

வாழ்க்கை எதுவரை போகும் என்று தெரியாத போதும், பலர் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

தனது பெயரை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மற்றவர்களை எதையும் செய்யலாம் என்பதை தான் இந்த உலகம் போதிக்கிறது. இன்று நல்லவர்களை கண்டு கொள்வதே அரிதாக இருக்கிறது. நல்லவர்கள் என்று சொன்னால் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதனால் நல்லவர்களாக இருந்தும் அதை வெளிக்காட்டாமல் வாழக்கூடியவர்கள் பலர் உள்ளனர். (நமக்கு ஏன் வம்பு? என்று பின்வாங்கக்கூடிய நல்லவர்களும் இவ்வுலகில் உண்டு).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு 9:38-48) நல்லது செய்யும் ஒருவரை இயேசுவின் சீடர்கள் தடுக்க பார்க்கிறார்கள். ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டுகிறார். அவர் இயேசுவை சாராதவர் என்பதனால் அவரை தடுக்க பார்த்தார்கள். ஆனால் இயேசுவின் பதிலோ, அவரை தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னை குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

இயேசுவின் மனநிலை என்னவாக இருந்தது? அங்கு நடைபெறக்கூடிய செயல் நல்ல செயல். எனவே அதை தடுக்க வேண்டாம் என்றார். 

ஊருக்கு நல்லது நடக்கிறது என்றால் அதை எதிர்க்கக்கூடிய மனநிலை உடையவர்கள் இன்று பலர் இருக்கின்றார்கள். 

காரணங்கள்,

1. அந்த நல்லது என் வழியாக நடைபெறவில்லை, எனக்கு பெயர் கிடைக்காது. எனவே அந்த காரியம் இந்த ஊருக்கு நடக்கக்கூடாது என்று தடுக்கும் மனநிலை உடையவர் உண்டு.

2. நடக்கக்கூடிய நல்ல காரியத்தில் எனக்கு/என்னை சார்ந்தோருக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காரியம் நடக்கக் கூடாது. 

3. இந்த காரியத்தை முன்னெடுத்துச் செல்பவர் என்னுடைய எதிரி, எனவே இந்த காரியம் நடக்கக் கூடாது.

இவ்வாறாக நடைபெறக்கூடிய நல்ல காரியத்தை தடுத்து நிறுத்தும் மனிதர்கள் இங்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை.

இயேசு தொடர்ந்து பேசும்போது நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டியது  பாவத்தில் விழச் செய்யும் கையை, காலை, கண்ணை என்று சொல்கிறார்.

இரு கையுடையவராய், இரு கால் உடையவராய், இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதை விட, பாவம் செய்ய தூண்டும் அவற்றை இழந்து இறையாட்சிக்கு உட்படுவது நல்லது என்கிறார் இயேசு. 

இன்றைய முதல் வாசகத்தில் (எண்ணிக்கை 11:25-29) மோசே அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு பகிர்ந்து கொடுக்கிறார். ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் இரண்டு நபர்கள் பாளையத்திலே தங்கி விட்டனர். அவர்கள் மீதும் ஆவி இறங்கியது, அவர்கள் இறைவாக்குரைத்தபோது அதை யோசுவா மோசேயிடம் சொல்லி தடுக்க பார்க்கிறார். அப்போது மோசே யோசுவாவை நோக்கி, என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவர் அவர்களுக்கு தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு என்று சொல்லி அவருக்கு கடவுளின் சிறப்பை புரிய வைக்கிறார். 

புரிந்து கொள்ளாத மனநிலையினால் பொறாமையினால் சில நல்லவைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. யாராக இருந்தாலும் அவர் செய்வது நல்லது என்றால் அதை தடுக்க நாம் யார்?

இன்றைய இரண்டாம் வாசத்தில் (யாக்கோபு 5:1-6) பூச்சிகளால் அரிக்கப்பட்டு துருப்பிடிக்கும் செல்வத்தை சேர்த்து வைத்து, வேலை ஆட்களுக்குரிய கூலியை பிடித்து வைத்து, நேர்மையாளரை குற்றவாளியென தீர்ப்பளித்துக் கொலை செய்யும் வஞ்சக நெஞ்சத்தினருக்கு கண்டனக் குரலை முன் வைக்கிறார் திருத்தூதர் யாக்கோபு.

செல்வத்தினால் ஒருவர் நிறைவாழ்வை பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வுலக செல்வம் நாம் நிறைவாழ்வை பெறுவதற்கு தடையாக இருக்கிறது.

பொறாமை, பதுக்கல், பகை, பாவம், அடுத்தவரை தீர்ப்பிடல் போன்றவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

நம் வாழ்க்கையில் எவையெல்லாம் நாம் முன்னேறுவதற்கு தடையாய் இருக்கின்றதோ அவற்றை நாம் தடை செய்ய வேண்டும். 

கடவுளை நெருங்கி செல்வதற்கு முட்டுக்கட்டை போடும் நம் பாவ வாழ்வை தடை செய்ய வேண்டும். 

இறைவன் நமக்கு கொடுத்த அந்த ஆவியை சீர்குலைக்கும் பொறாமையை தடை செய்ய வேண்டும். 

செல்வத்திலேயே நாட்டம் கொண்டு, மற்ற மனிதரை மதிக்காத மனநிலையை கொடுக்கும் செல்வத்தை தடை செய்ய வேண்டும். 

எதையும் இந்த உலகில் இருந்து நாம் எடுத்துச் செல்ல முடியாது.

நாம் நேர்மையோடு நீதியோடு வாழ்ந்தால் உலகில் நமக்கான பெயரை விட்டுச் செல்ல முடியும். 

கிறிஸ்துவை சார்ந்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளை உள்வாங்கி, தீமையை விட்டொழித்து, செய்ய வேண்டிய நல்லவற்றை செய்து அதன் வழியாக இறையாட்சிக்கு உட்பட முயற்சி செய்வோம்.

படைத்தவரை உள்ளத்தில் நினை...


பொதுக் காலம் 25ஆம்  வாரம்

28.09.2024 - சனிக் கிழமை 

ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் பாடுகளும் துன்பங்களும் உண்டு. அந்த பாடுகள் வருவதற்கு முன் நம்மை படைத்தவரை உள்ளத்தில் நினைக்க வேண்டும். வலிமையோடும் ஆற்றலோடும் இருக்கின்ற போது வரக்கூடிய பாடுகள் வேறு, ஒன்றும் செய்ய இயலா நிலையில் (முதுமை) வரும் பாடுகள் வேறு.

இன்றைய முதல் வாசகம் (சபை உரையாளர் 11:9-12:8) இளமை முதல் கடவுளைத் தேட/படைத்தவரை உள்ளத்தில் நினைக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

நாம் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நகர்த்தி விடலாம். களிப்பு, கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுதல் என்று மனம் விரும்புவதை செய்துவிடலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பு வழங்கக் கூடியவர் கடவுள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 

இளமை நலமாய் இருக்க இளமை விரும்புவதெல்லாம் செய்வது நல்லதல்ல, முதுமையும் இனிமையாய் இருக்க வேண்டும் என்றால் இளமை முதல் படைத்தவரை உள்ளத்தில் நினைக்க வேண்டும். படைத்தவரை உள்ளத்தில் நினைக்க வேண்டும் என்பது கடவுளுக்கு உகந்த காரியங்களை செய்ய வேண்டும் என்பது தான் பொருள். 

என்னை யாரும் பார்க்கவில்லை நான் செய்வது யாருக்கும் தெரியாது என்று நாம் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. 

மறைவாய் உள்ளதை காணும் விண்ணக தந்தை நமக்கு ஏற்ற கைம்மாறு கொடுப்பார். அந்த கைம்மாறு நாம் செய்யும் செயலுக்கு (நல்லதோ/தீயதோ) ஏற்றவாறு அமையும்.

இன்றைய முதல் வாசகம் சபை உரையாளர் 12:3-4 இல், "கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர்(கைகள்) நடுக்கங்கொள்ள, வலியோர்(கால்கள்) தளர்வுறுமுன்னும், அரைப்போர்(பற்கள்) மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்(கண்கள்) ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள்(காதுகள்) அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்(குரல்வளை நரம்புகள்) அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை."

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் உடலிலுள்ள உறுப்புகள் அதன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் முன் நம்மை படைத்தவரை நாம் உள்ளத்தில் நினைக்க வேண்டும்.

கடவுள் பயம், கடவுள் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையாக இக்காலம் மாறிப் போய்விட்டது. ஒரு பக்கம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றி வேலைகள், மறுபக்கம் கடவுள் இல்லவே இல்லை என்ற நிராகரிப்பு.

உரு தந்து, சுவாசிக்க மூச்சு தந்து நம்மை இயக்கியவர் அவர். அவரின்றி ஒரு அணுவும் அசையாது. 

நம்மைப் படைத்தவரை, நம்மை உருவாக்கியவரை நம் உள்ளத்தில் நினைப்போம். 

கடவுளை உள்ளத்தில் நினைக்கின்ற போது கடவுளின் சாயலில் உள்ள மனிதரையும் எண்ணிப் பார்ப்போம். 

கடவுளுக்குரியதை கடவுளுக்கும் மனிதருக்கு உரியதை மனிதருக்கும் கொடுப்போம்.

துன்புறும் மெசியா/ துன்புறும் மானிடம்...


பொதுக்காலம் 25 ஆம் வாரம்

27.09.2024 - வெள்ளிக் கிழமை

"எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்" - திருப்பாடல்கள் 119:71

இந்த உலகில் துன்பம் மட்டும் இல்லை என்றால் நம் வாழ்வு எத்தனை அருமையானதாக இருக்கும். இறப்பு, இழப்பு, இடையூறு போன்றவை இல்லாமல் இருந்தால் இந்த உலகம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும். 

துன்பமில்லாத வாழ்க்கையை எங்கு கண்டுபிடிப்பது என்று பலர் ஓடிக் கொண்டிருக்கிறார். சிலர் விலை கொடுத்து மகிழ்ச்சியை பெற்றுக் கொண்டு துன்பத்தை சற்று நேரம் ஒதுக்கி வைக்கிறார்கள். (சுற்றுலா, திரைப்படம், விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் பணத்தை செலவழித்து தற்காலிகமாக துன்பத்தை தவிர்க்கிறார்கள்).

துன்பத்திற்கு நிரந்தர முடிவு யாராலும் கொடுக்க முடியாது. சாலமோனின் ஞான நூல் 2:1 இவ்வாறு செல்கிறது, "நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாக கேள்விப்பட்டதில்லை".

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:18-22) கடவுளின் மெசியா துன்புறக் கூடியவராக காட்டப்படுகிறார். மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறி தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டுமென்று தன்னுடைய சீடருடன் அவர் தன்னுடைய துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்.

கடவுளே துன்பங்களை ஏற்பதா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு சொல்லால் உலகைப் படைத்தவர், ஒரு சொல் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அவரே துன்பங்களை ஏற்க துணிந்து முன் வருகிறார்.

துன்பங்களின் முன்மாதிரியாக இயேசு திகழ்கிறார். பாவம் ஏதும் செய்யாத நிலையிலும் பாவிகளின் வரிசையில் நிற்கிறார். ஆனால் தவறு செய்த நாமோ/ மற்றவர் தவறு செய்ய காரணமாய் இருந்த நாமோ ஏன் துன்பம்? ஏன் கஷ்டம்? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

நாம் செய்யும் செயலுக்கேற்ற கைம்மாறு நமக்கு உண்டு என்பதை உணர்ந்திருந்தாலும் தீமைக்கு கைம்மாறான துன்பத்தை ஏற்க நம்முடைய மனம் மறுக்கிறது.

இயேசுவின் துன்பங்களுக்கு பிறகு உயிர்த்தெழுதல் எனும் மாட்சி வெளிப்பட்டது. இழப்பு இல்லாமல் பெறப்படும் வாழ்க்கையின் இன்பம் ரசிக்கப்படாது. அடிகள் நிறைந்த வாழ்க்கை தான் மற்றொருவருக்கு வாழ்க்கைப் பாடத்தை கொடுக்கிறது. 

தன்னிலை உணர்ந்தவர்கள் தவறை உணர்வார்கள். நான் யார்? நான் என்னவாக இருக்கிறேன்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ற கேள்விகளை கேட்டு பார்க்க வேண்டும்.

நான் சரியான பாதையில் தான் பயணிக்கின்றேனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்க வேண்டும். 

நம் வாழ்வில் வரும் துன்பம் நம்மால்/பிறரால் வந்தது என்றால் அதற்கு கடவுள் காரணமாக மாட்டார்.

இந்த இரண்டையும் கடந்து நாம் துன்பத்தை அனுபவிக்கிறோம் என்றால் நம் நம்பிக்கை புடமிடப்படுகிறது. இந்த சோதனை எளிதாக எல்லோருக்கும் வந்து விடாது. 

நம்பிக்கையின் நிலைத்திருப்பவர்கள் மட்டுமே பொன்னை புடமிடப்படுவது போல சோதிக்கப்படுவர். 

நாம் நன்மையினால் துன்புறும் ஊழியரா? துன்பங்களை ஏற்று கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்கும் பணியாளர்களா? சிந்திப்போம்...

குழப்பமான வாழ்வில் தெளிவு நோக்கி...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

26.09.2024 - வியாழக் கிழமை

"ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராயிருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள் - 1பேதுரு 1:13

குழப்பம், தெளிவற்ற தன்மை, புரிந்து கொள்ளாமல் இருப்பது இவையெல்லாம் நம்மை நேரிய பாதையில் இருந்து தடுமாற்றம் நிறைந்த பாதைக்கு அழைத்துச் செல்கிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் குழப்பமான வாழ்வைக் கொண்டு நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. 

குழப்பங்கள் தெளிவு பெற வேண்டும் தடுமாற்றங்கள் சரி செய்யப்பட வேண்டும். ஒருவர் மற்றவரை அல்லது ஒருவர் மற்றொன்றை புரிந்து கொள்ள வேண்டும். 

புரிந்து கொள்ளாத வரை குழப்பம் தெளிவு பெறுவது இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:7-9) ஏரோது மன்னன் குழப்பமுற்று இருந்தான். அவனுக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம் அவன் செய்த தவறு. திருமுழுக்கு யோவானின் தலையை வெட்ட செய்தனால் அவன் மனம் குழம்பி போய் இருந்தது.  (ஏரோது தான் செய்தது தவறு என்பதை புரிந்து கொள்ளாமல் இருந்தான்).

ஒருவேளை இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டாரோ என்று இயேசுவைப் பார்த்து அவன் சந்தேகப்பட்டான். எனவே இயேசுவைக் காண வாய்ப்பு தேடினான்.

தவறுகள் சரிசெய்யப்பட்டால் நமக்குள் இருக்கும் குழப்பம் தெளிவு பெறும். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவற்றை குறித்து கலக்கம் கொள்கிறோம். ஏதாவது ஒன்று அல்லது யாராவது ஒருவர் நம்மை குழப்பிக் கொண்டே இருக்கிறார். எதைச் சொல்வது? எதை பேசுவது? எப்படி நடந்து கொள்வது? என்பது நம்முடைய வாழ்க்கையின் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஒருவேளை எது சரியோ, அதை சொல்லி விட்டால் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், தெளிவு பெற கேள்விகளை முன்வைத்தால் பிரச்சனை வந்து விடுமோ என்ற கலக்கம்,  இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் நம்முடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. (நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மற்றவர்களை திருப்திபடுத்த முடியாது).

ஆனால் நாம் செய்த தவறுகளை நாம் தான் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஏரோது இயேசுவைக் காண வாய்ப்பு தேடியதன் நோக்கம் இயேசு திருமுழுக்கு யோவானாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். (தன்னை திருத்திக்கொள்ள அவன் வாய்ப்பு தேடவில்லை).

மற்றவர் குறைகளை பெரிதுப்படுத்தாமல் நமக்குள் இருக்கும் கறைகளை நாம் கழுவ முற்படுவோம். 

தேவையற்ற கறைகள் (குழப்பம்) நீங்கினால் தேவையான அக்கறை உண்டாகும். அதன் வழியாக அன்பு பெருகும், தெளிவு பிறக்கும்.

நல்லது செய்ய புறப்படு...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

25.09.2024 - புதன் கிழமை

"தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்" - திருப்பாடல்கள் 37:27

பயணம் செய்ய எல்லோரும் விரும்புவோம். ஆனால் பயணத்தில் சில தடங்கல்கள் வந்தால் கவலை உண்டாகும்.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை நோக்கிய ஒரு பயணம். தடுமாற்றங்கள் தடைகள் எல்லாவற்றையும் கடந்து உண்மையை நோக்கிய ஒளியை நோக்கிய பயணம். பள்ளம் என்று தெரிந்தும் யாரும் பள்ளத்தில் விழுவதில்லை, ஆனால் இருளென்று தெரிந்து இருளான வாழ்வை, இருளான பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோம். 

தீய வாழ்வால், பாதைகள் தடுமாற கூடாது. பயணங்கள் தடைபட கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:1-6) இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து பணி செய்ய அனுப்புகிறார். இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்திற்கு சில பரிந்துரைகள் வைக்கப்படுகிறது. உணவு, பை, பணம், கைத்தடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம், அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும். நற்செய்தியை அறிவித்து நோயாளிகளை குணமாக்குங்கள். 

இந்த பயணத்தில் சீடர்கள் வழியாக தேவையில் இருப்போர் பயனடைகின்றார்கள். நோயுற்றோர் நலம் பெறுகிறார்கள்.

பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும். 

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மேலும் சொல்லக்கூடிய அறிவுரை, 'உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'.

நல்லது செய்ய சீடர்கள் பயணம் மேற்கொண்டார்கள். நாம் மண்ணக பயணத்தில் நல்லது செய்ய அழைக்கப்படுகிறோம். நன்மை செய்ய கூடுமாயின் இயன்றவரை முடிந்தவருக்கு நன்மை செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். 

நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மற்றவர்களை நோயாளிகளாக மாற்றாத மனநிலை நமக்குத் தேவை.

ஆதிக்கத்தையும் அடக்கு முறையையும் மற்றவர் மேல் திணிக்காத மனநிலை நமக்குத் தேவை. 

நல்ல செய்தியை, நல்ல வாழ்வை மற்றவருக்கு முன்மாதிரியாக கொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். 

நாம் பயணத்தில் நல்லது நடக்க வேண்டும் நல்லவையே நடக்க வேண்டும்.

மறுதலிப்பு அல்ல மறைமுக வாழ்த்து...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

24.09.2024 - செவ்வாய்க் கிழமை 

"அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்" - நீதிமொழிகள் 31:28 

நம் அன்புக்குரியவர்களின் மறுப்பும் மறுதலிப்பும் நம்மை காயப்படுத்தும். சில நபர்களின் மறுதலிப்பு நம்மை வாழ்க்கையில் உயர செய்யும். 

நம் மனம் பலவீனமானது. உயரத்தில் இருக்கும் போது தாழ்வை நோக்கி பயமும், தாழ்வில் இருக்கும் போது நம் வாழ்வு எப்பொழுது உயரும் என்ற கவலையும் நம்மை குடிகொள்ளும்.

யார் மறுத்தாலும் யார் மறுதலித்தாலும் நான் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தால், தடைகள் ஆயிரம் வந்தாலும் தடுமாற்றும் வாழ்வில் இல்லை. சில மனிதர்களின் சாதாரண வார்த்தைகள் பல மனிதர்களை அளவுக்கதிகமாக காயப்படுத்தி இருக்கிறது. 

சில வார்த்தைகள் மீண்டும் வாழ்வில் எழ முடியாத அளவுக்கு அடியை கொடுக்கிறது. யார் சொன்னார்கள்? எங்கு சொன்னார்கள்? என்று சில வேளைகளில் நடந்தது மறந்து விடுகின்றன. ஆனால் அவை ஏற்படுத்தி வடுக்கள் ஆறாமல் குத்திக் கொண்டே இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 8:19-21) உம் தாயும் சகோதரர்களும் உம்மை பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று இயேசுவுக்கு சொல்லப்பட்ட போது, இயேசு அவர்களைப் பார்த்து 'இறைவார்த்தையை கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரரும் ஆவார்கள்' என்கிறார்.

இந்த வார்த்தை அன்னை மரியாவுக்கு வலியை ஏற்படுத்தியிருக்குமா? நிச்சயம் இந்த வார்த்தை மறுதலிப்பை குறிப்பது போல் இருக்கிறது. இயேசுவால் தாயும் சகோதரர்களும் நிராகரிப்பு செய்யப்படுவது போல இருக்கிறது. 

உண்மையில் இயேசு தன் தாயையும் சகோதரர்களின் நிராகரிப்பு செய்யவில்லை, மறுதலிக்கவில்லை. மாறாக மறைமுக வாழ்த்தை கொடுக்கிறார். 'நான் ஆண்டவரின் அடிமை உம் வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்' என்று தன்னை இறைத்திருவுளத்திற்கு அர்ப்பணித்த அன்னை மரியா இறைவார்த்தையின்படி நடந்தவர் தானே. 

இந்த இடத்தில் அன்னை மரியா இறைவார்த்தைக்கு செவிமடுத்தவர் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை மறுதலித்தாலும் நாம் நம்முடைய கடமையிலிருந்து தவறி விடக்கூடாது. சில வேளைகளில் மறுதலிப்பு நமக்கு முன் வைக்கப்படும் நம்பிக்கைகான சோதனை.

மனிதர்கள் மறுத்தாலும் மறுதலித்தாலும் நாம் நீதியோடும் நேர்மையோடும் இறைதிருவுளத்தை நிறைவேற்றுகின்ற போது நாம் கடவுள் முன் தலைநிமிர்ந்து நிற்க முடியும். 

நமக்கான கைம்மாறு அவரிடம் இருந்து நமக்கு கிடைக்கும்.

எதுவும் மறைவாய் இல்லை...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

23.09.2024 - திங்கட் கிழமை

"படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்" - எபிரேயர் 4:13

இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய சுயத்தை மறைக்க விரும்புகின்றார்கள். நான் யார் என்பதை மற்றவர்கள் அடையாளம் கண்டுவிட்டால் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற கவலை இன்று நம்மில் பலருக்கு உண்டு. 

நான் நானாகவே இருப்பது எனக்கு திருப்தி அளிப்பதில்லை. நான் மற்றவரைப் போல என்னை காட்டிக் கொள்வது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

நிறைவற்ற மனநிலை, நிலையில்லாத உலகம், தேவையற்ற முன்மாதிரிகள், சவால் நிறைந்த வாழ்க்கை முறை இவைகள் தான் நமக்குள்ளும் நமக்கு முன்னாலும் இருக்கின்றன. 

எல்லோர் வாழ்க்கையிலும் குறை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது. அந்த குறை என்னும் இருளை நீக்க நிறை எனும் ஒளி ஏற்றப்பட வேண்டும்.

அந்த ஒளியை யார் ஏற்றுவார்? 

நாம் ஒத்துழைப்பு நல்காத வரை அந்த ஒளியை யாராலும் ஏற்ற முடியாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 8 : 16-18) வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை என்று இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்து சொல்கிறார். 

ஒளி ஏற்றப்பட்டது என்றால் அது மற்றொருவருக்கு பயன்படும் வகையில் வைக்கப்பட வேண்டும்.  (மறைவான பகுதியில் வைக்கப்பட்டாலும் கூட அந்த ஒளி அதன் இடத்தை காட்டிக் கொடுத்து விடும்). ஒளியை ஏற்றி மறைவான பகுதியில் வைத்தால் அந்த ஒளியின் முழு பயன் என்ன?

அதேபோலத்தான் நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படாத வரை (நாம் நம்மை ஏற்றுக் கொள்ளாத வரை) அதனால் ஒரு பயனும் இல்லை. எப்போது எனக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்? 

எப்போது நான் எனக்குள் இருப்பதை/என்னை ஏற்றுக்கொள்கிறனோ அப்போதுதான் எனக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்.

சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், என்னைப் பற்றி நானே முழுவதும் அறியாத நிலையில், யார் என்னை பற்றி அறிந்து கொள்ள முடியும்? என்று...

நம்மைப் பற்றி ஒருவேளை நாம் முழுவதும் அறியாமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு செயலும் நம்மை யார் என்று காட்டிக் கொடுத்து விடும்.

நம்மிடம் இருக்கும் ஆற்றலை நாம் சரிவர பயன்படுத்தவில்லை என்றால் இருக்கும் ஆற்றலும் இல்லாமல் போய்விடும். (உள்ளவருக்கு கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும் - லூக்கா 8:18)

எதுவும் யாருக்கும் மறைவாய் இல்லை, எதையும் நாம் மறைக்கவும் முடியாது. 

வெளிப்படுத்த வேண்டிய தளங்களில் நம்மை வெளிப்படுத்துவோம். நம் ஆற்றலின் வழியாக மற்றவர்கள் ஆற்றல் பெற உதவுவோம்...

தன்னை முன்னிலைப்படுத்தும் மானிடம் (போட்டி மனப்பான்மையோடு)...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

22.09.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்" - சபை உரையாளர் 4:4

மனிதன் இறப்பதற்கு முன் இங்கு பல போட்டிகள் நடைபெறுகின்றது. வாழ்வதற்காக, உண்பதற்காக, இருப்பிடத்திற்காக, இருத்தலை காண்பிக்க, அதிகாரத்திற்காக என்று பல வகைகளில் போட்டி மனப்பான்மை தொடர்கிறது. 

ஒருவர் மற்றவரை அழித்தாவது முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். மனிதர் அழிவுக்குரியவர் என்பதை அறிந்திருந்தாலும் மற்றவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரில் மேலோங்கி இருக்கிறது. 

1 திமொத்தேயு 6:10 இவ்வாறு சொல்கிறது, "பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்".

பொருள் ஆசை, பண ஆசை, பதவி ஆசை பலரை அழித்திருக்கிறது. இது போட்டி போட்டு முன்னேற துடிக்கும் உலகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:30-37) இயேசு தன் பாடுகளைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கிறார். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரை கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் என்று சீடர்களுக்கு கற்பிக்கிறார்.

இதை புரிந்து கொள்ளாது இயேசுவின் சீடர்கள் தங்களில் யார் பெரியவர்? என்று ஒருவரோடு ஒருவர் வாதாடி கொள்கின்றனர். முதன்மைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த தன் சீடர்களை அழைத்து தொண்டராக இருக்க அழைப்பு விடுக்கிறார் இயேசு.

சிறு பிள்ளைகளில் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னை ஏற்றுக் கொள்கிறார். (இங்கு சிறு பிள்ளைகளை ஏற்றுக் கொள்வது என்பது இந்த குழந்தைகளின் மனநிலையை வாழ்வாக்குவதை, தாழ்ச்சியோடு வாழ்வதை குறிக்கிறது). 

இன்றைய முதல் வாசகத்தில் (சாலமோனின் ஞானம் 2:17-20) பொல்லாத மனிதர்கள் இந்த உலகில் வாழும் நல்ல மனிதருக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராகவும் பேசுகிறார்கள். 

தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய கைம்மாறு உண்டு என்பதை அறியாதவர்கள் தங்களை மேலானவர்களாக கருதிக் கொள்வதனால் நேர்மையோடு நடக்கின்ற மக்களை இழிவாக கருதுகின்றார்கள். 

இவ்வுலகில் நல்லாருக்கும் பொல்லாருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. (நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம்).

இந்த உலகில் தீயவர்கள், பொல்லாதவர்கள், இறைப்பற்றில்லாதவர்கள் நெடுங்காலம் வாழ்வது போல தோன்றுகிறது. நீதியோடும் நேர்மையோடும் வாழக்கூடியவர்கள் மிகவும் துன்பப்படுவது போல தோன்றுகிறது. 

(சபை உரையாளர் 8:12 - பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங்காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள்.)

இரண்டாம் வாசகத்தில் (யாக்கோபு 3:16-4:3) பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும் என்கிறார் திருத்தூதர் யாக்கோபு. இந்த உலகில் நடைபெறக்கூடிய எதார்த்தத்தை படம்பிடித்து காட்டுகிறார். நமக்குள்ளே காணப்படும் சிற்றின்ப நாட்டம், ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பேராசை, சண்டை சச்சரவு ஆகியவை நாம் கடவுளிடம் கேட்பது கிடைக்காமல் இருப்பதற்கு தடையாய் இருக்கின்றன.

(செபம் கேட்கப்படாததற்கு காரணங்கள் 3

1. நம்பிக்கையோடு கேட்பதில்லை 

2. தீய எண்ணத்தோடு கேட்கிறோம் 

3. சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறோம்)

அமைதிக்கு பதிலாக பிளவை ஏற்படுத்தும் மனிதர்கள், சண்டை சச்சரவை உண்டாக்கும் மனிதர்கள் தங்களை பெரியவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆயுதம் தாங்கி இன்று பலர் தங்களை பெரியவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆயுதங்கள் வழியாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள பலர் முற்படுகிறார்கள். 

(மத்தேயு 26:52 அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.)

ஆயுதம் அல்ல அமைதியே நம்மை கடவுவுளுக்கு  நெருக்கமாக்கும்.

தங்களை பெரியவர்களாக முன்னிலைப்படுத்த துடிக்கும் இந்த மானிடத்தில் நாம் எத்தகைய மனிதராக இருக்கிறோம்? 

இருக்கின்ற வாழ்நாட்களை கிறிஸ்துவின் மதிப்பீடுகளோடு வாழ தவறிவிடுகிறோம். 

நம்மை மதிப்பு மிக்கவர்களாக காட்டிக்கொள்ள நல்லவர்களை காட்டிக் கொடுக்கிறோம். 

அமைதிக்கு ஊறு விளைவித்து சமூகத்தில் பிளவை உண்டு பண்ணுகிறோம். 

நன்மைக்கு செவிசாய்ப்பதா? தீமைக்கு செவி சாய்ப்பதா என்ற போராட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம்மை நாம் தாழ்த்துவது நம்மை கடவுளின் பார்வையில் முன்னிலைப்படுத்தும். உலகின் முன் நாம் தோல்வியை தழுவியது போல தோன்றலாம் ஆனால் நாம் கடவுள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்போம்...

சாலமோனின் ஞானம் 5:1,2 இவ்வாறு சொல்கிறது, "அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும் தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும் துணிவோடு நிற்பார்கள். இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள்; எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித் திடுக்கிடுவார்கள்".

நீதி, நேர்மை, தாழ்ச்சி, இரக்கம், அமைதி ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்போம், அதன் வழியாக நாம் கடவுளால் முன்னிலைப்படுத்தப்படுவோம்.

புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர்

 


பொதுக் காலம் 24ஆம் வாரம்

21.09.2024 - சனிக் கிழமை 

நற்செய்தியாளர் மத்தேயு கப்பர்நாகும் என்ற ஊரைச் சார்ந்தவர். மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் இவர் லேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் தந்தையின் பெயர் அல்பேயு. இவர் சுங்கச்சாவடியில் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். வரி வசூலிப்பது என்பது உரோமையர்கள் சார்பாகவும் யூதர்களின் எதிரியாகவும் கருதப்பட்ட பணி/சூழ்நிலை.

இந்த வரி வசூலிக்கும் பணியை செய்தவர்கள் விரோதிகள் எனவும், நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் எனவும் யூதர்களால் அழைக்கப்பட்டார்கள்.

சில நேரங்களில் உரோமை அரசாங்கம் விதிக்கும் தொகையை விடவும் மிகுதியாக மக்களிடமிருந்து வரி வசூலித்தார்கள். இதனால் மக்களின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:9-13) இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த மத்தேயுவை தான் இயேசு, என்னை பின்பற்றி வா என்று அழைக்கிறார்.

அவரோடு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரி தண்டுபவர்கள், பாவிகள் என பலர் அவரோடு விருந்துண்டனர். இதை பார்த்த பரிசேயர் இயேசுவின் சீடரிடம், உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பினார்கள்.

இயேசுவின் பதில் நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை, நேர்மையாளரை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்பதாக அமைந்தது.

நலமாய் இருப்பவருக்கு மருத்துவம் தேவையில்லை. நேர்மையாளருக்கு நேர்மையை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

யாரை நல்வழிப்படுத்த வேண்டுமோ! அவர்களை இயேசு தேடி சென்றார். அத்தகைய மனநிலையில் இருக்கின்ற எல்லோருக்கும் அவர் போதித்தார், கேட்கச் செவியுள்ளோர் அனைவரும் கேட்டார்கள். வாழ்வை மாற்றிக் கொண்டார்கள்.

அதே போலத்தான் மத்தேயுவும் சமூகத்தால் பாவியாக கருதப்பட்டார். ஆனால் இயேசுவால் தனிப்பட்ட பணிக்கென அழைக்கப்பட்டார்.

இயேசுவின் அழைப்பை ஏற்ற பிறகு மத்தேயுவின் வாழ்வில் மாற்றம், செயலில் மாற்றம் ஏற்பட்டது.

மனமாற்றம் பெற்றார். மனமாற்றம் பெற நமக்கு அழைப்பும் விடுக்கிறார்.

28 அதிகாரங்களை கொண்ட மத்தேயு நற்செய்தி தொடக்கத்தில் 'இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு' என்ற வசனத்தோடு (முதல் அதிகாரத்தில்) தொடங்குகிறது, முடிவில் 'இதோ உலகம் முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்ற வார்த்தையோடு (கடைசி அதிகாரத்தில்) முடிவு பெறுகிறது.

மத்தேயு நற்செய்தியாளர், எல்லா வேளையிலும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற செய்தியை நமக்கு கொடுக்கிறார்.

மத்தேயு என்றால் யாவேயின் பரிசு என்று பொருள்.

மத்தேயு நற்செய்தி நூலைக் குறிக்க பயன்படுத்தப்படும் அடையாளம்  - வான தூதர்.

மத்தேயு நற்செய்தி நூல் யூதர்களால் துன்புறுத்தப்பட்ட யூதக் கிறித்தவர்களுக்கு எழுதப்பட்டது.

யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசு தான் என்பதை இந்நூல் வெளிக்காட்டுகிறது.

இயேசுவின் நற்செய்தி பாகுபாட்டை களைந்தது...

பொதுக் காலம் 24ஆம் வாரம்

20.09.2024 - வெள்ளிக் கிழமை

"நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை" - திருத்தூதர் பணிகள் 15:9

நற்செய்தி அறிவிப்பு பணி இரண்டு வகையில் நடைபெறும். ஒன்று நாம் அந்த நற்செய்தியை வாழ்க்கையாலும் வார்த்தையாலும் அறிவிப்பதன் வழியாக, மற்றொன்று அந்த நற்செய்தி அறிவிப்பு பணியை செய்வதற்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதன் வழியாக. 

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவின் வாழ்வை (நன்மையை) மற்றவருக்கு அறிவித்து, அந்த நல்வாழ்வை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வது.

திருத்தூதர் பணிகள் 10:38 இவ்வாறு சொல்கிறது, "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்". 

சென்ற இடமெல்லாம் இயேசு நன்மை செய்து கொண்டே சென்றார் என்பதுதான் நற்செய்தி/நல்ல செய்தி.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (லூக்கா 8:1-3) இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை பறைசாற்றினார். அவருடைய பணியில் பெண்களும் பங்கு பெற்றனர். யூத சமூகத்தால் அடிமைகளாக கருதப்பட்ட அந்த பெண்கள் இயேசுவின் பணி வாழ்வில் உடன் இருந்தார்கள், இந்த பணி வாழ்விற்கு தேவையானவற்றை பகிர்ந்தும் வாழ்ந்தார்கள். 

நற்செய்தி அறிவிப்பு செய்ய இவர்தான் தேவை, இவரால்தான் முடியும் என்று இல்லை. நல் மனமும் ஆற்றலும் சிந்தனையும் இருந்தால் போதும். 

ஆண், பெண் சமத்துவம் இன்றும் தேவையான ஒன்றாக இருக்கிறது. சில இடங்களில் பெண் ஆதிக்கம் சில இடங்களில் ஆணாதிக்கமும் தலைதூக்கத்தான் செய்கிறது. இந்த ஆதிக்கம் என்பது நல்லவற்றை செய்ய தடையாக இருக்கிறது.

யாரும் யாருக்கும் குறைந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல என்ற சிந்தனை மனதினுள் ஆழமாய் பதியாத வரை பாகுபாடு குறையப்போவதில்லை. 

தன்னைவிட வலிமை குறைந்தவர் என்று மற்றவரை குறைத்து மதிப்பிடாத செயல் ஒரு நற்செயல் தான்.

தன்னைப் போல மற்றவரையும் அன்பு செய்வதும் ஒரு நற்செயல்தான். 

தனிமையில் தவிக்கின்றவருக்கு ஆறுதலான வார்த்தை சொல்வதும் நற்செயல்தான். 

இயேசுவின் நற்செய்தி சமத்துவத்தை முன்னிறுத்துவது. சமய, சமூக சீர்கேட்டை எதிர்ப்பது.

நாம் நம்முடைய வாழ்வில் பாகுபாட்டை களைந்து, இயேசுவின் வார்த்தையை நம் வாழ்க்கையாகுவோம்.

கவனிப்பும் மன்னிப்பும்...

 


பொதுக் காலம் 24ஆம் வாரம்

19.09.2024 - வியாழக் கிழமை

மேலோட்டமான கவனிப்பு மேலோட்டமான அன்பு இதுதான் இந்த உலகம் நம்மிடம் காட்டக்கூடியது. அக்கறை இருப்பது போல அன்பு செய்வது போல இந்த உலகம் போலியான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 

யார் உண்மையான அன்பு கொண்டிருக்கிறாரோ, அவர்தான் அடுத்தவர் நலன் மீது அக்கறை கொள்வார். பெற்றோர்கள் குழந்தைகள் வளர்கின்ற போது அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்த பிறகு பிள்ளைகள் பெற்றோர் மீதான கவனிப்பை அடுத்தவரிடம் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூத்தவர் இளையவரிடம் அல்லது இளையவர் மூத்தவரிடம் அல்லது இருவரும் முதியோர் இல்லத்திடம் பெற்றோரை கவனிக்க கொடுத்து விடுகிறார்.

ஆதாயம் இருக்கும் வரை அன்பு இருக்கும். ஒருவரால் உமக்கு எந்த உதவியும் செய்ய இயலவில்லை என்ற நிலை வந்தவுடன் கவனிப்பும் கண்காணிப்பும் குறைந்து விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7 36-50) பரிசேயர் ஒருவர் இயேசுவை தம்மோடு உண்பதற்கு அழைக்கிறார். அழைப்பதோடு அவருடைய கவனிப்பு முடிந்துவிட்டது. கால் கழுவ தண்ணீர் தரவில்லை அன்பு முத்தம் கொடுக்கவில்லை தலையில் எண்ணெய் பூசவில்லை. (இவையெல்லாம் விருந்தோம்பலின் செயல்பாடுகள், தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமை) மேலோட்டமான கவனிப்பை கொடுத்தவர் ஆழ்ந்த அன்பை கொடுக்க தவறிவிட்டார். 

ஆனால் சமூகத்தால் பாவி என்று கருதப்பட்ட ஒரு பெண் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய காலுக்கு நறுமணத் தைலம் பூசி அவரை நன்கு கவனிக்கிறார்.

இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர் அந்த பெண்ணை பாவியாக கருதினார். ஆனால் தன்னுடைய கடமையிலிருந்து தவறி போனார். 

ஆனால் தன்னுடைய மிகுதியான அன்பால் இயேசுவின் மன்னிப்பை பெறும் பாக்கியத்தை பெற்றார் அந்த பெண். யூத சமூகத்தில் பெண் மட்டும் பாவியாக கருதப்பட்டார். பாவம் செய்வதற்கு காரணமாக இருந்த ஆண் நிரபராதி.

அந்தப் பெண்ணின் கவனிப்பு அவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுத்தது. தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டு விடலாம் என்ற பாடத்தை அல்ல, மாறாக தவறுக்கு வருந்தும்போது மன்னிப்பு உண்டு என்ற ஆழ்ந்த சிந்தனையை இப்பகுதி நமக்கு விளக்குகிறது.

1யோவான் 1:8 இவ்வாறு சொல்கிறது, "ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது."

செய்த பாவத்திற்கு மன வருத்தமும், பாவத்திற்கு பரிகாரமும் நமக்கு புது வாழ்வை பெற்றுக் கொடுக்கும். 

எதிர்மறை மனநிலை...


பொதுக் காலம் 24ஆம் வாரம்
18.09.2024 - புதன் கிழமை 

"நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்" - தானியேல் 9:5

எல்லா மனிதரிடமும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. மற்ற மனிதரிடம் இருக்கக்கூடிய நன்மையை காண ஆரம்பித்தால் தீமை காணாமல் போய்விடும். மற்றவரின் தீமையை மட்டுமே சுட்டிக் காட்டினால் அவர் வளர்ச்சியை காண்பது கடினம்.

சில இடங்களில், சில நேரங்களில் பொருள் உணர்ந்து மற்றவரின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா இடத்திலும் எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொன்னால் அவர்கள் கேட்க மாட்டார்கள். 

எங்கு? எப்படி? எதை? பேச வேண்டும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும்.
குற்றம் காணும் மனநிலை மறைந்தால் நன்மைத்தனம் நம்மிலும் மேலோங்கும்.
(மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் ஆமா சாமி! போடுவதும் தவறு. சரியாக சொன்னதை எதிர்த்து நிற்பதும் தவறு)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:32:35) திருமுழுக்கு யோவானை பேய் பிடித்தவன் என்றவர்கள், இயேசுவை பாவிகளுக்கும் வரிதண்டுபவர்களுக்கும் நண்பன் என்கிறார்கள். திருமுழுக்கு யோவானுடைய இவ்வுலக வாழ்வையும், இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக பயணத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள் அவர்களை எதிர்மறைக் கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள்.

நான் போகிற பாதையிலே எல்லோரும் வரவேண்டும் என்பது சரியான பார்வை அல்ல. எனக்கு ஒன்று சரியாகப்படுகிறது நான் அதை செய்கிறேன். மற்றவருக்கு மற்றொன்று சரியாகப்படும், அதை அவர் செய்ய நான் தடையாய் இருக்கக் கூடாது. 
நான் மட்டும் தான் சரி என்ற பார்வை எல்லாவற்றையும் தவறாக பார்க்க வைக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாங்கள் குழல் ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை, நாங்கள் ஒப்பாரி வைத்தோம் நீங்கள் அழவில்லை என்று சொல்லி விளையாடும் சிறுபிள்ளைக்கு ஒப்பான தலைமுறையினரை இயேசு சுட்டிக் காட்டுகிறார்.
நிறைகுறை இல்லாத மனிதர் இவ்வுலகில் இல்லை. (சபை உரையாளர் 7:20
குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை).

குறைகளை கூட நேர்மறையோடு அணுகினால் அவை சரி செய்யப்பட்டு நிறையாக மாறும். அப்படி இருக்கின்ற போது, நிறைவோடு செய்யக்கூடிய காரியங்களையும் குறையோடு பார்க்கக்கூடிய மனநிலை சரியான பார்வை அல்ல.

நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர் செய்வது சரியானதாக இருந்தால் அதை பாராட்டும் மனப்பாங்கு நமக்குத் தேவை. (பாராட்டாவிட்டாலும் மட்டம் தட்ட கூடாது)
எல்லாம் நமக்கு பிடித்தது போல மாற வேண்டும் என்ற ஆசை கூடாது. மாறாக எல்லாம் நலமாய் அமைய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உருவாக வேண்டும்.

எதிர்மறையை விடுத்து நேர்மறையோடு வாழ்வோம். விருப்பு வெறுப்புகளை கடந்து நன்மை செய்வோம், நல்லதை பெறுவோம்.

பரிவு காட்டுவது பெரிய செயல்...

 


பொதுக் காலம் 24ஆம் வாரம்

17.09.2024 - செவ்வாய்க் கிழமை 

"உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?" - 1 யோவான் 3:17

பெரிய செயல்களைச் செய்ய நாம் பெரியவராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாம் எந்நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு பரிவு காட்டுவதன் வழியாக நாம் பெரிய செயலைச் செய்ய முடியும். என்னிடம் செல்வம், புகழ், பெருமை எல்லாம் இருந்தும் பரிவு இல்லையேல் நான் ஒன்றும் இல்லை.

அன்பு இருக்கும் இடத்தில் பரிவு இருக்கும். பல்வேறு உலக அறிவு, உலக நாட்டம், உலக இன்பம் நம்மிடம் இருக்கிறது. உலகம் எதை பெரிதாக தூக்கி கொண்டாடுகிறதோ அதை நாமும் பெரிதாக எண்ணுகிறோம். 

இந்த உலகம் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எப்போது ஏற்படும்? எல்லாம் நம்மை விட்டுப் போகும்போது. மனிதர்களிடம் செல்வமும் புகழும் இருக்கின்ற போது படை சூழ்ந்து நிற்கும். எல்லாம் நம்மை விட்டுப் போகும்போது எல்லோரும் நம்மை விட்டு போய்விடுவார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:11-17) நயின் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுக்கிறார் இயேசு. தன் மகனை இழந்து தனித்து விடப்பட்ட அந்த தாய்க்கு இயேசு காட்டிய பரிவு, பெரிய வல்ல செயலாக பார்க்கப்பட்டது. பெரிய இறைவாக்கினர் ஒருவர் நம்மிடையே தோன்றியிருக்கிறார் என்று மக்கள் அச்சமுற்று கூறினர்.

இயேசுவின் பரிவு வார்த்தையிலும் (அழாதீர் என்று சொல்கிறார்) செயலிலும் (அருகில் சென்று இளைஞனை தொட்டு எழுப்பி விடுகிறார்) வெளிப்பட்டது.

இயேசுவைப் போல நம்மால் மற்றவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் பரிவிரக்கச் செயல்களின் வாயிலாக மற்றவர்களுக்கு நாம் வாழ்வு கொடுக்க முடியும்.

சிலர் இறக்கின்ற தருணத்தில் பரிவு பெற்றுக் கொள்கின்றனர். இருக்கின்றபோது கிடைக்காத பரிவு இறந்தபின் கிடைத்து எதற்கு?

சில வேளைகளில் பரிவு என்பது கடமையாகவும் பார்க்கப்படுகிறது. பரிதாபப்படுவது இங்கு தேவையில்லை பரிவு காட்டுவது தான் இங்கு தேவை.

எதை நாம் கொண்டு வந்தோம்? எதை நாம் கொண்டு செல்வோம்? நம் நன்மைத்தனம் தான் நம்மை பின் தொடரும் 

இருக்கும் வரை இருக்கின்றவர்களோடு இரக்கத்தோடு இருப்போம்...

நம் பரிவும் இரக்கமும் கடவுளின் பார்வையில் பெரிதாக பார்க்கப்படும்...


அதிகாரத்தை பணிய வைக்கும் நம்பிக்கை...

 


பொதுக் காலம் 24ஆம் வாரம்

16.09.2024 - திங்கட் கிழமை

"தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்" - பேதுரு 5:4

மனிதர்கள் அதிகார போக்கிலே அலைந்து திரிகிறார்கள். தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்களின் வாழ்வு உயர பயன்படுத்துவதை காட்டிலும் தன் குடும்பம் உயர பயன்படுத்துபவர்களே அதிகம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சரி அதிகாரத்தில் இருப்பவர்களின் கீழ் இருப்பவர்களும் சரி இதை அறியாத எவரும் இல்லை.

தற்காலிகமாக நம்நிலை உயர்ந்தால் போதும் என்பது தான் நமது மனநிலை. தற்காலிகமாக மற்றவர்களை உயர்த்தினால் போதும் என்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை.

அதிகாரம் பணம் புகழ் இவற்றைப் பற்றி பேசுகின்ற போது எனக்குள் எழக்கூடிய கேள்வி, எதையும் கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே மனிதர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றால், நாம் சேர்த்து வைத்தது எல்லாவற்றையும் நம்மோடு எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை வந்தால் நாம் என்னவெல்லாம் செய்வோம்? என்பதுதான்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:1-10) இந்த அதிகாரப் போக்கு இல்லாத தலைவரை நாம் பார்க்கிறோம். தன் பணியாளரை காப்பாற்ற யூதர்களின் மூப்பர்களை இயேசுவிடம் அனுப்பி வைக்கும் நூற்றுவர் தலைவர் செயல்முறை நமக்கு வியப்பைத் தருகிறது. நூற்றுவர் தலைவர் தொடக்கத்தில் யூதரின் மூப்பர்களை அனுப்புகிறார், அதன்பின் தன்னுடைய நண்பர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்புகிறார். தன் நண்பர்களை இயேசுவிடம் அனுப்பி அவர் சொன்ன வார்த்தைகள், "ஐயா, உமக்கு தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னை தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும் என் ஊழியர் நலமடைவார்.

எவ்வளவு அதிகாரமிக்க தலைவர் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, தன்னை தகுதியற்றவர் என்று கருதுகிறார் என்பது தான் நமக்கான பாடம். தன் பணியாளர்களை அதிகாரத்தோடு ஆளக்கூடிய தலைவர், தன் பணியாளருக்காக அதிகாரத்தை துறந்து, ஆணவத்தை துறந்து தன் நிலையிலிருந்து இறங்கி வருகிறார்.

இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் இரண்டு. 1. நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வருதல், 2. நம்பிக்கையை அறிக்கையிடுதல்.

இந்த நூற்றுவர் தலைவர் தனக்காக, தன்னுடைய குடும்பத்திற்காக இயேசுவிடம் ஆள் அனுப்பவில்லை. மாறாக, நோயுற்று சாகும் தருவாயில் இருக்கும் தன் பணியாளரை காப்பாற்ற அவர் ஆள் அனுப்புகிறார்.

அவர் கொண்டிருந்த அதிகாரத்தை, அவரின் நம்பிக்கை பணிய வைத்துவிட்டது. பணிந்து நின்ற காரணத்தினால் அவர் தாழ்ந்து போகவில்லை. மாறாக இஸ்ரயேலரிடத்தில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை போற்றப்பட்டது.

தலைமைத்துவம் என்பது அதிகாரத்தில் நிறைவு பெறுவது அல்ல பணிவில், பகிர்வில், பரிவில் முழுமை பெறுவது. தன்னை முன்னிலைப்படுத்துவது தலைமைத்துவம் ஆகாது. தன்னோடு இருக்கும் மனிதர்களின் மாண்பை காப்பாற்றுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல் சரிவர செய்வதுதான் உண்மையான தலைமைத்துவம். 

இயேசுவின் தலைமைத்துவம் இறைமகன் என்ற நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வந்து கீழ்ப்படிந்து சாவை ஏற்பதிலும் மீட்பை பெற்றுக் கொடுப்பதிலும் முழுமை பெற்றது. 

அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் அல்ல, நம்பிக்கையோடும், திறந்த மனதோடும், உண்மையோடும் நாம் பணியாற்றும் இடங்களில் நம் தலைமைத்துவத்தை வெளிக்காட்டுவோம்.

துன்பத்தினால் நம்பிக்கை சோதிக்கப்படுமா?


பொதுக் காலம் 24ஆம் வாரம்
15.09.2024 - ஞாயிற்றுக் கிழமை

"உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்" - யாக்கோபு 1:3

இந்த உலகில் ஏன் துன்பம் இருக்கிறது? துன்பத்தை கடந்த இன்பமான வாழ்வை மட்டும் ஒருவர் என்றென்றும் அனுபவித்திட முடியுமா? இப்படி வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருந்தது என்றால் எப்படி வாழ்க்கை வாழ முடியும்? கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே? இதுபோன்ற கேள்விகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் எழத்தான் செய்கிறது.

கடவுளை அவ்வபோது தேடக்கூடியவர்கள் கூட, கடவுள் ஏன் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு துன்பத்தை கொடுக்கிறார்? என்று வாழ்க்கையில் ஒரு தடவையாவது கடவுளை கேள்வி கேட்கத்தான் செய்கிறார்.

இவ்வுலகில் மூன்று வகையில் துன்பம் அல்லது சோதனை வருகிறது. முதல் வகை சோதனைக்கு காரணம் தனிப்பட்ட நாம் தான் (யாக்கோபு திருமுகம் 1:14 இவ்வாறு சொல்கிறது,
ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது),  
இரண்டாம் வகை சோதனைக்கு நம்மோடு இருக்கக்கூடிய மனிதர்கள் காரணம் (சபை உரையாளர் 8:9 இவ்வாறு சொல்கிறது,
உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது),
மூன்றாம் வகை சோதனை என்பது நம் நம்பிக்கையை புடமிடக்கூடியது. (எசாயா 48:10 இவ்வாறு சொல்கிறது, 
நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்).

சில மனிதருடைய தியாகம் நிறைந்த துன்பம் பல மனிதர்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. தவறே செய்யாத நிலையிலும் மற்றவர்கள் கூனிக் குறுகி நிற்க கூடாது என்பதற்காக துன்பத்தை குற்றத்தை ஏற்றுக் கண்ட மாமனிதர்கள் இவ்வுலகில் உண்டு. 
அந்த வகையில் தான் இயேசு பாவமே செய்யாத நிலையில் பாவிகளுக்காக தலை கூனிந்து நின்றார்.

இன்றைய  முதல் வாசகத்தில் (எசாயா 50:5-9) துன்புறும் ஊழியர் பற்றி எசாயா விவரிக்கிறார். அடிப்போருக்கு முதுகையும் தாடியை பிடுங்குவோருக்கு தாடையையும் ஒப்புவித்த துன்புறும் ஊழியர், காறி உமிழ்வோருக்கு முகத்தை மறைக்கவில்லை.
இந்த துன்புறும் ஊழியரை போலத்தான் தவறே செய்யாத பல மனிதர்கள் இன்று ஏமாற்று பேர்வழிகளால் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

இரண்டாம் வாசகம் (யாக்கோபு 2:14-18) செயல்களோடு கூடிய நம்பிக்கையை பற்றி எடுத்துச் சொல்கிறது. நம்பிக்கை தன்னிலே செயல் வடிவம் பெறவில்லை என்றால் அது உயிர் அற்றது. இன்று பலர் கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை அவர்கள் செயலில் காட்டுவதில்லை. 
நம்பிக்கை செயல் வடிவம் பெறுகின்ற போது பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதனால்
 நம்பிக்கை சொல் வடிவிலேயே நிலைத்திருக்கிறது. 

இது நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:27-35) இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிக்கிறார். தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் சிலுவையை தூக்கிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார். இந்த சிலுவை என்பது இவ்வுலகில் கிறிஸ்துவின் விழுமியங்களை நாம் கடைப்பிடிப்பதனால் நம்மீது சுமத்தப்படும் துன்பத்தை குறிக்கிறது. 

இறைமகன் ஏன் பாடுகளை ஏற்க வேண்டும்? என்பது கேள்வியாக இருக்கிறது. பாவம் தவிர அனைத்திலும் மனிதராக இருந்தவர் மனித நிலையிலேயே துன்பங்களை அனுபவிக்க தன்னை கையளித்தார். அதைத்தான் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:6-7 இவ்வாறு சொல்கிறது, கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியது ஒன்றாக கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்".

மனிதர்கள் இவ்வுலகில் துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயேசு முன் உதாரணமாய் இருக்கிறார். நீதிக்காக நேர்மைக்காக நாம் துன்புற்றோம் என்றால் கிறிஸ்துவின் துன்பத்தில் நாம் பங்கேற்பதாக அர்த்தம். 
ஆனால் நீதிக்காக நேர்மைக்காக துன்புராமல் நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் துன்பங்களை ஏற்றுக் கொண்டால் அது கிறிஸ்துவின் துன்பமாகாது. இங்கு நம்பிக்கையும் புடமிடப்படாது. 

நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும் அந்த செயல் வடிவம், நம்மை துன்பத்தின் வழியாக புடமிட வேண்டும். 

(கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 10:13 இவ்வாறு சொல்கிறது,
"உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்".)

ஒவ்வொரு துன்பமும் ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. பெற்றுக்கொண்டு அனுபவத்தின் வழியாக மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதுதான் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் அடிகள் பட்டாலும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளை நாம் செய்து துன்பத்தை பெருக்கிக் கொள்கிறோம். 

நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவரின் வாழ்வை அழிப்பது எந்த வகையில் நியாயம்?
மற்றவரின் துன்பத்தில் பங்கேற்க முடியாவிட்டாலும் மற்றவருக்கு துன்பத்தை கொடுக்காமல் இருப்பது கிறித்துவத்தின் உயர்ந்த பண்பு.

நம் துன்பங்கள் நம்மை நம்பிக்கையில் உறுதிப்படுத்த வேண்டும். சிறிதளவு துன்பம் வந்ததும் நம்பிக்கையிலிருந்து பிறழ்ந்து போவது கிறித்தவ வாழ்வு ஆகாது என்பதை உணர்வோம். 

எத்தனை இடர்கள் துன்பங்கள் வந்தாலும் என் இலக்கு இயேசுவோடு இணைந்து நடப்பது தான் என்பது நம் வாழ்வின் நோக்கமாகட்டும்.
துன்பங்கள் வழியாக நம்முடைய நம்பிக்கை புடமிடப்படட்டும்...

சிலுவை கடவுளின் வல்லமை...


பொதுக் காலம் 23ஆம் வாரம்
14.09.2024 - சனிக் கிழமை 

சிலுவை என்றாலே நம் நினைவுக்கு வர வேண்டிய பகுதி, 1கொரிந்தியர் 1:18, "சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெரும் நமக்கோ அது கடவுளின் வல்லமை".
குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்டனை தான் சிலுவைச் சாவு. 

அந்த சிலுவை மரணம் கூட இயேசுவின் கரம் பட்டதால் புனிதம் பெறுகிறது. 
உலகத்தின் பார்வையில் சிலுவை மடமையாக பார்க்கப்பட்டது. ஆனால் கடவுள் உலகம் மடமையென கருதுபவற்றை தேர்ந்து கொண்டார். 
கடவுளின் பார்வை வேறு, மனிதரின் பார்வை வேறு.
சிலுவை சுட்டிக் காட்டுவது தியாகம், தற்கையளிப்பு, அன்பு.
தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் ஒருபுறம். தவறே செய்யாமல் தண்டனை பெற்ற இயேசு மறுபுறம்.

மற்றவர்களுக்கு சுமை கொடுத்து வாழ்க்கையில் சுகமாய் வாழ மனிதர்கள் எண்ணுகிறார்கள். ஒரு சிலர் தான் மற்றவர்களின் சுமைகளை இணைந்து சுமக்கிறார்கள். 

இந்த உலகில் பலர் பலருக்கு சிலுவையாக இருக்கின்றனர். ஆனால் மனதிற்கு பிடித்தவர்கள் தரக்கூடிய சிலுவை கூட சுகமாக இருக்கிறது. காரணம், விரும்பி ஏற்கப்படும் எல்லா சிலுவையும் சுகம் தருபவை தான்.

இன்று குடும்ப உறவுகள் பெரும் பார சுமையாக இருக்கிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒருவர் மற்றவரை அனுசரித்துச் செல்வதும் இன்று சிலுவையாக இருக்கிறது. 

யாரை நம்புவது? யாரை ஏற்றுக் கொள்வது? யாரிடம் பகிர்ந்து கொள்வது? எல்லாமே கேள்வி என்னும் சிலுவையாக இருக்கிறது.
வாழ்க்கையே தொடர் சிலுவையாக இருக்கிறது. 
ஆனால் இயேசுவின் சிலுவை என்பது வல்லமையை வெளிக்காட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால்தான், ஆலயத்தின் திருப்பீடத்தில் முதன்மை இடத்தை சிலுவை பிடித்திருக்கிறது.

சிலுவையை யாரும் விரும்பி ஏற்பதில்லை ஆனால் சிலுவையில்லாத வாழ்க்கை என்பது யாருக்கும் இல்லை. 
சிலர் சிலுவையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதனால் சிலுவையின் பாரம் அவர்களை அழுத்துவதில்லை. 

முடியுமானால் இந்த துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும், ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உமது திருவுளப்படி என்று தன்னை கையளித்த இறைமகன் இயேசு கூட அந்த சிலுவை பாடுகளை, துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.
உலக ஞானம் நமக்கு மீட்பு தரப் போவதில்லை. ஆனால் சிலுவையின் படிப்பினை நமக்கு மீட்பு தரும். 

சிலுவையின் தியாகம் நம்மில் வெளிப்பட்டால் நம் துயரங்களிலிருந்து வாழ்வு வெளிப்படும். நம்மை கரைத்து மற்றவர் வாழ்வு உயர சிலுவை என்னும் ஆயுதத்தை முன்னிலைப்படுத்துவோம். 
மற்றவர்களின் வாழ்வில் சிலுவையாக அல்ல, மற்றவர்களோடு இணைந்து சிலுவையை சுமக்கும் நபர்களாக மாறுவோம்.

வரலாற்றுப் பின்னணி

312 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் உரோமை ஆண்டு வந்த கான்ஸ்டன்டைன் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு போர் தொடுக்க சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப் படையோடு போர் தொடுக்க செல்லும்போது சிலுவை பொறித்த கொடிகளை ஏந்தி சென்றான். இதனால் அவன் அந்த போரில் வெற்றி பெற்றான். அதனால் அவன் கிறித்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான்.

இந்த நிகழ்வு நடந்து 13 ஆண்டுகள் கழித்து கான்ஸ்டன்டைன் மன்னனின் தாயார் புனித ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்கு புனித பயணம் மேற்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச் சென்று அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட போது மூன்று சிலுவையில் இருப்பதை கண்டார்.
மூன்று சிலுவையில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை? என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. 

எனவே அவர் ஒரு கை சூம்பிய மனிதனை அழைத்து அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்ட போது அதிலிருந்த ஒரு சிலுவையில் இருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதனுடைய கை நலம் அடைந்தது.
அவர் திருச்சிலுவையை உரோமையில் உள்ள கோயிலில் நிறுவிய நாள் 326ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அதிலிருந்து திருச்சிலுவையின் மாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

மரக்கட்டையை அகற்றுவோம்...


பொதுக் காலம் 23ஆம் வாரம்

13.09.2024 - வெள்ளிக் கிழமை 

குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). இங்கு அழுக்கு வெளியே இருக்கிறது, உட்புறம் தூய்மை.

வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது? தீயது எது? என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம். (இங்கு வெளியில் தூய்மையாக இருப்பது போல காட்டப்படுகிறது ஆனால் உட்புறம் மாசுபடிந்திருக்கிறது).

தீமைகள் நமக்குள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மற்றவரை தவறாக மதிப்பிடக்கூடிய மனநிலையை நாம் பெருக்கிக் கொள்கிறோம். 

புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'

நாம் மாசுள்ளவர் என்பதை கண்டுணராத வரை, நாம் மற்றவர்களையும் தவறாக மதிப்பிட தான் செய்வோம். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:39-42) "வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" என்கிறார் இயேசு.

நம் குறைகள் களையப்பட வேண்டும். நம் குறைகள் களையப்பட்ட பிறகு தான் நாம் மற்றவர்களின் கறைகளை கழுவ முடியும். 

நாம் செய்வது தவறு என்பதை ஒருவேளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் செய்வது தவறு என்பது வெளியில் இருப்பவர்களுக்கு நன்றாய் தெரியும். 

சபை உரையாளர் நூல் 7:20 இவ்வாறு சொல்கிறது, "குற்றமே செய்யாமல் நல்லதே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை".

நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெரும்.

நம்முடைய வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதை முதன்மைப்படுத்துவோம். நாம் சரியாக இல்லாதபோது மற்றவரின் வாழ்வை நாம் ஒருபோதும் திருத்த முயலக் கூடாது. 

குறையுள்ள மனிதர் குறைபாடுள்ள மனிதரை சரிப்படுத்த முடியாது.

நம்மை நன்மை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் தீய ஓட்டங்களை தடுத்து நிறுத்துவோம்.

நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டை இருந்தால் நம் வாழ்வு சிறப்பானதாக மாறும். 

அதன்பின் நாம் மற்றவரை மாற்ற வேண்டியதில்லை, நம்மை பார்த்து மற்றவர்கள் மாறிவிடுவார். 

நம் வாழ்வு பாடமாகட்டும்...


தீமைக்கு பதில் நன்மை!!!


பொதுக் காலம் 23ஆம் வாரம்

12.09.2024 - வியாழக் கிழமை

"நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்" - தொடக்க நூல் 50:20

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை கோபம், எரிச்சல், பழிக்கு பழி. நாம் பெற்ற வலியை விட அவர்கள் இரண்டு மடங்கு பெற வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் இழிநிலை காரியங்களும் அதன் விளைவுகளும் அதில் அடங்கும்.

மன்னிப்பு, மறத்தல் இந்த வார்த்தை எல்லாம் அகராதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றன. நான் அனுபவித்த கொடுமை அவனு(ளு)ம் அனுபவிக்க வேண்டும். 

இரக்கம் காட்டுவதால் என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம்? என்ற எண்ணம் பிறர் செய்ய தவறுகளை மன்னிக்க முடியா மனநிலையை நமக்கு கொடுத்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:27-38) "உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள், உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்ள விரும்புபவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள், அன்பு, நன்மை செய்வோருக்கு அதை திரும்ப செய்ய வேண்டாம். பகைவருக்கு நன்மை செய்யுங்கள், தீர்ப்பளிக்க வேண்டாம், மற்றவர்களை கண்டனம் செய்ய வேண்டாம், மன்னியுங்கள், கொடுங்கள் என்று இயேசு சொல்கிறார். 

போதனை எல்லாம் வாழ்வாக்கப்பட்டால் இங்கு பிரச்சனை ஏது? 

ஒருவர் கன்னத்தில் நம்மை அறைகிறார் என்றால், சொல்ல முடியாத அளவுக்கு கோபம் நமக்குள் எழும். ஆனால் இயேசு சொல்லக்கூடிய பதில் மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். (இது திருப்பி அடித்தலுக்கு சமம்).

இதிலும் ஒரு யுக்தி இருக்கிறது. உரோமையர் 12:20,21இல், "உன் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால் அவன் குடிக்கக் கொடு; இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

நமக்கு எதிராக தீங்கு செய்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய நன்மையான காரியம் தான் அவர்களுக்கான பாடம் (திருப்பி அறைதல்).

தீமை செய்பவருக்கு தீமையை செய்து கொண்டிருந்தால் நாம் நன்மையை காண்பது எப்போது? 

'இழப்பதற்கு எதுவும் இல்லை' என்று சொல்வார்கள், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய நன்மைத் தனத்தை இழக்காமல் இருப்போம். 

ஒருவர் செய்த தீமைக்கு பதில் நன்மை செய்வோம்.

தந்தையை போல இரக்கம் உள்ளவராய் வாழ்வோம்...

வாழ்த்தா? கண்டனமா?


பொதுக்காலம் 23 ஆம் வாரம்

11.09.2024 - புதன் கிழமை 

"இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்; அவர் தேர்கள் புயலென விரையும்; கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்; தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது" - எசாயா 66:15

நாம் எந்த நல்லதும் செய்யாத நிலையில் நம்மை ஒருவர் பாராட்டினாலும் இந்த பாராட்டினால் நம்முடைய உள்ளம் குளிர்கிறது. சில இடங்களில் பணம் கொடுத்து பாராட்டு பெறப்படுகிறது. அற்ப மனிதர்கள் தரக்கூடிய பாராட்டு அதோடு கடந்து போய்விடும். 

மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. (அது தவறு இல்லை) ஆனால் அதற்கேற்ற வகையில் நம்முடைய செயல்கள் அமைய வேண்டும். 

இவ்வுலக மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும் பெருமையையும் தேடுகிறோம். சாதாரண அற்ப மனிதர் தரக்கூடிய புகழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றால், நம்மை உருவாக்கிய, நம்மை செதுக்கிய கடவுள் தரக்கூடிய அந்த புகழ்ச்சி என்பது எத்துனை மேலானது.

சில இழப்புகளை சந்திக்கின்ற போது, சில கைம்மாறை நாம் மிகுதியாக பெற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு இழப்புகளை கொடுக்கிற போது அது நமக்கே வந்து சேரும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:20-26) இயேசு 4 வகையான பேறுபெற்றோரை பதிவு செய்கிறார். (ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுதுக் கொண்டிருப்போர், மானிடமகன் பொருட்டு வெறுத்து ஒதுக்கப்படுவோர்).

நான்கு வகையான கண்டனங்களையும் இயேசு சுட்டிக்காட்டுகிறார். (செல்வருக்கு கேடு, உண்டு கொழுத்திருப்போருக்கு கேடு சிரித்து இன்புறுவோருக்கு கேடு, புகழ்ந்து பேசப்படுபவருக்கு கேடு)

நாம் பேறுபெற்றோர் என்ற நிலையில் இருக்கிறோமா? அல்லது இயேசுவால் கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுகிறோமா? என்பது சிந்திக்கத்தக்கது.

கிறித்தவ வாழ்வு மட்டும் துன்பம் நிறைந்தது அல்ல, கிறிஸ்துவில் வாழ்வோருக்கும் துன்பம் உண்டு.

கிறிஸ்துவை சார்ந்தவரை உலகம் வெறுக்கும். ஏனென்றால் கடவுளுக்குரியதை உலகு வெறுக்கும்.

உலகின் பார்வையில் பேறுபெற்றவராக அல்ல, உன்னதரின் பார்வையில் பேறுபெற்றோராய் வாழ்வோம்.

உலக இன்பங்கள் போதும் என்றால் விண்ணக செல்வங்கள் நமக்கு கிடையாது. விண்ணக செல்வங்களை நோக்கி பயணித்தால் உலகில் துன்ப சுவடுகள் தான் உண்டு. 

யாருக்கு? எதற்கு? எப்போது? வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திப்போம்.

நம்மை பார்த்து இறைவன் பேறுபெற்றோர் என்று சொல்ல வேண்டுமா? ஐயோ! என்று சொல்ல வேண்டுமா? என்பதை நமது செயல்பாடுகள் வெளிக்காட்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் நாம்...


பொதுக்காலம் 23 ஆம் வாரம் 

10.09.2024 - செவ்வாய்க் கிழமை 

"நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன" - திருவெளிப்பாடு 21:14

கடவுள் நம்மை பெயர் சொல்லி தேர்ந்தெடுக்கிறார். திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவில் நாம் புதுவாழ்வு பெற நமக்கு பெயர் கொடுக்கப்படுகிறது. 

கிறித்தவ பெயரை கொண்டிருக்கக்கூடிய நாம் கிறிஸ்துவின் விழுமியங்களை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்வு வாழ்வது தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதனுடைய நோக்கம்.

ஆளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதலில் பயன்படுத்தப்படுவது பெயர் தான். ஒரு பெயரைச் சொன்னவுடன் எல்லோரும் வியந்து நிற்கிறார்கள் என்றால், அந்தப் பெயரைக் கொண்டவர் அத்தகைய சாதனையை படைத்திருக்கிறார் என்று தான் பொருள். சில பெயரை கேட்டதும் முகம் சுளிக்கிறது என்றால், செய்த செயல் அருவருப்பானது, இழிவானது என்று தான் அர்த்தம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:12-19) இயேசு பெயர் சொல்லி தன்னுடைய சீடர்களை தேர்ந்தெடுக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் பின்னாளில் வியப்புக்குரிய பெயர்களாக மாறிப் போனது என்பது மறுப்பதற்கில்லை. 

சீடர்களின் பெயர்கள் முறையே, பேதுரு என்னும் சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து. 

ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் அல்லது ஒரு வரலாறு புதைந்திருக்கிறது. இயேசு அவர்களை அழைத்த போது சில ஆற்றல்களையும் அதிகாரங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

தொடக்கம் சிறியதாக (12 நபர்கள்) இருந்தது; நிறைவு எல்லாவற்றையும் அளப்பரியதாக இருக்கிறது .

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பிணிகள் நீங்கி நலம் அடையவும் தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமாகவும் பலர் இயேசுவை தேடி வந்தனர். (இது சீடர்களுக்கான பயிற்சி).

அழைக்கப்பட்ட திருத்தூதர்கள், தங்களால் இயன்ற அளவில் திருத்தூது பணியை சிறப்பாக செய்தார்கள்.

தடைகளை தாண்டி, இடர்பாடுகளை கடந்து, நம்பிக்கை குறைவிலிருந்து நம்பிக்கை மிகுதி பெற்று அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம். வழி தவறி போகாதமாறு அவர் குரலைக் கேட்டு அவர் பின்னே செல்ல அழைக்கப்படுகிறோம்.

யாரும் எனக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று அழைப்பை தட்டி கழிக்க முடியாது. திருமுழுக்கு பெற்ற அனைவருமே கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிப்பை வாழ்க்கையாலும் வார்த்தையாலும் கடைப்பிடிக்க, எடுத்துச் சொல்ல அழைக்கப்படுகிறோம்.

திருத்தூதர்களில் பலர் பலவீனமானவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அந்த பலவீனத்தில் தான் இயேசுவின் வல்லமை வெளிப்பட ஆரம்பித்தது. 

நம் வாழ்வின் இருக்கக்கூடிய பலவீனங்களோடு அவரை பின்தொடர்வோம். நம்மை குத்திக் கொண்டிருக்க கூடிய அந்த பலவீனம் என்னும் முள்ளை அவர் நீக்கி, நம்மை அருளால் நிரப்புவார்.

நன்மை செய்வதற்கு எதிர்ப்பு...

 


பொதுக் காலம் 23ஆம் வாரம்

09.09.2024 - திங்கட் கிழமை 

"தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு" - திருப்பாடல்கள் 34:14

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:6-11) இயேசு தொழுகைக் கூடத்திற்கு சென்று கற்பிக்கிறார். ஓய்வுநாளில் கை சூம்பியவரை குணப்படுத்துகிறார். 

நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசுவின் மீது குற்றம் காணும் நோக்குடன் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் காத்திருந்தனர்.

ஓய்வுநாளில் நலமாக்க கூடாது என்பது அவர்களின் சட்டம். காரணம் ஓய்வு நாள் கடவுளுக்குரியது. ஓய்வு நாளில் பிற காரியங்கள் நடைபெற்றது என்றால் கடவுளுக்கு நமக்கும் இடையேயான உறவில் இடைவெளி ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது.

ஆனால் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் ஏற்கனவே கடவுளின் உறவிலிருந்து விரிசலை ஏற்படுத்திக் கொண்டனர். தொழுகைக் கூடத்திற்கு வந்து இறைவார்த்தைக்கு செவிமடுக்க முடியாதவாறு, அவர்கள் குற்றம் காணும் நோக்கத்தோடு இருந்தார்கள். இயேசு என்ன செய்யப் போகிறார் என்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள். 

அவர்களின் உள்ளங்களை அறிந்த இயேசு கை சூம்பியவரை நடுவில் நிறுத்தி ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரை காப்பதா? அழிப்பதா? எது முறை? என்று கேட்டார்.

ஓய்வு நாள் என்றாலும் கூட நல்லது செய்வது கடவுளுக்கு நமக்கும் இடையான உறவை நெருக்கமாக்கும் என்பதை சுட்டிக் காட்டினார். கை சூம்பியவருக்கு நலம் கொடுத்தார். 

நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும் என்பார்கள். நானும் நன்மை செய்ய மாட்டேன் நீங்களும் நன்மை செய்யக்கூடாது. ஒருவேளை நீங்கள் நன்மை செய்வதாக இருந்தாலும் அதனுடைய பாராட்டு என்னை வந்து சேர வேண்டும் என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

இறைவார்த்தை சொல்கிறது தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் என்று. ஆனால் இங்கு பலர் நன்மைக்கு எதிராக தீமை செய்கிறார்கள். 

ஒருவேளை நாம் மனமுவந்து நல்லது செய்யாவிட்டாலும் மற்றவர் நல்லது செய்கின்ற பொழுது பாராட்ட முன் வருவோம். 

நற்செயலை பாராட்டுவதும் ஒரு நற்காரியம்தான்.

ஆரோக்கியம் தரும் அன்னை

"அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலத்தோடிருப்பதுபோல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்” - 3 யோவான் 1:2

அன்னை மரியாவின் பிறப்பை இன்று கொண்டாடுகிறோம். எல்லா செல்வமும் புகழும் இருந்தாலும் உடல் நலம் இல்லையென்றால் எதையும் அனுபவிக்க முடியாது. உடல்நலனுக்காக மனஅமைதிக்காக இன்று எத்தனையோ கோடிகள் செலவு செய்யப்படுகின்றன.

யோகா, உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றின் வழியாக உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்த பல்வேறு இடங்களுக்கு மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எசாயா இறைவாக்கினர் (55:2) சொல்வது போல, “உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்” என்பது போல தான் நம் வாழ்க்கைப் பயணம் உள்ளது.

மனதை ஒருமுகப்படுத்தி இறைவனோடு இணையாத வரை உடலுக்கு ஆரோக்கியம் என்பது இல்லை.

தன்னை இறைவனுக்கு கையளித்த அன்னை மரியா உடலிலும் மனதிலும் ஆரோக்கியம் நிறைந்தவராக இருந்தார். எனவே தான், சமூகம் என்ன சொல்லும்? என்ன நினைக்கும்? என்று அன்னை இறைத் திருவுளத்திற்கு தயக்கம் காட்டவில்லை. துணிந்து முடிவு எடுத்தார். நான் அண்டவரின் அடிமை என்று உரைத்தார்.

நம் வாழ்வில் நாம் பலவற்றிற்கு அடிமையாக இருக்கின்றோம். ஊடகம், அலைபேசி, புறணி பேச்சு, உடலின் இச்சை, உணர்வுகள் என்று பலவற்றிற்கு அடிமையாக இருக்கின்றோம். தேவைக்கு பயன்படுத்துவது தவறல்ல அளவுக்கு மீறுவது தான் ஆபத்து. அளவோடு பயன்படுத்துவோம் ஆரோக்கியத்தோடு வாழ்வோம்.

ஆரோக்கியமான பேச்சு, ஆரோக்கியமான சிந்தனை ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும்.

ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால் ஆரோக்கியத்தோடு வாழவும் மற்றவர்களை வாழ வைக்கவும் முன்வருவோம். 

சட்டமும் மனித மாண்பும்


பொதுக் காலம் 22ஆம் வாரம்

07.09.2024 - சனிக் கிழமை

சட்டங்களை தூக்கிப் பிடிப்போர் நல்லவர்களாக எப்போது மாற முடியும்? அந்த சட்டங்களை தானும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற போது தான். 

அன்று மட்டும் அல்ல, இன்றும் சட்டங்கள் எழுதப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சட்டத்தை காக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள், மற்றவர்கள் மீது சட்டங்களை திணிக்கிறார்களே தவிர அவர்கள் சட்டங்களை பின்பற்றுவதில்லை. லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு புறமானது அது மற்றவர்களுக்கு சட்டமாக இருக்கிறது, ஆனால் பொறுப்புகளில் இருப்பவர்களை அது பாதிப்பதில்லை. 

நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், நான் சட்டம் தீட்டுகிறேன், நீ சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். இதுதான் அன்றும் இன்றும் என்றும் தொடர்கின்ற ஒரு தொடர்கதை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:1-5) பசியாய் இருந்ததால் ஓய்வு நாளில், சீடர்கள் கதிர் கொய்ததை பரிசேயர்கள் கண்டிக்கிறார்கள். தாவீது இறை இல்லத்திற்குள் சென்று அர்ப்பண அப்பங்களை உண்டது தவறல்லவா? என்று இயேசு பரிசேயருக்கு சுட்டிக் காட்டுகிறார்.

ஓய்வு நாளில் எந்த செயலையும் செய்யக்கூடாது என்பது உண்மைதான் ஆனால் இங்கு சட்டங்களைவிட மனிதாபிமானம், மனித மாண்பு காக்கப்பட வேண்டும் அல்லவா? 

ஓய்வுநாள் சட்டம் கொண்டு வந்ததனுடைய நோக்கம், அடிமை தொடங்கி அரசன் வரை அன்று வேலை செய்ய கூடாது; அது கடவுளுக்குரிய நாள் என்பதற்காக(அடிமைக்கு விடுப்பு). பின்னாளில் வந்தவர்கள் அந்த ஓய்வு நாள் சட்டங்களையும் தங்களுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டனர்.

ஒருவருடைய பசியை போக்குவதை விட சிறந்த காணிக்கை எதுவும் இருக்க முடியாது. கடவுளுக்கு ஆயிரம் பொன்னும் வெள்ளியும் பணமும் கொடுத்தாலும் மனிதாபிமானத்தோடு நாம் செயல்படவில்லை என்றால் கொடுத்த அனைத்தும் முற்றிலும் வீண். இரக்கமில்லாமல் கடைபிடிக்கப்படும் அனைத்து செயல்களும் தகுதியற்றவையே. 

இயேசு பரிசேயர்களுக்கு கொடுக்கக்கூடிய பதில் 'பலியை அல்ல, இரக்கத்தை விரும்புகிறேன்' என்பதாகும். 

திருப்பாடல்கள் 51:16,17 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை".

சட்டம் என்பது எல்லோருக்கும் சரிசமமாய் இருந்தால் இங்கு பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் இந்த சட்டம் என்பது அதிகாரம் பணம் புகழ் படைத்தவருக்கு ஒரு மாதிரியாகவும் ஏழை ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், தனக்கு பிடித்தவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்கிறது.

பலி செலுத்துவதினாலும் சட்டங்களை தூக்கிப் பிடிப்பதினாலோ நாம் கடவுளை நெருங்கி வர முடியாது. இரக்கச் செயல்கள் புரிவதனால், இரக்கத்தோடு வாழ்வதனால் மட்டுமே நாம் கடவுளை நெருங்கி வர முடியும்.

எல்லோருக்கும் இரக்கம் காட்ட வேண்டும்; ஆனால் ஏமாற்றுகிறவர்கள், பொய்யர்கள், பித்தலாட்டம் செய்பவர்கள் இவர்களிடம் நாம் கவனமாய் இருக்க வேண்டும்.

சட்டங்களைவிட மனிதாபிமானத்தை வலியுறுத்தும் இரக்கமே பெரிது.

அவரன்பில் பணியாற்ற

மரியாளின் மாசற்ற இதயம்

பொதுக்காலம் 12ஆம் வாரம் 28.06.2024 - சனிக் கிழமை  பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக...