24_09

இறையாட்சிக்கு தடையாய் இருப்பவற்றை தடை செய்ய...


பொதுக் காலம் 26 ஆம் வாரம்

29.09.2024 - ஞாயிற்றுக்கிழமை 

"அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்; குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்" எசாயா 5:23

 நாம் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லதே செய்தாலும் தடுத்து நிறுத்துவோம். நமக்கு பிடித்தவர்கள் தவறே செய்தாலும் அதை நாம் தட்டிக் கொடுப்போம். 

இந்த உலகில் நாம் வாழ்வதால் இந்த உலக ஞானத்தை நாம் முதன்மையானதாக கொண்டிருக்கிறோம். இந்த உலகம் எதை உண்மையென்று சொல்கிறதோ அதை நாமும் உண்மையென நம்புகிறோம். போலியான விளம்பரங்கள், போலியான உறவுகள், போலியான வார்த்தைகள் என நம்முடைய வாழ்க்கை போலித்தனமானதாக மாறிவிட்டது.

எத்தனையோ நல்லவர்கள் இவ்வுலகில் காணப்படும் போலித்தனத்தை/பயங்கரவாதத்தை/அடக்குமுறையை தடுத்து நிறுத்த பார்த்து   (இவ்வுலகின் பார்வையில்) தோற்றுப் போனார்கள். கடைசியில் நல்லவர்கள் மூச்சு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (அருட்சகோதரி. ராணி மரியா, அருட்பணி. ஸ்டேன், இன்னும்...) 

இந்த உலகில் பலர் தவறு செய்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியும். ஆனால் அவர்கள் தவறு செய்தாலும் கூட ஆதாரம் இல்லை என்று சொல்லி, அவர்கள் செய்த தவறுகள் சரி என்று மாற்றப்படும். தவறே செய்யாதவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். 

வாழ்க்கை எதுவரை போகும் என்று தெரியாத போதும், பலர் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

தனது பெயரை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மற்றவர்களை எதையும் செய்யலாம் என்பதை தான் இந்த உலகம் போதிக்கிறது. இன்று நல்லவர்களை கண்டு கொள்வதே அரிதாக இருக்கிறது. நல்லவர்கள் என்று சொன்னால் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதனால் நல்லவர்களாக இருந்தும் அதை வெளிக்காட்டாமல் வாழக்கூடியவர்கள் பலர் உள்ளனர். (நமக்கு ஏன் வம்பு? என்று பின்வாங்கக்கூடிய நல்லவர்களும் இவ்வுலகில் உண்டு).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு 9:38-48) நல்லது செய்யும் ஒருவரை இயேசுவின் சீடர்கள் தடுக்க பார்க்கிறார்கள். ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டுகிறார். அவர் இயேசுவை சாராதவர் என்பதனால் அவரை தடுக்க பார்த்தார்கள். ஆனால் இயேசுவின் பதிலோ, அவரை தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னை குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

இயேசுவின் மனநிலை என்னவாக இருந்தது? அங்கு நடைபெறக்கூடிய செயல் நல்ல செயல். எனவே அதை தடுக்க வேண்டாம் என்றார். 

ஊருக்கு நல்லது நடக்கிறது என்றால் அதை எதிர்க்கக்கூடிய மனநிலை உடையவர்கள் இன்று பலர் இருக்கின்றார்கள். 

காரணங்கள்,

1. அந்த நல்லது என் வழியாக நடைபெறவில்லை, எனக்கு பெயர் கிடைக்காது. எனவே அந்த காரியம் இந்த ஊருக்கு நடக்கக்கூடாது என்று தடுக்கும் மனநிலை உடையவர் உண்டு.

2. நடக்கக்கூடிய நல்ல காரியத்தில் எனக்கு/என்னை சார்ந்தோருக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காரியம் நடக்கக் கூடாது. 

3. இந்த காரியத்தை முன்னெடுத்துச் செல்பவர் என்னுடைய எதிரி, எனவே இந்த காரியம் நடக்கக் கூடாது.

இவ்வாறாக நடைபெறக்கூடிய நல்ல காரியத்தை தடுத்து நிறுத்தும் மனிதர்கள் இங்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை.

இயேசு தொடர்ந்து பேசும்போது நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டியது  பாவத்தில் விழச் செய்யும் கையை, காலை, கண்ணை என்று சொல்கிறார்.

இரு கையுடையவராய், இரு கால் உடையவராய், இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதை விட, பாவம் செய்ய தூண்டும் அவற்றை இழந்து இறையாட்சிக்கு உட்படுவது நல்லது என்கிறார் இயேசு. 

இன்றைய முதல் வாசகத்தில் (எண்ணிக்கை 11:25-29) மோசே அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு பகிர்ந்து கொடுக்கிறார். ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் இரண்டு நபர்கள் பாளையத்திலே தங்கி விட்டனர். அவர்கள் மீதும் ஆவி இறங்கியது, அவர்கள் இறைவாக்குரைத்தபோது அதை யோசுவா மோசேயிடம் சொல்லி தடுக்க பார்க்கிறார். அப்போது மோசே யோசுவாவை நோக்கி, என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவர் அவர்களுக்கு தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு என்று சொல்லி அவருக்கு கடவுளின் சிறப்பை புரிய வைக்கிறார். 

புரிந்து கொள்ளாத மனநிலையினால் பொறாமையினால் சில நல்லவைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. யாராக இருந்தாலும் அவர் செய்வது நல்லது என்றால் அதை தடுக்க நாம் யார்?

இன்றைய இரண்டாம் வாசத்தில் (யாக்கோபு 5:1-6) பூச்சிகளால் அரிக்கப்பட்டு துருப்பிடிக்கும் செல்வத்தை சேர்த்து வைத்து, வேலை ஆட்களுக்குரிய கூலியை பிடித்து வைத்து, நேர்மையாளரை குற்றவாளியென தீர்ப்பளித்துக் கொலை செய்யும் வஞ்சக நெஞ்சத்தினருக்கு கண்டனக் குரலை முன் வைக்கிறார் திருத்தூதர் யாக்கோபு.

செல்வத்தினால் ஒருவர் நிறைவாழ்வை பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வுலக செல்வம் நாம் நிறைவாழ்வை பெறுவதற்கு தடையாக இருக்கிறது.

பொறாமை, பதுக்கல், பகை, பாவம், அடுத்தவரை தீர்ப்பிடல் போன்றவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

நம் வாழ்க்கையில் எவையெல்லாம் நாம் முன்னேறுவதற்கு தடையாய் இருக்கின்றதோ அவற்றை நாம் தடை செய்ய வேண்டும். 

கடவுளை நெருங்கி செல்வதற்கு முட்டுக்கட்டை போடும் நம் பாவ வாழ்வை தடை செய்ய வேண்டும். 

இறைவன் நமக்கு கொடுத்த அந்த ஆவியை சீர்குலைக்கும் பொறாமையை தடை செய்ய வேண்டும். 

செல்வத்திலேயே நாட்டம் கொண்டு, மற்ற மனிதரை மதிக்காத மனநிலையை கொடுக்கும் செல்வத்தை தடை செய்ய வேண்டும். 

எதையும் இந்த உலகில் இருந்து நாம் எடுத்துச் செல்ல முடியாது.

நாம் நேர்மையோடு நீதியோடு வாழ்ந்தால் உலகில் நமக்கான பெயரை விட்டுச் செல்ல முடியும். 

கிறிஸ்துவை சார்ந்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளை உள்வாங்கி, தீமையை விட்டொழித்து, செய்ய வேண்டிய நல்லவற்றை செய்து அதன் வழியாக இறையாட்சிக்கு உட்பட முயற்சி செய்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...